வியாழன், 28 மே, 2015

காலத்தின் கரங்களில் உறங்கும் தேவமைந்தன்

காலத்தின் கரங்களில் உறங்கும் தேவமைந்தன்

-- மனுஷி

தண்டவாளம் அருகில் சிதைந்து கிடந்தது

வெறும் உடலல்ல

சாதியம் தின்று துப்பிய

உன் காதல்

 

உன் குருதி சுவைக்கவென

வெறிகொண்டு அலைந்த வீச்சரிவாள்கள்

மெல்ல ஆசுவாசம் கொண்டுவிட்டன

உன் வேரறுத்த களைப்பில்

 

உன் மரணத்தால்

சில முகமூடிகளைக் கிழித்தாய்.

முகமற்று அலைகிறது

வரட்டு கௌரவத்தால்

உடல்களைப் பிரித்த

ஒரு கூட்டம்.

 

உடல்தான்

இங்கே தீட்டு

உடல்தான்

இங்கே பகை

உடல்தான்

இங்கே வீழ்த்தப்படும் ஆயுதம்

உடல்தான்

இங்கே பலி பொருள்

 

உடலை வீழ்த்திய பின்

களியாட்டம் கொள்ளும் குள்ளநரிகள்

காதலில் கறைந்து போன மனதை

என்ன செய்யும்?

மனதுக்குள் ஒளித்துவைத்த

காதலை என்ன செய்யும்?

கௌரவத்தின் பெயரால்

சாதியின் பெயரால்

எப்போதும்

அறுக்கப்படுவது

திவ்யாக்களின் தாலிக்கள்தான்.

சிதைக்கப்படுவது

இளவரசன்களின் உயிர்கள் தான்.

 

எரிக்கப்பட்ட குடிசைகளிலிருந்து

பற்றிப் பரவிய தீ

இன்னும் அணையவேயில்லை

அது காதலின் பாடலை

உரக்கப் பாடி ஆடுகிறது

கௌரவக் கொலைகாரர்களின்

குறிகளை ஓங்கி மிதித்தபடி

 

நடுகல் வீரனே!

நீ சுமந்து திரிந்தது

ஆதிக் காதலின் எச்சம் என

காலம் சொல்லும்

ஏனெனில்,

நீ காலத்தின் கரங்களில் உறங்கும்

தேவமைந்தன்

வெள்ளி, 15 மே, 2015

முத்தங்களின் கடவுள்

புற்கள் எப்பொழுதும் பச்சையாக இருப்பதில்லை

மனுஷியின் முத்தங்களின் கடவுள் கவிதை நூலை முன்வைத்து

- பால்ராஜ்

மனுஷியின் முத்தங்களின் கடவுள் வாசிப்பில் முளைத்த சொற்களின் நிறங்கள் கண்கள் கூசாதவை. யாரும் கடந்தே ஆகவேண்டிய அனுபவங்களேயானாலும் ஒரு கலைடாஸ்கொப்பில் கிடைக்கும் ஒளிச் சிதறலை அனுபவமாக்கத் துடிக்கும் இளமையின் பரபரப்பும் பரவசமும் தொடரும் துயரமுமேயான மனப்பதிவுகள் கவிதைகளாகின்றன.  எந்த அனுபவத்தின் அவமானத்தையும் துடைப்பதற்கு எழுத்தைத் தனதாக்கி அதையே தனது கடந்து செல்வதற்கான பாதையாய் சமைக்கும் விந்தைத் துணிச்சல் மனுஷிக்கு கவிஞர் என்பதால் இருக்கிறது.  கவிதை என்பதால் வாசகனுக்குக் கடந்து வருகிறது.  

யாருக்காகவும் எழுத முடியாது.  பட்டாம்பூச்சிபோல் வண்ணம்காட்டி திடீரென வந்துபோன சாரலாய் உதிர்ந்த கணங்கள் மனதில் அப்படியே உறைந்து உள் உறங்கிக் கிடக்கிறது.  அபூர்வமாய் கிடைத்த நாளொன்றில் நினைவுகளின் மணம் தடவிச் சென்று பின்பும் சில்லென்று பூத்துக் கிடக்கிறது.  சந்திக்கவே முடியாத தூரங்களுக்கு அப்பால் இருந்துகொண்டு காலம் தாண்டி கவிஞர்களுக்குத் தன் அனுபவத்தால் கடத்திவிட முடிகிறது.  காயங்களுக்கு மருந்திட அமானுஷ்யமாய் நட்பின் விரல்கள் நீள்கின்றன கவிதைகளின் திசை நோக்கி.  அவளுக்கான ஒரு கவிதையென அவளே விட்டுச்சென்ற நாட்கள் அப்படியே உயிர்த்திருக்கிறது சொற்களில். தொடர்ந்து அகதியாக்கப்பட்டு தனிமையின் நட்போடு தன் வாழ்க்கையைப் புதுப்பிக்க சொற்களின் போதையில் நிரம்பி கிடக்கிறாள்.  ஆணின் தீராத பகைப் புலத்தில் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பலியாகாமல் கவிதைகள் மூலம் குட்டி தேவதையாகிறாள்.  யசோதையின் தனிமையை... கண்ணகியின் தனிமையை... சீதையின் தனிமையை எனப் புராண காலத்திலிருந்து ஆண்களின் அறஉலகில் தண்டிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றுவரை பரிசளிக்கப்படுகிறது தனிமை.  பெண்களைச் சித்திரவதை செய்வதன்மூலமே அவன் சுயசித்திரவதை செய்து கொள்கிறான்.

நிலவொளியால் அறைகள் புனிதமாகின்றன.  தினமும் நிலா பார்ப்பவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.  நிலாவின் பாடம் கேட்கும் குழந்தைகள் கவிஞர்களாவது நிச்சயம்.  காணமல்போன கவிதையை அவள் தேடுகிறாளா?. அவளைப்பற்றி இல்லாத கவிதை தொலைந்து போகட்டும் என்கிறாள்.  அவளிடம்தான் அக்கவிதை முதலில் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் குழந்தையின் பொசசிவ்னஸ் கவிஞருக்கே உரித்தானது.  

ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் அவளோடு விபச்சாரம் செய்தவன் ஆகிறான்.  யாரொருவர் பாவம் செய்யாதிருக்கிறார்களோ அவர்கள் இப்பெண்ணின்மீது முதல்கல்லை எறியக்கடவன்.  பிதாவே இவர்களை மன்னித்தருளும்.  இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் என்ற வார்த்தைகள் இயேசுவால் இன்னும் கவிஞர்களுக்கு ஆசீர்வதிக்கப் பட்டுள்ளது.  பலிபீடத்திற்கு தானே செல்லும் ஆட்டின் அன்பு... கவிதையில் எப்பொழுதும் பலியாவது கவிஞர்களின் பண்பு... காரியவாதிகள் பிவீர்த்துக்கொள்ளட்டும்... ஆதியிலே வார்த்தைதான் இருந்தது.

தன்னோடு பகிர மறுக்கும் யாரையும் தீட்டாக்கும் ஆணின் வக்கிர உளவியலை ஒப்புக்கொள்கிறான் வாசகன்.  சொந்த ஆண் சாதிக்குத் துரோகம் செய்து வாசகன் என்ற அடையாளத்தையாவது தக்க வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான ஆசையே அது.  தனக்குள்ளது தன்னுடையது புனிதம்.  மற்றதெல்லாம் தீட்டு.  காலம் தன் கோபத்தை பெண்களின் சாபத்தில் சேமித்து வைத்திருக்கிறது போலும்.  இயல் பூக்கங்களை பேண வாய்ப்பற்ற ஓர் உயிரிக்கு வழங்க முடியாத வறண்ட நிலத்தில் கவிதைகள் வழியாகவேனும் வெறுமையைக் கடந்து செல்லமுடியுமாகிறது.

