புதன், 9 ஜனவரி, 2019

அப்பா : நினைவும் - புனைவும் நூல் பற்றி


அப்பா எனும் சொல்லுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி உண்டு. திரைப்படங்களிலும் நாவல்களில், சிறுகதைகளில் வருகின்ற அப்பாக்களைத்தான் எனக்குத் தெரியும். அப்பா எனும் சொல்லுடன் உணர்வு ரீதியாக பொருந்திப் போவது எனக்குச் சற்றே சிரமம் தான். எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவமாக அது இருப்பது ஒரு காரணம். ஆனால், ஒரு கட்டத்தில், அப்பா குறித்த சித்திரிப்புகளில் நான் என் அம்மாவைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பிறகு, சினிமாவிலும் இலக்கியத்திலும் வருகின்ற அப்பாக்கள் எனக்கு நெருக்கமாகத் தொடங்கினர்.

மயிலாடுதுறையில் #வாகை_இலக்கியக்_கூடல் நிகழ்வின் #அப்பா_ நினைவும்_புனைவும் நூல் குறித்துப் பேச வேண்டும் என துவாரகா சாமிநாதன் தோழர் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். அதற்கு முக்கியக் காரணம் ஏற்கனவே Shruthi Tv காணொளி வழியாக இந்நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா, சப்தரிஷி சார் போன்றோர் பேச்சின் வழியே அப்பாக்களின் வெவ்வேறு நிறங்களை வாசித்து அறிந்து கொள்ளும் ஆவல். அத்தனை சுவாரஸ்யமான நினைவுப் பகிர்வுகள் அவை.

மயிலாடுதுறை வாகை இலக்கியக் கூடல் நிகழ்வில் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, ரண்டொரு நாளில் அப்பாவை அனுப்பி வைத்தார்கள். முதல் கட்டுரையாக எழுத்தாளர் ஆத்மார்த்தி, தன் அப்பா குறித்து எழுதிய தந்தைப் பறவை கட்டுரையை வாசித்து முடித்துக் கதறி அழுதேன். அந்த அழுகை அவரது அப்பாவின் இறுதிநாட்களின் வலியை எனக்குள் முழுமையாகக் கடத்தியதால் வந்த அழுகை. என் அம்மாவின் உயிர் பிரியும் கடைசி கணங்களை ஒரு காட்சியாக என் கண்முன் கொண்டு வந்தது. நான் மறந்துவிடத் தவிக்கும் துயரச் சித்திரம் அது. ஆத்மார்த்தியை போனில் அழைத்துப் பேசி என் அழுகையை ஆற்றிக் கொண்டேன்.

அதன்பின் ஒரு கட்டுரையையும் வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்தேன். அன்றைய இரவில் மீண்டும் எடுத்து வாசிக்கத் துவங்கினேன்.

அடுத்து சப்தரிஷியின் கட்டுரை. அதில் புதிதாக லா.ச.ரா. எனும் அப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள எதுவுமில்லை. ஏனெனில், சப்தரிஷி அவர்களுடன் பேசும்போதெல்லாம் எழுத்தாளர் லா.ச.ரா.வின் பிம்பம் மறைந்து அற்புதமான அப்பாவைத்தான் நான் தரிசித்தேன். அப்பாவைச் சிலாகித்துக் கொண்டாடும் மகன் அவர். பல நேரங்களில் இப்படியொரு அப்பா ஏன் எனக்கு வாய்க்கவில்லை என ஏங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் லா.ச.ரா எனும் எழுத்தாளரை விட லா.ச.ரா எனும் அப்பாவின்பால் ஈர்ப்பு அதிகமானது.

பெயர் எழுதப்படாத மொட்டைக் கடுதாசியில் கூட மகனது அடையாளத்தைக் கண்டுபிடித்து, மகனைத் தோழனைப் போல் பாவித்த அமிர்தம்சூர்யாவின் அப்பா ஒரு கவித்துவம். தன் நண்பர்களிடன் உரையாடுவதை காதல் உட்பட  ‘எல்லாவற்றையும்’ பகிர்ந்து புரிந்துகொள்ள அப்பா மகன் உறவில் வாய்க்கிறது எனில் அது வரம். காதலைப்பற்றிச் சொல்லும்போது, முட்டை உடைந்து குஞ்சு வெளிவருவது போல ஈகோ உடைந்து காதல் வெளிவர வேண்டும் என மகனிடம் சொன்ன தருணம் கூட கவித்துவம் தான். அமிர்தம் சூர்யாவும் தன் மகன்களுக்கு ‘நல்ல அப்பா’வாக, தோழனாக இருக்கிறார். அது அவர் அப்பாவிடமிருந்து பெற்ற பிரியத்தின் நீட்சி.

