புதன், 6 ஜூலை, 2016

டைகர் ( ஒரு நாயின் கதை) - மனுஷி

டைகர்

(ஒரு நாயின் கதை)

n  மனுஷி

          எதிர்வீட்டு மனோஜ் அந்த நாயை ஒரு பெரிய குச்சி ஒன்றினால் விளாசிக் கொண்டிருந்தான். தன் அம்மாவிடம் அடிவாங்கிக் கொண்டு அலறும் பத்து வயது சிறுவனைப் போல செய்வதறியாது வீறிட்டுக் கதறிக் கொண்டிருந்தது அந்த நாய். அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு ஏன் அங்கேயே கத்திக் கொண்டிருந்தது என யோசனையாக இருந்தது. அதன் கழுத்துச் சங்கிலி வெளி இரும்புக் கேட்டில் கட்டப்பட்டிருந்தது. அதன் கதறல், அது செய்த மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றிற்கு மன்னிப்புக் கேட்பது போல இருந்தது.

          “நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வச்சாலும் அது எங்கயோ போகுமாம்.. சரியாதான் இருக்கு. சனியனுக்கு என்ன கொற வச்சேன். இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது. வீட்டுப் பக்கம் வரலாம்ன்ற எண்ணத்தையே மறந்திடு”.

          அவன் அவ்வளவு வன்மத்தோடு கத்தினான். அந்த நாய், தான் செய்தது தவறுதான் மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லிக் கெஞ்சுவது போல தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. அவன் அடித்து முடிந்து ஓய்ந்தவனாய் இரும்புக் கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டான். போவதற்கு  முன்பு அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டுப் போனான். அது இரும்புக் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தது. அதன் அழுகை அவனது காதில் விழவே இல்லை. காதில் விழாதபடி கதவை அடைத்துக் கொண்டு அந்தப் பங்களா வீட்டுக்குள் அடைந்து கொண்டான்.

          அப்படி என்னதான் தவறு செய்துவிட்டது அந்த நாய்? (இனிமேல் அதை நாய் என்று சொல்ல வேண்டாம். அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. அதன் பெயர் டைகர்). டைகருக்காக அப்போதைக்கு வருத்தப்பட மட்டுமே முடிந்தது அந்தத் தெருவில் இருப்பவர்களால்.

          “அநியாயமா ஒரு வாயில்லா ஜீவனுடைய பாவத்தை அள்ளிக் கொட்டிக்கறானே. எல்லாம் பங்களா வீட்டில இருக்கோம்ன்ற திமிர். வேற என்ன” என்று அங்கலாய்த்தார் பாலாமணி அக்கா.

          சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கண்ணீருடன் இரும்பு கேட்டின் முன்னால் நின்று அழுத டைகர் களைத்துப் போய்ப் படுத்துக் கொண்டது. பாலாமணி அக்கா கொஞ்சமாய் சாம்பார் சாதம் கொண்டு வந்து அதன் பக்கத்தில் வைத்தார். தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. பூட்டப்பட்ட கதவுகள் திறக்காதா என்ற ஏக்கம் அதன் கண்களில் வழிந்தது.

***************

          டைகர் செய்த தவறெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அன்று மதிய உணவுக்குப் பிறகு சாப்பிட்டு முடித்தபின், கழுத்துச் சங்கிலியை அவிழ்த்து விட்டிருக்கிறான் மனோஜ். இரும்புக் கதவுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த டைகர், அந்தப் பக்கமாக வந்த தெருநாய்மீது கொஞ்சம் பார்வையைத் திருப்பிவிட்டது. முதல் பார்வையிலேயே காதல் மயக்கம் கொண்ட டைகர், தெருநாயின் பின்னால் போய்விட்டது. அரைமணி நேரத்திற்குப் பிறகு டைகரைக் காணாமல் தேடிக் கொண்டு தெருமுனைக்கு வந்தால், அங்கே புதிதாக முளைத்திருந்த முருகன் கோயில் பின்புறத்தில் டைகரும் அவனது ஜோடியும் ஈருடல் ஓருயிராகக் கலந்திருந்தனர்.

***********

          மாலைப்பொழுது கரைந்து கொண்டிருந்தது. பாலாமணி அக்கா உட்பட அந்தத் தெருவில் உள்ள இரண்டு பெண்களும் டைகருக்காக வருத்தப்பட்டது போதும் என்பதுபோல எழுந்து போய் மெகாசீரியலில் நுழைந்து கொண்டனர்.

          பங்களா வீட்டின் எதிரில் இருந்த மாலினியின் வீட்டு வாசல் முன்பு போய் நின்று கொண்டு குரல் கொடுத்தது டைகர். அதன் குரலில் அவ்வளவு பசி.

**********

          இரண்டு மாதம் தீவிரமான வீடு தேடல் படலத்துக்குப் பிறகு மாலினி அந்த வீட்டிற்குக் குடிவந்தாள். வீட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே  அவளுக்குப் பிடித்துப் போனது. அவளுக்கு வீடு பிடித்துப் போவது ஒரு விஷயமே இல்லை. வீட்டு ஓனர்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். வீடு தருவதாய் அவர் வாய் திறந்து சொல்லவே இல்லை. எல்லா வீட்டு ஓனர்களையும் போல சம்பிராதாயமான கேள்விகளைக் கேட்டு முடித்தார். அவள் எல்லாவற்றிற்கும் ஓக்கே சார் சரிங்க சார் என்பதைத் தவிர வேறு எதையும் பதிலாகச் சொல்லவில்லை. சொல்லவும் வாய்ப்பு அங்கே இல்லை. என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பெரிய பட்டியலாகச் சொன்னார். அவர் சொன்னவற்றில் சில எரிச்சலாக இருந்தது. ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரர். அவர் வீடு. அவருக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கும் தானே.

அது பெரிய வீடுதான். ஒரு பெட்ரூம், ஒரு ஹால், உள்ளே இன்னொரு ஹால், ஒரு கிச்சன், ஒரு சாமி (?) அறை, ஒரு பாத்ரூம், வெளியில் ஒரு வராண்டா. அவள் ஒருத்திக்கு அந்த வீடு மிகப்பெரியதுதான். இதற்கு முன்பு ஒரு சைனாக்காரப் பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் அங்கே வாடகைக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டைக் காலி செய்த ஒரு வாரத்தில் அந்த வீட்டை அவள் தேடிப் பிடித்தாள் தோழியின் மாமா மூலமாக. வீட்டு வாசல் கதவைத் திறக்கும்போதே பீர் வாசம் வயிற்றைக் குமட்டியது. அட்வான்ஸ், வாடகை எல்லாம் பேசி முடித்து, வீடு ஓக்கே ஆன மறுநாள் தனி ஆளாகவே அந்த வீட்டைக் கழுவிச் சுத்தப்படுத்தினாள். இரண்டு நாள் கடுமையான சுத்தப்படுத்தலுக்குப் பிறகு ரூம் ஸ்பிரே வாங்கி அடித்துவிட்டாள். மூன்றாம் நாள் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. இங்கே இனி வசிக்கலாம்  என்ற நம்பிக்கை அப்போதுதான் வந்தது. பக்கத்து வீட்டு பாலாமணி அக்காவும், மேல் வீட்டில் குடியிருக்கும் புதிதாகத் திருமணம் ஆகியிருந்த கீதாவும்கூட சொன்னார்கள். “இப்போதான் இந்த வீட்டுக்குள் இருந்து நல்ல வாசனை வருது”.

