வியாழன், 11 ஜனவரி, 2018

தீராநதி நேர்காணல்

துவக்ககால எழுத்துக்கள்?

கவிதை எழுதுவதில் இருந்துதான் எனது எழுத்துப் பயணம் துவங்கியது. என் நினைவு சரியாக இருந்தால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து கவிதை எழுத முயற்சி செய்திருக்கிறேன். அப்போது கவிதையைப் பற்றி எந்தப் புரிதலும் எனக்கு இல்லை. ஒரு வரிக்குக் கீழே இன்னொரு வரி. இரண்டாவது வரியைக் கொஞ்சம் உள்ளே தள்ளி எழுதனும் என்கிற அளவில் தான் கவிதை குறித்த புரிதல் இருந்தது. அப்படி எழுதிப் பழகிய கவிதைகளில் ஒன்று கூட என் நினைவில் இல்லை. ஏனெனில் எழுதிப் பார்த்து அதை அப்படியே ஒன்றிரண்டு வாரங்களில் கிழித்துப் போட்டு விடுவேன். இதுதான் கவிதை, இப்படித்தான் எழுத வேண்டும், இதுதான் கவிதை என்று சொல்லித்தர யாரும் இல்லை. நானாக வாசித்து, எழுதிப் பழகிக் கற்றுக் கொண்டதுதான்.

 வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த விருது அறிவிக்கும் வரை நான் கவிதைகள் எழுதுவேன் என்பதெல்லாம் தெரியாது. இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும்போது எப்போ பாரு ஊருக்குப் போறேன் ஊருக்குப் போறேன்னு காச கரியாக்குறா என்று புலம்புவார்கள். புத்தகம் வாங்கி காசை வீணாக்குறதுக்கு நகை வாங்கலாம்ல என்று சொல்வார்கள். அவர்களுடைய வார்த்தைகளை நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதில் பெரிய வருத்தம். பேப்பரிலும் டீவியிலும் எனது பெயரும் புகைப்படமும் வரும் வரை தான் அந்த வருத்தம். இப்போது அக்கா பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார் என் தங்கச்சி ஒரு எழுத்தாளர். விருதுலாம் வாங்கி இருக்காங்க என்று.  பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கிய மாணவியாகச் சேர்ந்தபோது நவீன இலக்கியம், இலக்கியக் கோட்பாடுகள், சிறுபத்திரிகைகள் எனக்கு அறிமுகமாயின. குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகள் அறிமுகமாயின. பெண் எழுத்து குறித்து நிகழ்ந்த வாத விவாதங்களை வாசித்தேன். அவற்றை வாசிக்க வாசிக்க நான் எழுதிய கவிதைகளைக் கிழித்து எறிந்தது சரி என்று தோன்றியது. அப்பொழுது கூட கவிதை எழுத வேண்டும், புத்தகம் போட வேண்டும் என்கிற முன் திட்டமிடல் எழுதுவுமின்றி வாசித்துக் கொண்டிருந்தேன். 

எனது வாசிப்பைச் செழுமைபடுத்தியதில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஒருவர் எனது நெறியாளர் பா.இரவிக்குமார். இன்னொருவர் நாடக ஒளியமைப்பாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான செ. ரவீந்திரன். இருவருமே நவீன இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம்  செய்தனர். நூல்களைக் கொடுத்து வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தினர். ரவீந்திரன் சார் உலக இலக்கியம் குறித்து, உலக சினிமாக்கள் குறித்து பேசிய உரையாடல்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. இந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது நான்  கவிதைகள் எழுதினேன். எனது முதல் கவிதை கீற்று.காமில் வெளியானது. பிறகு வடக்குவாசல் பத்திரிகையில் சில கவிதைகள் வெளிவந்தன. முதல் தொகுப்பு வெளியாகும் வரை வேறெந்த சிறுபத்திரிகையிலும் எனது கவிதைகள் வெளிவந்திருக்கவில்லை. தொகுப்பு வெளிவந்த பிறகு உயிர்மை, உயிரெழுத்து, தளம், கனவு, திணை, நிகரன், தாமரை, செம்மலர் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவரத் தொடங்கின. 

இலக்கியத்திற்காக வாங்கிய முதல் பரிசு?

எனது முதல் கவிதைத் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் வெளிவந்த பிறகு 2014இல் ஈரோடு தமிழன்பன் விருது வழங்கப்பட்டது. எனது கவிதைகளுக்காக நான் பெற்ற முதல் விருது அதுதான். அதன் பிறகு 2015இல் முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருதும், 2017இல் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் நூலுக்காக திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சக்தி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கவிதை எழுதத் துவங்கிய பொழுது கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில், புதுவை மாநில அளவில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். பிறகு போட்டிகளுக்காக எழுதுவதில் பெரிய விருப்பங்கள் இல்லாமல் போய்விட்டன. கவிதை எழுதுவது ஆத்மார்த்தமான உணர்வு.  பெரும் விடுதலை. மன நெருக்கடிகளின் வடிகால்.  திட்டமிட்டு வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருப்பது எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை அல்ல.. கவிதையோ கதையோ எழுது என்று என்னைத் தூண்ட வேண்டும். அப்படி இல்லாதபோது வாசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் கவிதை நூல் வெளிவந்தபிறகு கவிஞர் ரமேஷ் பிரேதன் படித்துவிட்டுப் பாராட்டியதும், விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கணையாழியில் எழுதிய மதிப்புரையும் என் கவிதைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அதேபோல, ஜெராக்ஸ் கடையில் எனது கவிதைகளை மித்ர பதிப்பகத்திற்குக் கொடுப்பதற்காக பிரிண்ட் அவுட் எடுத்தபோது ஜெராக்ஸ் கடை அண்ணா அதில் ஒரு கவிதையை வாசித்துவிட்டு கவிதை ரொம்ப நல்லா இருக்கு யார் எழுதியது இதை நான் வச்சுக்கலாமா என்று கேட்டார். ‘வாழ்வதில் ஒன்றுமில்லை / வாழ்க்கை / பிய்த்தெறியப்பட்ட ஒரு மலராகிவிட்டபிறகு / மரணத்திலும் ஒன்றுமில்லை / அது வெறும் சொல்லாகிவிட்ட பிறகு’ என்ற கவிதைதான் அது. எனது கவிதைக்குக் கிடைத்த முகமறியாத முதல் பாராட்டு. இப்போது வரை முகநூல் நண்பர்கள் பலரும் எனது கவிதை நூலை வாசித்துவிட்டு அவர்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது எழுதுவது குறித்த பெரும் நிறைவு இருக்கிறது. யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து குயில் பாடிக் கொண்டிருப்பதில்லை. ஆனால், குயில் கூவுவதை யாரோ ஒருவர் எங்கேயோ அமர்ந்து கேட்டு லயித்துக் கொண்டிருப்பர். அது சந்தேகமேயில்லை. 