முரண்பாடுகளின் சந்திக்க முடியாத புள்ளியாக எதிரெதிர் துருவங்களில் பயணித்த அப்பா மகனை பாரதி கிருண்ஷகுமார் அவர்களின் அப்பா கட்டுரையில் தரிசிக்க முடியும். அப்பாவின் கனவு எதையும் நிறைவேற்ற முடியாத மகனாக அவர் இருந்திருந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான மகன்கள் / மகள்கள் அப்படியே. ஏனெனில் அப்பாவுக்கும் மகனுக்கும் அப்பாவுக்கும் மகளுக்கும் வேறுவேறு கனவுகள் இருக்கின்றன. ஒருவருடைய கனவுக்காக இன்னொருவர் பலியாகிவிட முடியாத எதார்த்தம் பலநேரங்களில் அப்பாக்களுக்குப் புரிவதில்லை. அல்லது புரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள். ஆனால், கடைசிக் காலத்தில், கடைசித் தருணத்தில்  என்னால தனியா இருக்க முடியாது என்னை உன்னோடு அழைத்துச் சென்றுவிடு, பழைய கோபத்துல என்னை விட்டுட்டுப் போயிடாத என்று அப்பா சொன்னார் என்ற வரிகளை வாசிக்கும்போது கண்கள் நிறைந்துவிட்டன. அப்பாவின் அன்பைப் புரிந்து கொள்வதற்கென்று ஒரு காலம் வரும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.

பிரபஞ்சன் சாருக்கு அப்பாதான் கதாநாயகன். அவரது அப்பாவின் வேட்டி சிறுகதையை வாசிக்கின்றபோது அதை உணர முடியும். கூடுதலாக எனக்கொரு அதிர்ஷ்டம், கதையில் இருக்கின்ற சம்பவம் அவர் அப்பா பற்றி நிறைய அனுபவங்களை அவர் என்னோடு பேசி இருக்கிறார். சினிமாவில்  கதாநாயகன் அறிமுகக் காட்சியில் பாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேமரா மேலே போய் அவரது முகத்தைக் காட்டுமே அதுபோல அப்பாவை ஒவ்வொரு அணுவாக ரசித்துக் காட்சிப் படுத்திச் சொல்வார். அவர் சொல்வதைக் கேட்கையில் அவரது அப்பாவைச் சந்தித்து வணக்கம் சார் என்று சொல்ல வேண்டும் போல் இருக்கும். வாழ்வின் மீது எந்தப் புகார்களற்று, விமர்சனங்களுக்கு வாழ்ந்த மனிதரைப் பிரபஞ்சன் அப்பாவாகப் பெற்றிருக்கிறார். எளிமை, நேர்மை, அறவுணர்வு, அன்பு, மிடுக்கான உடை, புன்சிரிப்பு, அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கழிவிரக்கத்தோடு இல்லாமல் நகைச்சுவையாகச் சொல்லிக் கடந்து போகிற பண்பு, எதையும் மற்றவர் இடத்திலிருந்து புரிந்து கொள்ளும் பண்பு, இரக்க குணம் – பிரபஞ்சன் சாரைப் பற்றி நினைத்தால் இவையெல்லாம் நினைவுக்கு வரும். இதையெல்லாம் அவர் தன் அப்பாவிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். நான் பிரபஞ்சனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருவாயில்தான் பிரபஞ்சன் இனி நம்மோடு இல்லை எனும் கொடுஞ்செய்தி வந்து சேர்ந்தது என் துரதிஷ்டம். சுக்குநூறாய் உடைந்துவிட்டேன். அழுகையோடு தொடங்கிய எனது வாசிப்பு பேரழுகையுடன் தொடர்கிறது. தன் சினேகிதிகளை மகள்களாக நேசித்த மனிதர். சினேகிதிகளால் நேசிக்கப்பட்டவர். எப்போதும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் / மனுஷிகள் பக்கம் நின்று பேசியதும், எழுதியதும் தான் அவருக்கான கம்பீரம்.  