**************

கூகுளில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் குறிப்பு பார்த்து  மீன் குழம்பு செய்திருந்தாள் மாலினி. வாசனையே குழம்பின் சுவையைச் சொன்னது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் டைகரின் ஞாபகம் வந்தது.  வெளியில் வந்து பார்த்தாள். மாடிப்படிக்குக் கீழே படுத்திருந்தது. அவளிடம் ஐந்து தட்டுகள் இருந்தன. தினம் ஒரு தட்டில் சாப்பிடுவது அவளது வழக்கம். அதில் ஒரு தட்டை டைகருக்கென ஒதுக்கினாள். தட்டில் சோற்றைப் போட்டு, போதுமான அளவுக்குக் குழம்பை ஊற்றி, இரண்டு மீன் துண்டுகளை எடுத்துப் போட்டாள். மீனின் முள்ளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, சதைப் பகுதியைச் சோற்றில் வைத்து எடுத்துக் கொண்டு போய் டைகருக்கு வைத்தாள். அவள் சைவ உணவுப் பிரியையாக இருந்த சின்ன வயதில் அவளை மீன் சாப்பிட வைக்கவென அவளது அம்மா படாதபாடு படுவாள். முள் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து ஒரு டம்ளர் நீரில் அலசி, காரம் இல்லாமல் கொடுப்பாள். அதையும்கூட மாத்திரையை விழுங்குவது போல வாயில் போட்டு தண்ணீர் ஒரு வாய் ஊற்றி விழுங்கி விடுவாள். சிறு வயது ஞாபகங்கள் தலைதூக்க, கனத்த மனதுடன் மீன் குழம்பைச் சாப்பிட்டாள். டைகரும் சுவைத்துச் சாப்பிட்டு முடித்திருந்தது.

அதன்பிறகு, டைகருக்கும் சேர்த்து ஒரு பிடி அரிசி, கூட வைத்துச் சமைத்தாள். வெளியில் கடையில் சாப்பிட்டால்கூட பாதி சாப்பாட்டைப் பார்சல் செய்து டைகருக்குக் கொண்டு வந்தாள். சிலநாள் அவள் ஹோட்டலில் இருந்து மிச்சம் கொண்டு வரும் மீல்ஸை டைகர் சாப்பிடாமல் படுத்தே கிடக்கும். வீட்டில் சமைத்த சாம்பார், கீரை, தக்காளி சாதம் செய்தால் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தது. எங்காவது சாப்பிட்டிருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இப்படியாகப் இருபது நாட்களுக்கு மேல் கடந்து போனது.  அப்போதுதான் டைகரைப் பற்றி ஒரு விடயம் புரிந்தது. டைகர், பயங்கரமான அசைவப் பிரியர். பங்களா வீட்டின் செல்லப் பிள்ளையாக டைகர் இருந்தபோது பந்தாவாக ஏசி காரில் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியாகத் தெருவில் இருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகும். பஞ்சுபோல பளபளக்கும் வெள்ளை மேனி. சில்க் போல வழவழக்கும் முடி. மனோஜ் மற்றும் அவனது நண்பர்களுடன் அது விளையாடும் அழகைப் பார்க்கக் கண்கோடி வேண்டும். தினமும் லெக் பீஸ் வாங்கிப் போட்டுப் பழக்கி இருந்தார்கள். பொறந்தா இந்த டைகர் மாதிரி பொறக்கனும் என்று பாலாமணி அக்கா சொல்லாத நாள் இல்லை. டைகருக்கு வந்த வாழ்வ பாரு என்ற அங்கலாய்ப்பு இல்லாமல் அவரது நாள் முடியவே முடியாது. டைகருக்கு அவ்வளவு சொகுசான வாழ்க்கை. ராஜ வாழ்க்கை.

‘அந்தநாள்’ ஞாபகத்திலிருந்து டைகரின் நாக்கு மீண்டு வரவே இல்லை. கறி சோறும், கறி வாசனையும் மூன்று வேளையும் தேவைப்பட்டது. தினமும் சமைக்கும் அளவுக்கு மாலினிக்குப் பொறுமை இல்லை. சிலசமயம் பிஸ்கட்டுகள் அல்லது பழங்கள் ஒரு கப் ப்ளாக் காஃப்பி இதுவே அவளது காலை மற்றும் இரவு உணவு. மதியம் வெளியில் சாப்பிட்டு விடுவாள். ஆனால், வெளியில் போய் வரும்போதெல்லாம் டைகர் பசியோடு இருக்குமே என மீன் வறுவல், பீப் ஃப்ரை, சிக்கன் 65, ட்ரில்டு சிக்கன், சிக்கன் ஃப்ரை - இவற்றில் ஏதாவது ஒரு பார்சலுடன்தான் வருவாள். அவள் தெருமுனைக்கு வருவதைப் பார்த்தவுடனேயே டைகர் குஷியாகிவிடும்.

டைகருக்கு நாக்கு ருசியாகச் சாப்பாடு போடுவது தொடக்கத்தில் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. நாட்கள் போகப் போக ஒரு நாயை ஏன் இவ்வளவு சொகுசாகப் பழக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அன்றைக்குத் தயிர் சாதம்தான். நெல்லிக்காய் ஊறுகாய். அமுதம் போல்  இருந்தது. ருசித்துச் சாப்பிட்டபின், டைகருக்குத் தயிர் சாதம் பிசைந்து கொண்டுபோய் வைத்தாள். தலைதூக்கிப் பார்த்த டைகர் சாப்பாட்டில் வாய் வைக்கவேயில்லை. அவளுக்குக் கோபம் வந்தது.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க. ஒரு நாளைக்குத் தயிர் சாதம் சாப்பிட்டா கொறைஞ்சு போய்டுவியா? தினம் நான்-வெஜ் வேணும்னா நான் எங்க போறது? என் பட்ஜெட்டுக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகாது. நானே பிரட், பிஸ்கட் என்று சிலசமயம் சாப்பிட்டுப் போறேன். உனக்கென்ன? இங்க பாரு, இனிமேல் நான் என்ன சாப்பிடறனோ அதைத்தான் தருவேன். சாப்பிட்டுத்தான் ஆகனும். இல்லனா பட்டினி கிட. யார் வேண்டாம்னு சொன்னது?”