காலையில் கரையும் காகங்கள்... கரைய எழுந்தால் அவன் கடவுளாகிறான்.  சிற்றுயிர்களிடம் இரவில் பேசும் ஒருத்தி தேவதையாகத்தான் இருக்கவேண்டும்.

ஆணின் அக்கறை... அன்பு... பரிவு... பகிர்தல் எல்லாம் ஒப்பனையாகிறது.  தின்று செரிக்கமுடியாத போலி ரப்பர் வார்த்தைகள்.  அவளுக்குத் தெரியும் எது வாழ்வு... எப்படி வாழ்வு என்பது.  அதேபோல் உன் வாழ்வும் மரணமும்.

விலக்கப்பட்ட கனி தரும் மரத்தைக் கடவுளே ஏன் படைத்தார்.

சாத்தானை அவரால் கொல்ல முடியாதா?. அல்லது இரட்டைப் பிறவியா.  புலனடக்கி வாழும் புண்ணியவான்கள் கருணையற்று சொத்து சேர்ப்பதும்... இரகசியமாய் பாவங்கள் செய்வதும்... கோயில்களுக்கு அலைவதும்... அறம்பாடுவோர் செய்யும் சீலங்கள்.  இலட்சுமணக் கோடுகளைச் சீதைகள் தாண்டுவார்கள்?. இன்பத்துப்பால் பாடிய வள்ளுவப்பெருந்தகை சொல்கிறான் மிகினும் குறையினும் நோய் செய்யுமென்று.

ஏலே பேரா சீனிக்கிழங்கு... மொச்சையும் உங்க ஆத்தாளுக்குத் தெரியாம வாங்கிட்டு வாவேன் என்ற அப்பத்தாளும்

ஏலே தாத்தாவுக்கு டவுனுல அலுவா வாங்கிட்டு வாவென்று சொன்ன தாத்தனுக்கும் உணவின் கதையை வாசித்துக் காட்டினேன்.

அன்பின் வாதையால் பேயாடும் மனம் கொண்ட பெண்கள்தான் துருப்பிடித்த ஆணிகளால் அறையப்பட்டுச் சிலுவையில் தொங்கும் சாத்தான்களை விடுவிக்கமுடியும்.  கவிதைகள் படிக்க மாயாஜாலமாய் ஆணிகள் கழன்றுகொள்ள வாய்ப்புள்ளது.

ஆங்கிலத்தில் வெள்ளிக்கிழமையை 
Unlucky day  என்று வைத்தது பெண்களின் தற்கொலை நாளாவது தற்செயலானது.

மனுஷியின் கவிதைகளில் மனிதர்களின் நேர்மறையான எதிர்மறையான உணர்ச்சியின் கொந்தளிப்பில் வார்த்தைகள் ரசவாதமாகின்றன.  சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களின் வேலிகளால் நெய்யப்பட்ட ஒழுக்க அற மதிப்பீடுகளைத் தன் அறியாமையின் மூலம் மதிக்காத குழந்தைகள் போல அசாதாரணமாய் தாண்டிச் செல்கிறார்.  இன்னும் தாண்டுவதற்கு அவருக்கு வலு உண்டு... தாண்டுவார் என்பது வாசகனின் ஆசை. 

வெளியீடு : உயிர்மை பதிப்பகம், 

11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&600 016.

தொலைபேசி :  +91 44 & 24993448.  மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

பக்கங்கள் : 96  & விலை ரூ 80/-
(நன்றி : தளம் காலாண்டிதழ்)

