வியாழன், 11 மே, 2017

சினிமாவின் திருநங்கைகள் - லிவிங் ஸ்மைல் வித்யா

சினிமாவில் திருநங்கைகள் - லிவிங் ஸ்மைல் வித்யா
Living Smile Vidya
சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் திருநங்கைகள் காலம்காலமாக சித்தரிக்கப்படம் விதம் குறித்தும், திருநங்கைகளின் தேவைகள் குறித்தும் மாநில அரசின் விருது பெற்ற எழுத்தாளர், நாடகவியலாளர் லிவிங் ஸ்மைல் வித்யா பியூர் சினிமா பார்வையாளர்களுடன் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துக்கொள்கிறார். அவசியம் காணொளியைப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். திருநங்கைகள் குறித்தான உங்கள் கண்ணோட்டத்தை, குறிப்பாக சினிமாவில் இயங்கும் நண்பர்கள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

https://m.youtube.com/watch?v=Ak2OvxQW4PU

செவ்வாய், 21 மார்ச், 2017

விசிட்டிங் கார்டு - மனுஷி

ஐந்தடுக்கு மாடி கொண்ட பிரபல துணிக்கடைக்கு எதிரே எப்போதும் வாகன நெரிசலால் பிதுங்கி வழியும்  தெருவில் இருந்தது நந்தினி அச்சகம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அச்சகத்தின் வாசலில் ஒரு வாதாம் மரம் கிளைபரப்பி நின்றிருந்தது. அங்கு பேனர், அழைப்பிதழ் செய்ய அட்வான்ஸ் கொடுத்திருந்தாள் அவந்திகா.

அச்சகத்திலிருந்து எல்லாம் ரெடியாகிவிட்டதாக போன் வந்தது. பெரிய சப்போர்ட் எதுவும் இல்லாமல் அவள் நடத்துகிற முதல் நிகழ்ச்சி. மனம் பட்டாம்பூச்சியாகப் படபடத்தது. ஸ்கூட்டியில் கிளம்பிப் போனாள்.

அவள் எதிர்பார்த்ததை விடவும் அழகாகத் தயாராகியிருந்தது பேனர். அழைப்பிதழ் அவளுக்குப் பிடித்த நீல நிறம். தீவில் தளும்பும் கடல் நீர் நிறத்தில் பார்க்கவும் மனம் குளிர்ந்தது முகத்தில் தெரிந்தது.

அண்ணா, ரொம்ப அழகா இருக்கு. ஓவியம், படம்லாம் நல்லா செலக்ட் பண்ணி இருக்கிங்க. இனிமேல் எப்போ நிகழ்ச்சி பண்ணாலும் நீங்க தான் பேனர் செய்து கொடுக்கனும்.

வெறும் வார்த்தையாக இருக்கவில்லை அவை. உண்மையாகவே அவ்வளவு நேர்த்தியாக செய்திருந்தார்.

பேனர் மட்டுமில்ல. புக் கூட டிசைன் பண்றோம்" என்றபடி அவர் அச்சகத்தில் தயாரான புத்தகங்கள் சிலவற்றை சாம்பிள் சிலவற்றைக் காட்டினார்.

சென்னையில் சில பிரபல பதிப்பகங்களின் தரத்தில் தாள்களும் வடிவமைப்பும் இல்லை. ஆனாலும் ஓரளவு பரவாயில்லை எனும்படி சில புத்தகங்களும் இது ஓக்கே எனும்படி ஒரேயொரு புத்தகமும் இருந்தன.

இத்தனை புத்தகங்கள் போட்டிருக்கேன் பார் எனக் கணக்குக் காட்டுவதற்கான தலைப்புகள். புத்தகங்கள். உள்ளே புரட்டிப் பார்க்கத் தோன்றவேயில்லை. எண்ணிக்கை தான் எல்லாமே என்றாகிவிட்டது. ஒரேயொரு பாட்டு எழுதி உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். அவர்கள் பன்னிக்குட்டி போல வசவசவென்று எதையாவது எழுதித் தள்ளி இருந்தால்... ச்சே... ஏன் இப்படி யோசனை. சின்ன தடுப்பைப் போட்டாள் யோசனையின்மீது.

"விசிட்டிங் கார்டு கூட அடிச்சுத் தர்றோம்மா. கம்மியா தான் பண்ணித் தர்றோம்" என்றார்.

வாடிக்கையாளரைக் கடை தேடி வரவைக்கும் உத்திகளில் இதுவும் ஒன்று.