ஒரு மூட்டை புத்தகம் கிடைக்குமெனில் தன் பிள்ளையைக் கூட விற்றுவிடத் தயங்காத புத்தகப் பிரியர் ந.முத்துக்குமாரின் அப்பா. மகன், மலையாள பிட்டுப் படம் பார்த்துவிட்டு வருவதை அறிந்தும் கோபப்படாமல் அடிக்காமல் குணமாக எடுத்துச் சொல்லும் அப்பாவை, மிதிவண்டியின் பின்னால் அமர வைத்து ஊர் சுற்றிக் காட்டும் அப்பாவை,  யாருக்குத்தான் பிடிக்காது.

கை வாதம் மகனுக்குப் பத்தியச் சாப்பாடு தான் இனி என்றானபின், தண்ணீரே குடிக்கக் கூடாது என வைத்தியர் சொல்லிவிட, தெரியாமல் ஒரு வாய் தண்ணீர் குடித்தால் உலக்கையாலே அடிச்சு மண்டையைப் பேத்துடுவேன் எனச் சொல்லும் ஜெயமோகனின் கோவக்கார அப்பா, மகன் பத்தியமிருந்த நாட்களில் தானும் பத்தியச் சாப்பாடு சாப்பிடுபவராக இருந்தார். மகனைக் குணப்படுத்திய வைத்தியரின் பாதத்தில் உதடுபட விழுந்து வணங்கி நன்றி சொல்பவராகவும் இருந்தார். அவர் சொல்வது போல தெய்வ மிருகம். அன்பு செய்யும் மிருகம் அந்த அப்பா.

அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார், ஜெயமோகன், பாமரன், பவா செல்லதுரை, மதுமிதா, தமிழச்சி தங்கபாண்டியன், இசை, கீரனூர் ஜாகிர் ராஜா, சப்தரிஷி, சுமதிஸ்ரீ, இசை, தி.பரமேஸ்வரி, அமிர்தம் சூர்யா, கவிதைக்காரன் இளங்கோ, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன், கலாப்ரியா, கண்மணி குணசேகரன், ஆயிஷா நடராஜன், நா. முத்துக்குமார், நாராயணி கண்ணகி, வண்ண நிலவன் இப்படி வாசித்து வாசித்து இரண்டு நாட்கள் அப்பாக்களின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தேன்.

சமீபத்தில் நான் அவதானித்த ஒரு விடயம். முகநூலில் தனது மகள்களை இளவரசிகளாகக் கொண்டாடும் அப்பாக்கள் சிலரைப் பார்க்கிறேன். தங்கள் மகளதிகாரத்தை அவர் எல்லையற்ற அன்புடன் பதிவிடும் போது என்னையறியாமல் அந்த மகளையும் அப்பாவையும் நான் நேசிக்கத் தொடங்கிவிடுகிறேன். மகள்களின் உலகத்தை அவர்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்ள வழிவிடும் அப்பாக்கள் ஆண் தேவதைகள் தான்.

பெரும்பாலும் மகன்களின் அப்பாக்கள் மகன்களுக்கு ஆகச்சிறந்த கதாநாயகனாகவே இருந்திருக்கிறார்கள். மகள்களின் அப்பாக்கள் அப்படித்தான். ஆனால், இந்தப் புத்தகத்தில் மகள்களின் அப்பாக்கள், மகள்களின் உலகத்திற்குள் அதிகம் பிரவேசிக்க முடியாத ஆண்களாக இருந்திருக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன், மதுமிதா ஆகியோரின் அப்பாக்கள் இதற்கு விதிவிலக்கு. தி. பரமேஸ்வரியும், சுமதிஸ்ரீயும் தங்கள் அப்பாக்களுடன் பேசிக் கொள்ளமுடியாத சொற்களை, ஆற்றாமையை, கண்ணீரை இதில் கட்டுரையாக மாற்றித் தந்திருக்கிறார்கள்.