திங்கள், 11 மே, 2015

இன வரைவியல் ஆவணம் : கௌதம சித்தார்த்தனின் பொம்மக்கா

இன வரைவியல் ஆவணம் : கௌதம சித்தார்த்தனின் பொம்மக்கா
-- மனுஷி

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனை உன்னதம் இதழின் ஆசிரியராகத்தான் முதன்முதலில் அறிமுகம். அதன்பிறகு தீராநதி இதழில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. ‘எங்கள் நாட்டிலும் ஈரானிய சினிமா இருக்கிறது’ என்னும் தலைப்பில் அவருடைய கட்டுரை வாசித்த எனக்கு அவருடைய எழுத்தின்மீதும், கலை இலக்கியப் பார்வை மீதும் ஆர்வம் உண்டானது.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பி, தேடி வாங்கிய நூல்களில் ஒன்று பொம்மக்கா. அந்த நூலை வாங்கியதற்குக் காரணம் கௌதம சித்தார்த்தன் அல்ல. பொம்மக்கா என்ற தலைப்பு மட்டும்தான். இரண்டாவது காரணம், பின்னட்டையில் இடம்பெற்றிருந்த வாசகம். ‘பாண்டவர் கதையில் முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன என்று பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா’ என்ற வாசகம் நூலை வாங்கிப் படிப்பதற்கான தூண்டிலை வலுவாகப் போடுகின்றன. வாசகன் அதில் மீனாக மாட்டிக் கொள்வது தவிர்க்க முடியாது. பொதுவாக இவ்விரண்டு காரணங்களால்தான் ஒரு நூலை நான் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பேன். எழுத்தாளர் பெயர் பார்த்து வாங்குவதெல்லாம் அப்புறம்தான். என் அறையில் இருக்கும் புத்தகங்களில் முக்கால்வாசி இப்படித்தான் என் அறைக்கு வந்து சேர்ந்தன.
பொம்மக்கா நூலை வாங்கும்போது அந்த நூலைப் பற்றிப் பேசுவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. பிரமிப்புக்குக் காரணம் கௌதம சித்தார்த்தனின் எழுத்துப் பயணம். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதி வருபவர் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். இன்னும் சொல்லப் போனால் நான் பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு உன்பே தமிழ்மொழியின் ஆன்மாவுக்கேற்ற விதமாக பின்நவீன எழுத்தைக் கையிலெடுத்தவர். தமிழின் / தமிழனின் வேர்களைத் தேடும் விதமாக அவ்வெழுத்தை மாற்றித் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதுவகை கதைசொல்லல் முறையை, புதுவகை கதையாடலை, ஏற்கனவே கட்டப்பட்ட புனிதங்கள் மீதான கட்டவிழ்ப்பை நிகழ்த்திக் காட்டியவர்.
இந்நூலைப் பற்றிப் பேச வேண்டுமென தோழர் கீரா கேட்டவுடன் உடனடியாக ஒப்புக் கொண்டேனே தவிர, உள்ளுக்குள் சிறு பதற்றம். என்ன பேசுவது பொம்மக்கா குறித்து? எங்கிருந்து தொடங்குவது கௌதம சித்தார்த்தனின் சிறுகதைகள் குறித்து? இந்தப் பதற்றங்களுக்குப் பின்னால் / கேள்விகளுக்குப் பின்னால் கௌதம சித்தார்த்தன் என்ற படைப்பாளன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். எனவே, அவரைக் கொஞ்சம் வெளியில் அனுப்பிவிட்டுத்தான் பிரதி குறித்த உரையாடலைத் துவக்கினேன் எனக்குள்.
பொம்மக்கா சிறுகதைத் தொகுப்பு முதல் பதிப்பு 2005இல் வெளிவந்துள்ளது. என் கைக்குக் கிடைத்தது 2014இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பு. பொம்மக்கா நூலில் உள்ள சிறுகதைகளை முதன் முதலில் வாசித்தபோது எனக்குள் எழுந்த கேள்வி இக்கதைப் பொருண்மைகளைச் சிறுகதைகளாக்கி வாசகனுக்குத் தர வேண்டிய அவசியம் என்ன? அதிலும் குறிப்பாக, எடுத்த உடனேயே பின் நவீன எழுத்தின் அறிமுகம் கிடைக்கின்ற, பின்நவீன எழுத்துமுறைக்குள் நுழைந்துவிடும் சாத்தியமுள்ள காலகட்டத்தின் வாசகனுக்கு இக்கதைகளைக் கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கேள்விக்கான விடையை பொம்மக்கா கதைகளை வாசித்து முடித்து அசைபோடும் வாசகன் உணர்ந்து கொள்வான். அதுதான் பொம்மக்காவின் தனிச்சிறப்பு.
‘புதிர்க் கட்டங்களிலும் வடிவ உத்திகளிலும் தொன்மங்களிலும் நான் மேற்கொண்ட பயணம், மண் சார்ந்த தொன்மங்களின் கதையாடல்களில் கால் பதிக்க வைத்தது. நான் பிறந்த கொங்கு மண்ணின் வாசம் என் உடலெங்கும் அப்பிய வேளை, மிகப்பழைய காலம் ஒன்றின் மறைந்தொழிந்து போன வாழ்விலிருந்து வழக்கொழிந்து போன, புழக்கத்திற்கு அருகிப் போன கதைச் சொல், எண்ணற்ற அளவில் வந்து குமிந்து கொண்டிருந்தது என் மொழிக்குள். கொங்கு மண்ணின் அந்தக் கதைச் சொற்கள் இறந்த காலத்தின் புதைகுழியிலிருந்து மீண்டெழுந்து புதிய அர்த்தங்களுடன் தங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன’.
பொம்மக்கா நூலின் முன்னுரையில் (முதல் பதிப்பில்) உள்ள இவ்வரிகளே பொம்மக்கா நூலில் உள்ள சிறுகதைகளுக்குத் திறப்பினைக் கொடுக்கின்றன.
தொகுப்பில் பொம்மக்கா, ஒண்டி முனியப்பன், பாட்டப்பன், பெருமாயி, அஞ்சாங்கரம், 64 பொட்டுச்சாமி கதை, கொட்டாப்புடி சாமி, எட்டாங்கல் ஆகிய எட்டு கதைகள் உள்ளன. கிராமத்து மனிதர்களின் வாழ்வியல், சொல்லாடல்கள், சடங்குகள், நம்பிக்கைகள், உறவுநிலைகள் அனைத்தும் இரத்தமும் சதையுமாக புனைவாகியிருப்பதும் இத்தொகுப்பின் மீதான மதிப்பை மிகுவிக்கின்றன.
இந்த எட்டுக் கதைகளில் உள்ள ஒற்றுமை என்னவெனில், தொன்மக் கதையாடல், நாட்டார் தொன்மக் கதையாடல்களை மீட்டெழுதுதல், ஆவணப்படுத்துதல், சாதியம், அதிகார வர்க்கம், ஆண் பெண் உறவுநிலை, ஒழுக்கம்சார் மதிப்பீடுகள். இவைதான். மேற்சொன்னவற்றுக்குள் எட்டுக் கதைகளும் அடங்கிவிடுகின்றன. அனைத்துக் கதைகளும் மழை பெய்து கொண்டிருந்தது, வெயில் காய்ந்து கொண்டிருந்தது, வானம் மப்பாய்க் கிடந்தது, இன்னும் கிழக்கு வெளுக்க ஆரம்பிக்கவில்லை என பருவ மாற்றங்களில் இருந்தே தொடக்கம் கொள்வதும் இங்குக் கவனிக்கத் தக்கது. இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்வில் சுயம் இழந்து போன முகநூல், ட்விட்டர், இணையவாசிகள் விழித்தெழ வேண்டிய அவசியத்தையே இவை உணர்த்துகின்றன.
கதையில் இடம்பெறும் சில நம்பிக்கைகளே கதையை வளர்த்தெடுத்துச் செல்கின்றன. மேலும் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் சென்று மீளும் தன்மை கதைகளில் உள்ளன.
நாட்டார்த் தொன்மக் கதையாடலுக்கான பொதுக்கூறான மனிதர்கள் இறந்து தெய்வமாதல் என்பது இந்தத் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் அடிநாதமாக இருக்கின்றன.
பெரும்பாலும் தற்கொலை செய்து கொண்ட, அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள் அந்த இனத்தின் / குடும்பத்தின் குலதெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். மரணத்திற்குக் காரணமானவர்கள் மனத்தில் எழும் குற்றவுணர்ச்சியும் பயவுணர்ச்சியுமே இத்தகைய நாட்டார்த் தெய்வ உருவாக்கத்திற்குக் காரணமாக அமைகின்றன. இறந்து போனவர்கள் கனவில் வந்து தான் தெய்வம் ஆகிவிட்டதாகவும், இம்மாதிரியான சடங்கைச் செய்து தன்னை வழிபட வேண்டும் என்று சொன்னதாகவும் கதைகள் சொல்லப்படுவதுண்டு. அந்தச் சடங்கின் / வழிபாட்டின் காரணங்கள் மறைந்து போனாலும் சடங்குத்தனமாகவாவது மக்கள் வழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படியான சடங்குகளும் நம்பிக்கைகளும் பொம்மக்கா சிறுகதைத் தொகுப்பில் நிரம்பிக் காணப்படுகின்றன.
பொம்மக்கா சிறுகதையில் புத்திக்கல்லு போடுதல் என்னும் சடங்கு
பாட்டப்பன் சிறுகதையில் கருப்பு ஆட்டைத் திருடிப் பொங்கல் வைத்தல் என்னும் சடங்கு
ஒண்டி முனியப்பன் சிறுகதையில் ஒண்டி முனியப்பன் கோயிலில் உலுந்துட்டுப் போதல் என்னும் சடங்கு
பெருமாயி சிறுகதையில் படப்புக் கல்லு மீது கோவைப்பழம் வைத்தல் என்னும் சடங்கு
64 பொட்டுச்சாமி கதை என்னும் சிறுகதையில் திருமணமாகாத வாலிபர்கள் பொட்டுச்சாமி மீது 64 பொட்டு வைத்தல் என்னும் சடங்கு
ஆகிய கொங்கு வட்டாரச் சடங்குகளின் பின் இயங்கிக் கொண்டிருக்கும் கதையாடல்களைப் புதிய அர்த்தத் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன கௌதம சித்தார்த்தனின் புனைவெழுத்துகள்.