ஆசை யாரை விட்டது. உங்க அட்ரஸ் கொடுங்க எனக் கேட்கும் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் இது என் விசிட்டிங் கார்டு என கெத்தா கொடுத்திட்டு கம்பீரமான புன்னகையுடன் விடை பெறும் காட்சி கண்முன் விரிந்தது. பேனருக்கும் அழைப்பிதழுக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்த கையுடன் விசிட்டிங் கார்டு டிசைன் செலக்ட் செய்தாள். எவ்வளவு ஆகும் என விசாரித்தாள். மொத்தம் ஆயிரம் கார்டு. ஆனால் ஒவ்வொரு டிசைனுக்கும் ஒவ்வொரு ரேட். ஒரு கார்டை எடுத்து 
"இது எப்படிக் கிழித்தாலும் கிழியாது" 
என்று கிழித்துக் காட்டினார். கிழியவேயில்லை. அவளும் ஒருமுறை கிழித்துப் பார்த்தாள். சாதா பேப்பர் போல தான் இருந்தது. ஆனால் கிழியவில்லை. அந்த ஒரு குவாலிட்டியை தவிர வேறு எதுவும் அவளை ஈர்க்கவில்லை. தேடித் தேடித் தேடி வெகுநேரத்திற்குப் பிறகு ஒரு டிசைனை எடுத்து இந்தக் கார்டு போல பண்ணிக் கொடுங்க என்றாள். பின்னணியில் கடல் நீல நிறம் கொண்ட கார்டு.

கார்டில் இடம்பெற வேண்டிய தகவல்களை வெள்ளைத்தாளில் எழுதித் தரச் சொன்னார். பேனாவை எடுத்து முதலில் பெயரை எழுதி முடித்தவுடன் அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி எழுதி விடலாம். வீட்டு முகவரி பற்றி யோசிக்க யோசிக்க அழுகை வந்தது அவளுக்கு.
****
சொந்த ஊரை விட்டு வந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.

பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை பள்ளிக்கூடத்தை ஒட்டிய விடுதியில் தங்கிப் படித்தாள்.

இரண்டு அறைகள், விசாலமான வராண்டா, ஒரு கிச்சன் கொண்ட ஒரு மெத்தை வீடு தான் விடுதி. அங்கே முப்பது மாணவிகள். அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க ஒரு ஆயா. அவரும் அவர்களுடனே தங்கிக் கொள்வார். எப்போதாவது வீட்டுக்குப் போய் வருவார். வரும்போது ஒயர் கூடையில் ரவா லட்டு, கை முறுக்கு, சீடை, எல்லடை போன்ற தின்பண்டங்கள் கொண்டு வருவார். மாணவிகளுக்கு அதுதான் நொறுக்குத் தீனி. கையில் இருக்கும் காசில் வாங்கித் தின்ற பின்னும் ஆசை தீராது. ஒரு நோட்டில்.பெயர் எழுதி எத்தனை ரவா லட்டு, எத்தனை முறுக்கு என எழுதி வைத்து விட்டு எடுத்துக் கொள்வார்கள். வார விடுமுறை நாளில் பெற்றோர்கள் பார்க்க வரும்போது கொடுக்கிற கைக்காசில் கடனைக் கழித்து விடுவார்கள்.

அவந்திகா மட்டும் அந்த ஒயர் கூடை பக்கம் போகவே மாட்டாள். யாருடனும் பேசவும் மாட்டாள். என்ன என்றால் என்ன என்பதோடு சரி.

வார விடுமுறை நாட்களில் மொட்டை மாடியே கதியென கிடப்பாள். எல்லோருடைய பெற்றோரும் வந்து போன பிறகே கீழே இறங்குவாள். அழுது அழுது கண்கள் வீங்கி இருக்கும். நேராக போய் குளித்து முடித்து சிவந்து வீங்கிய கண்களுடன் அவளது படுக்கையில் தூங்கி எழுவாள். அவளுக்காக வீட்டிலிருந்து கடிதம் கூட வருவதில்லை என்பதில்தான் பெரிய வருத்தமும் ஏக்கமும் அவளுக்கு.

ஒருமுறை விளையாட்டு பீரியடில் ரிங் பால் விளையாடிக் கொண்டிருந்தாள். கூட விளையாடிய தோழிகளிடம்  "ஏம்ப்பா நாம ஏன் லெட்டர் எழுதிப் பேசிக்கக் கூடாது" எனக் கேட்டாள்.

"சாயந்திரம் போறோம். காலையில் மறுபடியும் மீட் பண்ணப் போறோம். அதுக்கு எதுக்கு லெட்டர்".

சாதாரணமாக அந்தக் கேள்வியைக் கடந்து விட்டார்கள். அவள் மேலே சொல்ல முடியாமல் மென்று முழுங்கினாள்.

