வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

 எனக்குப் பிடித்த சுஜாதாவின் சிறுகத
நகரம்
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்
        மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காகsujatha வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !
நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தான் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். "உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ' என்றார் அதிகாலை பஸ் ஏறி ....
பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தால். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தால். வாய் திறந்திருந்தது.
பெரிய டாக்டர் அவள் தலையை திருப்பி பார்த்தார்.  கண் இரப்பையை தூக்கிப் பார்த்தார். கண்ணகளை விலரால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்துப் பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர் போஸ்ட் க்ராசுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொபசர் . அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள் .
"acute case of meningitis . notice  this .."
வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாசனையின் ஊடே தான் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் . சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குளே பார்த்தார்கள். 'டார்ச்' அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள் . குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள் .
பெரிய டாக்டர், "இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள் " என்றார்.
வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், 'இத பாரும்பா, இந்தப்ப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்காந்திருக்காரே , அவர் கிட்ட போ , சீட்டு எங்கே ?" என்றார்
வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.
"சாரி அவரு கொடுப்பாரு . நீ வாய்யா இப்படி பெரியவரே ! "
வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, " அய்யா, குழந்தைக்குச் சரியா போயிருங்களா ?" என்றாள் .
"முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம் . டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேசை பார்க்கிறேன். ஸீ தட் ஸீ இஸ் அட்மிட்டட் எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கறேன்"
மற்றவர்கள் புடைசூழ அவர் ஒரு மந்திரி போல கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டு  பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.
சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.
"இங்கே வாம்மா . உன் பேர் என்ன ..? டேய் சாவு கிராக்கி ! அந்த ரிஜிஸ்டரை எடுடா..! "
"வள்ளியம்மாள்"
"பேசண்டு பேரு?"
"அவரு செத்து போயிட்டாருங்க .."
சீனிவாசன் நிமிர்ந்தான்
"பேசண்டுன்னா நோயாளி .. யாரைச் சேர்க்கணும் ?"
"என் மகளைங்க "
"பேரு என்ன ..?'
"வள்ளியம்மளுங்க"
"என்ன சேட்டையா பண்ற ? உன் மாக பேரு என்ன ../'
"பாப்பாத்தி '
"பாப்பாத்தி!.. அப்பாடா. இந்தா , இந்தச் சீட்டை எடுத்துகிட்டு போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுகிட்டு ஒருத்தர் உக்காந்திருப்பார் . வருமான பாக்குறவரு அவருகிட்ட கொடு."
"குளந்தங்கே..?'
"குளைந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்து இருக்கட்டும்  கூட யாரும் வல்லையா ? நீ போய் வா. விஜயரங்கம் யாருய்யா ?"
வள்ளியம்மாளுக்கு பாபதியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை . அந்த கியூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தான் கணவன்மேல் கோபம் வந்தது.
அந்த சீட்டை கொண்டு அவள் எதிரே சென்றால். நாற்காலி காலியாக இருந்தது. அதான் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள்.ஆவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார்."இரும்மா அவரு வருத்தம்' என்று காலி நாற்காலியை காட்டினார். வள்ளியம்மாளுக்கு தயும்பித் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில் , காத்திருப்பதா - குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிந்தது.
"ரொம்ப நேரமாவுங்களா..? " என்று கேட்க பயமாக இருந்தது அவளுக்கு.
வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார் உட்கார்ந்தார்.  ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்சிப்பைக் கயிறாக சுருட்டித் தேய்துக்க் கொண்டு சுறு சுறுப்பானார்.
"த பார் வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்புச்சி மாதிரி வந்திங்கன்ன என்ன செய்யிறது ..?"
வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.
"டாக்டர் கிட்ட கை எழுத்து வாங்கி கிட்டு வா , டாக்டர் கையழுத்தே இல்லையே அதிலே ..?
"அதுக்கு எங்கிட்டு போவனும்..?"
"எங்கிருந்து வந்தே ..?'
"மூனாண்டிபாடிங்கே !'
கிளார்க் "ஹாத்" என்றாள். சிருதார். "மூணாண்டிபட்டி ! இங்கே கொண்ட அந்த சீட்டை "
சீட்டை மறுபடி கொடுத்தால். அவர் அதை விசிறி  போல் இப்படிப் திருப்பினார்.
"உன் புருசனுக்கு என்ன வருமானம் ?"
"புருஷன்  இல்லீங்க "
"உனக்கு என்ன வருமானம்? "
அவள் புரியாமல் விழித்தாள்.
"எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே ?"
"அறுப்புக்குப் போன நெல்லாக் கிடைக்கும் அப்புறம் கம்பு, கேழ்வரகு !'
"ரூபா கிடையாதா.! சரி சரி .. தொண்ணூறு ரூபா போட்டு வைக்கிறேன்."
"மாசங்களா?"
"பயப்படாதே .சார்ஜு பண்ண மாட்டாங்க . இந்த , இந்த சீட்டை எடுத்துகிட்டு கொடு இப்படியே நேராப் போயி இடது பாக்கள் - பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும் . 48  - ம் நம்பர் ரூமுக்கு போ ."
வள்ளியம்மாள் அந்த சீட்டை இரு கரங்களிலும் வாங்கி கொண்டால். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க , காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்கு படிக்க வராது. 48  ம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பி போயி அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.
ஒரே ஸ்ட்ரச்சரில் இரண்டு நோயாளிகள் உக்கார்ந்து கொண்டு, பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருதது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன . அலங்கரித்து கொண்டு வெள்ளை கோட் அணிந்து கொண்டு ஸ்டேதேஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்சுகள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்கு  பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். அங்கே ஒரு ஆள் சீட்டுப் போல பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்து கொண்டிருந்தான். அவன் கையில் தான் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கி கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்த பெண் அங்கே தனிய இருக்கிறாள். சீட்டுகளைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்த சீட்டை பார்த்து, "இங்க கொண்டு வந்தியா! இந்தா, " சீட்டை திருப்பி கொடுத்து, "நேராப் போ,' என்றான். வள்ளியம்மாள், "அய்யா , இடம் தெரியலிங்களே"  என்றாள். அவன் சற்று எதிரே சென்ற ஒருவனை தடுத்து நிறுத்தி, " அமல்ராஜ் இந்த அம்மாளுக்கு 48 ம் நம்பரை காட்டுய்யா . இந்த ஆள் பின்னாடியே போ . இவர் அங்கேதான் போறார்." என்றான்.
அவள் அமல்ராஜின் பின்னே ஓட வேண்டியிருந்தது.
அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கி கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.
அரை மணி கழித்து அவள் அழைக்கபட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பி பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்
"ஓ,பி. டிபார்ட்மேண்டிலிருந்து வரியா ..?"
இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
"அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக்கு கலையிலே சரியாய் ஏழரை மணிக்கு வந்துடு என்ன..?"
"இங்கேயே வா, நேரா வா, என்ன ?"
வள்ளியம்மாளுக்கு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தியாக வந்த விட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று.அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஓன்று போல் இருந்தன.ஒரே ஆசாமி திரும்ப திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. ஒரு வார்டில் கையை காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட்டி பல பேர் படுத்திருந்தார்கள் . ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன.மிஷின்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக, அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.
"அம்மா" என்று ஒரு பெண் டாக்டரை கூப்பிட்டு தான் புறப்பட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். "நெறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாமுன்னு சொன்னாங்க. எம் புள்ளைய அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா! "
அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக நின்று கொண்டு அழச்சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அசெப்டிக் மணம் போல எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.
"பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டு பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்? " என்று பேசிக் கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதான் கேட்டை திருந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.
வெளியே வந்து விட்டாள்.அங்கிருந்து தான் தொலை தூரம் நடந்து மற்றோரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!
ஆனால் வாளில்தான் மூடப்பட்டிருந்தது உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரச்சரில் கண் மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.
"அதோ! அய்யா, கொஞ்சம் கதவைக் திறவுங்க, எம்மவ அங்கே இருக்கு .'
சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்'" அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான். அவன் கேட்டது அவளுக்கு புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக் கொண்டு யாருக்கோ  அவன் வழி விட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்து  கொண்டு  அழுதாள்.
பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டு விட்டு வார்டுக்கு சென்றார். அவருக்கு காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது.B .M .J  யில்  சமீபத்தில் புதிய சில மருந்துகளை பற்றி வர படித்திருந்தார்.
"இன்னைக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே  மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா..?
"இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர் "
"என்னது? அட்மிட் ஆகலையே? நான் ஸ்பெசிபிக்கா சொன்னேனே! தனசேகரன், உங்களுக்கு ஞாபகம் இல்லை ..?"