இந்தத் தொகுப்பில் பொம்மக்காவும், செவந்தியும்தான் ஆணாதிக்கத்தின்மீது முதல் கல்லை எறியும் தேவதைகளாக இருக்கின்றனர். பாட்டப்பன், இறுக்கமான சாதிய முகத்தின் மீது கல்லெறியும் தேவகுமாரன்.
64 பொட்டுச்சாமி கதையில் ஏற்கனவே திருமணமான செவந்தி மற்றும் ராசய்யா இருவருக்குமிடையிலான பாலுறவுச் சம்பவம் மிகக் கவித்துவமாக மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது. செவந்தி மீதான காமம், பேய் மழையையைப் பொருட்படுத்தவில்லை. நெட்டைக்கால் குச்சியின் பாரம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவன் கண்முன்னால் தெரிந்ததெல்லாம் செவந்தி மீதான காதல். அவள் மீது கொண்ட மோகம். அந்த மழையையும் பொருட்படுத்தாமல் நெட்டைக் குச்சியைக் குடையாகச் சுமந்து சென்று, செவந்தியோடு உறவுகொண்டபின் நெட்டைக் குச்சைத் தூக்க முடியாமல் செவந்தியின் கணவன் உள்ளிட்ட ஊர்மக்கள் முன் மாட்டிக் கொள்கிறான் ராசய்யா. ஊர் வழக்கப்படி 64 குடும்பங்களும் ஒழுக்க மீறலில் ஈடுபட்ட அவனுக்குப் பொட்டு வைப்பதென முடிவு செய்யப்படுகிறது. அப்போது முதல் பொட்டைச் செவந்தி வைக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. ‘இது என்ன மாதிரியான தண்டனை? தண்டனை விதித்து வேடிக்கைப் பார்க்கும் இவர்களுடைய யோக்கியதை என்ன?’’ என்ற கேள்வி மிக முக்கியானது. பொட்டை நெற்றியில் வைக்க கையை உயர்த்திய செவந்தி சற்றென நிலை மாறி, அவனது தொங்கிக் கிடந்த குறியில் பொட்டை வைக்கிறாள்.
அந்தப் பொட்டு யோக்கிய வேசத்தின்மீது வைக்கப்பட்ட பொட்டு. ஆதிக்கத்தின் மீது வைக்கப்பட்ட பொட்டு. ஒருதலைபட்சமான சமூக நியதியின்மீது வைக்கப்பட்ட பொட்டு.
இந்தத் தொகுப்பில் உள்ள பொம்மக்கா சிறுகதை மிக முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பது என் கருத்து. இராமாயண, மகாபாரத கதையாடல்களைப் பொம்மக்கா வேறு கோணத்தில் / பெண்ணின் கோணத்தில் நின்று பிரசங்கிக்கிறாள். இந்தக் கதையை வாசிக்கின்ற வாசகன் மனதில் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் கதையும், அவர் சிருஷ்டித்த அகலிகையும் நிழலாடுவதைத் தவிர்க்க முடியாது.
தந்தைக்குப் பிறகு ஊர்த் திருவிழாக்களில் இராமாயண மகாபாரதக் கதைகளைப் பிரசங்கம் செய்யும் பணியைக் கையிலெடுக்கின்ற பொம்மக்கா, புராண இதிகாசக் கதையாடல்களின் பின் புனையப்பட்டுள்ள ஆணாதிக்கக் கருத்தாடல்களை உடைத்தெறிகிறாள். பீஷ்மரையும், தருமனையும், இராமனையும், கண்ணனையும் என இத்தியாதி ஆண் பிம்பங்களின் மீதான புனிதங்களை உடைத்தெறிகிறாள். சீதை, பாஞ்சாலி முதலிய இதிகாசப் பெண்களின் பக்கம் நின்று இராமாயண, மகாபாரத பிரசங்கங்களை நிகழ்த்துகிறாள் பொம்மக்கா. சீதையைப் பற்றிச் சொல்லும்போது தங்களுடைய சாதிப் பெண்களின் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் பொம்மக்கா. “வேறு சாதிக்காரகளோடு புழங்கிய பெண்களைச் சாதி விலக்கம் செய்துவிடுவார்கள் தங்களது சாதிக்காரர்கள். ஆண்கள் என்றால் மன்னித்து சாணித் தொட்டியில் முங்கிச் சடங்கு செய்து எடுத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மன்னிப்பே இல்லை”. இந்த இடம் மிக முக்கியமானது. இந்தச் சமூகத்தில் எப்போதுமே ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி. உயர்ந்த சாதிகளுக்கு ஒரு நீதி. தாழ்ந்த சாதிகளுக்கு ஒரு நீதி. இதுதான் வரலாறாக நீண்டு கிடக்கிறது.
பொம்மக்கா சிறுகதையில் இரண்டு முக்கியச் சம்பவங்கள் பெண்ணுடல் ஒடுக்கப்படுகின்ற அவலத்தினைத் தோலுரித்துக் காட்டுகின்றன. ஒன்று, மொண்ணையன் என்பவன் தன் மனைவியை இரண்டு பொதி ஆரியத்துக்கு மல்லப்பனின் பண்ணையத்தில் அடகு வைக்கின்ற சம்பவம். மல்லப்பனின் பண்ணையத்தில் இருந்து தப்பித்து, தனது அத்தை மகனான சாமையன் வீட்டுக்குச் சென்றுவிட, அவளது ஒழுக்கத்தின்மீது விசாரணை வைக்கின்றனர் மொண்ணையனும் மல்லப்பனும். பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சியைப் பிரசங்கம் செய்யும் பொம்மக்காவின் பேச்சு, இந்த வழக்கில் மொண்ணையன் மனைவி மீதான நியாயத்தை எடுத்துரைத்து மக்கள் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்கிறது.
மற்றொரு சம்பவம், தாசப்பன் அவனது மனைவி மாத்தாயி இருவருக்குமிடையிலான பிரச்சனை. தாசப்பன், கேத்தம்மா கோவிலில் பூசை செய்ய, அவனது மனைவி பச்சை மண்ணில் பானை வனைந்து அதில் தண்ணீர் கொண்டு வந்து தருவது வழக்கம். ஒருநாள் அவள் பச்சை மண்ணில் தீர்த்தக் குடம் வனைய, குடம் உடைந்துகொண்டே இருக்கிறது. பூசைக்கு நீர் வராததால் அவளது கணவன் பதற்றமடைகிறான். நிலைமை அறிந்த அவன், மாத்தாயி ஒழுக்கம் தவறிவிட்டதாகச் சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டிவிடுகிறான். இந்தச் சம்பவம் குறித்து ஊர்மக்கள் அனைவரும் மாத்தாயிதான் ஒழுக்கம் தவறிவிட்டதாகப் பேசுகிறார்கள். ஆனால், பொம்மக்கா, மட்டும்தான் பிரச்சினையின் கோணத்தை மாற்றி யோசிக்கிறாள். மாத்தாயி குடம் வனைவது அவளுக்காக மட்டுமல்ல. அவனுக்கும் சேர்த்துதானே. எனவே, தாசப்பன் ஒழுக்கம் தவறி இருந்தாலும் பச்சை மண் குடம் சேராதுதானே என்று பொம்மக்கா எழுப்பும் கேள்வி தான், பெண்ணியக் குரலின் தொடக்கம்.
பெண், ஆளுமைமிக்கவளாக, புத்திக்கூர்மையுள்ளவளாக இருப்பினும், குடும்ப அமைப்பிற்குள் அவளது ஆளுமை முடக்கப்பட்டு சராசரி குடும்பப் பெண்ணாக வாழத்தான் இந்தச் சமூகம் பெண்ணை நிர்பந்திக்கிறது என்பதற்குப் பொம்மக்கா ஒரு சான்று. பக்தி இலக்கியத்தில் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. ஆளுமைமிக்கப் பெண்கள் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் / வாழ்க்கை மறுக்கப்படுவார்கள். ஆனால், பின்னாளில் இத்தகைய மறுக்கப்பட்ட வாழ்க்கைக்குப் பின்னால் அவர்கள் தெய்வமாக்கப்பட்டுவிட்டார்கள், கடவுளை அடைந்துவிட்டார்கள் என்பதான புனிதக் கதையாடல் பின்னப்படுகிறது. பொம்மக்கா தெய்வமானதற்கு / தெய்வமாக்கப்பட்டதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிக நுட்பமானது.
பொம்மக்கா கதையில் மட்டுமல்ல, ஒண்டி முனியப்பனும், பெருமாயியும், பாட்டப்பனும், பொட்டுச்சாமியும், கொட்டாப்புடியும் என எல்லாருமே நாட்டார்த் தெய்வங்களாக்கப்பட்டதற்குப் பின்னால், ஆணாதிக்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் அதன் கோரமுகமும் ஊடிழையாகச் செயல்படுவதை வாசகர்களால் உணர முடியும்.
நாட்டுப்புற ஆய்வாளனின் களப்பணி நேர்த்தியுடன் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய பீட்சா பர்க்கர் தலைமுறையைச் சார்ந்த ஒருவன், கதைகளையும் வாழ்க்கையையும் நினைவுகளில் புதைத்துக் கொண்டு வாழும் பாட்டிகளிடம் கதை கேட்டல் அல்லது செய்யப்படுகின்ற சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு விளக்கம் கேட்டுப் பெறுதல் எனும் தொனியே இக்கதைகளின் உயிர்நாடி. நமது அடையாளம் / மரபு / வேர் குறித்த பிரக்ஞையற்று உலகமயமாக்கல் கலாச்சாரத்துக்குள் தனது அடையாளம் இழந்து போகிற / அடையாளம் தொலைத்து வாழ்கின்ற தலைமுறைகளுக்கு இக்கதைகள் ஓர் இனவரைவியல் ஆவணங்கள் எனில் மிகையாகாது.
கௌதம சித்தார்த்தன் கொங்கு பகுதி வாழ் நாட்டார்த் தொன்மக் கதையாடல்களைப் புனைவாக்கிக் கொடுத்திருப்பது போல தமிழகம் முழுக்க ஏராளமான பொம்மக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடித் தொகுத்து ஆவணப்படுத்துதலும் புனைவாக்குதலும், அவற்றின்மீதான காத்திரமான விவாதங்களை முன்னெடுப்பதுமே தான் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை அடையாளம் காணச் சிறந்த வழி. அதற்கான சிறு நெருப்புத் துண்டுதான் கௌதம சித்தார்த்தனின் பொம்மக்கா.