 அப்பா அம்மா பெயர்? என்ன பணியாற்றுகிறார்கள்? சகோதரர்கள்? வசிப்பிடம்?

அப்பா பெயர் அம்பலவாணன். அம்மா பெயர் கல்யாணி. அக்காவும் அண்ணனும் இருக்கிறார்கள். நான் கடைசிப் பெண்.  விவசாயக் குடும்பப் பின்னணியில் வளர்ந்தவள் நான்.  என்னுடைய பத்து வயதில் அம்மா கேன்சர் நோயால் இறந்து விட்டார். என் நினைவு தெரிந்து அப்பாவோடு எந்தப் பிணைப்பும் பாசமும் இருந்ததில்லை. அம்மா தான் என் உலகம். அம்மா இல்லாத வெற்றிடத்தை கவிதை நிரப்பிக் கொண்டிருக்கிறது. கவிதையால் நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

கவிதைகள் மீது தனிப்பட்ட ஆர்வம் வரக் காரணம் என்ன?

எல்லாரையும் போல முதலில் எழுதிப் பார்த்தது கவிதை வடிவம் தான். எனது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிப் பார்க்க கவிதை தான் நல்ல துணையாக இருந்தது. கவிதை எனது மொழியாக, நான் நிகழ்த்த விரும்புகிற உரையாடலாக இருப்பதை நான் உணர்கிறேன்.

கதைகள் மீதான ஆர்வத்திற்கு, எழுத்துக்கு யாரையாவது ஆசான் என்று சொல்ல முடியுமா?

இவர் தான் எனது ஆசான் என்று யாரையும் சொல்வதற்கில்லை. அப்படி யாரையும் நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. வாசித்தவரையில் என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இருந்து புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நான் கொண்டிருந்த மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளனர். வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியமைத்துள்ளனர். அன்பைச் சொல்லித் தரும் எழுத்துகள், மனிதத்தைக் கொண்டாடும் படைப்புகளில் இருந்துதான் என்னைச் செதுக்கிக் கொள்கிறேன். சொல்லப் போனால் பாவமே செய்யாதவர்கள் இவள் மீது கல்லெறியுங்கள் என்று சொன்ன யேசுவிடமிருந்தும் நான் கற்றுக் கொள்கிறேன். 

தமிழில் பாரதியார் தொடங்கி இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் வரை எல்லோரும் எனக்கு ஆசான்கள்தான். என் பள்ளி பருவத்தில் கதைகள் சொன்ன என் பெரியப்பா கூட ஒருவகையில் எனது எழுத்துலக வழிகாட்டி தான். ஒவ்வொருவர் கதைகளை வாசிக்கும்போதும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். எப்படி எழுத வேண்டும், எப்படி எழுதக் கூடாது, எதை எழுத வேண்டும் என பலவற்றையும்.

விரும்பி வாசிக்க கூடிய புத்தகங்கள் என்னென்ன?

பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள்,  பெண் ஏன் அடிமையானாள், டோட்டோசான் - ஜன்னலில் ஒரு சிறுமி நாவல், பெண் எனும் இரண்டாம் இனம், குட்டி இளவரசன் நாவல், ஆண்டன் செகாவ் சிறுகதைகள், தஸ்லீமா நஸ்ரின் கவிதைகள், பாப்லோ நெரூடா கவிதைகள், கமலாதாஸ் கதைகள், சமகால உலகக் கவிதைகள், பாலஸ்தீனக் கவிதைகள்,  பிரபஞ்சன் சிறுகதைகள், வண்ணதாசன் கதைகள், கந்தர்வன் கதைகள், மனுஷ்ய புத்திரன் கவிதைகள், மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள், லண்டாய் - வரை பட்டியல் நிறைய இருக்கின்றது. என்னுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பிரதிபலிக்கனும், எனது உணர்வுகளுக்கு நெருக்கமாக இருக்கனும், அல்லது எனக்குப் புதிய உலகத்தை, நான் அறிந்திராத மனிதர்களை, எனக்குப் பரிச்சயமில்லாத வாழ்வியலைச் சொல்லித் தருகிற புத்தகங்கள் தான் எனக்கு நல்ல நண்பர்கள். ஆசான்கள்.

சமீபத்திய சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது அறிவிப்பு வந்த போது எப்படி இருந்தது? இந்த விருது உங்களுக்கு கிடைக்குமென எதிர்பாத்திங்களா?

நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. திருவனந்தபுரத்தில் நடந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தேன். இந்த வருடம் யுவபுரஷ்கார் விருது எனது கவிதை  நூலுக்கு என்ற செய்தி அலைபேசி வழியாக வந்து சேர்ந்தது. என் அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்? இந்த மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொள்ள அம்மாவின் அன்பையொத்த நண்பர்கள் இருக்கிறார்கள். அது பெரும் மகிழ்ச்சி.

எழுத்துலகில் எனக்கொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண் கவிதைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. இந்த விருதின் மூலம் எழுத்தில் எனக்கிருக்கும் பொறுப்பு கூடுதலாகியிருக்கிறது. அந்தப் பொறுப்பை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஏற்றுக் கொள்கிறேன். 

விருது விழா எப்போது?

இந்த நேர்காணலுக்கான பதிலை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் விருது விழா குறித்து சாகித்ய அகாடமி அனுப்பியிருந்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். சண்டிகரில் வருகின்ற டிசம்பர் 22 அன்று விருது விழா நடைபெற உள்ளது. இந்தத் தகவலை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்திய எழுத்தாளர்களின் தொடரும் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது. ஒரு போராத காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்கிற கேள்வி தினம் தினம் எழுகிறது. கருத்து சுதந்திரம் கேள்விக்குரியாகி இருக்கிறது. படைப்பாளிகள் மீதான அடக்குமுறை இன்று நேற்று நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. பாரதியார், பெரியார், அம்பேத்கர் என வரலாறு முழுக்க படைப்பாளிகள் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இனத்தை அழிக்க நினைக்கையில் எல்லாம் நூலகத்தை எரித்தது தானே வரலாறு. எப்போதுமே பேனாவைக் கண்டு அதிகார வர்க்கம் அளவற்ற அச்சம் கொண்டிருக்கிறது. அந்தப் பேரச்சத்தின் காரணமாக  எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் எழுத்துகளில் மேலெழும் கலகக்குரலை அழித்துவிட முடியாது.  வெட்ட வெட்ட மரம் துளிர்த்துக் கொண்டே இருப்பது போல அடக்குமுறை மேலோங்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படைப்பின் குரல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பெண் படைப்பாளி என்ற முறையில் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை எதுவென்று நினைக்கிறீங்க? இதே நேரம் பெண்படைப்பாளிக்கு இந்த சமூகம் உண்மையான அங்கீகரிப்பைக் கொடுக்கிறதா?.

இப்படியொரு கேள்வியை ஆண் படைப்பாளிகளிடம் நாம் கேட்போமா? ஆண் படைப்பாளி என்கிற முறையில் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை எது? கேட்க வாய்ப்பில்லை. ஒருவகையில் இப்படியான கேள்வி பெண்ணின் எழுத்தாளுமையை, பொதுவெளி செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவே பார்க்கிறேன். பெண் என்பதால் சிறப்பு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன, அவர்களுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதெல்லாம் வெற்றுக் கற்பிதம். ஒரு எழுத்தாளர் அங்கீகரிக்கப்படுகிறார் என்றால் படைப்பு தான் முதற்காரணம். யார் எழுதியது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்தப் படைப்பில் கொண்டாடத் தகுந்த ஓர் உணர்வு இருக்கப் போய்த்தான் அது அங்கீகரிக்கப்படுகிறது.

பெண் என்கிற சிறப்பு சலுகையையும் பெற்றுக் கொண்டு சம உரிமை, சமத்துவம், விடுதலை என்றெல்லாம் பேச முடியாது. எழுத்துலகில் பெண் என்பதற்காக எந்தச் சிறப்புச் சலுகையும் அங்கீகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. எழுத்தில் உண்மையும் எழுத்துக்கான அறமும் இருக்கும்போது அது வாசகர்களைப் போய்ச் சேருகிறது. சிலாகிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படுகிறது. ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற வேறுபாடு இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

விலங்குகள் மீது அளப்பரிய அன்பு வைத்துக்கொள்வது போல் தெரியுது. அதுக்கு தனிப்பட்ட ஏதாவது காரணம் இருக்கா?

அன்பு தேவையாய் இருக்கிறது எனக்கு. பேரன்பு இந்த வாழ்வை நகர்த்திச் செல்கிறது என முழுமையாக நம்புகிறேன். செல்லப் பிராணிகளின் பேரன்பு தனித்துவமானது. அவர்கள் கொட்டித் தருகிற பேரன்பில் வாழ்க்கை அழகாகிறது. விடுதியில் தங்கிப் படித்தபோதே நாய்க்குட்டிகளை வளர்த்திருக்கிறேன். பறவைகளில் கிளிகள் ரொம்ப பிடிக்கும். காக்கைகளுக்கும் எனக்கும் பெரிய பந்தம் எப்போதும் உண்டு. ஆரோவில்லில் நான் தங்கியிருக்கிற வீட்டில் நான்கைந்து காக்கைகள் உரிமையாக வந்து அழைத்து உணவு கேட்கிற அளவுக்குப் பந்தம். இப்போது வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கிறேன். தற்செயல் என்று நினைக்க முடியாதபடி தினமும் நான் வகுப்பெடுக்கும் அறையின் ஜன்னலில் வந்தமர்ந்து இரண்டு நிமிடம் விடாமல் கத்திவிட்டுப்  போகும். நம் மரபில் சொல்லப்படுவது போல என் அம்மாவாகக் கூட இருக்கலாம். அதன்மீது சினேகம் பெருகுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.  முயல் குட்டிகளைக் கூட வளர்த்திருக்கிறேன். 