"இருக்கிறது டாக்டர் ! "
"பால்! கொஞ்சம் போயி விசாரிச்சு கிட்டு வாங்க அது எப்படி மிஸ் ஆகும் ?"
பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளாற்குகளிடம் விசாரித்தார்."எங்கயா! அட்மிட் அட்மிட்டுன்னு நீங்க பாட்டுக்கு எழுதிபுடுறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது! "
"சுவாமி சீப்  கேக்குறார் !"
"அவருக்கு தெரிஞ்சவங்களா ?"
"இருக்கலாம் எனக்கு என்ன தெரியும்?"
"பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ம பக்கம் வரல. வேற யாரவது வந்திருந்தாக் கூட எல்லோரையும் நாளைக்கு காலையிலே வர சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட்டு காலியாகும். எமேர்ஜன்சின்னா முன்னாலேயே சொல்லணும்! இல்லை பெரியவருக்கு அதிலே இண்டரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா ..?'
வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை ஏழரை மணி வரை என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.
"வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி யிலே போயி பாருங்க . அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சர்ட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிப்பாட்மென்ட் வார்டில பெட் இருக்குது. கொடுக்க சொல்லுங்க! க்விக்!"
"டாக்டர்! அது ரிசர்வ் பண்ணி வைச்சிருக்கு "
"i dont care. i want that girl admitted now. Right now!"
பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்தது இல்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா  என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளை தேடி ஓ.பி டிபாட் மெண்டுக்கு ஓடினார்கள்.
"வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்." சைக்கிள் ரிக் ஷா  பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், "பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்' என்று வேண்டி கொண்டாள்.
                                                                                                நன்றி : அழியாச் சுடர்கள்.காம்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

நான் ஏன் எழுதுகிறேன்?

 நான் ஏன் எழுதுகிறேன்?
n  கவிஞர் மனுஷி

நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியின் கோணத்தைச் சற்றே திருப்பிப் பார்க்கிறேன். ஒரு பெண் ஏன் எழுத வேண்டும்? தவறென்று தெரியாத அளவு, பெண் இரண்டாம் தர உயிரியாகப் பாவிக்கப்படும் சூழலில் ஒரு பெண் எழுதி என்னவாகிவிடப் போகிறது? அதுவும் மதமும் சாதியமும் ஒன்றுக்கொன்று போட்டிக்கொண்டு பெண்ணைக் கீழமுக்கும் இந்தியச் சூழலில் ஒரு பெண் ஏன்தான் எழுத வேண்டும்?
எழுதும் வேட்கை எப்போது துளிர்விட்டது என்பதைத் துல்லியமாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியை ஓராயிரம் முறை கேட்டுக் கொள்கிறேன். புகழ் பெற வேண்டும் என்கிற ஆசையா? நானும் ஒரு கவிஞர் தான்; நானும் ஓர் எழுத்தாளர் தான் என்பதை அடையாளப்படுத்த வேண்டும் என்கிற விருப்பமா? பதின்பருவத்தில் இந்த ஆசைகள் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான காரணங்களை என்னால் மிகச் சரியாகக் குறிப்பிடவியலும்.
என் வாழ்க்கையில் நடந்த சோகங்களை, நான் வடித்த கண்ணீரை, எனக்கு நானே சொல்லிக் கொள்ளவும், அந்த வலிகளிலிருந்து மீண்டெழவும் எழுத்தை வடிகால் ஆக்கிக் கொண்டேன். உண்மையில் வலி நிவாரணியாகத்தான் எழுத்தைக் கைபிடித்தேன். என் எழுத்து என்பது நான்தான்.
ஒருகட்டத்திற்குப் பிறகு, பரிசுகளும், பாராட்டுகளும், விருதுகளும், விமர்சனங்களும் எனக்குத் துச்சமாகத் தெரிந்தன.
தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்லாமல் உலக இலக்கியங்களைத் தினம் தினம் வாசிக்கிறேன். தஸ்லிமா நஸ்ரின், ஸில்வியா ப்ளாத், பாப்லோ நெருடா, தாஸ்தோவ்ஸ்கி, சிமோன் தெ பவர், பாவ்லோ கோலோ போன்றவர்கள் என் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். தமிழில் மகாகவி பாரதி, வங்கத்தில் தாகூர், மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீர், கமலாதாஸ், தகழி சிவசங்கரம்பிள்ளை போன்றவர்கள் எனக்குள் ஓராயிரம் விஷயங்களை என் கரம்பிடித்துச் சொல்லித் தருகிறார்கள். அவர்களுடைய மடியில் ஒரு செல்லக் குழந்தையாக அமர்ந்து கொண்டுதான், என் மழலை வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
எழுத வருகையில், என் வாழ்க்கையும், என் சோகங்களும், என் கண்ணீரும் மட்டுமே பிரதானமாகப்பட்டது. இப்போது, நான் ஒரு மூன்றாம் உலக நாட்டின் பிரஜை என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
நான் நேசிக்கும் இந்த நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டாலும், சக மனிதர்களுக்கு நடக்கும் கொடுமைகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. இலங்கையில், காஸாவில் இன்னும் எங்கெங்கெல்லாம் இனப்படுகொலைகளின்போது பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதை அறிந்து என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. பாலியல் வல்லுறவிற்கும், ஆசிட் வீச்சுக்கும் ஆளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் என் அதிகாலைகளை அழுக்குப்படுத்திக் கொண்டிருக்கையில், என்னால் நிதானமாகத் தேநீரைப் பருக முடியவில்லை. மனிதநேயம் செத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதற்காக எழுதுகிறேன். முகம் இழந்த மனிதர்களுக்காக, வாழ்க்கையை நித்தம் நித்தம் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்காக, மௌனமாக விம்மிக் கொண்டிருக்கும் பெண்களுக்காக, குழந்தைமையை நுகர்வுக் கலாச்சாரத்தில் இழந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்காக, அவர்களுடன் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
வானத்தை விடவும் விசாலமானது எழுத்து என்பதைப் புரிந்துகொள்ளும் எழுத்தாளன், தொடர்ந்து வாழ்க்கையைத் தேடிக் கொண்டே இருப்பான். சக மனிதர்களை நேசிப்பதால் மட்டுமே ஒருவன் / ஒருத்தி மனிதனாக இருக்க முடியும். ‘மனுஷி’ என்கிற புனைபெயரைச் சூட்டிக் கொண்டதும் கூட அதனால்தான். நத்தையைப் போலவே ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் வாழ்க்கையும் இருக்கிறது. என்றாலும் ‘மனிதநேயம்’ என்னும் சிறகுகள் கொண்டு, எல்லையற்ற வாழ்க்கையெங்கும் நான் பறந்து பார்க்க விரும்புகிறேன்.
எழுத்தின் வழியே கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும், பூக்களையும், மண்ணின் மணத்தையும் ஸ்பரிசிக்க வேண்டும் என்பது என் பேராசை. ஒவ்வொரு மனிதனின் இதயத்தோடும் என் எழுத்து மனம் திறந்து பேச வேண்டும். சமூகமே! உனக்குள் ஏன் இத்தனை எல்லைகள்? ஏன் இத்தனை வேறுபாடுகள்? பெண்ணை, சக மனுஷியாகப் பார்க்கும் பக்குவத்தை ஏன் இழந்தாய்? ‘இதயம்’ என்னும் ஒரே மொழியின் மூலமாக நீ பேச முடியாதா? இந்தக் கேள்விகளையெல்லாம் என் எழுத்தும் இலக்கியமும் எழுப்ப வேண்டும். அதனால் எழுதுகிறேன்.
என் தாய்மொழியில் எழுதுவது என்பது எனக்கு மிகப்பெரிய சவால். மாபெரும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வாழ்க்கையை அதன் ஆழம் வரை தரிசித்த ஆளுமைகளும் நிறைந்த மொழி என் தாய்மொழி. அந்த மொழியில் என் எழுத்து கரைந்து போகும்போது, மானுடச் சமுத்திரத்தில் நான் கரைந்துபோவேன். அப்படிக் கரைந்து போகும்போது கிடைக்கும் பரவசம் எல்லையற்றது.
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், மூன்றாம் உலக நாட்டின் கலகக்  குரலாக, என் சக மனிதர்களின் அடையாளமாக, மனித நேயத்தை வலியுறுத்தும் பெண்ணாக இருக்க ஆசைப்படுகிறேன்.
எழுத்து என் வாழ்க்கை. எழுத்து என் தவம். எழுத்து ஒன்றே நான் வாழ்ந்தேன் என்பதற்கான அடையாளம். எழுதாமல் இருந்தால் நான் இறந்துவிடுவேன். ஆயிரம் கரங்கள் கொண்டு இந்த மானுடத்தைத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன்.
நண்பர்களே! அதனால் எழுதுகிறேன்.