(நன்றி : கணையாழி, 2015 மார்ச் )

இரண்டு கவிதைகள்

காதலின் வழித்தடத்தில்….

காதலைப் பயிரிடவென
பண்படுத்தப்பட்ட நிலத்தில்
வெறுப்பின் விதைகளைத் தூவிச் செல்கிறது
உன் மௌனம்.

என் கோபத்தின் நியாயம்
உனக்குப் புரியாதபோது
என் அழுகையின் நியாயம்
உனக்குப் புரியாதபோது
என்னைச் சமாதானப்படுத்த
உனக்குப் பொறுமையில்லாதபோது
ஒரு பாலைநிலமென
மாறிப் போகிறேன்.

நீ

ஒரு போதும்
அணைத்துக் கொள்ளப் போவதில்லை
என்னை.

ஒருபோதும் முத்தமிடப் போவதில்லை
என்னை.

காலத்தின் கையில் ஒப்படைக்கிறேன்
என் காதலை.
இனி,
வெற்றுக் கூடாய்
உன் வழித்தடத்தில் எங்கேனும்
எனைப் பார்க்க நேர்ந்தால்
பேசிவிடாதே.

000

அதிகாலையின் மரணம்….

என் காலைப்பொழுது விடியவேயில்லை
இன்று.
அழுது வீங்கிய கண்களுடன்
படுக்கையில் சுருண்டு கிடக்கிறது.
என் காலைப் பொழுது
விடியாமல் இருப்பதன் காரணம்
உனக்குத் தெரியும்.
அதைப் பற்றி
ஒரு சிறிதும் கவலையின்றி
நீ எழுந்தாய்.
வழக்கம் போலவே குளித்துக்
கிளம்பி
சாப்பிட்டு
உன் பகலுக்குள் நுழைந்தாய்.
என் அதிகாலை இன்னமும் விடியவேயில்லை.
உன் குரலோ
உன் சொல்லோ
உன் கொஞ்சலோ
குறைந்தபட்சம்
நேற்றைய இரவின் மிச்சக் கோபமோ
எதுவுமே இன்றி
எப்படி விடிவதென புலம்பியபடி
உணர்வற்றுக் கிடக்கிறது
ஓர் பிணத்தைப் போல.
இன்றைய இரவு வருவதற்குள்
அது இறந்துபோகும்
ஓர் மலரைப் போல.
உனக்குக் கவலையில்லை
அதைப் பற்றி.
ஓர் அதிகாலை விடியாமல்
இறந்துபோவதைப் பற்றி
யாருக்கும் கவலையில்லை.
எல்லோருக்குமே நிறைய வேலை இருக்கிறது
உன்னைப் போல.

நன்றி : எனில்.காம்

நிர்பயாக்களின் தேசம்

நிர்பயாக்களின் தேசம்
      -- மனுஷி

நிர்பயாக்கள்
எப்போதும் பயமற்றவர்கள்
அவர்கள்
வாழ்தலுக்கான போராட்டத்தில்
மரணத்தைச் சுவைத்தவர்கள்.

இது நிர்பயாக்களின் தேசம்
நிர்பயாக்கள் உருவாக்கப்படும் தேசம்.

நிர்பயாக்களுக்கு
எல்லா காலத்திலும் ஒரு பெயருண்டு.

முத்தொழில் செய்யும் கடவுளர்களுக்கு
நிர்வாணத்தோடு உணவு படைத்தாள்
நிர்வாணத்தைப் படைத்தாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் அனுசுயா.

நீரில்
நிழல் கண்டு நினைத்ததற்காய்
தலை துண்டிக்கப்பட்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் ரேணுகா.

கணவனென்றே எண்ணி
தேவனைப் புணர்ந்து
கல்லாய் சமைந்தாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் அகலிகை.

காதலைத் தெரிவித்ததால்
மூக்கறுபட்டாள்
முலையறுபட்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் சூர்ப்பனகை.

கணவன் இருக்கும் இடமே அயோத்தியென
அப்பாவியாய் பின் தொடர்ந்தவள்
தீக்குள் பாய்ந்து உயிர் விட்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் சீதை.

கணவனுக்காக
முலை அறிந்து
முலை எறிந்து
மதுரை நகர் எரித்து
வாழ்க்கை கருகினாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் கண்ணகி.

ஆயிரத்தெட்டு பொன் கொடுத்து வாங்கப்பட்டாள்
ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் மாதவி.

காதல் மறைத்து
காமம் புதைத்து
துறவு பூண்டு
சிறைபட்டு மீண்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர்  மணிமேகலை.

இன்னும் முடிந்தபாடில்லை
நிர்பயாக்களின் பெயர்கள்.
முடிந்தபாடில்லை
நிர்பயாக்களின் கதைகள்.

இன்று ஆசிட் வீசி கொல்லப்படுகிறார்கள்
எங்கள் நிர்பயாக்கள்
அவர்கள்
விநோதினிகளாய் பெயர் மாறுகிறார்கள்.

இன விடுதலைக்காய்
ஆயுதம் ஏந்திய இசைப்பிரியாக்கள்
உடல் சிதைக்கப்படுகிறார்கள்
அவர்கள்
எங்கள் நிர்பயாக்கள்.

இது
நிர்பயாக்களின் தேசம்
மழை பெய்யென பெய்வதற்கு
நிர்பயாக்கள் தேவை.

ஆனால்
நிர்பயாக்கள் பயமற்றவர்கள்.
இலட்சியக் கனவுகளைச்
சுமந்து திரிகிறார்கள்.
அவர்களின் ஆன்மாவில்
இன்னும் உயிர்த்திருக்கிறாள் – ஒரு கொற்றவை.

வானம் தான்
நிர்பயாக்களின் எல்லை.
பறந்துதான் அடைய வேண்டும்
அந்தத் தூரத்தை.
பறந்துதான் ஆக வேண்டும்.

சிறகுகளாய் படபடக்கின்றன
நிர்பயாக்களின் கால்கள்.

பெண்ணுடலைச் சிதைக்க சிதைக்க
குருதியிலிருந்து
உயிர்த்தெழுவார்கள் நிர்பயாக்கள்
ஃபீனிக்ஸ் பறவையைப் போல.
இது நிர்பயாக்களின் தேசம்.
நிர்பயாக்களை உருவாக்கும் தேசம்.