கல்லூரியில் சேர்ந்த பிறகும் முகவரி ஒரு பெரும் பிரச்சினையாகப் பின் தொடர்ந்தது. விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும்போதெல்லாம் முகவரி என்ற இடத்தில் கைகள் சற்றுத் தயங்கி நிற்கும். முக்கியமாக ஐடி கார்டில்.

சொந்த ஊரின் முகவரியை எழுதலாம் என்றால் அங்கிருந்து கடிதம் அல்லது இண்டர்வியூ கார்டு வந்திருக்கு என்று தகவல் சொல்லவோ, கொண்டு வந்து கொடுக்கவோ அண்ணனுக்கோ அப்பாவுக்கோ நேரமும் இல்லை. மனமும் இல்லை. இரண்டு மூன்று இண்டர்வியூக்கள் இதனால் போக முடியாமல் போனது. இவளும் அதற்காக அவர்களிடம் சண்டையிடவில்லை. கோபித்துக் கொள்ளவில்லை. அவ்வளவு தூரம் விலகிப் போயிருந்தாள்.

ஒன்றரை வருடங்கள் தோழி ஒருத்தி தனது முகவரியைக் கடனாகக் கொடுத்திருந்தாள். அங்கே வருகிற கூரியர், ஸ்பீடு போஸ்ட் எல்லாம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை கைக்கு வந்து சேர்ந்தன.

போகப் போக அதுவும் எவ்வளவு நாளைக்கு என்று தோன்ற அவள் படிக்கும் கல்லூரியின் முகவரியே தொடர்பு முகவரியானது. ஆனாலும் ஐடி கார்டில் தோழியின் முகவரியே நிரந்தரமானது.

கல்லூரி வாழ்க்கை முடியும் தருவாயில் மீண்டும் முகவரி பிரச்சினை தலை தூக்க நிலைகுலைந்து போனாள். ஹாஸ்டலைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியிருப்பது என முடிவு செய்தாள். அவ்வளவு சுலபத்தில் வீடு கிடைக்கவில்லை. பெண்ணாய் பிறந்ததற்காக முதன்முதலாக வருத்தப்பட்டாள்.

ஒருவழியாக வீடு கிடைத்தது. முகவரியும் கிடைத்தது. அந்த நாளைப் போல சந்தோஷமாக அவள் இருந்திருப்பாளா தெரியாது. மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போய் முத்தமிட்டாள் கண்ணாடியில்.

சரியாக எண்ணி ஆறு மாதம். வீட்டு ஓனரம்மாவுடன் சின்ன சின்ன முரண்பாடுகள். கூடவே அறையில் வைக்கும் பொருட்கள், பணம் எல்லாம் காணாமல் போகவும் தேவையில்லாமல் பெரிய மனஸ்தாபத்துடன் வீட்டை காலி செய்ய வேண்டாமென மீண்டும் வீடு பார்த்தாள் தோழியுடன். முழுதாக இருபது நாளுக்குப் பிறகு வீடு ஒன்று அமைந்தது. வீட்டு ஓனரம்மாவிடம் சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டு, பொய்யாய் புன்னகைத்து, பொய்யாய் வருத்தப்பட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து தனது பொருட்களுடன் முகவரியையும் தூக்கிக் கொண்டு புது வீட்டில் குடியேறினாள்.

வீடு மாறினாலும் ஆறு மாதத்திற்கு முன்பு முகவரி வாங்கியவர்கள் அதே முகவரிக்கு இன்னமும் இதழ்கள், அழைப்பிதழ், நூல்கள் என அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவள் கைகளைத் தீண்டாமல் அனாதைகளைப் போல் அவையெல்லாம் ஓனரம்மா வீட்டின் அலமாரியில் படுத்துக் கொண்டன.
****
அண்ணா, விசிட்டிங் கார்டு அப்புறமா போட்டுக்கறேன்.

பயங்கர பிஸியாகத் தன்னைக் காட்டிக் கொண்டபடி பேனர், அழைப்பிதழ்களை வாங்கிக் கொண்டு கண்கள் பனிக்க வெளியேறினாள்.

முகவரிகள் மாறிக் கொண்டே இருந்தன. இத்தனை வருடத்தில் அவளது முகவரிக்கு இன்னமும் ஒரு கடிதம் கூட வரவில்லை.

நன்றி : புழுதி இதழ், மார்ச் 2017.