என்னுடைய நாய்க்குட்டி கதிர். அவன் என் வாழ்க்கையில் வந்த பிறகு அவ்வளவு மாற்றங்கள் எனக்குள்.  நான் தனியாக இல்லை என்பதை உணரச் செய்த சின்னஞ்சிறு அன்பு. வெளியூருக்குப் போய்த் திரும்புகையில் எனக்காக வீட்டில் ஒரு ஜீவன் காத்திருக்கிறது எனும் உணர்வு அற்புதமானது. அவனுக்கு எனது மொழி புரியும். அவனது மொழி எனக்குப் புரியும். நாய்க்குட்டி வடிவில் இருக்கும் குழந்தை அவன். 

மனுசி - பெயருக்குப் பின்புலம்? இயற்பெயரா?

இயற்பெயர் ஜெயபாரதி. எழுதுவதற்காக மனுசி என்ற பெயரை வைத்துக் கொண்டேன். மனுசி என்ற பெயரைப் பலரும் கிண்டலடித்திருக்கிறார்கள். நீ மனுசி என்றால் அப்போ நாங்க என்ன மிருகமா? நாங்க என்ன பேயா என்றெல்லாம். என்ன வருத்தம் என்றால் சில பெண்களே இப்படி கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் கிண்டல் செய்வார்கள். சுயமரியாதை உணர்வுள்ள எந்தப் பெண்ணும் மனுசியே. மனுசன் – மனுசி. அவ்வளவு தான். மனுசி, சுயமான பெண். 

எத்தனைக் கவிதைத் தொகுப்பு எழுதியிருக்கீங்க? எந்த கவிதைத் தொகுப்புக்கு  விருது?

இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. முதல் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள். இரண்டாவது முத்தங்களின் கடவுள். மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் சண்டிகரில் விருது விழா நடைபெறவுள்ளது.

நாவல் சிறுகதை எழுதுற நோக்கமிருக்கா?

நிச்சயமாக. கவிதை தான் my cup of tea. என்றாலும் விரைவில் சிறுகதைத் தொகுப்பு வெளிவரவுள்ளது. நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது.   

என்ன வேலைப் பாத்துட்டுருக்கீங்க?

சென்னையில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன்.

ஒரு கவிதை சொல்லுங்க? 

ஒரு கவிதை என்றால் நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த கவிதையா? அல்லது நான் எழுதியதில் கவிதையா? புதிதாக எழுதிய கவிதையா? எதைச் சொல்ல? பிடித்த கவிதை என்றால் வாழ்க்கையை / வாழ்க்கையில் இருந்து கற்றேன் / காதலை / ஒரு முத்தத்தில் இருந்து என்ற பாப்லோ நெருடாவின் கவிதை மிகவும் பிடிக்கும். 

இலக்கியத்துல என்ன செய்ய திட்டம்?  

பெரிய திட்டம் என்பதெல்லாம் இல்லை. பெரிய பெரிய திட்டங்களோடு வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடிகார முட்களும் நாட்காட்டியின் தாள்களும் என்னை இயக்குவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அதேபோல விடிந்து இரவு வந்து சேர்வதற்குள் ஒரு கவிதை அல்லது ஒரு கதை எழுதி முடித்தாக வேனும் என்ற முன் தீர்மானம் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. மனம் எழுத உந்தித் தள்ளும் போது எழுதுவதும் மற்ற நேரங்களில் வாசிப்பதுமாக நகர்கின்றன எனது வாழ்க்கை. இந்த நிமிடம், இந்த நாள் சிக்கல் இல்லாமல் போகிறது. அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

காலம் அனுமதிக்கும் வரை எழுத வேண்டும். நிறைய பயணம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் குழந்தைகள் உலகத்திற்குள் சென்று இணைந்து கொள்ள வேண்டும்.

நன்றி :
#தீராநதி நேர்காணல் டிசம்பர் 2017

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டுக்கான காத்திருப்பு

வருடத்தின் கடைசி நாள் என்பது இன்னொரு வருடத்திற்கான காத்திருப்பாக மாறிப் போகிறது.

பை பை சொல்லிவிட்டுச் செல்வதற்குத் தயாராக இருக்கிற ஆண்டில், செய்ய நினைத்துச் செய்ய முடியாமல் போனதைச் சரி செய்ய புத்தாண்டை வரவேற்கிறேன். புதிதாக புத்தாண்டில் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பனிபொழியும் இக்கடைசி இரவினை புத்தாண்டின் தொடக்கத்திற்கு இப்படித்தான் அழைத்துச் செல்கிறேன்.

நாட்கள் ஒவ்வொன்றும் கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடுகின்றன. இப்போ தானே புத்தாண்டு கொண்டாடினோம் அதுக்குள்ள அடுத்த புத்தாண்டா என நினைக்கும்படி நாட்கள் ஓட்டம் பிடித்து ஓடி விட்டன.

2017 ஆம் ஆண்டிற்குள் நினைத்துப் பார்க்க சுவாரஸ்யமான நிகழ்வுகள், வாழ்க்கைக்கான படிப்பினைகள், பெருமை கொள்ளும் தருணங்கள் என ஏராளம் இருக்கின்றன. மகிழ்ச்சியாக சிரித்து குதூகலித்த தருணங்களை மட்டும் விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறேன். மனம் கசந்து அழுத நாட்கள் ஏராளம். அதைப் பற்றி இப்பொழுது புகார்கள் ஏதுமில்லை.

பெருவனத்தில் நிலைத்திருக்கும் மரங்களைப் போல சில நண்பர்கள் எப்போதும் நம் வாழ்க்கையில் இருப்பார்கள். மரத்தில் வந்தமரும் பறவைகள் போலவும், முதிர்ந்து விழும் சருகுகள் போலவும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புகாரின்றி கடக்கக் கற்றுக் கொண்டால் அதுவே ஜென் நிலை.