(மார்ச் 8 அன்று காந்திகிராமிய பல்கலைக்கழக மகளிரியல் துறையில் வாசிக்கப்பட்ட கவிதை. நன்றி : தாமரை,)

ஞாயிறு, 3 மே, 2015

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சு 
(கல்கியின் ‘குறி அறுத்தேன்’ தொகுப்பை முன்வைத்து)
-- மனுஷி

குருதியில் மலர்ந்த மகளிர் தினத்தன்று, குறி அறுத்து / குருதியில் நனைந்து / மரணம் கடந்து / மங்கையான  கவிஞர் கல்கியின் கவிதைகள் குறித்துப் பேசுவதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
கல்கியின் கவிதை குறித்துப் பேசுவதற்கு முன்னால், திருநங்கைகளின் எழுத்துகள் எனக்கு அறிமுகமானதைப் பற்றிப் பேசவேண்டும்.
கவிஞர் மாலதி மைத்ரியின் கட்டுரை ஒன்று திருநங்கைகள் மற்றும் உடல் வேட்கை (வெறி) கொண்ட ஆண்களின் / ஆணாதிக்கச் சமூகத்தின் மீதான என் பார்வையைக் கொஞ்சம் மாற்றியமைத்தது. கூவாகம் திருவிழாவில் திருநங்கைகளிடம் ஆண்கள் நடந்து கொள்ளும் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியது மாலதி மைத்ரியின் கட்டுரை. அதன்பின்னர், திருநங்கைகளின் வாழ்வியல் குறித்த நூல்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.
தமிழில் திருநங்கைகள் குறித்து, நா.காமராசன், கி.ராஜநாராயணன், சு.சமுத்திரம் போன்றோர் படைப்புகளை எழுதியுள்ளனர். ஆனால், திருநங்கைகள் குறித்து இரத்தமும் சதையுமான வாழ்க்கையை லிவிங் ஸ்மைல் வித்யாவின் “நான் வித்யா” என்னும் நூலை வாசித்து உணர்ந்தேன். திருநங்கைகளின் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் வலி, கண்ணீர், ரணம், ஏக்கம், காதல் என இவற்றைக் கண்ணீர் இன்றி கடந்து போக  முடியவில்லை. அதன்பின்னர் ரேவதியின் “வெள்ளை மொழி” வாசிக்கக் கிடைத்தது. பெண்ணாக வாழப் போராடும் திருநங்கையின் தன்வரலாறு இது. திருநங்கைகள் குறித்து பொதுப்புத்தியில் நிலவும் ஏளனங்கள், கேலி கிண்டல்கள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கும் ரேவதி, திருநங்கைகள் குறித்த நல்ல எண்ணங்களையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
அதேபோல புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியில் ஒளிபரப்பான திருநங்கைகள் குறித்த ஆவணப்படம் எனக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்ணாகப் பிறந்தாலே வலியும் கண்ணீரும்தான் என்று எனக்குள் இருந்த எண்ணத்தை இத்தகைய எழுத்துகள் மாற்றின. நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். எனவே தான் இப்படியான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிற தெளிவை தலித் எழுத்து, பெண் எழுத்து இவற்றுக்குப் பிறகு திருநங்கை எழுத்து எனக்குச் சொல்லித் தந்தது.
இதுவரை கட்டுரைகளாகவும், கோட்பாடுகளாகவும், தன்வரலாறுகளாகவும் மட்டுமே திருநங்கை எழுத்துகளோடு அறிமுகமும் உறவும் இருந்தது.
புதுவையில் புத்தகப் பூங்கா என்னும் புத்தகக் கடை திறப்பு விழாவில் தற்செயலாக குறி அறுத்தேன் நூலைப் பார்த்தேன். அந்தத் தலைப்பு என்னைக் கவர்ந்தது. குட்டி ரேவதியின் முலைகள் என்னும் தொகுப்பை நினைவூட்டியது அந்தத் தலைப்பு. அன்று இரவே குறி அறுத்தேன் தொகுப்பை முழுமையாக வாசித்து முடித்தேன்.
தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை சக மனிதர்களை நேசிக்கத் தெரியாத சமூகத்தின்மீது வீசப்படும் சாட்டைகள்.
கல்கி ஒரு பேரழகி. ஒரு பெண்ணாக எனக்கு கல்கியின் அழகில் எனக்குச் சின்ன, (செல்ல) பொறாமை உண்டு. ஆனால், இந்தத் தொகுப்பை வாசித்து முடித்த கணத்தில் இருந்து கல்கியை நான் கொண்டாடுகின்ற என் தாய்த் தெய்வமான கொற்றவையாகத்தான் பார்க்கிறேன். மகாகவி பாரதியின் அக்கினிக்குஞ்சாகத்தான் பார்க்கிறேன். தோழி கல்கி எனக்கு அப்படித்தான் காட்சி தருகிறாள்.
ஹைதாராபாத் கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் உள்ள பாறையில் வரையப்பட்டுள்ள சிவனின் கழுத்தில் காலை வைத்துக் கொண்டு உக்கிரமான புன்னகையுடன் வீற்றிருக்கும் காளி உயிர்ப்பெற்று வந்துவிட்டாளோ என்று கூட நினைத்தேன். அவ்வளவு காத்திரமான கவிதைகளை இந்தத் தொகுப்பு தாங்கி இருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கவிதையை வாசித்ததும் கல்கியைக் கட்டியணைத்து முத்தமிடத் தோன்றியது. கவிதைக் காதலன் என்னும் தலைப்பில் அமைந்த இந்தக் கவிதைதான்.
“ஒரு கவிதைக் காதலன் / காதல் கவிஞன் / வாழ்க்கைத் தோழனாய் / வேண்டும் எனக்கு / என் இதயத்தையும் / அதில் நிறைந்த காதலையும் / ஒரு கவிஞனுக்கே கொடுப்பேன் / முத்தம் என்றொரு புதுக்கவிதையை / என் இதழ்களில் எழுதவும் / கவ்விய இதழ்களில் கலந்துவிட்ட மூச்சோடு / காவியம் பாடவும் / கவிதைக் காதலன் வேண்டும் எனக்கு / இப்பொழுதே தன் காதலை / கவிதையாய்ச் சொல்லவும் / எப்பொழுதும் கவிதையைக் காதலுடன் சொல்லவும் / ஒரு காதல் கவிஞன் / கவிதைக் காதலன் / வாழ்க்கைத் தோழனாய்”                                                                           
இந்தக் கவிதையை வாசித்தபோது எனக்குப் பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. கல்கியின் இந்தக் கவிதையில் முழுக்க முழுக்க பெண்ணின் குரல், பெண்ணின் காதல் ஏக்கம் நிரம்பித் ததும்புகிறது. இந்த ஒரு கவிதைதான் இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை என்னைப் பொறுத்தளவில். இந்த ஒரு கவிதைக்காகத்தான் கல்கிக்கு என் முத்தங்கள். காதலைக் கவிதை போல நேசிப்பவர்களால் மட்டுமே, கவிதையைக் காதலைப் போல சுவாசிப்பவர்களால் மட்டுமே இப்படியான கவிதையை எழுத முடியும். இப்படியான கவிதையைக் காதலிக்க முடியும். கல்கி, ஆகச் சிறந்த காதலி. உண்மைக்காதலுக்காக ஏங்கும் தூய ஆன்மா.