புதன், 11 ஜனவரி, 2017

தீபாவளி டிரெஸ் - மனுஷி

தீபாவளி டிரெஸ் - மனுஷி

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதை டம், டப், டமடமடமடம என வெடிக்கும் வெடிச்சத்தங்கள் சொல்லின. வெடிச்சத்தங்களுக்கு முன்பாகவே செய்தித்தாளின் முதல் மற்றும் கடைசிப் பக்கங்களில் தீபாவளி அதிரடி சலுகை விற்பனை விளம்பரங்கள் கலர்ஃபுல்லாக அறிவித்தன. டீவி, வாஷிங் மெஷின், ஏசி, ஃப்ரிட்ஜ், அயர்ன் பாக்ஸ், மின் விசிறி, லேப் டாப், கிச்சன் ஐட்டங்கள், இண்டக்‌ஷன் ஸ்டவ், மொபைல் என எல்லா சாதனங்களும் அதிரடி சலுகை விலையில். இவை இயங்குவதற்கு மின்சாரம் மட்டும் இருக்காது. அதற்கெல்லாம் பண்டிகைக்காலச் சலுகைகள் கிடையாது போலும். பட்டுப் புடவைகள் தொடங்கி நவநாகரிக ஆடை வகைகள் அணிந்த அழகழகான வெள்ளைத் தோல் பெண்கள் ஆண்கள் குழந்தைகள். ஆடை வகைகளைப் பார்க்கும்போது மட்டும் சின்ன வயசில் அம்மா வாங்கிக் கொடுக்கும் பட்டுப் பாவாடைச் சட்டையை நினைத்து ஏங்குவாள் காயத்ரி. இப்போது பீரோ நிறைய விதவிதமான உடைகள் இருந்தாலும் சின்ன வயதில் அம்மா வாங்கிப் போட்டுவிட்டு அழகு பார்த்த பட்டுப் பாவாடைச் சட்டைகளுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியது.

அம்மா இறந்த பிறகு பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்பதே இல்லாமல் போய்விட்டது அவளுக்கு. பிறந்தநாளும்தான். அவளுக்கு எல்லா நாளும் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார நாட்களே. ஆனாலும் ஒவ்வொரு பண்டிகைக் காலம் நெருங்கும்போதும் ஒருவித ஏக்கம் அவளைத் தொற்றிக் கொள்ளும். நண்பர்களும், தோழிகளும் 'எங்கள் வீட்டுக்கு வாயேன்' என்று உரிமையோடு அழைக்கும்போதெல்லாம் 'இல்லப்பா, அக்கா வீட்டுக்குப் போறேன்' என்று சொல்லிவிட்டு அவளது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாள். 
*****
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதே பள்ளிக் கூட வகுப்பில் வீட்டில் செய்யும் பலகாரங்கள்,  தீபாவளிக்கு எடுத்திருக்கும் புது டிரெஸ் இதுதான் பேச்சாக இருக்கும். ஆசிரியை வகுப்புக்கு வந்தவுடன் மிஸ் தீபாவளிக்கு டிரெஸ் எடுத்திட்டிங்களா என்பதைக் கேட்டுவிட்டுத்தான் வகுப்பில் பாடம் எடுக்கவே விடுவார்கள். தீபாவளி முறுக்கு அதிசரம் சுட்டிருந்தால் அதைப் புத்தகப் பைக்குள் வைத்துக் கொண்டு வந்து பகிர்ந்து சாப்பிடுவார்கள். அந்த ஒருவாரம் மட்டும் பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடைகள் காற்று வாங்கும்.

தீபாவளி முறுக்கு அதிரசம் மட்டுமல்ல. அதிரசப் பாவும் கூட அவர்களுக்குத் தீனியாக மாறிவிடும்.

பச்சரிசியை தண்ணீரில் அலசி, வடிகட்டி, ஒரு காட்டன் புடவை அல்லது வேட்டியில் அரிசியை உலர வைப்பார்கள். பிறகு அதை உரலில் இட்டு இடித்து மாவு சலிக்கும் சல்லடையால் சலித்து எடுத்து, உலர்த்தி, அடுப்பில் பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது பொடி பண்ண வெல்லத்தைப் போட்டுக் கிண்டுவார்கள். பிறகு ஒவ்வொரு பிடியாக இடித்து, சலித்து வைத்திருக்கும் அரிசி மாவை  அந்த வெல்லப் பாகுக்குள் போடுவார்கள். மாவு போடும் போது ஒருவர் அகப்பவை அல்லது கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு முழுவதும் போட்டு முடித்தபின், சரியான பதத்தில் இறக்கி, ஏலக்காயைத் தட்டிப் போட்டு, மீண்டும் ஒரு கிண்டு கிண்டிவிட்டு அந்தப் பாத்திரத்தை மூடிவிடுவார்கள். சூடு ஆறியதும் ஒரு மெல்லிய துண்டால் வேடு கட்டி அடுக்குப்பானையின் மீது வைத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் வரை இருக்கும். பிறகு தான் அதிரசம் சுடுவார்கள்.