அவள் பேசப் பேச தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. டைகர்மா, என்ன செல்லக்குட்டி, என்ன  பண்றிங்க, இங்க வாங்க என்று கொஞ்சும்போதெல்லாம் முகத்துக்கு நேராக முகத்தைக் கொண்டு வரும். அன்பில் குழையும். குழந்தையைப் போல ஆகிவிடும்.

“டைகர் இங்க பாரு, நான் சொல்றது எதாவது புரியுதா? சும்மா கடைக்குப் போகும்போதெல்லாம்கூட வருவது, வெளியில் போய்ட்டு வரும்போது வாலை ஆட்டிக் கொண்டு குழைவது, ஊருக்குப் போய்ட்டு வந்தால் மேலே ஏறி விளையாடுவது இதெல்லாம் ஓக்கேதான். அதைத்தாண்டி கொஞ்சம் சிச்சுவேஷனைப் புரிஞ்சுக்கோ.”

டைகர் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. அவளைப் பார்க்கவேயில்லை. போ இன்னைக்கு உனக்குச் சோறு கிடையாது. பட்டினி கிட என்று கோபமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், ஒரு ஆம்லேட் போட்டுக் கொண்டு வந்து தயிர் சோற்றில் பிசைந்து வைத்தாள். சாப்பிட்டு விட்டு அமைதியாகப் படுத்துக் கொண்டது. அவளும் எதுவும் பேசவில்லை அதனிடம்.

****************

ஆறு மாத காலமாக ஊர்ப் பயணங்கள் அதிகம் இருந்ததால் டைகரை அவள் பார்ப்பதே அரிதாக இருந்தது. குளிப்பது, தூங்குவது இதற்கு மட்டும்தான் வீடு என்பது போல ஆகியிருந்தது அவளது வேலைப்பளு. மற்ற நேரங்களில் பேருந்து பயணம் அல்லது பைக் பயணம். இதில் டைகரைக் கவனிக்க மறந்து போயிருந்தாள். எப்போதாவது வீட்டில் சாப்பிடும் நேரங்களில் மட்டும் டைகருக்கு மறக்காமல் உணவு வைத்தாள். முன்பு போல, அது சாப்பிட்டு முடிக்கும் வரை அதனருகில் இருந்து பேசுவது இல்லை.  

டைகரின் வெள்ளை முடி செம்பழுப்பு நிறமாக மாறியிருந்தது. உடலும் இளைத்திருந்தது. மொசுமொசுவென்று வழுக்கிச் செல்லும் சில்க் முடி கொட்டிப்போய் தோல் தெரிந்தது. இது டைகர்தானா என்று நம்ப முடியாதபடி அதனது தோற்றம் மாறியிருந்தது.  தோற்றம் தான் மாறியிருந்ததே தவிர குணம் அப்படியேதான் இருந்தது. அவள் விஷயத்தில் அதன் பழக்கவழக்கங்களில் பெரிதான மாற்றம் இருக்கவில்லை. ஒவ்வொருமுறை இரவில் வீடு திரும்பும்போது டைகர் அவள் முன்னால் வந்து நின்று வாலை ஆட்டி அன்பை வெளிப்படுத்தியது. சின்னதாகக் குரலெழுப்பி அவளது கவனத்தை ஈர்க்க நினைத்தது.  மேலும், பதினோரு மணிக்கும் மேல் தெருவில் நடந்து வருகையில் மற்ற நாயின் அச்சுறுத்தலில் இருந்து அவளைக் காப்பாற்றி அழைத்து வந்தது. டைகரின் தலை தென்பட்டவுடன் மற்ற நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு அமைதியாகிவிடுவதை அவள் கவனித்திருக்கிறாள். டைகரை நினைத்துப் பெருமைப்படும் கணங்களில் அதுவும் ஒன்று.

டைகரைக் கண்டிப்பதற்கு யாருமில்லை என்பதால் இந்தத் தெருவில் மட்டுமில்லாமல் பக்கத்துத் தெருவில் உள்ள இன்னும் சில நாய்களுக்கும் காதலனாக ஆகி இருந்தது. முடி நிறம் மாறியதற்கு அது காரணமா என்றெல்லாம் தெரியவில்லை. அதுமட்டுமில்லை. அதனுடைய உணவுப் பழக்கமும் மாறியிருந்தது. இப்போதெல்லாம் நான்–வெஜ் வாசம் வீசும் உணவு வைத்தால்தான் சாப்பிடுவேன் என்ற தனது பிடிவாதத்தைத் தளர்த்தியிருந்தது. ஒருநாள் பழைய சாதத்தில் தயிர் ஊற்றிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு, பாதியை டைகருக்கு வைத்தாள். அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்தில் கிண்ணத்தில் வைத்திருந்த கொஞ்சம் பாலையும் நக்கிக் குடித்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டது. கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.

டைகருக்கு ஏதோ வியாதி சீக்கிரமே செத்துரும் போலிருக்கு என்று பாலாமணி அக்கா சொல்லிக் கொண்டே இருந்தார். அவரது வாய் முகூர்த்தம் பலித்தே விட்டது ஒருநாள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடற்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது தான் மாலினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். முருகன் கோவிலின் பின்புறம் உடல் இளைத்து, முடியெல்லாம் கொட்டிப் போய், தோலுக்கு வெளியே எலும்புகள் துரித்திக் கொண்டு தெரியும்படியாக டைகர் செத்துக் கிடந்தது. காலையில் அல்லது அதற்கு முந்தின நாள் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும்.

வாழ்ந்து கெட்ட ஒரு மனிதனின் சவத்தைப் பார்ப்பதைப் போல பார்த்தாள். அனுதாபம் கூடியது. சொகுசாகவும் பிரபலமாகவும் வாழ்ந்து, அன்பின் பெயரால் ஏமாற்றப்பட்டு, துரோகமிழைக்கப்பட்டு, கைவிடப்பட்டு, விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட, நாதியற்றுச் செத்துப் போன சில மனித பிம்பங்கள் அவளது மனசுக்குள் வந்து போயின. வீட்டில் இருந்த போத்தீஸ் கட்டைப் பையைக் கொண்டு வந்து, டைகரை அதற்குள் திணித்துக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி ஓர் ஓடையில் புதைத்துவிட்டு வந்தாள்.

காலையில் எழுந்து செய்தித்தாள் எடுக்க வாசலுக்கு வந்தபோது, அவளது தொட்டிச் செடி அருகில் நாய்க்குட்டி ஒன்று படுத்திருந்தது. காலைநேரக் குளிர்ந்த காற்றில் பஞ்சு மாதிரி இருந்த அதன் வெள்ளை முடி வெல்வெட் போன்று மினுமினுத்தது. 

