தேனி இலக்கிய சந்திப்பு :
2008இல் கவிஞர் உமாமகேஸ்வரியை ஒரு நேர்காணலுக்காகச் சந்திக்க தேனிக்குச் சென்றிருக்கிறேன். அதன்பிறகு 2010இல் பல்கலைக்கழக துறைசார் நண்பர்களுடன் சுருளி அருவிக்குச் சுற்றுலா சென்றேன். அதன்பிறகு தேனிக்குச் செல்லும் வாய்ப்பு வரவில்லை. ஆனால், தேனியை நினைத்தாலே பிரம்மாண்டமான மலைகளும் குளிர்ச்சியும் நினைவுக்குள் வந்துபோகும்.
யுவபுரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டபோது தேனியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறோம் என்று விசாகன் தோழர் சொன்னார். மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன். தேனிக்குச் செல்லும் உற்சாகம் மனதெங்கும் நிறைந்திருந்தது.
ஜூலை 29 அன்று இராஜபாளையத்தில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய விழாவில் கலந்து கொண்டபின், அடுத்த நாள் செல்வக்குமார் அண்ணா மற்றும் அவரது நண்பர் ராஜா ஆகியோருடன் தேனிக்குப் பயணம் செய்தேன். இராஜபாளையத்தில் இருந்து கிளம்பியதும் எங்களோடு மழையும் பயணம் செய்தது. ஜன்னலோர இருக்கையில் மழையை, மலையை ரசித்தபடி மூன்று மணி நேரப் பயணம்.
சரியாக மாலை 4 மணி அளவில் தேனியில் விசாகன் தோழரை நிகழ்ச்சி நடைபெறவிருந்த தெய்வா ஹோட்டலில் சந்தித்தேன். பிறகு ஏற்பாடு செய்திருந்த அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தார். கொஞ்ச நேரத்தில் ‘எது என்னை எழுதத் தூண்டியது?’ என்பது பற்றிச் சிறு வீடியோ பதிவு ஒன்றை அவரது கேமராவில் பதிவு செய்தார். பத்துநிமிட உரையாடலுக்குப் பிறகு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குச் சென்றோம்.
முகநூல் தோழியான பிரிதம் நிலாவைச் சந்தித்தது கூடுதல் கொண்டாட்டமாக இருந்தது. கற்றல் இனிது பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என ஆவலோடு இருந்தேன். தேனி நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அன்பில் நெகிழ்ந்து போனேன். எங்கே சென்றாலும் அன்பானவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.
மழையும் மழை நிமித்தமுமான விடுமுறை நாளினை இலக்கிய நிகழ்வுக்கு ஒப்புக் கொடுத்த அறிஞர்கள், எழுத்தாளர்களால் அரங்கு நிறைந்திருந்தது. சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியைத் தொடங்கியிருந்தார்கள். சா. தேவதாஸ் தோழர், யமுனா ராஜேந்திரன் மற்றும் கதைப்பித்தன் ஆகியோருடைய மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த அறிமுகத்தினையும் விமர்சனங்களையும் ஷாஜகான், நேசமித்ரன், ஆர்.எஸ். லட்சுமி, தி. குமார், பொன்முடி, மணிமொழி, கூடல் தாரிக் ஆகியோர் மிக நேர்த்தியாக முன்வைத்துப் பேசினர்.
தலைமையுரையில் ஏர் மகாராசன் தோழர், ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதை நூல் குறித்து ஆழமான உரையை நிகழ்த்தினார். பெண் கவிதைகளின் நீண்ட வரலாற்றினைச் சுட்டிக் காட்டிப் பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. அவரது பெண் மொழி இயங்கியல் புத்தகத்தை எனது முதுகலை வகுப்பில் வாசித்திருக்கிறேன். அவரைத் தேனி நிகழ்வில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாக, பாராட்டு விழாவில் ஏற்புரைக்கு முன்பு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பு செய்வார்கள். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தோழர்கள் என்னை அன்பு மகளாக வரித்துக் கொண்டார்கள். இப்போது நினைத்தாலும் சந்தோஷத்தில் நெகிழ்ந்து கண் கலங்குகிறேன். தலையில் கிரீடம் சூட்டி, ரோஜா மலர் மாலை அணிவித்து, பெரிய தட்டில் புத்தகங்களையும் அழகான சுடிதார் ஒன்றையும் வைத்து சீர்வரிசையாக அளித்துப் பெருமை செய்தார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட இளவரசி போல உணர்ந்த தருணம் அது. மலர் மாலை மற்றும் கிரீடத்துடன் எனது சுருக்கமான ஏற்புரையை வழங்கினேன்.