காதலின் துயரத்தை பாப்லோ நெரூதா இப்படிச் சொன்னார் “இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதலாம்”. காதலின் வலியை, அதன் துயர அழகியலைக் கவித்துவத்துடன் சொல்லும் கவிதை அது. கல்கியின் “ஒரு காதலின் மரணம்” எனும் கவிதை, காதலின் துயரத்தை அழகியலுடனும் மிகுந்த கோபத்துடனும் சொல்கிறது. இந்தத் தொகுப்பில் கொண்டாடத்தகுந்த கவிதையில் அதுவும் ஒன்று.
காதலில் தனது எதிர்பார்ப்பை, ஏக்கத்தை, அதிலிருந்து உண்டான விரக்தியை எளிமையான துயர அழகியலோடு பேசும் கவிதை “ஒரு காதலின் மரணம்”. இந்தக் கவிதையை “நேற்றிரவு என் காதலைக் கொன்றுவிட்டேன்” என்று தொடங்குகிறார் கல்கி. இந்த வரி என் இதயத்துடிப்பைச் சட்டென நின்றுபோகச் செய்தது. ஒரு காதலைக் கொல்வது அவ்வளவு சுலபமா? சாத்தியமா? ஆனால், ஏமாற்றத்தின் உச்சத்தில் அது சாத்தியம். கவிதையில் அது சாத்தியம். தான் ஒரு பொம்மையாகப் பாவிக்கப்படுகிறோம், உடல் மட்டுமே ஆணுக்குத் தேவையாக இருக்கிறது என்பதை உணரும் கணத்தில் கல்கி காதலைக் கொல்லத் துணிகிறார். ஆனால் உண்மையில் அது கொலை இல்லை. கண்ணீர். துயரம் தோய்ந்த கண்ணீர் மட்டுமே. “அவனுக்கு இதயம் என்ற ஒன்று இருந்தால் / அதில் காதல் கொஞ்சம் இருந்தால் / என் இதயம் அறுத்த அவனும் / காதலின் வலியை / அனுபவித்துப் பார்க்கட்டும்” என்ற வரிகளில் கண்ணீரின் அடர்த்தியை, ஓர் அபலையின் கேவலைத்தான் என்னால் உணரமுடிகிறது.
கல்கி, வெறும் காதலையும், காதல் ஏக்கங்களையும், அதனால் உண்டான விரக்தியையும், கண்ணீரையும் மட்டும்தான் கவிதையாக எழுதி இருக்கிறாரா? அப்படியான விமர்சனத்தை இந்தத் தொகுப்பின்மீது வாசகர்கள் முன்வைக்க முடியாது. இந்தக் கவிதைகள் தனிப்பட்ட ஒரு பெண்ணின் / மனுஷியின் வலிகளும் துயரங்களும் கோபங்களும் மட்டும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிதைகள் மட்டுமல்ல. சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிற / வாழ்வு மறுக்கப்படுகிற பெண்ணின் துயரங்கள். மேலும், ஈழம் என்றொரு சிதைந்த யோனி என்னும் கவிதை, கல்கியை சமூக அக்கறை கொண்ட படைப்பாளியாக முன்னிறுத்துகிறது. ”எனக்கான தேடலில் நானும் / தன் இனத்திற்கான தேடலில் அவளும் / வலி சுமந்தோமே” என இசைப்பிரியாவுடன் தன்னை இணைத்துப் பார்க்கிறார் கல்கி. இங்குதான் ஒரு படைப்பாளியாக கல்கி உயிர்த்தெழுகிறார் எனத் தோன்றுகிறது.
“கடவுளுக்கு மனைவியாகி / ஒரே நாளில் விதவையான / ஒரு பரிசோதனை கவிதை நான்” என்ற வரியைக் கல்கியால் மட்டும் தான் எழுத முடியும். ஆனால், கல்கி வெறும் பரிசோதனை கவிதை இல்லை. வாழ்க்கையைப் போராட்டத்தோடு எதிர்கொள்ளத் துணிந்த போராட்டக்காரி. வாழ்க்கையில் சாதிக்கத் துணிந்த கலகக்காரி.
“சடங்குகளை மூட்டை கட்டி / சாக்கடைக்குள் போட்டபின் / புன்னகை செய்ய கற்றுக் கொண்டேன் / பூக்களோடு பேசக் கற்றுக் கொண்டேன் / காதலிக்க கற்றுக் கொண்டேன் / கவிதை எழுத கற்றுக் கொண்டேன் / கவிதையாகவே வாழவும் இன்று கற்றுக் கொண்டேன்”
என்ற கவிதை வரிகள் தான் கல்கி ஒரு கலகக்காரி என்பதற்கு உதாரணம்.
கல்கியின் கவிதைகள் வெறும் கவிதைகள் மட்டுமல்ல. இதில் வாழ்க்கை இருக்கிறது. உண்மை இருக்கிறது. வாழ்தலுக்கான போராட்டம் இருக்கிறது. கோபம் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை இருக்கிறது. மனிதத்தின்மீதான காதல் இருக்கிறது.
”உங்களின் ஆணாதிக்க குறியை / அறுத்துக் கொள்ளுங்கள் / நீங்கள் யார் என்பதை / அப்போது அறிவீர்கள் /”
“போகிறது பார் பொட்டை / என்று நகைத்துச் சிரித்தார்கள் / ஆண்மையைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்கள்”
“சேலை கொடுத்தான் கண்ணன் / இப்போது அவன் வேண்டாம் எனக்கு”
”பாருடா கண்டார மவனே / நான் ஆம்பள இல்லடா பொம்பள / ஓங்கி ஓங்கி கைகளை அடித்தேன் வெறியோடு”
இப்படியான சொல் சாட்டைகளைப் பலம் கொண்ட மட்டும் இந்தச் சமூகத்தின்மீது வீசுகிறார் கல்கி. கல்கியின் கவிதை வரிகள் வெறும் சொற்கள் அல்ல. சொல் சாட்டைகள். நெருப்புக் கங்குகள். அழுக்கேறிப்போன சமூகத்தின் பொந்திடை வைக்கப்பட்ட அக்கினிக் குஞ்சுகள். இந்த அக்கினிக் குஞ்சு இன்னும் சில அக்கினிக் குஞ்சுகளைத் திருநங்கை சமூகத்திலிருந்து உருவாக்கும் என்பது என் நம்பிக்கை.
கல்கியின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவை, இந்தச் சமூகத்தை / ஆணாதிக்கச் சமூகத்தை நோக்கி நேரடியாகக் கோபத்தை வெளிப்படுத்துகின்றன. ஆற்றாமையில் கண்ணீர் சிந்துகின்றன. சக மனுஷிகான வாழ்வைச் சமூகத்திடம் / குடும்பத்திடம் இரைஞ்சும் தன்மையில் அமைந்துள்ளன. இந்த நேரடி உரையாடல் தன்மையே கல்கியின் பலமாகவும் உள்ளன. ஆனால், அடுத்தடுத்த தொகுப்புகளில் நேரடி உரையாடல் தன்மையிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கவித்துவத்துடன் கவிதைகளை அவர் எழுத வேண்டும்.
தமிழ்க் கவிதை வரலாற்றில் கல்கிக்கான இடம் பிரகாசமாக ஒளிவீசிக் காத்திருக்கிறது. அந்த ஒளிக்கற்றைகளின் வழித்தடத்தில் அவர் தொடர்ந்து பயணிப்பார். தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.
கல்கிக்கு என் அன்பும் முத்தங்களும்.