நண்பர்களோடு அதிக நாட்களை, அதிக நேரங்களைச் செலவிட்டது இந்த வருடத்தில்தான். இலக்கியக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உரையாடல், குழந்தைகளுக்கான கதை சொல்லல் என உருப்படியான விடயங்களை இந்த ஆண்டில் செய்திருப்பது நிறைவாக இருக்கிறது. விருதுகள் மூலம் எனக்கிருக்கும் சமூகக் கடமை மற்றும் பொறுப்புணர்வை எனக்குணர்த்திய காலத்திற்கு நன்றிகள்.

அன்பின் கரம் பற்றிக் கொண்டு வாழ்க்கையை நேர்மறையாகச் சிந்திக்கக் கற்றுக் கொண்டதும் இந்த வருடத்தில். அதற்காகவே இந்த வருடத்தின் கடைசி இரவில் அழுகையும் மகிழ்ச்சியும் கலந்து விடை தருகிறேன்.

போய் வா எனது 2017 ஆம் ஆண்டே. எனது வாழ்நாளில் விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்  கொண்டது உன்னிடமிருந்துதான். வலித்தாலும் கூட அந்தப் படிப்பினைக்குப் பரிசாக எனது மகிழ்ச்சியைப் பரிசளிப்பேன்.

எது நிகழ்ந்த போதும் வாழ்க்கை அழகானது.

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே... 

வாழ்த்து அட்டைகளின் காலம்

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே வாழ்த்து அட்டைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் சினிமா நடிகர்கள் / நடிகைகள் படங்கள், பப்ளி பப்ளி குழந்தைகள், அழகான அடக்கமான தமிழ்ச் சாயல் கொண்ட பெண்களின் ஓவியங்கள், வண்ண வண்ண மலர்க் கொத்துகள் இவைகள் தான் வாழ்த்து அட்டைகளில் இருக்கும். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் என மூன்று பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்து அட்டைகள் இருக்கும்.

முதலில் எத்தனை பேருக்கு இந்த வருடம் வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்று எழுதி வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களுக்கு எந்த நடிகர் அல்லது நடிகை பிடிக்கும் என்பதை டிக் செய்து கொள்வோம். எங்களுடைய பள்ளி ஆசிரியர்களில் யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று அது ஒரு தனி லிஸ்ட்.

எங்களுக்கு நான்காம் வகுப்பு எடுத்த ஆசிரியர் மட்டும் இப்போது கூட நினைவில் இருக்கிறார். மற்ற வகுப்பாசிரியர்கள் அவ்வளவாக மனதில் நிற்கவில்லை. நான்காம் வகுப்பு சொல்லிக் கொடுத்த சார் அந்தக் காலத்து விஜய்காந்த் போல இருப்பார். காற்றில் அலையும் தலைமுடி.  பேண்ட் சட்டை, கறுத்த கலையான முகம். ம் குண்டான உடல். ஏய் விஜயகாந்த் சாரு வந்துட்டாராப்பா என்று கேட்கிற அளவுக்கு அச்சு அசலாக இருப்பார். அவருக்கு மட்டும் விஜய்காந்த் புகைப்படம் போட்ட வாழ்த்து அட்டையை ஒவ்வொருவரும் தனித்தனியாக போஸ்ட் செய்துவிட்டு இரண்டொரு நாளில் வகுப்பில் ஆவலோடு காத்திருப்போம். அவர் வாழ்த்து அட்டை வந்தது பற்றி ஏதாவது சொல்கிறாரா என. அவர் அதைப் பற்றி வாயே திறக்க மாட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு நாங்களே கோரசாக கேட்போம். வாழ்த்து அட்டை அனுப்பினோம் சார் என்று. சிரித்துக் கொண்டே வந்துச்ச்சு வந்துச்சு என்பார். அவ்வளவு தான் அவர் ரியாக்‌ஷன். அந்தப் பதிலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். கிறிஸ்துமஸ் தொடங்கி பொங்கல் வரை ஒரு நீண்ட விடுமுறை வரும். கடைசி நாளில் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பசங்களா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுக் கிளம்புவார்.

ஐந்தாம் வகுப்பு முடித்து அந்தப் பள்ளியில் இருந்து அடுத்து கெடிலம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தோம். என் நினைவு தெரிந்து எட்டாம் வகுப்பு வரை அவருக்கு நாங்கள் வாழ்த்து அட்டையும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியும் அனுப்பி இருக்கிறோம். அடுத்தடுத்த வருடங்களில் அப்படியே அந்த வாழ்த்துத் தொடர்பு மங்கிப் போனது. நானும் மேற்படிப்புக்காக ஊரைவிட்டு விழுப்புரம், பாண்டிச்சேரி என இடம் மாறிக் கொண்டே இருந்ததில் பள்ளி தோழிகளிடமிருந்து முற்றிலுமாக வேரறுந்து போனேன்.

அடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்பியது போக அடுத்து ஊரில் இருக்கும் உறவினர் வீடுகளில் இருக்கும் எஞ்சோட்டு பெண்களுக்கு வாழ்த்து அட்டையின் உள்ளே பொம்மையெல்லாம் வரைந்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளை எழுதி அனுப்புவோம். மூன்றாவது கட்டமாக அடுத்த தெரு, பக்கத்து வீட்டில் இருக்கும் உடன் படிக்கும், விளையாடும் தோழிகளுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம். மாலையில் விளையாட வரும்போது முதல் கேள்வி. ஏய் பொங்கல் வாழ்த்து கார்டு அனுப்பினேன் வந்ததாப்பா என்பதாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டையை போஸ்ட் செய்யும்போதும், தோழி அனுப்பிய வாழ்த்து அட்டையைப் பெயர் சொல்லி தபால்காரர் அழைக்கும்போதும் பண்டிகைக்கான உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