இறுதியாக, முத்தங்களின் கடவுள் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.
கடவுள்கள் தியானத்தில் இருந்தபோது...
n  மனுஷி
நள்ளிரவில்
சிறுமிகள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டபோது
கடவுளால் கைவிடப்பட்ட,
கடவுளால் சபிக்கப்பட்ட தேவதைகளாக இருந்தனர்.
வீடுகளில்
யாருமற்ற நேரத்தில்
சாக்லேட்டுகள் தரப்பட்டு
பலவந்தமாக பாத்ரூமுக்குள்
அழைத்துச் செல்லப்படும் சிறுமிகளும்
அப்படியே.
அந்த நாள் தான்
தனது இறுதி தினமென்று
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
வலியில்
கதறவும் திராணியற்று
அவர்கள் துடித்துக் கொண்டிருந்தபோது
கடவுள்கள்
ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர்.
வன்புணர்வுக்குப் பின்பு 
கிரீடம் அணிந்த தேவதைகள்
சிறுமிகளை
சிரமமின்றி அழைத்துச் செல்லவென
பரந்து விரிந்த மரத்தில் தூக்கிடப்பட்டனர்.
தங்களின் வெள்ளுடை
சிறுமிகளின் குருதியினால் கரையாகிவிடக்கூடுமென
சற்றுத் தாமதமாகவே வந்தனர்
தேவதைகள்.
அருகில்
சிறுமிகளின் நாளை குறித்த கனவுகள்
சப்தமின்றி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை
தேவதைகளோ
நீங்களோ
கவனிக்கவோ
கண்டுகொள்ளவோ இல்லை.
அந்தக் கனவுகள் தூக்கிடப் படுவதற்கு முன்னால்
இப்படிச் சொல்லின
"நண்பர்களே 
இனி
சிறுமிகளின் பிஞ்சு யோனிக்குள்
விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்
அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை
ஒருமுறை பாருங்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும்
சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்".

-- (பிப்ரவரி 12, 2015 அன்று, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சாகித்திய அகாடெமி நடத்திய இளம் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய உரையின் தமிழ் வடிவம்)



செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கா...கா...கா...



கா… கா… கா….
n  மனுஷி
          கூகுளில் காக்கைகளைப் பற்றித் தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தாள் நித்யா. அவள் பறவைகளைப் பற்றிப் படிப்பவள் இல்லை. பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சி மாணவியும் இல்லை. இரண்டு நாட்களாகக் காகங்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். நண்பர்களிடமும் காகங்களைப் பற்றித்தான் பேசினாள். காகங்களைப் பற்றிய தகவல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சேகரித்துக் கொண்டே வந்தாள். காக்கைகள் மீதுள்ள விருப்பத்தினால் அல்ல. அவைகள் மீது தீராத கோபத்தினாலும், பயத்தினாலும்தான். உதவி செய்யப் போய் இப்படி உபத்திரவத்தை அள்ளி மடியில் வைத்துக் கொண்டோமே என்று தன்னையே நொந்து கொண்டாள். சில சமயங்களில் காக்கைகளால் ஹவுஸ் அரஸ்ட் செய்யப்பட்டு விட்டதைப் போல உணர்ந்தாள்.
********
          நித்யாவுக்குக் காக்கைகள் பற்றிப் பெரிதாய் எந்தவித நல்லெண்ணமோ கெட்ட அபிப்ராயமோ இருந்ததில்லை.
சொல்லப்போனால், அவள் முதன்முதலில் கேட்ட கதை காக்காவினுடையதாகத்தான் இருக்கும். ஆறு கட்டங்களில் படங்களின் மூலம் சொல்லப்பட்ட கதை. பாட்டியிடம் வடை திருடிக் கொண்டு போய் நரியிடம் ஏமாந்த காக்கையின் கதை. அந்த வயதில் வடையை நரியிடம் கோட்டை விட்ட காக்கைக்காக நிறையவே பாவப்பட்டிருக்கிறாள். காக்கையிடம் நைசாகப் பேசி வடையை அபகரித்துச் சென்ற நரியின் மீது அவளுக்குக் கோபம் கோபமாக வரும். காக்காவிடம் வடையை ஏமாற்றிப் பறித்துச் சென்றதால்தான் திராட்சைப் பழத்தை நரியால் எட்டிப் பறித்துத் தின்ன முடியாமல் போனது என்று தோழிகளிடம் பேசி இருக்கிறாள். (உண்மையில் ஏமாந்தது பாட்டி தானே).
அதன்பிறகு பானையில் இருந்த குறைந்த தண்ணீரைக் குட்டி குட்டிக் கூழாங்கல்லை எடுத்துப் போட்டு தண்ணீர் மேலே வர, குடித்துவிட்டு தாகம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் பறந்து சென்ற காகத்தின் கதை. காக்கையின் புத்திசாலித்தனத்தை நினைத்து வியந்திருந்திருக்கிறாள்.
தன் வம்சத்தை அழிக்கும் செயலில் விடாப்பிடியாக ஈடுபட்டு வந்த பாம்பை, தன் நண்பன் நரியின் உதவியால் கொன்று பழி தீர்த்துக் கொண்ட காக்கைப் பெற்றோரின் கதையைக் கேட்டபோது அவளுக்குப் பெரிய சந்தேகம். தன்னை ஏமாற்றிய நரியுடன் காக்கை எப்படி சினேகமானது? அதுவும் குடும்ப நண்பனாக ஆனது என்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டே தூங்கி இருக்கிறாள்.
          காக்கா பற்றிய கதைகள் ஒருபுறம் என்றால் சின்ன வயதில் அமாவாசை கிருத்திகை, தீபாவளி இந்த மாதிரி முக்கியமான நாட்களில் வடை பாயாசம் அப்பளத்துடன் நடுவீட்டில் அவள் அம்மா படைப்பாள். காமாட்சி அம்மன் விளக்கு, கூடவே குட்டி குட்டி குத்து விளக்குகள் இரண்டு அகல் விளக்கு இவற்றின் ஒளியில் சாமி அறை லட்சுமி கடாட்சமாக இருக்கும். வத்தி வாசனை வேறு பக்திப் பரவசத்தைக் கூட்டும். சாமிப் படங்களுக்குக் கீழே பெரிய வாழை இலையில் சோறு குழம்பு அப்பளம் வடை கூட்டு பொறியல் எல்லாம் இருக்கும். பெரிய இலையில் இருக்கும் அத்தனை ஐட்டங்களும் பக்கத்தில் உள்ள குட்டி இலையிலும் இருக்கும். படைத்து முடித்தவுடன் அந்தக் குட்டி இலையை மாட்டுத் தொட்டிக்கு மேலேறி ஓட்டு மேல் வைத்துவிட்டு வரச் சொல்வாள் அம்மா. நித்யாவும் ஓட்டு மேல் வைத்து விட்டு கா… கா… கா… என்று கூப்பிட்டு முடிப்பதற்குள், அதற்காகவே காத்திருந்தது போல காக்கைகள் பேரிரைச்சலுடன் பட்டாளமாகக் கிளம்பி வந்து முறையாகச் சாப்பிட்டுப் போகும். சிலசமயங்களில் வீம்புக்கென ஒரு காக்காவும் வராமல் போனால், அவைகள் வந்து சாப்பிடும்வரை வீட்டில் உள்ளவர்கள் பட்டினிதான். காக்கா சாப்பிடும்வரை அப்பளத்தை மட்டும் சாப்பிடறேனேம்மா என்றால்கூட அம்மா விடமாட்டாள். பசி தாங்காமல் அப்பளத்தையோ வடையையோ அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து எடுத்துக் கொண்டு போய் தெருவாசலில் நின்றபடி தின்றுவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வந்து அப்பாவியாய் நிற்பாள்.
சாதாரண நாளில்கூட காக்காவுக்குச் சாப்பாடு வைத்து அவை சாப்பிடுகின்றனவா என்று பார்த்துவிட்டுத்தான் பெரியப்பா சாப்பிடுவார். சாப்பிட்டு முடித்து மீதமிருக்கும் ஒரு கை சாப்பாட்டைக் காக்காவுக்கு வைக்கப் போய் திட்டு வாங்கிய நாட்கள் உண்டு. என்னடி பொம்பள நீ… ஒரு வீட்டுல வாழப் போற பொண்ணு. எச்சி சோற காக்காவுக்கு வைக்கப் போற. வெளங்குமா குடும்பம் என்று திட்டுவாள் பெரியம்மா.