இந்த அப்பாக்கள்வழி நான் அறிந்து கொண்டது, அப்பாக்கள் கொஞ்சம் கண்டிப்பானவர்கள். தன் கனவுச் சிலுவைகளைப் பிள்ளைகளைச் சுமக்கச் செய்ய எத்தனித்தவர்கள். மகன்மீதும், மகள்மீதும் கொண்ட அன்பை, அன்பாகக் காட்டத் தெரியாமல் கோபமாக, அதிகாரமாகக் காட்டியவர்கள். நண்பனைப் போல பிரியங்களைக் கையளித்தவர்கள். புறவுலக அழுத்தங்களைத் தனக்குள்ளாகப் புதைத்துக் கொண்டு புத்தக உலகத்திற்குள் தங்கள் பிள்ளைகளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்கள். இப்படியாக, இன்னும் இன்னுமாக அப்பாக்களின் நிறங்கள் வெவ்வேறானவை. முகங்கள் வேறானவை. அப்பாக்கள் எந்தவொரு ஒற்றைப் பிம்பத்திற்குள்ளும் அடங்கிப் போகாதவர்கள்.

அப்பா நூலை வாசித்து முடிக்கையில் இப்போது அப்பாக்களாக இருப்பவர்கள் தங்கள் மகன்களை, மகள்களை இன்னும் ஆழமாக நேசிக்கச் செய்வார்கள். மகன்கள், மகள்கள் தங்கள் அப்பாக்களை இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்வார்கள். அப்பாக்கள் கொண்டாடப்படுவார்கள். இனிமேல் அப்பாக்களாக ஆகப் போகிறவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நண்பனைப்போல மாறிவிடும் சூத்திரத்தைச் சொல்லித் தரும் இந்த அப்பா.
இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்த தோழர் இளம்பரிதிக்கு அப்பாக்களும் மகன்களும் மகள்களும் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அவருக்கு என் வாழ்த்துகளும் அன்பும். ஏனெனில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு கட்டுரைகளை வாங்கித் தொகுப்பது சாதாரணப் பணியன்று. ஆனால், அப்பாமீது கொண்ட அளப்பரிய பிரியம்தான் அரிய பணியைச் செய்து முடிக்க உடனிருந்து ஊக்குவித்திருக்கக் கூடும். புத்தகம் உருப்பெற மூலகாரணியாய் இருந்த அந்த அப்பாவுக்கு எனது அன்பும் பிரியங்களும்.

நூல் : அப்பா நினைவும் – புனைவும்
தொகுப்பாசிரியர் : ப. இளம்பரிதி
பதிப்பகம் : பரிதி பதிப்பகம், 56சி/128, பாரத கோயில் அருகில்,
                        ஜோலார் பேட்டை, வேலூர் – 635 851
விலை : 500/-

வெள்ளி, 4 ஜனவரி, 2019

துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை : நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து


துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை
நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து
-        மனுஷி