அதற்கடுத்து கல்லூரிக் காலத்தில் அப்படி வாழ்த்து அட்டை அனுப்பும் அளவுக்கு யாரிடமும் நட்பாகப் பழகவில்லை. நானுண்டு. வகுப்பறை உண்டு. நூலகம் உண்டு என்று இருந்துவிட்டேன். படிக்க வந்த சூழல் அப்படி எனக்குள் என்னைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் என்னுடைய உறவுக்கார அக்காவின் நண்பர் ஒருவர் ஸ்கூல் முடித்து வரும்போது ஒரு வாழ்த்து அட்டையைக் கையில் கொடுத்தார். வீட்டுல போய் படிச்சு பார் என்று சொல்லிவிட்டு விசுக்கென்று பைக்கில் பறந்துவிட்டார். ஆடம்பரமான வாழ்த்து அட்டைக்குள் ஒரு காதல் கடிதம். படித்துவிட்டு அப்படியொரு அழுகை. எனக்கென்ன காதலிக்கும் வயதாகிவிட்டதா அதற்குள் என்று தேம்பித் தேம்பி அழுதேன். அக்கா வந்து சமாதானம் செய்தார். இதெல்லாம் இந்த வயசில் நடக்கும். இயல்பு தான். பிடிக்கல என்றால் சொல்லிடு. அழாதே என்று ஆறுதல் சொன்னார். நான் வளர்ந்த பெண் என்ற உணர்வை அந்தக் காதல் அட்டை எனக்கு உணர்த்தியது. அந்த அட்டையைக் வெந்நீர் சூடாகிக் கொண்டிருந்த அடுப்பில் போட்டு விட்டு அது கொழுந்துவிட்டு சிவப்பு நிறத்தில் எரிவதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் நானுண்டு என் வேலை உண்டு என்று இருந்தபோதும் சில வாழ்த்து அட்டைகள் ஒற்றை ரோஜாப் பூவுடன் என் முன் வரும். ஒன்று வாங்கவே மாட்டேன். அல்லது வாங்கி அந்தப் பையன் கிளம்பிய அடுத்த நொடியே படித்தே பார்க்காமல் கிழித்து ரோட்டோரம் எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடப்பேன்.

என் வாழ்க்கையின் முன் வந்து நின்ற இளம்பருவத்துக் காதல்களை இப்படித்தான் விரட்டியடித்தேன்.

2005க்குப் பிறகு வாழ்த்து அட்டை கலாச்சாரம் மாறிவிட்டதாக உணர்கிறேன். எல்லார் கையிலும் ஒரு ரிலையன்ஸ் போன் அல்லது பிளாக் & வொயிட் நோக்கியா போன் இருக்கும். மெசேஜ் பூஸ்டர் போட்டுக் கொண்டு எல்லா உரையாடல்களும் வெறும் மெசேஜ்களாகச் சுருங்கி விட்டன. காதலைச் சொல்வதாக இருந்தாலும் சரி. பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் வாழ்த்தாக இருந்தாலும் சரி. குட்டி குட்டி மெசேஜ்கள் தான். முகம் பார்த்து தயக்கமும் நடுக்கமுமாக காதலைச் சொல்லும் காலம் மலையேறிப் போனது செல்போன்கள் நமது மூன்றாவது கையாக மாறிக் கொண்டிருந்தபோதுதான். அதுவும் ஆண்டிராய்டு போன் வந்த பிறகு வாழ்வின் மகத்தான தருணங்கள் எல்லாம் ஸ்மைலிக்களாக இன்னும் சுருங்கிவிட்டது.

வாழ்த்து அட்டைகளில் கையெழுத்து தாங்கி வரும் வார்த்தைகளுக்கு இணையான உணர்வு விலையுயர்ந்த செல்போன் மெசேஜ்களில் ஸ்மைலிகளில் கிடைப்பதேயில்லை.

திங்கள், 20 நவம்பர், 2017

உலகின் அழகிய பெண் 2017 : மானுஷி சில்லர்

நான் தேடித் தேடி யோசித்து யோசித்து எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர் மனுஷி.

2017 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர். என்ன அதிசயம். வாழ்த்துகள் பெண்ணே.

என்னுடைய பெயரில் (புனைபெயரில் என்றாலும் கூட) 20 வயது இளம்பெண், இந்தியப் பெண் உலகின் அழகிய பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

17 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பெண் உலக அழகிப் பட்டம் வென்றிருக்கிறார். இதைப் பெருமையாகக் கொள்வதா என்கிற கேள்வியைச் சில நண்பர்கள் எழுப்பி இருந்தார்கள். கோபம் கொண்டார்கள். இதைச் சிலாகிப்பவர்களை முட்டாள்கள் என்று ஒரு தோழி பதிவிட்டிருந்தார்.

உலகில் தோன்றிய எல்லாமே அழகு தான். அதற்கு மொழி கிடையாது. இனம் கிடையாது. வயது கிடையாது. பால் வேறுபாடு கிடையாது. அழகென்பது அன்பாலானது.

வணிக அரசியல் நோக்கத்திற்காகத்தான் உலக அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்மை தான். பெண்ணின் உடல் காட்சிப் பிண்டமாகக் காட்டப்படுகிறது. மறுக்கவே இல்லை.வணிக உள்நோக்கம் கொண்ட வெற்றியைக் கொண்டாடுவது நியாயமா என்கிற கேள்வி மிக மிக நியாயமனது. ஆனால் வாழ்த்து தெரிவிப்பவர்களை முட்டாள் என்று சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கிறது. நமது கருத்தை, விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் பொதுவெளியில் கருத்தை முன்வைக்கும்போது இப்படியான வார்த்தைகளைத் தவிர்க்கலாம் அல்லவா? உணர்ச்சிவசப்பட்ட கோபத்தை விட, பக்குவமான கோபம் தான் மாற்றத்திற்கான விதை.