நன்றி : ஃபெமினா ஜூலை 2016

காதலுக்கு முன் - மனுஷி

காதலுக்கு முன்
-- மனுஷி
இதற்கு முன்பு
என் உதட்டில் புன்னகை இருந்தது.
எனது இதயத்தில் காதல் இருந்தது.
என் பொம்மைகளுடன்
உரையாடல்கள் இருந்தன.
மாலைப்பொழுதும்
இரவும்
எனக்கானதாக இருந்தன.

இதற்கு முன்பு
எனக்கென பிடித்த உணவு ஒன்று இருந்தது.
எனக்கென பிடித்த நிறம் ஒன்று இருந்தது.
எனக்கே எனக்கான பாடல்கள் இருந்தன.

இதற்கு முன்பு
எனது கண்களில் கனவொன்று
மையம் கொண்டிருந்தது.
எனது பூக்களில் வாசமிருந்தது.         
எனது மொழியில் கதைகள் இருந்தன.    
                                        
இதற்கு முன்பு
எனது நதிக்கரையில் மடியில்
சிறுபிள்ளையென இருந்தேன்.
எனது வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகசைப்பில்
நான்
நானாகவே இருந்தேன்.

திங்கள், 27 ஜூன், 2016

பெருங்காதலின் கீச்சொலிகள்

எனது ஞாபகக் கிண்ணங்களில்
நிரம்பித் ததும்பும்
உனது காதலை
அள்ளிப் பருகியபடியே உயிர்த்திருக்கிறேன்.
நேசத்தின் கரங்களில்
நாம் சிறு பிள்ளையாய் தவழ்ந்த காலம்
ஒன்று இருந்தது.

அதீத அன்பினால் மெருகூட்டப்பட்ட நாட்களின் மீது
வீசிய ஒளிக்கற்றைகள் ஒன்றுதிரண்டு
முழுநிலவாய் வான் மீதேறிவிட்டதென
சொல்லி
இறுகத் தழுவிக் கொண்டாய்.

இதழ்களைச் சுவைத்துவிட்டு
'நான் போதையேறிக் கிடக்கிறேன்'
எனப் பிதற்றினாய்.

நாம் கூடிக் களித்த இரவுகளில்
நட்சத்திரங்கள் புதிதாய்ப் பிறக்கின்றன
எனச் சொல்லிப்
பித்தம் கொள்ளச் செய்தாய்.

என் அன்பனே!
உன்மத்தமான உனதன்பிலிருந்து
பெருங்காதலின் கீச்சொலிகள்
கேட்டவண்ணம் இருக்கின்றன.
நீ எங்கிருக்கிறாய்?
-- மனுஷி

புதன், 11 மே, 2016

யட்சியின் மடியில்

எனது மௌனங்களில் ஒன்றை
உனக்குப் பரிசளிக்கிறேன்.
கையிலேந்தி நட.
படுக்கையருகில் வைத்து உறங்கு.
உனது மதுவில் பிழிந்து குடி.
உனது தொலைதூர பயணத்தில் ஏதேனும்
ஒரு நீர்நிலையில் கரைத்துவிடு.
அல்லது
உனது காதலிக்குப் பரிசாகக் கொடு.

எனது பாதையில் கொட்டிக் கிடக்கும்
மலர்களைச் சேகரித்தபடி
வனத்தைத் தேடிப் போகிறேன்.
அங்கே காத்திருக்கிறாள் யட்சி
என் சொற்களை மடியிலேந்தியபடி.
-- மனுஷி

புதன், 4 மே, 2016

அந்தச் சாலையோரத்தில் - மனுஷி

அந்தச் சாலையோரத்தில் நின்று கொண்டுதான்
நிராதரவாய் அழுது கொண்டிருந்தாள் அவள்.
அந்தச் சாலையோரத்தில் தான் 
இரத்த வெள்ளத்தில் நினைவு தப்பிக் கிடந்தான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
இறந்து போன பறவையின் சடலத்தைப் புதைத்து வைத்தாள்
ஒரு சிறுமி.
அந்தச் சாலையோரத்தில் தான்
செவ்வந்திப் பொழுதில்
தனது நேசத்திற்குரியவளில் உதடுகளில்
முத்தமிட்டான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
சக்கரத்தில் நசுங்கி இறந்து கிடந்தது ஒரு நாய்.
அந்தச் சாலையோரத்தில் தான்
தாகமாய் நின்று கொண்டிருந்தார் கடவுள்.
அந்தச் சாலையை நோக்கித்தான்
ஒரு பாட்டில் தண்ணீருடன்
சைக்கிளில் போகிறான் சாத்தான்.
-- மனுஷி