வாழ்வின் இருள் சூழ்ந்த பக்கங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் சிறு அகல் விளக்கின் ஒளி தான் கவிதை.
பாறையைக் கடப்பாறை கொண்டு நகர்த்துவது போல இல்லாமல் ஒரு மலர் மலர்வது போலவோ, கடல் அலை கரை வந்து மோதி மீளச் செல்வது போலவோ, குழந்தைகளிடமிருந்து பெறும் முத்தம் போலவோ கவிதை எழுதுதலும் இயல்பானதாக இருக்கும்போது அது வாழ்வின் அண்மையில் வந்தமர்ந்து கொள்கிறது. கவிஞரின் கவிதை அனுபவம் வாசக அனுபவமாக மாறும் ரசவாதம் இங்கிருந்தே தொடங்குகிறது என நினைக்கிறேன்.
வாழ்வின் அனுபவங்களிலிருந்து கண்விழிக்கும் கவிதைகளே மொழி, நாடு, பாலின எல்லைகளைக் கடந்து மனித மனங்களோடு உரையாடுகின்றன. எதைக் கவிதையாக்கினால் பேசப்படுவோம் என்பதை விடவும், எதை நாம் உண்மையென நம்புகிறோமோ அதை எழுதுவதன்மூலம் நம்மைப் படைப்புக்குள் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். எழுத்துக்கான அறம் அதுவாகத்தான் இருக்க முடியும்.
வாழ்வின் மீதான தேடலுக்குப் பயணங்களே தீனியளிக்கின்றன. பயணங்களே நம் வாழ்வின் மீதான பார்வையைப் பக்குவப்படுத்தி நமக்குக் கையளிக்கின்றன. பெண்கள், ஊர்சுற்றிப் பறவைகளைப் போல பயணம் மேற்கொள்ளும்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறேன். ஆணின் பயண வாழ்க்கையைப் போல அத்தனை எளிதானல்ல பெண்ணின் பயண வாழ்க்கை. வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை பயண அனுபவங்கள் சொல்லித் தருவது போல வேறு யாரும் சொல்லித் தர முடியாது.
முகநூலில் நர்மி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், கவிதைகளில் வெளிப்படுத்திக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் வித்தியாசம் இருக்கின்றன. பயணத்தின்மீது பெருங்காதல் கொண்ட சிறு பறவையாகத்தான் நர்மியை நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால், நர்மியின் கவிதைகளை வாசிக்கும்போது, அன்புக்காக ஏங்கும் சிறு குழந்தையின் முகத்தைப் பார்க்க முடிந்தது. அன்பின் பெயரால் ஏமாற்றப்படும்போது, அந்த வலியிலிருந்து உயிர்த்தெழுந்த வருவதற்காகவே கவிதையைத் தேர்வு செய்து கொண்டார் என நினைக்கத் தோன்றுகிறது.
உறவுகளின்மீதான அதீத எதிர்பார்ப்பும், அந்த எதிர்பார்ப்பிலிருந்து கிடைத்த ஏமாற்றத்தினால் துவண்டு போகின்ற மனமும், காதலைத் தேடியலையும் சிறு பெண்ணின் சாயலுமாக நர்மியின் கவிதைகள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையை விட்டுத் திருப்பி அனுப்பிவிடும் தூரத்திலா நான் இருக்கிறேன் எனக் கண்ணீரோடு கேட்கும்போதும், விழக்கூடாத இடத்தில் எல்லாம் அன்பு எங்களை வீழ்த்தியது. போகட்டும் அன்பு தானே வீழ்த்தியது எனத் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ள முற்படும்போதும் அது நர்மியின் குரலாக மட்டும் இருக்கவில்லை. அன்புக்காக ஏங்கும் எல்லோருடைய விசும்பலாகத்தான் அதைப் பார்க்கிறேன்.
இந்த வாழ்க்கையில் உறவின் விலகலோ அல்லது நேசித்தவர்களின் மரணமோ மிக மிக இயல்பாக நிகழ்கிறது. நாம் அதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இயல்பாய் உதிர்ந்தாய் என்னும் கவிதையில் வெளிப்படுத்துகிறார் நர்மி.
இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதக் கூடும் என பாப்லோ நெரூடாவின் வரிகளில் பொதிந்து கிடக்கும் துயரத்தை நர்மியின் இறுதி யாசகம் கவிதையும் கொடுக்கிறது. அன்பினால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கணத்திலும், இந்த அன்பு துயரமானதுதான் எனினும் அந்தத் துயராமகவேனும் எஞ்சியிரேன் என்னும் கெஞ்சல் குரல் மனதை நெகிழச் செய்துவிடுகிறது.
நர்மியின் பனிப்பூ கவிதைத்தொகுப்பு அப்படித்தான் வாசகர்களோடு உரையாடுகின்றன. பனிப்பூ தொகுப்பை வாசித்து முடிக்கையில் துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும், அன்பின் பெயராலும் துண்டாடப்பட்ட எளிய மனதின் கண்ணீர்த் துளிகளின் ஈரத்தை வாசகர்கள் உணரக் கூடும்.