இங்கே சில கேள்விகளை எழுப்ப வேண்டும்.

உலக அழகிப் போட்டி மட்டும் தான் வணிக அரசியல் உள்நோக்கம் கொண்டதா? கிரிக்கெட்டில், அரசியலில், சினிமாவில், கல்வியில், சின்னத்திரை விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் வணிக உள்நோக்கம் இல்லையா? ஆண்கள் ஆடுகிற 20/20 கிரிக்கெட்டில் சியர் கேர்ஸ் எதற்கு? சினிமாவில் கதாநாயகனைத் தொட்டுத் தடவி ஆட கூட்டமாக வெள்ளைத் தோல் பெண்கள் எதற்கு? மூலைக்கு மூலை சூப்பர் மார்க்கெட்டுகள் எதற்கு? நமது பணத்தைக் கரைத்து அவர்கள் கல்லா நிரப்புவதற்காவா? இவ்வளவு ஏன்? நமது கருத்துச் சுதந்திரத்தைக் காத்திரமாக வெளிப்படுத்த துணை செய்யும் முகநூல் கூட வணிக அரசியல், விளம்பர அரசியலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. டைம்லைனில் நான்கு  நிலைத்தகவலுக்கு அடுத்து ஆன்லைன் ஷாப்பிங் விளம்பரங்கள் வருகின்றன. பொருளை வாங்கச் சொல்லித் தூண்டுகின்றன.
நாம் எங்கே சென்றாலும் பொருட்களை வாங்கத் தூண்டும் வாசகங்களும் கலர் கலர் புகைப்படங்களும் விளம்பரப் புன்னகைகளும் வியாபார தந்திரம் கொண்டவை தானே. தூண்டும் இத்தகைய விளம்பர உத்திகளை முதலில் விமர்சிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் எதிர்ப்பதன் மூலம், விமர்சிப்பதன் மூலம் மாற்றுச் சிந்தையோடு இயங்குகிறோம் என்கிற கற்பனைக்குள் சென்று விடத் தேவையில்லை. எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது மனோவியாதியாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்க் கருத்தை முன்வைக்கும்போது யாரை விமர்சிக்கிறோம், எதை விமர்சிக்கிறோம், விமர்சனங்களை எப்படி முன்வைக்கிறோம் என்பது மிக முக்கியம்.

ஒன்று மட்டும் நிச்சயம்.
உலக அரங்கிற்கான அரை கூவலை உள்ளூர் வணிக அரசியலில் இருந்தே துவங்கலாம்.