அதிரசப் பாவு கிண்டிய வாசனை வீடு முழுக்க வீசும். அம்மா எங்கே அதிரசப் பானையை வைக்கிறார் என்பதைப் பார்த்து வைத்துக் கொள்வாள் காயத்ரி. அம்மா கடைக்குப் போகும்போது அல்லது குளிக்க, துணி துவைக்க, தண்ணீர் பிடிக்கப் போவதைக் கவனித்து விட்டு அதிரசப் பாவு உள்ள பாத்திரத்தின் கழுத்தின் மீதிருக்கும் வேடு கட்டிய துணியை லேசாகத் தூக்கிக் கையை உள்ளே விடுவாள். அந்தச் சின்னக் கைக்கு எவ்வளவு பாவு வருமோ அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு பாத்திரத்தை லேசாக ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு துணியை பழையபடி இழுத்து விடுவாள். சாமிக்குப் படைப்பதற்கு முன்பு எச்சில் பண்ணால் சாமி கண்ணைக் குத்திடும் என அம்மா சொல்லி இருந்தாள். காயத்ரிக்குச் சாமியை விடவும் அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்கிற பயம் தான் அதிகம். கோபம் வந்தால் அடிக்கிற அம்மாவாக இருந்தால் பரவாயில்லை. ஏதாவது ஏடாகூடம் செய்துவிட்டால் அடிப்பதற்குப் பதிலாக அன்று முழுக்கச் சாப்பாடு ஊட்டிவிட மாட்டார். தட்டில் போட்டு வைத்தால் அவளாகத்தான் சாப்பிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் அன்றைக்குத் தனியாகத் தூங்க வேண்டியிருக்கும். அம்மாவின் கதகதப்பு இல்லாமல், புடவை வாசம் இல்லாமல் அவளுக்குத் தூக்கம் வராது. மேலும் அம்மாவின் கைகள் தட்டிக் கொடுக்க வேண்டும். அதனாலேயே அவளது அம்மா ஊருக்கு எங்காவது போனால் இரவு தங்காமல் வீடு வந்து சேர்வார். வந்துவிடவேண்டும்.

அதிரசப் பானையைக் குலுக்கிச் சமநிலை செய்துவிட்டால் எடுத்த பாவு தெரியாது என்பது காயத்ரியின் எண்ணம். ஆனால், பாவில் யாரும் கை வைத்தார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேடு கட்டுவதற்கு முன்பு சில முழு முந்திரிப் பருப்பினை மேலே போட்டு வைப்பார் அவள் அம்மா. அந்தச் சூட்சுமம் காயத்ரிக்குத் தெரியாது. அதிரசம் சுடுகிற அன்று எப்படியும் மாட்டிக் கொள்வாள். அதிரசப் பாவுடன் கைக்குக் கிடைத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்துச் சாப்பிட்டது தெரிந்தும் தெரியாதது போல அதிரசம் சுடுவார் அவள் அம்மா.

முதல் அதிரசத்தைத் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்ததும் சின்ன சில்வர் தட்டில் அதை எடுத்து வைத்து சாமி அறையில் சாமிப் படத்துக்கு முன்பு வைக்கச் சொல்வார். அதன் பிறகு சுட்டு எடுக்கிற அதிரசங்கள் சாப்பிடுவதற்குத் தடை ஏதும் இல்லை.

மாலையில் இரவு உணவு முடித்தபிறகு எல்லாவற்றையும் ஏறக் கட்டிய பிறகு தான் அதிரசம் சுடும் படலம் தொடங்கும். சாப்பிட்டு முடித்த களைப்பில் கண்ணில் தூக்கம் சொக்கினாலும் அதிரச வாசனை அவளைத் தூங்க விடாது. அம்மாவின் அருகிலேயே அமர்ந்திருப்பாள். இரண்டு அதிரசம் தின்றாலே அதிகம். சாப்பிட்டுக் கொண்டே தூங்கியும் போவாள். அவளைக் கொண்டு போய் படுக்கையில் கிடத்திவிட்டு வந்து அதிரசம் சுடுவதைத் தொடர்ந்து செய்வார்.

காலையில் எழுந்தால் எல்லா வேலையும் முடிந்து இரவு முழுக்க அதிரசம் சுட்ட சுவடே தெரியாதபடி அடுப்பங்கரை சுத்தம் செய்யப்பட்டு பாத்திரங்கள் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். இரவில் சாப்பிட்ட அதிரசத்தின் மிச்ச சொச்சங்கள் பற்களில் அப்பியிருக்கும். வாய்க் கொப்பளித்துவிட்டு முதல் வேலையாக அதிரசம் அடுக்கிப் பத்திரப்படுத்தப்பட்ட இடத்தைத் தேடுவாள். அடுக்குப் பானையின் ஏதாவதொரு பானையில் தான் அதிரசம் இருக்கும்.

தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது புத்தாடைகள் தைத்து வாங்கப்பட்டிருக்கும். காயத்ரிக்கு மயில் கலரில் அகலமான சரிகை வைத்த பட்டுப்பாவாடை தைத்து வாங்கி வைத்திருந்தார் அவள் அம்மா. ஒவ்வொரு தீபாவளியின் போதும் அவளுக்குப் புதிதாகக் கொலுசை மாற்றித் தருவாள். பெரும்பாலும் அப்போது வந்த புது டிசைன் கொலுசு அவள் கால்களை அலங்கரிக்கும்.

தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரத் திருவிழா மற்றும் அவளது பிறந்தநாள் என வருசத்துக்கு நான்கு முறை அவளுக்குப் புதுத் துணி எடுப்பார்கள்.

பள்ளியில் இருந்து வந்ததும் முதல் வேலையாகப் பட்டுப் பாவடையைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள். கொலுசைக் கால்களின் மீது வைத்துப் பார்த்து விட்டு அதே இடத்தில் வைத்து விடுவாள். அவளது தீபாவளியில் இருந்த ஒரேயொரு குறை பட்டாசு. அவளது தோழிகள் எல்லோர் வீட்டிலும்  பட்டாசு வாங்கி வந்துவிட்டதைக் குதூகலத்தோடு செல்லும்போது முகம் சுருங்கும் அவளுக்கு.

தெருவில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போதே 
"ம்மா, பட்டாசு வாங்கிட்டியா?"
என்ற குரலோடு தான் நுழைவாள்.

அடுப்பங்கரையில் சமைத்தபடியே "ஊருல இருந்து அண்ணன் வரும்போது வாங்கிட்டு வருவான்னு சொன்னேன்ல. அண்ணன் கூட சேர்ந்து வெடிக்கலாம்"

அம்மாவின் சமாதானம் அவளுக்கு ஏற்புடையதாக இருக்காது. சீக்கிரமாக வராத அண்ணன் மேல் கோபம் வரும். கோபம் அழுகையாக மாறும். அவளது அழுகையைப் போக்க பத்து ரூபாய் கொடுத்து கம்பி மத்தாப்பு, பொட்டுப் பட்டாசு வாங்கிக் கொள்ளச் சொல்வார். ஏற்கனவே வீட்டில் துப்பாக்கி இருக்கும். ஐந்து ரூபாய்க்குச் சுருள் பட்டாசு வாங்கிக் கொண்டு மீதியை உண்டியலில் போட்டு வைப்பாள். குட்டி டப்பிக்குள் இருக்கும் சுருள் கேப்பை எடுத்துத் துப்பாக்கிக்குள் பொருத்தி டுமீல் டுமீல் என்று சுடுவாள். பட் பட் என்று வெடித்துச் சின்னதாகப் புகை வரும். அப்போது தான் அவளுக்குத் தீபாவளி தொடங்கிவிட்டதாக  நினைப்பாள்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு உணவுக்குப் பிறகு வழக்கம்போல் அடுப்பைப் பற்ற வைத்து முறுக்கு சுட உட்காருவார் அவள் அம்மா. அவளும் அம்மாவுக்குத் துணையாகக் கூடவே இருப்பாள். கொதிக்கும் எண்ணெயில் பிழிந்துவிடப்பட்ட முதல் முறுக்கு வழக்கம் போல சாமிக்கு. அடுத்தடுத்த முறுக்குகள் சூடு ஆற ஆற எடுத்துத் தின்று கொண்டேயிருப்பாள். அவள் தின்ற மிச்சம் தான் மறுநாள் படைக்கப் போகும்.

"நான் தான் அடுப்புல வேகுறேன். உனக்கென்ன போய் படு" என்பார். அவள் அண்ணன் ஊரிலிருந்து கொண்டு வரப் போகும் பட்டாசு தான் அவள் நினைவில் நீக்கமற நிறைந்திருக்கும். நள்ளிரவில் அல்லது அதிகாலைக்கு முந்திய மணித்துளிகளில் வந்து சேரப் போகும் பட்டாசு அவளைத் தூங்க விடாது. அவளது மனசு தூங்க வேண்டாம் என்று வம்பு செய்தாலும் அவளது கண்கள் தூங்கிவிடும்.

ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார் அவளது அம்மா. கட்டிலில் அண்ணன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பான். முகத்தைக் கழுவிக் கொண்டு முதல் வேலையாக அண்ணன் கொண்டு வந்த பையைத் தேடுவாள். மாமா கொடுத்தனுப்பிய பட்டாசு பாக்சைப் பார்த்ததும் துள்ளிக் குதிக்கும் அவள் மனசு. பட்டாசுடன் திண்ணைக்கு வந்தவளுடைய மனசு ஊமைப்பட்டாசாய் ஆகிப் போகும். வெளியில் மழை கொட்டிக் கொண்டிருக்கும்.

"மழை நின்னதும் வெடிக்கலாம்" என்றபடி பட்டாசு பாக்சை வாங்கி வைத்து விட்டு சடையை அவிழ்த்து நல்லெண்ணையைத் தேய்த்து விடுவார் அவள் அம்மா. எண்ணெய் முகம் கழுத்தெல்லாம் வழிவது ஒரேமாதிரியாக இருக்கும். அதைவிட சீயக்காய் பட்டு கண்கள் எரியுமே என்பதே அவள் கவலை.

"ஷேம்ப்பூ இருக்காம்மா"

"ஷேம்ப்பூ போட்டா முடி கொட்டும்"

சுடு தண்ணீரில் சீயக்காய்த் தேய்த்துக் குளிக்க வைத்து, தலை துவட்டி புது டிரெஸ்ஸை எடுத்துத் தருவார் அவள் அம்மா. புது ட்ரெஸ் போட்டு முடித்ததும் தண்ணீர் சொட்டும் முடியை ஒன்றாக்கி அடி முடியில் முடிச்சிடுவார். அடுத்து சாமி அறையில் வாழை இலையில் படையல் இட்டு படைத்து முடித்த கையுடன் ஒரு இலையில் இருந்து கறிக்குழம்புடன் ஒரு இட்லியை அவள் சாப்பிட வேண்டும். படையல் சோறு எப்போதும் அவளுக்குத் தான் அந்த வீட்டில்.

அடுத்து, வீட்டில் தயாராக இருக்கும் அதிரசம், முறுக்கு, சொய்யாம் உருண்டை, வடை,  பஜ்ஜி, இட்லி இவற்றில் இரண்டு இரண்டை ஒரு தட்டில் வைத்துத் தருவார். அந்தத் தெருவில் உள்ள வீடுகளில் போய் கொடுத்திவிட்டு வர வேண்டும். செய்து வைத்திருக்கும் உணவு வகைகளைப் பார்த்தால் இரவு முழுக்க அம்மா தூங்கவே இல்லை என்றே தோன்றும். ஆனால், உறங்கவேயில்லை என்ற களைப்பும் சோர்வும் அவர் முகத்திலும் கண்களிலும் இருக்காது. புதிதாக எடுத்த மொடமொடவென்று இருக்கும் வாயில் புடவையில் பேரழகாகத் தெரிவார். அம்மா, பட்டுப்புடவை கட்டி அவள் பார்த்ததேயில்லை.

மொத்தம் பதினைந்து வீடுகள். ஒரு கையில் குடை. ஒரு கையில் தட்டு. பாவாடையை இழுத்துச் செருகியபடி போவாள். அந்தந்த வீட்டில் இருக்கும் வயசுக்கு வந்த அக்காக்கள் அடுப்பங்கரையில் இருந்தபடியே "ஏய் உன் டிரெஸ் சூப்பரா இருக்கு. கொலுசு புதுசா.. ம்ம்" என்று வாய்விட்டுச் சொல்வதைக் கேட்டால் தான் தீபாவளி தீபாவளியாக இருக்கும்.

அவள் கொண்டு போன அதே தட்டில் அவர்கள் வீட்டில் செய்த பலகாரங்களில் இரண்டு இரண்டு வைத்துக் கொடுத்து விடுவார்கள். சிலர் மட்டும் "இன்னும் படைக்கலமா  உன் ஃப்ரண்டு கிட்ட கொடுத்து விடறேன்" என்பார்கள்.  புது டிரெஸ் புது கொலுசு பற்றி மறக்காமல் கருத்து சொல்லிவிடுவார்கள். மனசுக்கு நிறைவான தீபாவளியாக மாறிவிடும் அவளுக்கு.

பண்டமாற்று முடிந்தவுடன் பட்டாசு நினைவுக்கு வரும். மழை விட்டிருக்காது. வெடி வெடிக்கத்தானே தெருவுக்குள் இறங்கனும். சங்கு சக்கரம் கம்பி மத்தாப்பு பாம்பு மாத்திரை இவற்றுக்குத் தெரு தேவையில்லையே.

வீட்டுத் திண்ணையில் அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு சங்கு சக்கரம் விடுவாள். கம்பி மத்தாப்பு பொறி பறக்கும். கால் வாசி கூட கொளுத்தியிருக்க மாட்டாள்.