மகாராசன் தோழர், ஷாஜகான் தோழர், ஆர்.எஸ். லட்சுமி அம்மா, விசாகன் தோழர், செல்வக்குமார் அண்ணா என என்னைச் சுற்றி இவ்வளவு அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தேனி நிகழ்வில் தெரிந்து கொண்டேன். விசாகன் தோழருக்கு என்றென்றைக்குமான அன்பும் நன்றியும்.
தேனி இலக்கியச் சந்திப்பு, தேனீ போல இன்னும் சுறுசுறுப்பாக எழுத்தில் இயங்குவதற்கு ஆற்றலைக் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017
தேனி பாராட்டு விழா
வெள்ளி, 7 ஜூலை, 2017
தமிழரசியல்.காம் நேர்காணல்
” விருது வாங்கினாலே விமர்சனங்களும் வந்துடும் இது புதுசில்ல” – யுவபுரஸ்கார் மனுஷி பாரதி !
இப்போது மத்திய அரசு 35 வயதுக்கு உட்பட்டோர் இலக்கியத்திற்கு ஆற்றும் சேவைக்காக வழங்கும் இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது. கவிதை எழுதும் பெண்ணான கவிஞர் மனுஷியும், குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணணும் இவ்விருதை பெற்றிருக்கும் நிலையில், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள மனுஷி பாரதியை பேட்டி காண தமிழரசியல் ஊடகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து பேசினோம்.
யுவபுரஸ்கார் விருது வாங்கியதற்காக தமிழரசியல் ஊடகம் சார்பாக வாழ்த்துக்கள் மனுஷி பாரதி. உங்களை பத்தி ஒரு சிறிய அறிமுகம் கொடுங்களேன்…
எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருநாவலூர். அங்கதான் 10வது வரைக்கும் அரசு பள்ளியில படிச்சேன். அதன் பிறகு வளவனூர்ல +1, +2 படிச்சேன். அதுக்கப்புறம் தமிழ் மொழி மேல இருந்த ஆர்வத்துல பி.ஏ.தமிழ், எம்.ஏ.தமிழ் பாண்டிச்சேரில படிச்சேன். இப்போ பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்துல பி.எச்.டி பண்ணிட்ருக்கேன். இதுபோக மூன்று கவிதைத் தொகுப்புகள் எழுதியிருக்கேன்.
யுவ புரஸ்கார் விருது உங்களுக்கு கிடைக்கும்னு நினைச்சீங்களா? இதை எப்படி உணர்றீங்க?
இந்த விருது கிடைக்கும்னு நினைச்சு பாக்கவே இல்ல. இது எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு. இந்த விருது எனக்கு மிகப்பெரிய அளவுல சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் குடுத்துருக்கு. மேலும் மேலும் எழுதுறதுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் விதத்துல இந்த விருது கிடைச்சதுக்காக ரொம்ப சந்தோசப்படுறேன். முதல்முறையா ஒரு பெண் கவிதைக்கு தமிழ் சூழலிலும் இந்திய சூழலிலும் நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இது தனிப்பட்ட முறைல எனக்கு கிடைச்ச விருதா இருந்தாலும் ஒரு பெண்ணின் கவிதைக்கு கிடைச்ச விருது அப்படிங்குற கண்ணோட்டத்துல தான் நான் இத பாக்குறேன். அது கூடுதலான சந்தோசத்த எனக்கு கொடுக்குது.
அப்படியா? இதுதான் பெண்கவிதைக்கு கிடைக்குற முதல் யுவபுரஸ்கார் விருதா?