மீன் குஞ்சு - மனுஷி

மீன் குஞ்சு

          உண்டியலைக் கொட்டிச் சில்லறைகளையும் சில ரூபாய் நோட்டுகளையும் தனித்தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ஜான்சன். அவ்வப்போது கிச்சன் பக்கம் திரும்பி அம்மா பார்க்கிறாரா என்றும் கவனித்தான். மதிய உணவுக்கான தயாரிப்புகளில் தீவிரமாக இருந்தார் அவனது அம்மா. கண்ணும் கருத்துமாக உண்டியல் காசை எண்ணிப் பார்த்தான். மொத்தமாக எண்பத்து ஒன்பது ரூபாய் இருந்தது. இன்னும் ஒரு ரூபாய் இருந்தால் முழுசாக தொண்ணூறு ரூபாய். அவனது அப்போதைய தேவையும் அவ்வளவுதான். மொத்தக் காசையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதன் தலையை முறுக்கி ஒரு ரப்பர் பேண்டால் சுற்றினான். கால்சட்டையில் பிளாஸ்டிக் கவரை எடுத்து வைத்துக் கொண்டு அம்மாவிடம் போனான்.
           “அம்மா, ஒரு ரூபாய் காசு வேணும்”.
           “எதுக்கு?”
          “வேணும்மா.”
          காசு கேட்டதற்கான காரணத்தைச் சொன்னால் நிச்சயமாக திட்டுதான் கிடைக்கும். அம்மா நம்பும்படியான காரணத்தை யோசிக்காமல் போய்விட்டோமே என்று முழித்தான். என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அப்பாவின் பேண்ட் கண்ணில் பட்டது. சும்மா தான்ம்மா கேட்டேன் என்று சொன்னபடி சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே கொஞ்சம் சில்லறைகள் இருந்தன. அப்போது அவன் ரொம்பவும் நியாயமாக நடந்து கொண்டான். கையில் வந்த சில்லறைகளில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை அப்படியே போட்டுவிட்டுச் சிட்டாகப் பறந்தான் மீன் தொட்டிக் கடைக்கு.
************
          தன்னுடைய பள்ளி நண்பர்களின் வீட்டில் மீன் தொட்டி இருப்பதைப் பார்த்திருக்கிறான். நம் வீட்டிலும் மீன் தொட்டி இருந்தால் ஜாலியா மீன் குட்டிகளோடு விளையாடலாம் என்ற ஆசை அவனுக்கு. ஆனால், வீட்டில் கேட்டால் கன்னம் பழுக்கப் பூசைதான் கிடைக்கும். தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள காசு சேகரிக்கத் தொடங்கினான். மீன் குஞ்சுகள் விற்கும் கடையில் போய் விலையை விசாரித்துக் கொண்டான். ஒரு சின்ன மீன் தொட்டி தொண்ணூறு ரூபாய் என்று சொன்னார்கள். அப்போது அவனுடைய பெரிய இலட்சியம் தொண்ணூறு ரூபாயைச் சீக்கிரமாகச் சேர்ப்பதுதான். அதற்காக, அம்மா கடைக்குப் போகிற வேலை சொன்னால் மறுக்காமல் செய்தான். மிச்ச சில்லறைகளை உண்டியலில் போட்டுக் கொண்டான். எப்போதாவது அப்பா தருகிற காசுகளையும் உண்டியலில் பத்திரமாகப் போட்டு வைத்தான். ஒருவழியாக அவனது லட்சியம் நிறைவேறிவிட மான் போல துள்ளிக் கொண்டு ஓடினான் கடைக்கு. கவரைப் பிடித்து கண்ணாடி டேபிளின் மீது கொட்டினான். கடைக்கார அண்ணன் எண்ணிப்  பார்த்து தொண்ணூறு ரூபாய்க்கு அவன் கேட்ட மீன் தொட்டியைக் கொடுத்தார். அந்த நொடியில் அவனது கால்கள் தரையில் நிற்காமல் பறந்தன. ஆனால், கடையிலேயே நின்று கொண்டிருந்தான். ஐந்து நிமிடத்திற்குப் பிறகுதான் அவனுக்குப் புரிந்தது தொண்ணூறு ரூபாய்க்கு மீன் தொட்டி மட்டும்தான். அதில் போட்டு வளர்க்க மீன் குஞ்சுகளுக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று. வெறும் மீன் தொட்டியை வாங்கிக் கொண்டு போய் என்ன செய்வது? மீன் குஞ்சுகள் வாங்க இன்னும் காசு சேர்க்க வேண்டும் என்று நினைக்கும்போதே அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு ‘அண்ணா, கொஞ்சம் காசு கம்மி பண்ணிட்டு, மீன் குஞ்சு தாங்கண்ணா’ என்றான்.
பள்ளிக்கூடம் விட்டு வரும்போதெல்லாம் மீன் தொட்டிக் கடைக்குள் சென்று ஒருமுறை மீன் தொட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு, மீன் குஞ்சுகளோடு ரகசியமாக ஏதேதோ பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவான். இப்போது மீன்கள் இல்லாமல் வீட்டுக்குப் போவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு, ‘இந்தாடா ரெண்டு மீன் குஞ்சு தரேன். வச்சுக்கோ. உனக்காகத்தான் தரேன். யாரையும் சொல்லிக் கூட்டிட்டு வந்துடாத. புரிஞ்சுதா?’. அந்த வார்த்தைகள், சொர்க்கத்திலிருந்து அவன் காதுகளில் வந்து விழுந்த தேவவார்த்தைகளைப் போல இருந்தன அவனுக்கு. மிகவும் கவனமாக மீன் தொட்டியை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்தான். மீன் தொட்டியைப் பார்த்தார் அவனது அப்பா. அவனை ஒரு பார்வை பார்த்தார். இந்த மீன் தொட்டி வாங்க பணம் ஏதுடா என்பது போல இருந்தது அவரது பார்வை. உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கியது என்பதைப் பெருமை பொங்கச் சொன்னான். அவர் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அவனுக்கும் அதைப் பற்றிப் பெரிதாக வருத்தம் இருக்கவில்லை. தலைகால் புரியாத சந்தோஷத்தின் உச்சத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனம்
மீன் தொட்டியில் கல் போட்டு வச்சா மீனெல்லாம் ஜாலியா அது மேல ஏறி விளையாடும் என ஜான்சனின் நண்பன் சொல்லி இருந்தான். தெருமுனையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்லைச் சின்ன சின்னதாக உடைத்துக் கொண்டு வந்து மீன் தொட்டியில் போட்டுவிட்டு, பெருமை பொங்க ஒருமுறை மீன் தொட்டியைப் பார்த்தான். பிறகு விளையாடப் போய்விட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து இரண்டு மீன் குஞ்சுகளில் ஒன்று செத்து மிதந்தது. செத்த மீன் உடலைப் பார்த்த கணத்தில் அவனது மகிழ்ச்சியும் செத்துப் போயிருந்தது. அம்மாவை அழைத்துச் சொன்னான். முதுகில் ஒரு அறை கொடுத்து அம்மா சொன்னார், “மரமண்டை மீன் தொட்டியில் செங்கல்லை உடைச்சு போட்டா அது சாகாமல் என்ன செய்யும்? புள்ளையாடா நீ. மீன் செத்துப் போன சோகத்துடன் அம்மா திட்டியதும் சேர்ந்து கொள்ள அழுது தீர்த்தான். மேலும், மீன் தொட்டியில் கூழாங்கல்லைப் போட்டால் மீன் சந்தோஷமாக இருக்கும் என்பது கூட தெரியாமல் போச்சே என நினைக்கையில் இன்னும் அழுகை பீறிட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கத் துடைக்க அருவி போல கொட்டியது கண்ணீர். அழுதபடியே தூங்கியும் போனான்.
மீன் தொட்டியைச் சுத்தம் செய்து நீர் நிரப்பி, கொஞ்சம் கூழாங்கல்லையும் போட்டு எஞ்சியிருந்த ஒற்றை மீனைப் பத்திரமாக அதில் நீந்த வைத்தார் அவன் அம்மா.