"இதெல்லாம் நைட்ல தான் கொளுத்தனும். அறிவு கெட்டவளே"

திட்டிக் கொண்டே மீதியை எடுத்துக் கொண்டு போய்விடுவான் அவள் அண்ணன்.

"நீ லேட்டா வந்தால் எப்படி நைட்ல கொளுத்த முடியும்?

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும்.

அண்ணன் எப்போதாவது பண்டிகை சமயங்களில் மட்டும் வீட்டிற்கு வருவார். பக்கத்து ஊரில் இருக்கும் மாமாவின் மளிகைக் கடையில் அண்ணன் வேலை செய்வதால் அண்ணன் வீட்டில் இருக்கும்போது அவன் சொல்வதே சட்டம். அந்தவொரு விஷயத்தில் மட்டும் ஏன் தான் இவன் வந்தானோ என்று கோபம் வரும் அவளுக்கு. மற்ற நேரங்களில் அண்ணன் எப்போ வருவான் என்று காத்திருப்பவள்தான்.

மழை முழுவதுமாக நின்றபின் கொஞ்ச நேரத்திலேயே சுள்ளென்று வெயில் காயும். தெருவில் ஓடிய தண்ணீர் வற்றி மண் காய ஆரம்பிக்கும். அவள் அண்ணன் லட்சுமி வெடி, யானை வெடி, சரம் எல்லாம் வெடிக்க எடுத்து வருவான். திண்ணையில் வைத்ததும் அவன் வெடிப்பதற்காக வெடியில் நாக்கு நுனியை கிள்ளி கிள்ளி வைப்பாள். அவளது அண்ணன் தெருவில் மண் கூட்டி அதன் மீது வெடியை நிற்க வைத்து நெருப்பு வைப்பான். டம்ம்ம்ம் என பயங்கர சத்தமும் புகையுமாக மாறும் அந்த இடம்.

ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் தெருவில் பையன்கள் வெடி வைப்பார்கள். வெடி வெடித்ததும் கூட்டி வைத்த மணல் சிதறியிருக்கும். சிலர் மாட்டு சாணியில் வெடியைச் செருகி நெருப்பு வைப்பார்கள். வெடித்து முடித்ததும் அந்த இடத்தைச் சுற்றிச் சாணி சிதறி பார்க்கவே சகிக்காது. சிலர் கொட்டாஞ்குச்சிக்குள் வெடியைச் செருகி வெடிப்பார்கள். அப்போதான் சத்தம் காதைப் பிளக்கும். கொஞ்ச நேரத்தில் தெரு முழுக்க பேப்பர்த் துண்டுகளும் பட்டாசு வாசமுமாக நிரம்பியிருக்கும்.

மீண்டும் ஒருமுறை இட்லியும் கறிக்குழம்பும் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவுடன் பெரிய தூக்கம் ஒன்றைப் போடுவாள். தூங்கி எழுந்ததும் மாலையில் கோயிலுக்குப் போய் வருவாள். பிறகு இரவு முழுக்க மத்தாப்பும் புஸ் வானமும் அவளது தீபாவளியை அழகாக்கும். 
*****
"அக்கா, கதவைத் திறங்க"

பக்கத்து வீட்டு யமுனா குட்டியின் குரல் கேட்டு கதவைத் திறந்தாள்.

கிளிப்பச்சை நிற சின்ட்ரல்லா கவுனும் கழுத்தில் புது தங்கச் செயினுமாக நின்றிருந்தாள் யமுனா கவுனுக்குப் பொருத்தமாக வளையலும் தலையில் கிளிப்பச்சை நிற செயற்கை ரோஜா பொருத்தப்பட்ட ஹேர்பேண்டும் அணிந்திருந்தாள். உதட்டில் லிப்ஸ்டிக் வேறு அவளது குழந்தைமை அழகை மேலும் மெருகூட்டியது.

"அக்கா, வாங்க பட்டாசு வெடிக்கலாம்"

"டிரெஸ் ரொம்ப அழகா இருக்கே யார் வாங்கிக் கொடுத்தது?"

கேட்டதுதான் தாமதம். வெட்கமும் பெருமையும் தாங்க முடியவில்லை அவளுக்கு.

"அம்மா வாங்கிக் கொடுத்தாங்க. இதே மாரி இன்னோர் டிரெஸ் கூட இருக்கு. அது ஈனிங்க்கா போட்டுக்க சொல்லிட்டாங்க"

சொல்லிக் கொண்டே பட்டாம்பூச்சி போல பறந்து போனாள்.

தீபாவளி டிரெஸ்ஸுக்கு மட்டும் அரூபமாக இரண்டு சிறகுகள் இருக்கும் போல.
****
நன்றி : ஃபெமினா (ஜனவரி 2017).