இந்த மாதிரி இரண்டு மூன்றுமுறை திட்டு வாங்கிய பிறகு ஞானோதயம் வந்ததோ என்னவோ. சாப்பிடுவதற்கு முன்பு ஒரு பிடி சோற்றை எடுத்துத் தனியாக எடுத்து வைத்துவிட்டுச் சாப்பிடுவாள். சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் எஞ்சி இருப்பவற்றை நாய்க்கும், சாப்பிடுவதற்கு முன்பு எடுத்து வைத்த ஒரு பிடி சோற்றைக் காக்காவுக்கும் வைத்துவிட்டு வருவாள். காக்கா சாப்பிடும் வரை சாப்பிடாமல் காத்திருப்பதில் அவளுக்கு உடன்பாடு இருந்ததில்லை. உண்மையில் பசி பொறுக்க முடியாது அவளால்.
          இப்படி காக்கைகள் பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும் சம்பவங்களும் அவளிடத்தில் நிறைய உண்டு.
இவை எல்லாவற்றையும்விட மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று உண்டு. பொதுவாக, சின்னக் குழந்தைகளின் முதல் நண்பனாக காக்கைகள் இருக்கின்றன. அதெப்படி? அங்க பாரு காக்கா….. காக்கா வா வா வா… என்று பால்கனியில் இருந்து காக்காவை வேடிக்கை காட்டி அழுகையை நிப்பாட்டுகிற, சோறூட்டுகிற அம்மாக்களைப் பார்த்திருக்கிறாள். அவளுமேகூட தோழிகளின் குழந்தைகளுக்குக் காக்காவைக் காட்டி அவர்களுடைய அழுகையை நிப்பாட்டி இருக்கிறாள். தன் தோழியின் மகன் காக்கைகளைக் கண்டால் மிகவும் குஷியாகிவிடுவான். அவன் முகத்தில் தவழும் மகிழ்ச்சியைப் பார்த்த நாள் முதல் காக்கைகள்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திக் கொண்டாள். குழந்தைகளின் மனதைக் கவரும் முதல் உயிரினம் காகமாகத்தான் இருக்க வேண்டும் என்பாள்.
*******
நித்யா வாடகை வீடு பார்த்துக் கொண்டு வந்தபிறகு கொஞ்ச நாளில் காக்கைகள் அவளுக்கு நண்பர்கள் ஆயின. காலையில் எதேச்சையாக ஒருநாள் தான் தின்று கொண்டிருந்த பிஸ்கட்டுகளில் இரண்டை நொறுக்கி மொட்டை மாடி சுவரில் வைத்தாள். அவள் வைத்துவிட்டு நகர்ந்த சில நொடியில் பறந்து வந்த ஒன்றிரண்டு காக்கைகள் ஒரு துகள் விடாமல் தின்று தீர்த்தன. மனதுக்குள் துள்ளிக் குதித்தாள். அதன்பிறகு தினமும் அவற்றுக்கு பிஸ்கட்டோ, பன்னோ, அல்லது சிப்ஸோ, மதியத்தில் வீட்டில் சாப்பிட நேர்ந்தால் பிரியாணி, சாப்பாடு, பரோட்டா, இட்லி என ஏதாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். பிஸ்கட்டுகளோ பிற ஸ்நாக்ஸ் ஐட்டங்களோ இல்லாத நேரங்களில் ஆப்பிள் போன்ற பழ வகைகளைத் துண்டு துண்டாக நறுக்கி அவைகளுக்கு உண்ணக் கொடுத்திருக்கிறாள். அவள் வைத்துவிட்டுப் போன உணவை விரும்பி உண்ணும் காக்கைகள் அவளை நம்பவே இல்லை. ஒருவித அச்சத்துடனேயே அவளைப் பார்த்தன. ஒருநாள் பிஸ்கட் வைக்கும்போது தென்னைமரக் கீற்றில் அமர்ந்திருந்த இரண்டு காக்கைகளிடம்,
‘இங்க பாரு, நான் ஒன்னும் செய்ய மாட்டேன். நம்பிக்கை இருந்தால் நான் வைக்கும் பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிடு. இப்படி நம்பிக்கை இல்லாமல் இருப்பது எனக்குப் பிடிக்கல. இவ்ளோ நாள் உனக்கு காலையிலும், மதியத்திலும் சாப்பாடு கொடுக்கறேன். குடிக்க தண்ணி வைக்கறேன். இப்பவும் கொலைகாரனைப் பார்ப்பது போல பார்க்கறிங்க. கோவம் வருது.’
என்று சொல்லிவிட்டு வந்தாள். இரண்டு காகமும் அவளையும் விநோதமாகப் பார்த்தன. பின்பு வழக்கம்போலவே அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும் பிஸ்கட்டுகளைத் தின்றுவிட்டு பறந்தன. ஒன்றிரண்டு நாட்களில் இந்த நிலை மாறியது. அவள் சாப்பிட ஏதாவது வைக்க வரும்போது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மொட்டை மாடிச் சுவரில் பயமின்றி அமர்ந்திருந்தன. வைத்துவிட்டு நகர்ந்ததும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிட்டு பறந்தன.
          நாட்கள் செல்லச் செல்ல சரியான நேரத்திற்குச் சாப்பிட்டாக வேண்டிய சர்க்கரை நோயாளி போல எட்டு மணிக்கெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டன. அலாரம் அடிக்கிறதோ இல்லையோ எட்டு மணியானால் ஜன்னல் பக்கத்தில் வந்தமர்ந்து கா… கா… கா..வென கத்தி எழுப்பிவிடும். அதன் கூச்சல் தாங்காமல் எழுந்து வெளியில் வந்ததும் சாப்பாடு போடு என்று அதிகாரம் செய்வது போல இருக்கும் அதன் கத்தலும் பார்வையும். பாத்ரூம் போய்விட்டு வந்து போடலாம் என்றால் அதற்குள் பாத்ரூம் சுவர் மீது அமர்ந்து கூச்சல் போடும். ‘ச்சே நிம்மதியாக பாத்ரூம்கூட போக முடியல, சனியன்’ என்று திட்டியபடியே காலை உணவைப் போடுவாள். காக்கைகள்மீது சலித்துக் கொண்டாலும் ஒருநாள்கூட அவற்றிற்கு உணவு போடாமல் தவிர்த்ததே இல்லை. எங்காவது ஊருக்குச் சென்றாலும்கூட அவற்றின் நினைவு வரும். தான் உணவிடவில்லை என்றாலும் கூட அவற்றிற்குப் பசி தீரும். உண்ண உணவு கிடைக்கும். ஆனாலும் காக்கைகள் பசியாக இருக்குமே என்று வருந்துவாள்.
அப்போதெல்லாம் அவள் நினைத்ததே இல்லை. காகத்தால் இப்படி மன உளைச்சலுக்கும் பிரச்சனைக்கும் உள்ளாவாள் என்று.