இதுவரைக்கும் தேசிய அளவுல வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதுகள்ல பெண்கவிஞர்களுக்குனு கிடைக்குற முதல் விருது இதுதான். இதுவரைக்கும் 6 விருதுகள் குடுத்துருக்காங்க. 2011ல ‘தவசி’ அவருடைய ‘சேவல்கட்டு’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2012ல ‘மலர்வதி’ என்பவர் அவருடைய ‘தோப்புக்காரி’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2013ல ‘கதிர் பாரதி’ என்பவர் அவருடைய ‘மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள்’ எனும் கவிதை தொகுப்புக்காக இந்த விருதை பெற்றார். 2014ல ‘அபிலாஷ்’ அவருடைய ‘கால்கள்’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2015ல ‘வீரபாண்டியன்’ அவருடைய ‘பருக்கை’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2016ல ‘லக்ஷ்மி சரவணகுமார்’ அவருடைய ‘கானகன்’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இப்படி ஆறு வருஷமா விருதுகள் வழங்கியிருக்காங்க. இருந்தாலும் முதல்முறையா ஒரு பெண்கவிக்கு இந்த வருடம் தான் அங்கீகாரம் கொடுத்துருக்காங்க. இந்த சந்தோஷமான நேரத்துல என்னுடைய பெயரை யுவபுரஸ்காருக்காக பரிந்துரை செஞ்ச பிரபஞ்சன் சார், நாச்சிமுத்து சார், திருமுருகன் சார் எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இன்னும் யார் இருந்தாங்கனு தெரியல. அப்படி யாராவது இருந்தா அவங்களுக்கும் ரொம்ப நன்றி.
இந்த விருது வேற யாருக்காவது கிடைக்கும்னு எதிர்பாத்திங்களா?
இல்ல. இத பத்தி யோசிக்கவே இல்ல. எல்லாரும் திடீர்னு ஃபோன் பண்ணி சொன்னப்போ தான் எனக்கு விஷயமே தெரிஞ்சுது.
தமிழ் இலக்கியத்துல உங்களுடைய ‘ரோல் மாடல்’ யார்?
தமிழ் இலக்கியத்துல என்னுடைய ‘ரோல் மாடல்’ அப்படின்னா கவிஞர் ‘இளம்பிறை’ய சொல்லுவேன். அப்புறம் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள சொல்லுவேன். ஏன்னா, இவங்களோட எழுத்துக்கள்ல இருந்துதான் நான் எழுத்துக்கான அறம் அப்படிங்குற ஒரு விஷயத்த கத்துக்கிட்டேன். நாம எத எழுதணும்? யாருக்காக அத எழுதணும்? எழுத்துக்களுக்கு எந்த அளவு உண்மையா இருக்கணும்? இந்த விஷயங்கள் எல்லாத்தையும் அவங்க எழுத்துக்கள்ல இருந்து எடுத்துக்கிட்டேன்.
நீங்க இதுவரைக்கும் குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்னு மூன்று தொகுப்புகள் எழுதியிருக்கீங்க… அதுல உங்களுக்கு மனதிற்கு நெருக்கமான தொகுப்பு எது?
எனக்கு ‘ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்’தான் மனதிற்கு நெருக்கமான தொகுப்பு. ஏன்னா மத்த ரெண்டு தொகுப்புகளையும் தாண்டி வேற ஒரு தளத்துலயும் அரசியல் ரீதியாவும் இந்த தொகுப்புல பேசியிருக்கேன். அதனால தான் அது எனக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கு.
முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்து எழுதுற உங்களுக்கு இந்த அனுபவங்கள் எப்படி கிடைச்சது?
நான் இதுக்காக களப்பணியோ, பெண்களையெல்லாம் போய் சந்திக்கிறது அப்படியெல்லாம் எதும் பண்ணதில்ல. இந்த அனுபவங்கள் எல்லாமே என் வாழ்க்கைல நான் பார்த்த அனுபவங்கள். அதாவது என் வாழ்க்கைல கடந்து போன பெண்கள், நான் பாத்துட்டு இருக்க என்ன சுத்தியிருக்க பெண்கள் இவங்க மூலமா எனக்கு கிடைச்சதுதான். இந்த அனுபவங்கள் தான் தமிழ்நாட்டுல இருந்து இந்தியா முழுக்க இருக்க எல்லா கலாச்சாரத்துலயும் ஒரு பெண் தனது சமூகத்தால் எப்படி பார்க்கப்படுகிறாள்? என்ன மாதிரியான பிரச்சனைகளை அவள் எதிர்கொள்கிறாள்? எப்படி இந்த சமூகத்தால் ஒடுக்கப்படுகிறாள்? இதையெல்லாம் மீறி அவளுடைய உலகத்திலிருந்து என்ன மாதிரியான சுதந்திரங்களையெல்லாம் அவள் எதிர்பார்க்கிறாள்? அப்படிங்குற விஷயங்களையெல்லாம் அனுபவ ரீதியா தெரிஞ்சுகிட்டேன்.