திங்கள், 13 நவம்பர், 2017

பை சைக்கிள் தீவ்ஸ் - எளிய மனிதனின் வாழ்க்கை

மூன்றாவது முறையாக ஒரு படத்தைப் பார்க்கும்போதும் முதல் முறை பார்க்கும் போது இருக்கிற உணர்வு ஒருசில படங்கள்தான் கொடுக்கும். அப்படியொரு படம்தான் ’பை சைக்கிள் தீவ்ஸ்’.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான இத்தாலி நகரத்தின் ஒரு ஏழைக்குடிமகனின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்வதினூடாக அன்றைய இத்தாலியின் சூழலை, மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் ஆன்மாவைத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் விட்டோரியோ.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி நகரத்தில் கதாநாயகன் ரிச்சிவுக்கு சைக்கிள் இருந்தால் போஸ்டர் ஒட்டும் வேலை என்ற நிபந்தனையுடன் வேலை கிடைக்கிறது. வீட்டில் இருக்கும் பெட்ஷிட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் நல்ல விலைக்கு விற்று, அதில் சைக்கிள் வாங்கிக் கொண்டு பெருமிதமாக வேலையில் சேர்கிறார் ரிச்சி. சிறுவயது மகனை பெட்ரோல் பங்கில் இறக்கி விட்டுவிட்டு, மாலையில் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு, முதல்நாள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கையில் அவரது சைக்கிள் களவாடப்படுகிறது. முடிந்தவரை துரத்திப் பிடிக்க முயற்சி செய்கிறார். சைக்கிளைத் திருடியவன் சிட்டாகப் பறந்துவிடுகிறான். போலிஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கிறான். சரியான நடவடிக்கை இல்லை. குறி சொல்லும் பெண்ணிடம் செல்கிறான். அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிறகு ஒருவழியாக, சைக்கிள் திருடியவனை அடையாளம் கண்டு பிடித்துக் கேட்கையில் கைகலப்பு உருவாகி, அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். சைக்கிள் இல்லாமல் வேலை இல்லை என்கிற எண்ணம் மனதைக் குடைந்தெடுக்க, வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் சுவரோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளைத் திருடிவிடுகிறான். ஆனால், அவ்வளவு சாமர்த்தியம் இல்லாமையால் மாட்டிக் கொண்டு அடி வாங்குகிறான். பின்பு, மகன் புரூனோவுக்காக போலீஸிடம் போகாமல் மன்னித்து அனுப்புகிறார்கள். சிறுவயது மகன் முன்பு திருட்டுப் பட்டத்துடன் ரோட்டில் அடி வாங்கியது மனதை உறுத்த, கூனிக் குருகி நடந்து வருகையில் மகன் புரூனோ அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.
வேலை கிடைத்தவுடன் குறி சொல்லும் பெண்ணிடம் நன்றி சொல்ல செல்லும் மனைவி மரியாவிடம் விவாதம் செய்து முற்போக்குவாதம் பேசும் ரிச்சி, சைக்கிள் திருடு போனபின் தன் மகன் புரூனோவுடன் அதே குறி சொல்லும் பெண்ணை நாடிச் செல்வது மனித வாழ்வின் மிகப்பெரும் முரண். ஆனால், அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்தக் காட்சி மிகப்பெரும் பகடியாக இருக்கிறது. மனிதர்களின் இயலாமையை, கையறுநிலையை முதலீடாக வைத்துப் பணம் பார்க்கும் ஆன்மீகத்தைப் போகிற போக்கில் நக்கலடிக்கிறது இந்தப் படம்.
அதேபோல, சைக்கிள் காணவில்லை என்றதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும் காட்சியும் கூட இந்தச் சமூகத்தின் மீதான, அதிகார நிறுவனங்களின் மீதான நல்ல விமர்சனம். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி, சைக்கிளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் தொலைத்தவனிடமே ஒப்படைப்பதும், கண்டுபிடித்துத் தருவது தனது கடமை இல்லை என வாதிடுவதும், வேறொரு அதிகாரி எதுவும் பிரச்சினையா என்று கேட்கும் போது இந்தப் போலீஸ்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லை, வெறும் சைக்கிள் தான் என்று சொல்லிவிட்டுச் செல்வதும் கையறு நிலையில் ரிச்சி வெளியேறிச் செல்வதும் யதார்த்தமான காட்சியமைப்பு. ஏதோவொரு மனிதனின் வாழ்க்கை, இன்னொரு மனிதனுக்கு மிக மிக சாதாரண விஷயமாக இருக்கிறது.
இந்தப் படம் முழுக்கவும் சைக்கிள் என்பது வெறும் சைக்கிளாக இல்லை. ரிச்சி என்ற ஏழைக் குடும்பஸ்தனின் வாழ்க்கையாகவே இடம்பெறுகிறது. காலம் மிகவும் விசித்திரமானது. ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி, அதை வெகுசீக்கிரமே நீர்க்குமிழி போல உடைத்து விட்டு, தேடித் திரிய வைக்கிறது. பெரும்பாலும் இழந்த அந்த வாய்ப்பைத் திரும்பப் பெறுவதற்கான அல்லது கிடைத்த அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமாக, தேடலாக இந்த வாழ்க்கை அமைந்து விடுகிறது. படம் முழுக்க சைக்கிளைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் ரிச்சி மற்றும் புரூனோ. சைக்கிள் கிடைத்து, மீண்டும் அவன் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்கிற தவிப்பு அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. ரெஸ்ட்ராண்ட் காட்சி, ஆலயத்தில் கடவுளை வழிபடும் காட்சி ஆகியவற்றினூடாக சமூகத்தில் காணப்படும் வர்க்க வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாக விமர்சனம் செய்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது புரூனோதான். அவனுக்காகத்தான்  இந்தப் படத்தை மூன்றாம் முறையாகவும் பார்த்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு முதல்முறையாகப் பார்த்தபோது இருந்த காதல் இப்போதும் இம்மியும் குறையாமல் இருக்கிறது அவன்மீது.
சைக்கிளைத் துடைத்துக் கொண்டே தன் அப்பாவிடம் பேசுவதாக இருக்கட்டும், சைக்கிளைத் தொலைத்துவிட்டுத் தாமதமாகத் திரும்பும் அப்பாவிடம் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததைக் கோபத்துடன் வெளிப்படுத்துவதாக இருக்கட்டும், அப்பாவுடன் சைக்கிளைத் தேடிக் கூடவே ஓடுவதாக இருக்கட்டும், அப்பா அடித்தவுடன் அவருடன் பேசாமல் முரண்டு பிடித்தபடி நடந்து செல்வதாக இருக்கட்டும், ரெஸ்ட்டாரண்டில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும்போது எதிர் டேபிளில் இருக்கும் வசதியான வீட்டுப் பையனைப் பார்வையால் வெறுப்பேற்றுவதாக இருக்கட்டும், கடைசியாக திருட்டுப் பட்டம் சுமந்து மனம் வெதும்பி நடக்கும் தந்தையின் கையை இறுகப் பற்றிக் கொள்கிற இடத்திலும் என, புரூனோ ஒரு கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறான் மனதில். புரூனோவின் முஅப்பாவோடு வேலைக்குக் கிளம்பும்போது கண்ணாடி பார்த்து தலை சீவிவிட்டு, அந்த மப்ளரை கழுத்தைச் சுற்றித் தூக்கிப் போடுகிற ஒரு காட்சி போதும் அவனை ரசித்துக் கொண்டே இருக்க.
படத்தை இன்னும் சிலாகித்துப் பேச எவ்வளவோ இருக்கிறது படம் முழுக்க. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சைக்கிள் திருடியவனைக் கண்டுபிடித்தும் சைக்கிளைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி, வேறு வழியில்லாமல் சைக்கிளைத் திருடி மாட்டிக் கொண்டபின், அடி வாங்கி, மன்னிக்கப்பட்டு சாலையில் மகனுடன் நடந்து வருகையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை. நான் புரிந்து கொள்கிறேன் அப்பா உன்னை என்பது போல பற்றிக் கொள்கிற அந்தப் பிஞ்சுக் கரம் தான் சபிக்கப்பட்ட இந்த வாழ்க்கையில் நமக்களிக்கப்படுகின்ற உச்சபட்ச கருணை. வரம். நம்பிக்கை. எல்லாமும். அந்த ஒற்றை நம்பிக்கையில் தான் சுழன்று கொண்டிருக்கிறது இந்த வாழ்க்கை இன்னமும்.
(பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் இறுதிக் காட்சியைக் கண்ணீரின்றி கடந்து வருகிற யாரும் பாக்கியவான்களே.)