******
தெருவை ஒழுங்குபடுத்தி சிமெண்ட் சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கி இருந்தன. சாலை சீரமைப்புப் பணியாளர்களின் பேச்சரவங்கள், தெருவில் மண்ணைக் கொட்டி நிரவிக் கொண்டிருக்கும் வாகனத்தின் இரைச்சலும், சாலையைப் போடுவதற்கு இடைஞ்சலாக இருந்த மரங்களை வெட்டும் சத்தமும் தெருவை ஆக்கிரமித்திருந்தன. அப்படி மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது வேப்பமரத்தில் இருந்து தொப்பென்று விழுந்தது ஒரு கூடு. காக்கைக் கூடு. அந்தக் கூட்டினுள் பிஞ்சுக் குழந்தையைப் போல இருந்தது காக்கைக் குஞ்சொன்று. வெட்டுப்பட்ட மரக்கிளையில் இருந்து விழுந்த குட்டிக் காக்காவைப் பற்றிச் சிறிதும் அக்கறையோ வருத்தமோ இன்றி தொடர்ந்து தங்கள் வேலையில் மும்முரமாய் இருந்தனர். நித்யா ஓடிப்போய் அந்தக் கூட்டுடன் குட்டிக் காக்காவைத் தூக்கி வந்தாள். வீட்டுக்குள் வைத்துவிட்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இதனுடைய அம்மா வருமா? வந்து தேடுமா? இங்கே வீட்டில் இருக்கிறது என்பதை எப்படி அதனிடம் சொல்வது? பால்கனி சுவரில் வைக்கலாம் என்றால் அவ்வப்போது வந்து போகும் வெள்ளைப் பூனைக்கு நல்ல விருந்தாகிவிடுமே என்று பயந்தாள். வீட்டுக்குள் ஒரு காகத்தை வளர்க்க முடியுமா? கிளியோ புறாவோ என்றால் பிரச்சனை இல்லை. வீடுகளில் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறாள். அவற்றிற்கு என்ன பிடிக்கும், என்ன சாப்பிடும், எப்படி நடந்து கொள்ளும் என்பது குறித்து கொஞ்சம் தெரியும். காக்காவும் பறவைதான் என்றாலும் அதை வீட்டில் வைத்து வளர்ப்பது பற்றி அவ்வளவு ஞானம் இல்லை. வீட்டு ஓனரிடம் ஐடியா கேட்டாள். அவரது ஆலோசனைப்படி மொட்டை மாடியில் குண்டுமல்லிச் செடிப் பந்தலின்மேல் அந்தக் கூட்டை வைத்துவிட்டு வந்தாள். காலையில் இருந்து என்ன சாப்பிட்டிருக்குமோ என்று யோசித்தவள், குட்டி காக்காவுக்கு முதலில் தண்ணீர் கொடுத்தாள். கையளவு தண்ணீரை எடுத்து விரல் வழியே சொட்டு சொட்டாக அதன் வாயில் விட்டாள். கத்திரிக்கோலைப் போல வாயைப் பிளந்து பிளந்து தண்ணீரை வாயில் வாங்கிக் கொண்டது. அதன்பிறகு பிஸ்கட்டைப் பொடி செய்து அதன் வாயில் தூவ, அதையும் வாங்கிக் கொண்டது. அதன் பசி தீர்ந்து போனதோ என்னவோ பிறகு வாயைத் திறக்கவே இல்லை. குழந்தைகளுக்கு வயிறு நிறைந்துவிட்டால் பின் தூக்கம்தானே. தூங்கட்டும் என்று நினைத்துத் திரும்பியவளின் தலையை உரசுவது போல பறந்து சென்று சுவருக்கு அருகில் தலைவிரித்து நின்று கொண்டிருக்கும் தென்னை ஓலையில் போய் அமர்ந்தது ஒரு காக்கா. தலையை உரசிச் செல்லும்போது பலத்த குரலுடன் கத்திக் கொண்டு போனது. அந்தக் குரலில் ஒரு பயமுறுத்தல் தொனி இருந்ததை உணர்ந்தாள். அதைப் பெரிது படுத்தாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அதன் பின் அறையை விட்டு அவள் வெளியில் வரும்போதெல்லாம், குறிப்பாக அறையில் இருந்து பாத்ரூமிற்குச் செல்லும்போதும் பாத்ரூமில் இருந்து அறைக்குத் திரும்பும்போதும் அச்சுறுத்தும் வகையில் கத்தியபடி தலையை உரசிக் கொண்டு பறந்து போனது காக்கா. பறந்து சென்று அமர்வதற்கு ஏதுவாக அறையைச் சுற்றி தென்னை மரம், மாமரம், மின்சாரக் கம்பம் இது போதாதென்று துணி காயவைக்க நடப்பட்ட தடித்த கொம்பு இருந்தன. ஏதோ தவறுதலாகத்தான் காக்கா இப்படிச் செய்கிறது என்று நினைத்தாள். அவளை அச்சுறுத்தவே அப்படிச் செய்கின்றன என்பதை மறுநாளில் இருந்து உணர்ந்து கொண்டாள்.
***********
முதல் நாள் குட்டிக் காக்காவை வைத்த இடத்தில் அதைக் காணவில்லை. கூடு மட்டும் இருந்தது. அச்சச்சோ என மனம் பதறியது. கூடு இருப்பதால் பெரிய காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ. தூக்கிட்டுப் போயிருந்தால் சந்தோஷம். ஒருவேளை பூனை ஏதாவது… நினைக்கவே மனம் பதறியது. அப்படியே விட்டிருந்தால் அதன் அம்மா ஏதாவது செய்து தூக்கிட்டு போயிருக்கும். காப்பத்தறேன்னு கூட்டி வந்து பூனைக்கிட்ட கொடுத்திட்டமோ என்று நினைத்தாள். அந்த நினைப்பு அவள் மனதைக் கொன்றது.
“நல்லதுதானே நினைத்தேன். சாப்பாடு கூட கொடுத்தேனே. என்மேல் எந்தத் தப்பும் இல்லை. தன்னுடைய குட்டியைப் பத்திரமா பாத்துக்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு. அவ்ளோ அன்பு என்றால் கூட இருந்து பாத்துக்கனும். இல்ல எடுத்துட்டு போய் கூட வச்சிக்கனும். அதை விட்டுட்டு காப்பாத்த நினைச்ச என்னை ஏன் துரத்தனும். எதிரி போல பார்க்கனும்?’
அவள் கேள்விகளுக்குப் பதில் இல்லை. அவள் கேள்விகளின் நியாயம் காக்கைகளுக்குப் புரியப்போவதும் இல்லை.
அவள் தலையை உரசிச் செல்லும் காக்கைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஒன்று இரண்டானது. இரண்டு மூன்றானது. அடுத்து நான்கானது. எந்தப் பக்கத்தில் இருந்தும் ஏவுகணையால் தாக்கப் படலாம் என்கிற யுத்தக் களத்தின் பதற்ற நிலையை இந்தக் காக்கைகள் உருவாக்கின. அறையை விட்டு பாத்ரூமிற்குச் செல்ல அல்லது மாடிப் படியிறங்கி வீட்டிற்குள் செல்ல என எல்லாமும் கேள்விக்குறியாயின. அடுத்தடுத்த நாளில் அவள் வெளியில் வர வேண்டும் என்பதே இல்லை. மொட்டை மாடி அறையின் வாசற்கதவைத் திறக்கிறாள் என்ற அரவம் கேட்டாலே போதும். முதலில் தென்னங்கீற்றில் அல்லது மின்சாரக் கம்பத்தில் வந்தமரும் காக்கா, 
‘டேய் மச்சான், வாங்கடா வாங்கடா, அவ வெளியில் வராடா வாங்கடா, இன்னையோட இவ கதையை முடிச்சுடலாம்டா’ என்று சொல்வது போல காட்டுக்கத்தல் கத்தும். அந்தக் கத்தலைக் கேட்டு எட்டு அல்லது ஒன்பது காக்கைகள் வந்து கத்தி அந்த இடத்தைக் களேபரப்படுத்தும். அவள் உள்ளே போனதும் கூச்சல் கொஞ்சம் மட்டுப்படும். பல் விளக்க வேண்டும் என்றால் பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு எந்தத் திசையில் காக்கை அமர்ந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு, அதற்கு எதிர்த்திசையில் ஏதேனும் காக்கை அமர்ந்திருக்கிறதா என்றும் பார்த்துவிட்டுத்தான் வெளியில் முகத்தை முதலில் நீட்டுவாள். பிறகு காக்கா எந்தத் திசையில் இருக்கிறதோ அந்தத் திசை நோக்கிப் பார்த்தபடி கையில் சிறு குச்சியை காகத்தை நோக்கி நீட்டியபடி பின்புறமாக நடந்து பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்வாள். பாத்ரூமில் இருந்து வரும்போது நிச்சயம் ஒரு காக்கா, பாத்ரூம் அருகில் உள்ள தென்னை மரத்தில் அமர்ந்தபடி அவளை வன்மத்தோடு பார்த்தபடி அமர்ந்திருக்கும். அல்லது துணி காயவைக்கும் கழியின்மீது அமர்ந்து கொண்டிருக்கும். அதற்குப் பயப்படாத போல காட்டிக் கொண்டு, பழையபடியே குச்சியை நீட்டியபடி பின்புறமாகவே நடந்து அறைக்குள் நுழைந்து கொள்வாள். மாடியில் இருந்து இறங்க வேண்டும் என்றாலும் பின்புறமாகத்தான். அதாவது காக்கைகளைப் பார்த்தபடி. அப்படியும் கொஞ்சம் தலையைத் திருப்பிவிட்டால் போதும். சர்ரென்று பறந்து வந்து தலையை உரசியபடிக் கத்திக் கொண்டு போய் அமரும்.
கிட்டத்தட்ட ஏழு மாதமாக தினமும் காலையில் உணவும், எப்போதாவது மதியத்தில் உணவும் கொடுத்து பசியாற்றிய அவளை ஏன் எதிரியைப் போல நடத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினாள். காக்கைகள் அறிவுள்ளவை என்று கேள்விப்பட்டிருக்கிறாள். காக்கைகள் ஏன் நன்றி இல்லாமல் நடந்து கொள்கின்றன என்று மனதுக்குள் திட்டினாள்.
************
கண்களை மூடிப் படுத்திருந்தாள். ஜன்னல் கம்பிகள் வழியாக உள்நுழைந்த காக்கை ஒன்று அவள் தலையணை அருகில் ஒரு எலும்புத் துண்டைக் கொண்டு வந்து வைத்தது. சற்று நேரத்தில் அவள் படுக்கையைச் சுற்றிச் சிறியதும் பெறியதுமாக எலும்புத் துண்டுகள். இரத்தக் கவிச்சை வாசனை மூச்சுத் திணறச் செய்தது. அவளது மேசையின்மீது இரண்டு காக்கைகள் அமர்ந்து அவள் மூச்சுத் திணறித் தடுமாறுவதைக் கண்டு மகிழ்ச்சியில் இறக்கைகளை அடித்துக் கொண்டன. ஒரு இறகு பறந்து வந்து அவள் கழுத்தின்மீது படர்ந்தது. அதன் அழுத்தம் தாளாமல் அலறினாள். குரல் எழும்பவே இல்லை. கைகளை அசைக்க முயன்றாள். ஆணியில் அறையப்பட்டதைப் போல கிடந்தது அவள் உடல். அம்மா, அம்மா என்று  முணகியவள், வேகமாய் அலறி எழுந்தாள்.