*******
சனி ஞாயிறு முடிந்து விடுதிக்கு அவனைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். புத்தக மூட்டையுடன் இந்த மீனையும் ஒரு ப்ரில் இங்க் பாட்டிலில் போட்டு எடுத்துக் கொண்டான். எப்போதும் வாரத்தின் முதல் நாள் அழுகையும் பிடிவாதமுமாக விடியும். ஹாஸ்டலுக்குப் போகமாட்டேன் என அழுது அடம்பிடித்தாலும் கொண்டு போய் விட்டு விடுவார்கள். இந்தமுறை வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குச் செல்வது குறித்த வருத்தம் இல்லை. அழுகை இல்லை. உற்சாகத்துடன் கிளம்பினான்.
*************
அந்த விடுதியில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு மேசை கொடுக்கப்பட்டிருந்தது. வெளியே இழுத்து மூடும் மேசை இல்லை. மேலே தூக்கிப் பொருட்களை உள்ளே வைத்துவிட்டு மூடும் வகையில் செய்யப்பட்ட மேசை. அதற்குள் நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், ஸ்கேல் வகையறாக்கள் வைத்துக் கொள்ளலாம். முதல் வேலையாக, தனது மேசையில் உள்ளறையை ஒழுங்குபடுத்தி, கொண்டுவந்த ப்ரில் இங்க் பாட்டிலை மேசையின் உள் மூலையில் வைத்தான். சந்தோஷமும் நிம்மதியும் பெருக்கெடுத்தது அவன் முகத்தில். ஏதோவொரு சாக்லேட் வாங்கியபோது கொடுத்த இலவசமாகக் கிடைத்த குட்டி பொம்மையைத் தேடினான். அவனது சுண்டு விரலை விட ஒல்லியான, குட்டையான பொம்மை. அதை மீன் குஞ்சு விளையாடுவதற்கென இங்க் பாட்டிலில் போட்டு வைத்தான்.
“நான் ஸ்கூலுக்குப் போற நேரத்துல இது கூட விளையாடு. நான் வந்ததும் நிறைய கதை சொல்றேன் உனக்கு.”
சொல்லிவிட்டு மேசையை மூடினான்.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முதல் வேலையாக மேசையைத் திறந்து பார்த்தான். அந்தக் குட்டிப் பாட்டிலுக்குள் நீந்திக் கொண்டிருந்தது மீன் குஞ்சு. மேசையை மூடி வைத்தான். முகம் கழுவிக் கொண்டு எல்லோரும் ஹோம்வொர்க் செய்ய வேண்டிய நேரம். இவன் மட்டும் மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை மேசையைத் திறந்து பாட்டிலைப் பார்த்துவிட்டு மீண்டும் மூடினான். மீண்டும் திறந்தான். பாட்டிலைப் பார்த்தான். மூடினான். அவ்வப்போது மீன் குஞ்சுவுடன் பேசினான். அப்படி மேசையைத் திறந்து பாட்டிலில் மீனைப் பார்த்துவிட்டு மூடும்போது முறைத்தபடி வார்டன் நின்று கொண்டிருந்தார். பாதி பயமும் கொஞ்சம் அசடு வழிந்தபடியும் அவரைப் பார்த்தான்.
“படிக்கச் சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க?”
தனது விரல்களால் பாட்டிலை உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டே ‘ஒன்னும் பண்ணல சார்’ என்றான். மேசைக்குள் பார்த்தார். பாட்டிலை வைச்சு விளையாட்டிட்டு இருக்கியா, ஒழுங்கா படிடா என்றபடி அடுத்தப் பையனை நோக்கிப் போனார். இவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் முழுமையாக அங்கே இருந்து போனதும் மற்ற பையன்கள் அவனைச் சுற்றி வந்து நின்றபடி, என்னடா சொன்னார் என்று கோரசாகக் கேட்டனர். “ஏய், அந்தாளுக்குக் கண்ணே தெரியலடா. இவ்ளோ பெருசா மீன் குட்டி நீந்திக்கிட்டு இருக்கு. வெறும் பாட்டிலை வச்சு விளையாடிட்டு இருக்கியானு சொல்லிட்டுப் போறாரு”. அவன் சொல்லி முடிக்கையில் எல்லோருமே சேர்ந்து சிரித்தனர்.
*********
மீன் குஞ்சை மேசையில் வைத்துவிட்டுப் பள்ளிக்கூடம் போய் வருவது வருத்தமாக இருந்தது. இனிமேல் மீன் குஞ்சையும் தன்னோடு வகுப்புக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்தான். புத்தகப் பையில் வாட்டர் பாட்டில் வைக்கும் இடத்தில் மீன் உள்ள இங்க் பாட்டிலை வைத்துக் கொண்டு, ஆடிக் கொண்டே போனான். பள்ளிக்கூட வாசலை நெருங்கும்போதுதான் கவனித்தான் இங்க் பாட்டிலைச் சரியாக மூடாமல் விட்டதால் பாட்டிலில் உள்ள தண்ணீர் எல்லாம் வரும் வழியிலேயே சிந்திவிட்டிருந்தது. பாட்டிலுக்குள் அந்தக் குட்டி மீன் துடித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தான். எங்காவது ஒரு கையளவு தண்ணீர் கிடைத்தால் கூட போதுமே என்று தேடினான். வழியில் குழாய் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான். அவனது கெட்ட நேரம். அபப்டி எதுவும் இருக்கவில்லை. வகுப்பறைக்குச் சென்று நண்பர்களிடம் கேட்கலாம் என்றால் அதுவரை மீன் குஞ்சு உயிரோடு இருக்க வேண்டுமே.
ஐந்தடி தூரத்தில் செருப்புத் தைக்கும் கடை ஒன்று இருந்தது. குடிசை என்று கூட அதைச் சொல்ல முடியாது. மூன்று கழியை நட்டு, அதன்மேல் வெள்ளைச் சாக்குகளை கூடாரம் போல போட்டிருந்தார்கள். பாட்டிலைக் கையில் ஏந்தியபடி அங்கே ஓடிப் போய் தண்ணீர் கேட்டான்.
“குடிக்கவா தம்பி”
“இல்ல. என் மீன் குட்டிக்கு. வர வழியில் தண்ணி தளும்பிக் கீழ கொட்டிடுச்சு”. சொல்லும்போதே அழுதான்.
“இதுக்கெல்லாமா அழுவாங்க. இந்தா” என்றபடி இங்க் பாட்டில் நிறைய தண்ணீரை ஊற்றிக் கொடுத்தார் செருப்புத் தைக்கும் அந்த அம்மா. பாட்டிலுக்குள் இருந்த மீன், தண்ணீர் பட்டதும் உயிர் பெற்று எழுந்தது போல ஆசுவாசம் கொண்டு நீந்தியது. அது நீந்துவதைப் பார்த்தவுடன் இவனுக்கு உயிர் வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டான். அழுகாச்சியுடன் கூடிய சந்தோஷத்தில் அவனது  முகம் பிரகாசமானது. தனது மீன் குஞ்சின் உயிரை மீட்டுக் கொடுத்த அந்தம்மா அப்போது அவனுக்குக் கடவுளாகத் தெரிந்தார். அந்தச் செருப்புத் தைக்கும் கூடாரம் அவன் வணங்கும் கோவிலாகத் தெரிந்தது. அந்தம்மாவிற்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. நோட்டுப் புத்தகத்தில் வைத்திருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து தனது நன்றியைத் தெரிவித்தான். அவர் வாங்க மறுத்தார். “உங்களாலதான் இந்த மீன் இப்போ உயிரோட இருக்கு”. சொல்லும்போதே குரல் நடுங்கியது.
ஏற்கனவே ஒரு மீனைப் பறிகொடுத்த சோகம் அவன் மனதில் இன்னும் மறையவே இல்லை. அவனது அழுகைக்குப் பின்னால் அதுவும் இருந்தது.
இனிமேல் உன்னைப் பத்திரமா பாத்துக்கறேன் என்று மீன் குஞ்சிடம் சொல்லிக் கொண்டே போனான்.
அன்னைக்குத் தொடங்கி, பள்ளிக்கூடம் விட்டு ஹாஸ்டலுக்குப் போகும்போதெல்லாம் அந்தக் கோயிலின் முன்னால் நின்று அந்தத் தெய்வத்திடம் பேசிவிட்டுப் போவதை வழக்கமாக்கிக் கொண்டான். 