இதுக்கு அப்புறம் தமிழ் இலக்கியத்துக்காக என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?
அடுத்ததா சிறுகதைத் தொகுப்பு வெளியிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அடுத்த இரண்டு வருசத்துல பெண்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு நாவல் எழுதலாம்னு இருக்கேன். அப்புறம் பெண்கள் உலகத்தை தாண்டி குழந்தைகளுக்காக எழுதணும் அப்படினு ஆசையிருக்கு. குழந்தைகளோட பார்வைல அவங்க உலகம் எப்படிப்பட்டது. அந்த உலகத்துல அவங்களுக்கு என்ன தேவைப்படுது அப்படிங்குற விஷயங்களை பதிவு செய்யணும்.
இளம் எழுத்தாளர்கள்ல உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் யார்?
இளம் எழுத்தாளர்கள்ல எனக்கு பிடிச்சவங்க ரொம்ப பேர் இருக்காங்க. ஜீவலக்ஷ்மி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க இப்ப தான் எழுதிட்டு இருக்காங்க. அரசியல் சார்ந்து தீவிரமா எழுதுறவங்க அவங்க. அப்புறம் நரன் கவிதைகள், கதிர் பாரதி இவங்களையெல்லாம் படிப்பேன். தொடர்ச்சியா என் பார்வைக்கு வரக்கூடிய எல்லாரையும் படிச்சுட்டு தான் இருக்கேன். சமீபத்துல நா.பெரியசாமி அவர்களுடைய தொகுப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
இந்த விருது உங்களுக்கு கிடைச்சுருக்குறத சமூகவலைத்தளங்கள்ல லக்ஷ்மி மணிவண்ணன் மாதிரியான இலக்கியவாதிகள் விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்களே… அத பத்தி என்ன நினைக்குறீங்க?
விருது வாங்கினாலே விமர்சனங்களும் சேர்ந்து வந்துடும். இது ஒன்னும் புதுசில்ல. வருசா வருசம் இதுதான் நடந்துட்டு இருக்கு. ஆரோக்கியமில்லாத இந்த மாதிரியான விமர்சனங்களையெல்லாம் நான் பொருட்படுத்தவே விரும்பல. எனக்கு இந்த விருது கிடைச்சத, அவங்களுக்கு கிடைச்ச விருதா நினைச்சு சந்தோசப்படுற நிறைய நண்பர்கள் மற்றும் மூத்த படைப்பாளிகள் எனக்காக இருக்காங்க. அவங்களோட அன்பும் ஆதரவும் தான் எனக்கு பக்கபலம்.
எல்லா எழுத்தாளர்களோட நிலைமையும் பொருளாதார ரீதியா கஷ்டமா இருக்கும். உங்களோட நிலைமை எப்படி?
இப்போ படிச்சுட்டு இருக்கறதால பிரச்சினையில்ல. பகுதி நேரமா இப்பவே சில இதழ்களுக்கு எழுதி கொடுத்துட்டு இருக்கேன். பிழை திருத்தம்லாம் பண்ணிட்டு இருக்கேன். இனிமே தான் ஒரு நிரந்தரமான வேலைய தேடணும். எங்க போனாலும் எழுத்துக்காகவும், வாசிப்புக்காவும் என் நேரம் ஒதுக்கப்பட்டுட்டு தான் இருக்கும். தொடர்ந்து எழுதிகிட்டே இருப்பேன். அது ஒன்னு தான் எனக்கு பெரிய விஷயம்.
நன்றி : thamizharasiyal.com