அவளருகில் ஸ்மைலி பொம்மை நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. கண்களை மேசை பக்கம் திருப்பினாள். காக்கைகள் அங்கு இல்லை. படுக்கையைச் சுற்றி எலும்புத் துண்டுகளும் இல்லை. தொண்டையில் அடைத்துக் கொண்டிருந்த அழுகை கண்ணீராகப் பொங்கிப் பெருகியது. வீறிட்டு அழுதாள்.
*********
அவளால் நிம்மதியாக வெளியில் நடமாட முடியவில்லை. முன்பு போல் மொட்டை மாடியில் வாக்கிங் செல்ல, மதிய வேளையில் துணி துவைத்து காயவைக்க, போன் பேச என எதுவும் செய்ய முடியவில்லை. காக்கா வருவதற்குள் துணி துவைத்துக் காயவைத்துவிடுவாள். மாலையில் காக்கைகள் அடங்கியபிறகு தான் துணியை எடுப்பாள். முடிந்தவரை மாடிக்குச் செல்வதைத் தவிர்த்தாள். தவிர்க்கும் சூழலுக்குக் காக்கைகள் கொண்டு வந்துவிட்டன.
இதையெல்லாம்விட கொடுமை. இப்போதெல்லாம் அவள் காலையில் பிஸ்கட்டோ, சோறோ, சிப்ஸோ வைத்தால் அவை தொடுவதே இல்லை. அது இன்னும் அவளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அத்தனை தூரம் அவைகளுக்கு எதிரியாக, துரோகியாக ஆகிவிட்டேனா என்று மனதுக்குள் புழுங்கினாள். பால்கனியில் வந்து நின்றதும், எதிரில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வந்தமர்ந்து காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருக்கும் காக்கைகளிடம் மனம் திறந்து பேசிவிடுவது என முடிவெடுத்தாள்.
“இங்க பாருங்க. நீங்க பண்றது கொஞ்சமும் நல்லாயில்ல. உங்களையெல்லாம் அறிவாளிகள்னு எவன் சொன்னது? முட்டாப்பய. யோசிங்கப்பா. ஆறு மாசமா வயிறாற சோறு போடற நானா உங்க குழந்தையை ஏதாவது செய்திருப்பேன். அப்படி நீங்க நினைச்சு என்னைப் பயமுறுத்தறது கொஞ்சமும் நியாயம் இல்ல. உண்மையில் எனக்குத் தெரியாது அந்தக் குட்டி எங்கன்னு. ப்ளீஸ். ஒரு ஃப்ரண்டு போல இல்ல என்றாலும் பரவாயில்லை. எதிரி போல நடத்தாதிங்க.”
பேசப் பேச அவளுக்கு அழுகை வந்தது. அவள் பேசுவதை உற்றுக் கேட்டன மின்கம்பிகளில் அமர்ந்தபடி.
இந்தக் காக்காவுக்குக் கூட இளக்காரமா போயிட்டமா என்று நினைக்க அழுகைப் பெருக்கெடுத்தது.
மனசு கேட்காமல் இரவில் குட்டிக் காக்காவை வைத்த இடத்தில் போய் பார்த்தாள். துடைப்பம் கிழிக்கப் போட்டிருந்த காய்ந்த தென்னை ஓலைக்குள் இருந்து சின்ன கீச் கீச் சப்தம் கேட்டது. லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அதன் உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அறைக்குள் சென்று தம்ளரில் தண்ணீரும் சோற்றுப் பருக்கைகளை நன்றாக நசுக்கிக் கொஞ்சாமாய் கூழ் போல செய்து ஒரு தட்டில் எடுத்து வந்து மிளகு அளவு உருண்டை உருட்டி அதன் வாயில் வைத்தாள். தன் சின்ன வாயால் ஐந்தாறு உருண்டைகள் வாங்கிக் கொண்டது. விரலில் தண்ணீரை எடுத்துச் சொட்டுச் சொட்டாக வாயில் விட்டாள். வயிறு நிறைந்ததிருக்கும் போல. ஓலைக்குள் சென்று ஒளிந்துகொண்டது பழையபடி.
************
தென்னங்கீற்றில் அமர்ந்திருந்த அம்மா காக்கா சொன்னது தன் அண்ணனிடம்,
‘அவகிட்ட இருந்து நம்ம புள்ளையை எப்படியாவது காப்பாத்திடனும். அவ தான் எங்காவது வச்சிருப்பா. புள்ளைக்கு ஏதாவது ஆச்சு அவளைச் சும்மா விடக்கூடாது’.
***********
                                          நன்றி : தளம் காலாண்டிதழ் (ஜன - மார்ச், 2015)

திங்கள், 1 டிசம்பர், 2014

பிடிவாதம்

பிடிவாதம்
·        மனுஷி
அது ஒரு பொட்டல் காடு. ஒன்றிரண்டு பனை மரங்களும் இலை உதிர்த்து மொட்டையாய் நிற்கும் ஒன்றிரண்டு மரங்களும் தவிர்த்து சிறு புல்லும் இல்லாத புழுதிக் காடு. அங்கே நின்றிருந்த லாரி ஒன்றில் முகத்தில் எந்தவொரு சலனமும் இன்றி சில மனித உடல்களை மடியில் கிடத்தி கையில் இருந்த கூர்மையான கத்தியினால் கழுத்தை அறுத்து, அறுபட்ட உடல்களைத் தனியாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான உடல். அதன் கழுத்தை ஒரு காகிதத்தைக் கூர்மையான பிளேடால் கீறுவது போல கீறினாள். அப்போதுதான் அந்த முதியவரின் கண்களைப் பார்த்தாள். அவை, என்னை விட்டு விடு என்று கெஞ்சுவது போல இருந்தது. அந்தக் கண்கள் அவளை நிலைகுலையச் செய்தது. செய்து முடித்தாக வேண்டிய காரியத்தை இடையில் விடுவது நல்லதல்ல என்பது போல் கழுத்தின் நடுவில் கூர்மையான கத்தியை வைத்து அழுத்தினாள். வெட்டுப்பட்ட கழுத்து மடக் என்ற சத்தத்துடன் தொங்கியது.
சட்டென்று கண்விழித்தாள் ஜனனி. உடல் வியர்த்திருந்தது. என்ன பயங்கரமான கனவு? இரவு விளக்கை அணைக்கவே இல்லை. டியூப் லைட் எரிந்து கொண்டிருந்தது. சன்னல் அருகில் வைத்திருந்த செல்போன் ரொம்ப நேரமாகப் பாடிக் கொண்டிருந்தது. பதினைந்து மிஸ்டு கால்ஸ். ஜனனிக்கு மிகவும் பிடித்தமான பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…” என்ற பாடலை ரிங்டோனாக வைத்திருந்தாள். டேபிள் மேல் இருந்த அலாரம் எட்டு எனக் காட்டியது. கனவின் அதிர்விலிருந்து முழுதும் விடுபடாமல் இருந்தவள், அடுத்தும் செல்போன் பாடவே எடுத்துப் பார்த்தாள். அவளது அக்கா. பெரும்பாலும் தினமும் காலையில் செல்போன் மூலம் அவளை எழுப்பி விடுவது அவளது அக்காவாகத்தான் இருக்கும். சலிப்புடன் போனை எடுத்து ஹலோ சொன்னாள். அக்காவின் குரலில் கோபம் தொனித்தது.
போன் எடுத்துப் பேச இவ்ளோ நேரமா? அப்படி என்னதான் பண்ணுவியோ? இல்ல ரிங் அடிக்கட்டும் என்று பார்த்துக்கிட்டே இருந்தியா? திமிர் பிடிச்ச கழுத நீ. செய்வ.
பதில் பேச விடாமல் கோபத்தை வார்த்தைகளாகக் கொட்டிக் கொண்டிருந்த அக்காவை இடைமறித்தாள்.
தூங்கிட்டேன். என்ன விஷயம் என்று சொல்லிட்டு அப்புறம் உங்க பாட்டைப் பாடறீங்களா?
ஏன் என்ன விஷயம் என்று தெரியாதா? ஏன் இப்படி பிடிவாதமா இருக்க? இப்படி பிடிவாதமா இருந்து என்னத்த சாதிக்கப் போற? இருபது நாளா சொல்றேன் சித்தப்பா உடம்பு முடியாம இப்பவோ அப்பவோன்னு கிடக்கறார். எல்லாரும் வந்து பார்த்துட்டாங்க. உன்னை கடைசியா பார்க்கனும்னு ஆசைப்படறார்னு சொல்றேன். ஏன் இப்படி வீம்பு புடிச்சு பாவத்தை அள்ளிக் கொட்டிக்கற?