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வாடகை பைக்குகள் : நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு



வாடகை பைக்குகள் : நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
-- மனுஷி

வார இறுதி நாட்களில் தமிழ்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் பாண்டிச்சேரியை மையமிடுவர். அதிலும் குறிப்பாக, ஆரோவில்லில் சனி ஞாயிறுகளின் இளைஞர் பட்டாளம் அலை மோதும்.
சென்னையைப் போல அல்ல பாண்டிச்சேரி. இந்த ஊரைப் பொறுத்தவரை ஒரே நாளில் கூட எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விடலாம். அவ்வளவு சிறிய மாநிலம். கையில் ஒரேயொரு பைக் இருந்தால் போதும். பாண்டிச்சேரியில் ஜாலி சுற்றுலா வசப்படும்.
வீக் எண்ட் என்ஜாய் பண்ணும் கனவுடன் வருபவர்களுக்கென இங்கே பாண்டிச்சேரியில் வாடகை பைக்குகள் கிடைக்கின்றன. பாண்டிச்சேரியில் ஆறு வருடமாக இருக்கிறேன். ஆரோவில்லில் இரண்டு வருடம். மொத்தம் எட்டு வருடத்திற்கும் மேலாக ஆகிவிட்டது புதுவைக்கு மேல்படிப்புக்காக வந்து. இத்தனை வருடத்தில் மிகச் சமீபத்தில்தான் இந்த வாடகை பைக்குகள் பற்றிய விவரம் தெரிந்தது. எனக்குத் தெரிந்து இங்கே வந்து தங்கிச் சுற்றிப் பார்க்கிற எல்லோருமே பைக் வாடகை விடும் கடையைத் தேடுவதைக் கவனித்திருக்கிறேன். ஒரு நாளைக்கான பைக் வாடகை எவ்வளவு என்றெல்லாம் விசாரித்தது இல்லை. அதற்கான தேவை ஏற்படவில்லை. நான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் அக்காவும், அதற்குப் பத்தடி தூரத்தில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் அண்ணா ஒருவரும் பைக் வாடகை விடுகின்றனர். வெள்ளிக்கிழமை மாலையிலும், சனிக்கிழமை காலையிலும் அங்கே கூட்டம் அலைமோதும். (இவ்விரண்டு இடங்கள் தவிர மிஸன் தெருவில் இரண்டு மூன்று பைக் வாடகைக் கடைகள் இருப்பதாக அறிந்தேன்).
பெட்டிக்கடையில் தான் பால், சர்க்கரை எல்லாம் வாங்குவது வழக்கம். அப்படி மிகச் சமீபத்தில் (பத்து நாட்களுக்கு முன்பு) கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி மற்றும் பைக்குகளில் இருந்து ஒரு பைப் வழியாக பாட்டிலில் பெட்ரோலை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் பைக் கேட்டு வந்த இரண்டு நபர்களிடம் புரூஃப் வாங்கிக் கொண்டு பைக் கொடுக்கும்போது கடையிலிருந்து 50 ரூபாய்க்குப் பெட்ரோலை வாங்கி ஊத்திக் கொண்டு கிளப்பச் சொன்னார்கள்.  மறக்காமல் பெட்ரோல் போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பினார் கடை அக்கா. அவர்களும் கொடுத்த பெட்ரோலை வாங்கி பைக்கில் ஊற்றிக் கொண்டு கிளம்பினார்கள். கண்ணெதிரே இது நடந்து கொண்டிருந்தது. இது ஒரு தனி பிஸினஸ் ட்ரிக் போல என்று நினைத்தாலும், ஒருவகையான ஏமாற்று வேலை என்றே தோன்றியது.
சொந்தமாக ஸ்கூட்டி இருப்பதால் இவ்வளவு நாள் இதைப் பற்றிப் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
சென்ற சனிக்கிழமை இரவு கடைக்குப் போய் திரும்பி வரும் வழியில்  ஸ்கூட்டி நின்றுவிட தள்ளிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நிச்சயமாக மெக்கானிக் ஷாப் திறந்திருக்காது. ஞாயிற்றுக்கிழமை மாலை கவிதை நூல் விமர்சனக் கூட்டம் இருந்தது. மேலும், மார்க்கெட் செல்வதற்கு நிச்சயம் வண்டி இல்லாமல் நடக்காது என்பதால் ஒரேயொரு நாள் வாடகை வண்டி வாங்கிப் பார்க்கலாம் என்று பெட்டிக்கடை அக்காவிடம் போனேன். ஸ்கூட்டி எதுவும் இருக்கவில்லை. வெள்ளிக்கிழமை மாலையே எடுத்துப் போய்விட்டார்கள் என்றார். இருந்தது ஒரேயொரு டிவிஎஸ் 50 மட்டும் தான். வண்டி ஓட்டப் பழகிய நாளில் இருந்து இதுவரை டிவிஎஸ் 50 மட்டும் ஓட்டிப் பார்த்ததே இல்லை. ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதும் இல்லை. வேறு வழியில்லை. அதுமட்டுமில்லை. பழகித்தான் பார்ப்போமோ என்ற எண்ணம். (இந்த விஷயம் தெரியாமலே போய்விட்டதே என்று வரலாறு நாளைக்குச் சொல்லிவிடக் கூடாது). எப்படி ஸ்டார்ட் செய்வது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். சைக்கிள் அல்லது ஸ்கூட்டி ஓட்டுவது போலத்தான் இதுவும்.