நன்றி : தளம் காலாண்டிதழ் ஏப்ரல்-ஜூன் 2015

வெள்ளி, 27 மார்ச், 2015

பெண்ணுடல்மீது கல்லெறியும் யோக்கியவான்கள்
ஒரு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஓர் அறைக்குள் தனியாக இருக்க பயந்து நடுங்கி இருக்கிறீர்களா? தூங்க முடியாமல் தவித்திருக்கிறீர்களா?
நான் பயந்து கொண்டிருக்கிறேன். தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவுதான் அந்தப் புகைப்படத்திலிருந்து நினைவைத் திசை திருப்பிக் கொண்டு போனாலும் பூமராங் போல மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு நினைவை விட்டும், கண்களை விட்டும் அகல மறுக்கிறது அந்தப் புகைப்படம்.
ஒரு புகைப்படம் இரண்டு நாளாகத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்; பயமுறுத்தும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நினைக்க நினைக்க மனநடுக்கம் அதிகமாகிறது. எவ்வளவு முயன்றும் மனக்கண்ணில் இருந்து இந்தப் புகைப்படத்தை அகற்றவே முடியவில்லை. கண்களை மூடவே அச்சம். அச்சம். அச்சம். வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத அளவுக்கு அச்சம்.
சில நண்பர்கள், போட்டோஷாப் செய்த பேய் வீடியோ அல்லது போட்டோக்களை அல்லது நிஜ பேய் (?) வீடியோக்களை நள்ளிரவில் வாட்ஸ் அப்பில் அனுப்பி திகிலடையச் செய்வார்கள். அது அந்த நேரத்தில் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யுமே தவிர அதன்பின்னர் மனதை விட்டு அகன்றுவிடும். எப்போதாவது நண்பர்களோடு பேய் படம் பார்த்துவிட்டு வரும் நாளில் கூட பயம் உள்ளுக்குள் பயம் இருக்கும். ஆனால், இந்த அளவிற்குப் பயந்ததில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு தோழி ஒருத்தி இந்தப் புகைப்படத்தை அனுப்பி, இதைப் பாருங்க, இந்தப் புகைப்படத்தை எடுத்தப் பின்னர், இந்தப் பெண்ணின் கணவன் இவளைக் கொன்று விட்டான் ஏன் என்று கண்டுபிடிங்க என்றாள். மீண்டும் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறேன். மிக சாதுவாக, சாந்தமாக புன்னகைத்தபடி அமர்ந்திருக்கும் அவள் முகம். அவள் கொல்லப்படப் போகிறோம் என்பதற்கான எந்த முகாந்திரமும் அவள் முகத்தில் தென்படவில்லை. பின்னர், அந்த அறையை ஒரு முறையை உற்றுப் பார்த்தேன். அப்போதும் எதுவும் தென்படவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபடி ‘அவள் அழகா இருக்கா அதனால் கொன்றிருப்பானோ?’ என்றேன் கிண்டலாக. இல்லை. நல்லா பாருங்க என்றாள். எனக்குத் தெரியலப்பா என்றேன்.
அவளுடைய கணவன் அலுவலக விஷயமாக இரண்டு நாள் வெளியூர் கிளம்பிச் செல்கிறான். கிளம்பிச் சென்றவன், கொஞ்சம் நேரத்தில் திரும்பி வந்து அவளை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, ‘இந்த இரண்டு நாளும் உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போகிறான். போனவன் திரும்பி வந்து அவளைக் கொன்றுவிட்டான். கொன்றதற்குக் காரணம் இந்தப் புகைப்படம்தான் என்றாள். எனக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. அவ்வளவு அன்பாகவும், நெருக்கமான தம்பதிகளாகவும் இருப்பவர்கள் ஏன் கொலை வரை செல்ல வேண்டும்? நீயே சொல்லிடு என்றேன் குழப்பமும் திகிலுமாக. நல்லா அந்தப் புகைப்படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்க என்றாள். பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது. அந்த டேபிள் ஃபேனுக்குக் கீழே கட்டிலுக்குள் ஒரு கண் மட்டும் தெரிந்தது. பயத்தில் இதயம் அதிவேகமாகத் துடித்தது. உடல் சட்டென்று வேர்த்துவிட்டது.
கட்டிலுக்கு அடியில் ஒருவன் மறைந்திருக்கிறான். அவளுடைய காதலன். அதைப் பார்த்த அவள் கணவன் அவளைக் கொன்றுவிட்டான் என்றாள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை செய்த கணவன் மீது தவறில்லை என்று தீர்ப்பு சொல்லிவிட்டாராம்.
என் தோழியும் சொன்னாள் “அவ பண்ணதும் தப்புதானே… அவ்வளவு அன்பான கணவனுக்குத் துரோகம் பண்ணலாமா? அதனால் தண்டிக்கப்பட வேண்டியவள் தான்”
அந்தப் பெண் அப்படிச் செய்தது சரியா தவறா என்ற கேள்விக்குள், வாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. ஏனெனில், யார் ஒருவரின் செயலையும் சரி என்றும் தவறு என்றும் மதிப்பிடுவதற்கு நமக்கு அதிகாரமோ உரிமையோ இல்லை. எல்லா சரிகளுக்குப் பின்னால் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தவறு இருக்கும். எல்லா தவறுக்குப் பின்னாலும் அதை நியாயப்படுத்தக்கூடிய ஒரு சரி இருக்கும். சரி தவறு என்பதெல்லாம் அவரவரைப் பொறுத்ததே. சந்தர்ப்ப சூழலைப் பொறுத்ததே. நாம் நீதிமான்களாக இருந்து நீதி சொல்லிவிட முடியாது.
இந்தச் சம்பவத்தையொட்டி என்னிடம் சில கேள்விகளே எஞ்சி நிற்கின்றன.
 மனைவி இன்னொருவனோடு இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவளைக் கொலை செய்தவன், அவள் காதலனை என்ன செய்தான் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லையே ஏன்? அவ்வளவு அன்பும் காதலும் கொண்ட மனைவி, ஏன் இன்னொருவனை உடலுறவுக்காக அழைக்க வேண்டும்? அந்த இடைவெளி எப்படி, ஏன் உருவானது இருவருக்குள்? அப்படியே இருந்தாலும் விவாகரத்து வாங்கிப் பிரிந்து சென்றிருக்கலாமே.. ஏன் அவளைக் கொலை செய்ய வேண்டும்? அவளைக் கொலை செய்வதற்கு அவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கணவன் என்னும் அதிகாரம் போதுமானதா பெண்ணைக் கொலை செய்ய? இல்லை ஆண் என்னும் அதிகாரம் போதுமானதா?
எப்போதுமே பெண்ணுடைய உடல், ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்ட உடைமைப் பொருளாகத்தான் இருந்து வருகிறது.
ஒரு பெரிய அரசியல் கட்சியின் வாரிசுக்கு தேர்தல் பிரச்சார சமயத்தில் முத்தம் கொடுத்தாள் என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் நம் நினைவுகளை விட்டு ஒரு புள்ளியைப் போல மறைந்து விட்டது. வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களோடு பேசுகிறாள் என்பதற்காக காதலியைக் கொன்ற சம்பவம் காற்றோடு கரைந்துவிட்டது. தனியார் வங்கியில் பணிபுரியும் இளைஞன், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஏதோ ஒரு முரண்பாட்டினால் பக்கத்தில் இருந்த ஜாடியால் தன் காதலியை அடித்துக் கொன்று, பிரேதத்தை மறைக்க முயன்று, தப்பிச் சென்ற சம்பவம் கூட நீர்க்குமிழி போலத்தான் ஆகிவிட்டது. இன்னும் இன்னும் எத்தனையோ கொலைகள். காதலின் பெயரால், குடும்பத்தின் பெயரால், உறவின் பெயரால். எல்லாமும் ஒரு கனவைப் போல கலைந்து போகின்றன. மீண்டும் மீண்டும் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். ஒருதலைபட்சமான விசாரணைகளும் நீதிகளும் தண்டனைகளும் அறங்களுமே வரலாறு முழுக்கவும் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும் பெண்ணே தண்டனைக்குரியவள். குறிப்பாக, பாலியல் உறவுகளில் பெண்ணுடலே தண்டனைக்குரியது. கொல்லப்படவேண்டியது. உடைமைச் சமூகத்தில் பெண்ணின் பாலியல் தேவை வரைமுறைக்கு உட்பட்டதாக, புனித பிம்பம் போர்த்தப்பட்டதாகவே இருக்கிறது. இப்படியான கொலைகளுக்குப் பின்னால் ஆணாதிக்கச் சமூகத்தின் (உடைமை மனோபாவத்தின்) கோரமுகம் குருதி சொட்டச் சொட்ட இன்னும் வெறிபிடித்து வீதிகளில் அலைவதைப் பார்த்தபடி நாம் கடந்து போகிறோம். நம்மிடம் எவ்வித எதிர்வினைகளும் இல்லை.

பைபிள் காலத்தில் பாலியல் தொழிலாளிமீது கல்லெறிய துணிந்த சமூகம் தானே இது. அவள் பாலியல் தொழிலாளியாக ஆனதற்கு அவள் மட்டும்தான் காரணமா என்கிற கேள்வியை யார் முன்னெடுப்பது?