“….
எதாவது பேசித் தொலையேண்டிஇப்படி யாரும் வேண்டாம் என்று இருந்தால் நாளைக்கு நீ செத்து தனிப் பொணமா நீயே தான் சுடுகாட்டுக்குப் போகணும்
அக்காவின் கோபம் அழுகையாக மாறியது. இப்போது கோபத்தை விட்டுக் கெஞ்சினாள். வரச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே போனைத் துண்டித்தாள். அக்கா இப்படி பேசுவது முதல்முறை இல்லை என்றாலும் அவளுக்கு வலிக்கவே செய்தது. அவள் அழுகையை விழுங்கிவிட்டு அன்றைய பொழுதில் செய்ய வேண்டியவை என்ன என யோசிக்கத் தொடங்கினாலும் பழைய நினைவுகள் அவளை விடவில்லை.
*******
பத்தாவது தேர்வு முடிவு வெளியாகி இருந்தது. அன்று ஜனனிக்குப் பிறந்தநாளும் கூட. 400க்கு மேல் மதிப்பெண் வாங்கி இருந்ததால் அக்காவுக்கு ரொம்பவே சந்தோஷம். ஒன்றிரண்டு நாளில் தோழிகளோடு  பள்ளிக்குச் சென்று மார்க் ஷீட் வாங்கி வந்துவிட்டாள். அடுத்தநாள் மாலை அக்காவும் மாமாவும் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
தெருவில் விளையாடிவிட்டு வந்த ஜனனியை எங்க போய்ட்ட சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு என்று அவசரப்படுத்தினர் அக்காவும் மாமாவும். எதற்கு என்ன என்று எதுவும் கேட்டுப் பழக்கமில்லாத அவள், அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி வந்தாள். அவளிடம் இருந்த நான்கு சுடிதார்கள், நான்கைந்து பாவாடைச் சட்டைகள் இவற்றுடன் அவளது சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரு பேக்குக்குள் திணித்து அவளிடம் கொடுத்து ம் போலாம்என்று சொல்ல, எங்கே போகிறோம் என்ற கேள்வியை மனத்தில் சுமந்தபடி வீட்டைவிட்டு வெளியேறினாள். அப்போது யாரிடமும் சொல்ல வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவளோடு விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் எங்கடி போற என்று கேட்க, அவளிடம் பதில் எதுவும் இல்லை. அக்கா, மாமாவின் பின்னால் ஒரு நிழலைப் போல போய்க் கொண்டிருந்தாள்.
*******
சித்தப்பா வீட்டில் நான்கு அக்கா, ஒரு தம்பி, சித்தி, சித்தப்பா என வீடு நிரம்பி இருக்கும். போதாக்குறைக்கு வீட்டு நபர்களாகப் பாவிக்கப்படும் நான்கைந்து பசு மாடுகள், இரண்டு கன்று குட்டிகள், கோழிக் குஞ்சுகள் வேறு. வீட்டுச் சூழல் அவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அக்காக்களோடு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, மாடுகளுக்குப் புல் அறுக்கக் கரும்புக் கொல்லிக்கோ, மரவள்ளிக் கொல்லிக்கோ போவது, மோட்டரில் குளிப்பது என வாழ்க்கையை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஜனனி. பதினைந்து நாள் கண் மூடி திறப்பதற்குள் ஓடி விட்டிருந்த. ஒரு வெள்ளிக்கிழமை அன்று சித்தப்பாவும் மாமாவும் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்னார்கள். அப்போதுதான் அவளுக்கு ஓரளவு புரிந்தது, சித்தப்பா வீட்டிற்கு ஏன் அழைத்து வரப்பட்டோம் என்பது.
சித்தப்பா வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி. விண்ணப்பத்தை சித்தப்பாவே பூர்த்தி செய்து, கையெழுத்து போடும் இடத்தை மட்டும் அவளுக்காக விட்டு வைத்தார். அட்மிஷன் கார்டு கையில் வாங்கியபிறகு தான் அவளுக்குத் தெரிந்தது கம்ப்யூட்டர் குரூப். அவள் பள்ளிக்குச் சென்று வர வீட்டில் இருந்த லேடீஸ் சைக்கிளைச் சரி செய்து கொடுத்தார் சித்தப்பா. அவள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 
ஜனனிக்கு எப்போதுமே சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும். சிறுவயதில் அம்மாவோடு ஊரில் இருக்கும்போது எப்போதாவது வருவார். வீட்டிற்கு வரும்போது அவர் கையில் ப்ரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஒரு பாக்கெட், கொஞ்சம் மல்லிகைச்சரம் நிச்சயம் இருக்கும். இரண்டுமே அவளுக்குக் கொள்ளைப் பிரியம். சித்தப்பா கிளம்பும்போது ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் நோட்டைக் கையில் கொடுத்துவிட்டுப் போவார். அது ஒரு பெரிய தொகை அவளுக்கு. சித்தப்பா, இஸ்திரி போட்ட பேண்ட் சட்டை, கையில் வாட்ச், படிய வாரிய தலைமுடி, கையில் கர்சிப் சகிதமாய் பார்க்க ஒரு ஹீரோ போலவே தெரிவார்.
******
எப்போதும் வெள்ளிக்கிழமை மாலை இருட்டத் தொடங்கும் நேரத்தில் கரும்புக் கொல்லியில் உள்ள ஆயா தாத்தாவின் சமாதியில் விளக்கேற்றிவிட்டு வருவது வழக்கம். ஜனனி அங்கு வந்த நாள் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் சங்கரி அக்காவுடன் கிளம்பிவிடுவாள். அந்த வெள்ளிக்கிழமை சங்கரி அக்கா வீட்டுக்குத் தூரம் என்பதாலும், பெரிய அக்காவுக்கு சமைக்கும் வேலை இருந்ததாலும் ஜனனியைப் போய் விளக்கு வைத்துவிட்டு வரச் சொன்னார் சித்தி. எண்ணெய் திரியெல்லாம் எடுத்துக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டு கேட்டைத் திறந்தபோது நன்றாக இருட்டி இருந்தது. மனத்தில் பயம் கவ்விக் கொண்டது. சிறுவயதில் கேட்ட பேய்க் கதைகள் தானாகவே நினைவுக்கு வந்தன. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகாஎன்ற பாடலை மனதிற்குள் முணுமுணுத்தபடி சற்றே பெருத்த ஒத்தையடிப் பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பத்தடி தூரம் நடந்ததும் பின்னால் செருப்புச் சத்தம் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பினாள். சித்தப்பா வந்துகொண்டிருந்தார். நிம்மதியாக இருந்தது. இனி முருகன் பாட்டுக்கும் கந்தசஷ்டி கவசத்திற்கும் தேவை இருக்காது.
அப்பா நீங்களும் வர்றிங்களா?
ம்நீ தனியா போக பயப்படுவியே.
..
மீண்டும் சித்தப்பாவே தொடர்ந்தார். வந்த நாள்ல இருந்து நானும் உன்கிட்ட தனியா நிறைய பேசணும் என்று நினைப்பேன். யாராவது உன்கூட இருந்துகிட்டே இருக்காங்க.
சுற்றிலும் நல்ல இருட்டு. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமலேயே டார்ச் வெளிச்சத்தில் அவரது முகத்தைப் பார்த்தாள். அவர் புன்னகைத்தபடியே அவளது தோளில் கை வைத்தவர் மெல்ல அவளது வலது மார்பகத்தை அழுத்தினார். அடுத்து அவரது கை இடது பக்கம் நகர்ந்தது. அதற்குள் சட்டென்று அவரது கையை உதறித் தள்ளிவிட்டு, வேணாம்ப்பா.என்றாள்.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அப்பா எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். சரியா?
சொல்லிவிட்டு புன்னகைத்தபடியே இறுக்கி அணைத்துக் கொண்டார். யாராவது அந்தப் பாதையில் வர மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. அவரது பிடியில் இருந்து திமிறினாள். அவரது குரல் கடுமையானது.  
சொன்னாக் கேளு. அடம் பிடிக்காத. அப்புறம் நான் பொல்லாதவனா ஆகிடுவேன்.