டிவிஎஸ் 50 தரும்போதே ஒரு பாட்டில் கொண்டு வந்து இருக்கிற பெட்ரோல் எல்லாவற்றையும் ஒரு பம்ப் வழியாக எடுத்துக் கொண்டு, ஸ்டார்ட் செய்யற அளவுக்கு பெட்ரோலை மீண்டும் ஊற்றினார். சாவி கொடுக்கும்போதே, பக்கத்தில் இருக்கிற பெட்ரோல் பங்க்கில் ஆயில் கலந்து பெட்ரோல் போட்டுக்கொள்ளச் சொன்னார். ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் தேவை எதைப் பற்றியும் யோசிக்க விடவில்லை. மதிய சமையலுக்குப் பிறகு கொஞ்சம் கவிதை நூலை மீண்டும் ஒருமுறை வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமே என்பது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மாலை 6 மணிக்கு நிகழ்வு. 5.30க்குக் கிளம்பினால் போதும் என மனக்கணக்கு போட்டுக் கொண்டு நிதானமாகக் கிளம்பி வெளியில் வந்து டிவிஎஸ் 50ஐ உதைத்துக் கிளப்பினால் கும்பகர்ணன் போல அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. உதைத்து உதைத்துச் சோர்ந்து போய், அந்தக் கடைக்கே தள்ளிக் கொண்டு போனேன். இதை விட்டுவிட்டு வேறு வண்டி கிடைத்தால் நல்லா இருக்கும். இனிமேல் பேருந்தில் போய்ச் சேருவது என்றால் ரொம்பவும் தாமதாமகும் என்பதால் வேறு வண்டி கேட்டால், இதே நல்லா ஓடுமே, நாங்களே இதுல தான் மார்கெட்லாம் போய்ட்டு வரோம், அதெப்படி உனக்கு மட்டும் ஸ்டார்ட் ஆகல என்று அந்த அக்காவின் கணவர் இரண்டு மிதி மிதித்தார். கிளம்பிவிட்டது. அப்போதே மணி 6ஐத் தொட்டுவிட்டது. வண்டியை ஓட்டிக் கொண்டு போனால் பத்து நிமிடத்தில் மறுபடியும் வண்டி நின்று விட்டது. எவ்வளவு உதைத்தும் கிளம்புவேனா என்றது? வண்டியை ஏதாவது ஒரு கடை முன்பு நிறுத்திப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஆட்டோவில் செல்லலாம் என்று பார்த்தால் ஞாயிற்றுக்கிழமை காரணமாக எல்லா கடையும் மூடியிருந்தது. யார் செய்த புண்ணியமோ பத்து நிமிட வண்டி தள்ளலுக்குப் பிறகு ஒரு கடை திறந்திருப்பதைப் பார்த்து, அங்கு விஷயத்தைச் சொல்லி வண்டியை நிறுத்திவிட்டு ஆட்டோ பிடித்துப் போய்ச் சேர மணி 6.45 ஆகி இருந்தது. ஏற்கனவே நிகழ்ச்சியைத் தொடங்கி இருந்தார்கள். சின்னதாய் மன்னிப்புக் கேட்டபடி போய் அமர்ந்து கொண்டேன்.
பேசி முடிக்க மணி 9.30ஐத் தாண்டி இருந்தது. நல்ல நாளிலேயே 8.30க்குக் கடை சாத்துகிறவர்கள் 9.30க்கு நிச்சயமாகத் திறந்து வைத்திருக்க மாட்டார்கள். பழையபடி ஆட்டோ பிடித்து அங்கிருந்து பைக் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடியே கடை மூடியிருந்தது. கடைக்குப் பக்கத்தில் அனாதை போல அந்த வண்டி நிறுத்திய நிலையில் இருந்தது. ஆட்டோவில் வரும்போதே ஆயில் கலந்த பெட்ரோலை தண்ணீர் பாட்டிலில் வாங்கி வந்திருந்ததால், ஊற்றிக் கிளப்பினால், கிளம்புவேனா என்று எருமை மாடு கணக்காக நின்று கொண்டிருந்தது. வண்டி நிற்கும் இடத்திற்கும் வீட்டுக்கும் குறைந்தது மூன்று  கிலோ மீட்டர் தூரம். மணி வேறு பத்தைத் தாண்டி இருந்தது. நடராஜா சர்வீஸ் தான் என்று வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்து வீடு வந்து சேர்ந்தேன்.  
மறுநாள் அசதியில் நன்றாகத் தூங்கி எழுந்து காலை மற்றும் மதியம் இரண்டு வேலைக்கும் சேர்த்து ஒரே வேலையாகச் சாப்பிட்டு முடித்து வண்டியைக் கொண்டு போய் விடலாம் என உதைத்துக் கிளப்பினால் கிளம்பாமல் இப்போதும் அடம்பிடித்தது. மறுபடியும் தள்ளிக் கொண்டே போய் கடையில் நிறுத்தி நடந்த கதையைச் சொன்னால், அந்த அக்கா காச் மூச் என்று கத்த ஆரம்பித்து விட்டார். இந்த வண்டி ரொம்ப ராசியான வண்டி, நாங்க ஓட்டிட்டுப் போகும்போது நல்லா தானே போச்சு இப்ப எப்படி ஸ்டார்ட் ஆகாம போகும், ஆயில் நிறைய போட்டு பெட்ரோல் போடச் சொன்னேனே போட்டிங்களா, ஏங்க வந்து இந்த வண்டியப் பாருங்க, எம்மா தெரிஞ்ச பொண்ணுனு தானே இந்த வண்டியைக் கொடுத்தேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவருடைய கணவர் வந்து பழையபடி வண்டியில் இருக்கும் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். அவர்கள் கடைக்குள் வைத்திருந்த பெட்ரோலை பாட்டிலில் எடுத்து வந்து ஊற்றி, உதைத்து கிளப்பினார். இரண்டு உதையில் உர்ரென்று கிளம்பியது. என் கண்முன்னாலேயே கடையிலிருந்து கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டு போய் திரும்பி வந்தார். ஏதோ மாயவித்தை காட்டுவது போல இருந்தது. போகும் போதும் தள்ளிக் கொண்டு போய், வரும்போதும் தள்ளிக் கொண்டு வந்த நான் சொல்வது பொய் என்பது போல ஆகிப் போனது அங்கு. அந்த வண்டியில் பிரச்சினை இருக்கிறது என்பதை நிரூபிக்க அங்கு வழியே இல்லை. வண்டியில் இருந்து பெட்ரோல் எடுத்து உள்ளே பத்திரப்படுத்துவதைக் கேள்வி கேட்கவும் அங்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தேன்.
சரிக்கா, வாடகை எவ்வளவு ஆச்சு சொல்லுங்க என்றேன். நேற்றும் இன்னைக்கும் சேர்த்து 400 ரூபாய் என்றார். அடக் கொடுமையே… கொஞ்சம் முன்னாடி கிளம்பி பஸ் ல போய் இருந்தால் 5 ப்ளஸ் 5 என பத்து ரூபாயில் முடிந்திருக்கும். போகும்போது ஆட்டோவுக்கு 100, வரும்போது ஆட்டோவுக்கு 100, பெட்ரோல் ஒரு 50, இது இல்லாமல் ஓடாத வண்டிக்கு வாடகை 400…
எங்க போய் முட்டிக் கொள்வதென தெரியவில்லை.