அவள் பெருங்குரலெடுத்து அழுதாள். வேறு வழியின்றி பிடியைத் தளர்த்தியவர் நான் இங்கேயே இருக்கேன் நீ போய் விளக்கு வைச்சுட்டு வாஎன்றார். அவரது எண்ணம் ஈடேறாமல் போகவே அவர் தருகிற தண்டனை போல் இருந்தது. அவசியம் அந்தச் சமாதியில் விளக்கை ஏற்றித்தான் ஆக வேண்டுமா என்று நினைத்தாள். ஆனால் வேறு வழியில்லை. அவளது கை கால்கள் நடக்கும் திராணியற்று நடுங்கிக்கொண்டிருந்தன. அந்த இருட்டில் தன் உடலை ஒருமுறை பார்த்தாள். அருவருப்பாக உணர்ந்தாள். சிறுவயது முதல் அவள் விரும்பி ரசித்த உடலின் பாகம் அவளது மார்பகம்தான். தோழிகளுடைய மார்பகங்களுடன் தன்னுடைய மார்பகங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வாள். தோழிகளின் அக்காக்களின், நண்பர்களின் அக்காக்களின் மார்பகங்களைப் போல தனக்கும் எப்போது ஆகும் என்று நினைப்பாள்.
விளக்கு வைத்துவிட்டுத் திரும்பி வரும்போது தனக்கு மார்பகம் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். சற்று தூரத்தில் ஒரு கருப்பு நிழலைப் போல சித்தப்பா நின்று கொண்டிருந்தார். டார்ச் லைட் பனந்தோப்பின்மீது ஒளி வீசிக் கொண்டிருந்தது. உள்ளூர பயம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அழுகை வடியாத கண்களுடன், சித்தப்பாவைக் கடந்து வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் தரையைப் பார்த்தபடி வந்தாள். இருட்டு இப்போது அத்தனை பயங்கரமானதாக இருக்கவில்லை. சித்தப்பாவைக் கடக்கும்போது அவர் கடுமையான குரலில்,
வீட்டுல போய் சித்திக்கிட்டயோ, இல்ல உங்க அக்காகிட்டயோ இல்ல வீட்டுல உள்ள வேறு யாருகிட்டயோ ஏதாவது சொன்ன அவ்ளோதான்.என்றார். தேவதைக் கதைகளில் அரக்கன் கர்ஜிப்பதைப் போல இருந்தது.
இப்படி நடந்தது என்று எப்படி யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடைவது, அது அசிங்கம், அப்படிச் சொன்னால் தன்னைப் பற்றித்தானே கேவலமாக நினைப்பார்கள் என்று அவள் யோசித்தாள். வீட்டை நெருங்கும்போது , நீ மட்டும் வீட்டில் யார்கிட்டயாவது சொன்ன அப்புறம் நீ படிக்க முடியாது. தீர்மானமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவள் நேராகத் தன் புத்தகப்பை வைக்கப்பட்டிருந்த கூரை வீட்டிற்குச் சென்றாள். அவள் படிக்கவும், வீட்டுப் பாடங்களைச் செய்யவும் அந்த இடத்தை ஒதுக்கி இருந்தார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி அவள் மனதுக்குள் எழுந்தபோது கேவி கேவி அழுதாள். தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். அழுதபடியே தூங்கிப் போனாள்.
          அன்று இரவு தன் உடலின்மீது ஒரு கை ஊர்ந்து வருவதை உணர்ந்தவள் திடுக்கிட்டு விழித்தாள். அருகில் சித்தப்பா அமர்ந்திருந்தார்.
ஏன் சாப்பிடாமல் தூங்கிட்ட.
அது சாப்பிடும் நேரமோ, ஏன் சாப்பிடவில்லை என்று வாஞ்சை வழிய கேட்கும் நேரமோ இல்லை. தலைக்கு மேல் மாட்டி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் 2.10 எனக் காட்டியது. அவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.
நீ அழுவதால் எதுவும் மாறிவிடாது. நானும் மாற மாட்டேன். என் அன்பைப் புரிஞ்சுக்கோ. உனக்கு எல்லாம் செய்வேன். நான் தான் உனக்கு எல்லாம்.
அழுது அழுது கண்கள் வலித்தது. கண்களில் வலியுடன் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு இனி அழவே கூடாது. நான் இருக்கேன் என்று தலையை வருடிக் கொடுத்தார். இப்படிப்பட்ட அன்புக்கு பதிலாக என்னைக் கொன்றுவிடலாம் என்று நினைத்தவள், எனக்குப் பிடிக்கலப்பா விட்டுடுங்க என்றாள் வலிமையிழந்த குரலில். சரி உனக்கா ஒருநாள் புரியும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். அதன்பிறகு அன்று இரவு அவள் தூங்கவே இல்லை. அது தொடர்கதையாகும் என்பதை அப்போது அவள் உணரவேயில்லை.
ஒருநாள் மாலையில் பக்கத்தில் இருந்த அம்மன் கோயிலுக்குப் போய் பிரம்மாண்டமான தோற்றத்துடன் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் மாரியம்மனுக்கு முன்னாள் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். இதையெல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கியே, உனக்கு தினமும் விளக்கு வைக்கறேன், காலையில் கோயிலைப் பெருக்கிச் சுத்தம் செய்து கோலம் போட்டு இங்கிருக்கிற செடிகளுக்குத் தண்ணீர் ஊத்தறேன், வெள்ளிக்கிழமையில் கற்பூரமெல்லாம் ஏத்திக் கும்பிடறேன் உனக்குக் கண்ணே இல்லையா?  வேலையை வாங்கிக்கிட்டு பலன் எதுவும் கொடுக்க மாட்டியா? எனக்குத் தெரியாது உடனடியா ஏதாவது செய்யனும்.வெடித்துச் சிதறியது அழுகை. சட்டென்று சுயநினைவு வந்தவளாக பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளையாக யாரும் இல்லை.
அன்றைக்கு மதியம் சித்தப்பா பள்ளிக்கு வந்தார். லஞ்ச் டைமில் வாட்மேன் வந்து சொன்னார் உங்க சித்தப்பா வந்திருக்கார் பாப்பா. மிக மிக அலட்சியமாக மிக மிக தாமதமாக கிளம்பிப் போனாள்.
வா வெளியில் போய் ஒரு ஜூஸ் குடிச்சுட்டு வரலாம்.
நிமிர்ந்து பார்க்காமலேயே பதில் சொன்னாள்.
இல்லை. நான் வரல.
உன்கிட்ட பேசனும். வா.
என்கிட்ட எதுவும் பேச வேணாம். எனக்குக் கிளாஸ் இருக்கு.
சரி நீ கிளாஸ் முடிச்சுட்டு வா நான் இங்கேயே நிக்கறேன்.
சனியனை விரட்டி விட்டால் போதும் என்று மனத்துக்குள் நினைத்தபடி அவர் முன்னால் நடந்தாள். பத்துக் கடை தள்ளி இருந்த ஜூஸ் கடையில் ஜூஸ் சொல்லிவிட்டு சேரில் அமர்ந்திருந்தார்கள். சித்தப்பா தான் பேச்சைத் தொடங்கினார்.
இங்க பாரு. நீ இப்படியே யார்கிட்டயும் பேசாமல் அழுதுகிட்டே இருப்பதால் ஒன்னும் நடக்காது. உனக்கு வேற வழியே இல்லை. இங்க என்னைப் பாரு. நான் நினைச்சால் உன்னை என் இஷ்டப்படி எடுத்துக்க முடியும். ஆனால், நான் அவ்ளோ கெட்டவன் இல்லை. ஒரு நாள் ஆசை இல்லை இது. உன் மேல உள்ள அன்பை எனக்கு எப்படி வெளிப்படுத்தறது என்று தெரியல. ஆனா நீ புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்கற.
அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்த கணங்களை அழித்துவிட முடியுமானால்... தன்னுடைய கிராமத்திலேயே தன் வீட்டில் இருந்திருக்க நேர்ந்திருந்தால்... காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முயன்று தோற்றுப் போனாள்.
******
கடற்கரை காற்று இதமாக இருந்தது. சூரியன் மெல்ல மெல்ல தன்னை ஒளித்துக் கொண்டிருந்தான் கடலுக்குள். கடல் தனது பிரம்மாண்டத்தை விஸ்தரித்துக் காட்டியது. அலைகள் கால்களை வருடிக்  கொண்டிருந்தன. நீண்ட நேரமாக தண்ணீரில் இருந்ததால் குளிரெடுக்கவே கரைக்கு வந்து அமர்ந்தாள். அன்று முழுக்க செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. செல்போனுக்கு உயிர்க் கொடுத்தாள். செல்போனில் குறுஞ்செய்தி சிணுங்கியது.  Thaaththaa died. Pl cal me urgent. மெசேஜைப் படித்துவிட்டு டெலிட் செய்தவள், மீண்டும் கடலுக்குள் தன் பார்வையைச் செலுத்தினாள்.
கால் நனையும் அளவு கடல் நீரில் நின்றுகொண்டு தன் மகளின் கை பிடித்தபடி கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஓர்  அப்பா.

  

                                                                          ந ன் றி  :   ஃ பெமினா இதழ் (செப்டம்பர் 2014)