பனிப்பூ தொகுப்பின் பலம் என நான் கருதுவது அந்தக் கவிதைகளின் மொழி. வலிந்து திணிக்கப்படாத உணர்வுகள். வாழ்வின் அனுபவங்களையும் கவிதைகளாக்கும்போது வார்த்தைகளைத் தேடி அலையாமல் இயல்பான எளிய மொழியில் எழுதியிருப்பது கவிதைகளின் பலம். ஏனெனில், முதல்முறையாகக் கவிதை வாசிப்பவர்களும்கூட, இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும்போது தனக்கான கவிதையாக, தன் அனுபவத்தைப் பேசும் கவிதையாக உணரச் செய்துவிடும்.
நர்மியின் கவிதைகளில் ஒரு பெண்ணின் குரல் என்று சொல்லும்படியாகச் சில கவிதைகளே உள்ளன. உதாரணமாக, ‘யட்சிகள்’ எனும் கவிதையைச் சொல்லலாம்.
‘தேவதைகள் வருவார்கள் போவார்கள்.
யட்சிகள் மாத்திரம்
தனித்தே நின்று விடுகிறார்கள்
இந்த வனாந்திரத்தில்’
எல்லா காலத்திலும் தேவதைகள் கொண்டாடப்படுகிறார்கள். வருணிக்கப்படுகிறார்கள்.இந்தச் சமூகம், பார்வதியை, மீனாட்சியைக் கொண்டாடுகிற அளவுக்குக் கொற்றவையை, காளியை, வனயட்சியைக் கொண்டாடுவதில்லை. வ வனயட்சிகள் தனது பாதையை, தனது பயணத்தை, தனது கனவுகளைச் சுயமாகத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, வனயட்சிகளின் உலகம் நிரப்பப்படாத தனிமையால் நிறைந்து கிடக்கிறது.
அதேபோல, மரணங்கள் என்னும் தலைப்பில் நர்மி எழுதிய கவிதை, காதலை யாசிக்கும் பெண்ணின் கையறு மனதை உணர்த்துவதாய் இருக்கிறது.
மரணிக்க முடியாத
காதலை உனக்கு
வழங்கிச் செல்லும்போது
எத்தனை தடவைகள் மரணித்திருப்பேன்?
நேசிக்கும் ஆணின் முன்னால் உன்னைத்தான் காதலிக்கிறேன் என்பதைச் சொல்லிச் சொல்லி நிரூபிக்கும் ஒவ்வொரு கணமும் மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பும் பெண்ணின் கையறுநிலையே இக்கவிதை.
அவமானக் குறிப்புகள், நன்றிக்கடன், புரிதல்கள், நம் பைத்தியங்கள், சிறு சஞ்சலம், என்னிடமே கொடுத்து விடுங்கள் முதலிய பல கவிதைகள்  மனதிற்கு நெருக்கமான உணர்வைத் தந்து செல்கின்றன. நாம் எல்லோரும் எங்கோ ஓரிடத்தில் இப்படியான மனநிலைகளைக் கடந்துதான் வந்திருப்போம். அந்த மனநிலையைப் பிரதிபலிக்கின்றன இக்கவிதைகள்.
கவிஞர் ச.விசயலட்சுமி அவர்கள் மொழிபெயர்த்த ‘லண்டாய்’ ஆப்கான் பெண்கவிதைகளின் தொகுப்பில் கடவுளே உன்னைக் கைத்தொழமாட்டேன் (கடவுளே நீ பெண்ணாக இருந்திருந்தால் என்னும் கவிதை) என ஒரு ஆப்கான் பெண்ணின் கலகக் குரல் பதிவாகியிருக்கிறது. அதேபோல பனிப்பூ தொகுப்பில், குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த பல கவிதைகள் இருப்பினும் கடவுள் இறந்துவிட்டார் எனும் நர்மியின் பிரகடனம் மிக முக்கியமானது. பெண் நிலையிலிருந்து கடவுளின் மரணசாசனக் குறிப்பை உலகிற்கு அறிவிப்பது தற்காலச் சூழலில் முக்கியமான கலகக்குரல். ஆனால், அக்கவிதையில் கடவுளை மறுதலித்துவிட்டு நாத்திகனின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் எனும்போது நாத்திகன் எனும் சொல்லினுள் புதைந்துள்ள ஆண்பிம்பம் சிறு உருத்தலாக இருந்தது.
ஆண்வயப்பட்ட மொழியில்தான் பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெண் என்ற நிலையிலிருந்தே மதத்தை, சாதியை, கடவுளை மறுதலிக்கும் அரசியலை நாம் பேச வேண்டியுள்ளது. பெண்ணின் காதலைப் பேசினாலும், சமூக அவலங்களை, அரசியல் சூழலை என எதைப் பேசினாலும் நமது படைப்பின் குரல் சுயமானதாக, தனித்த அடையாளம் கொண்டதாக, பெண்ணிருப்பின் அரசியல் பேசும் குரலாக இருக்க வேண்டும். அதிலிருந்துதான் பெண்ணுக்கான மொழியை நாம் மீட்டெடுக்க முடியும்.
எழுதி எழுதி நமது துயரங்களைக் கடந்து செல்வோம்.
எழுதி எழுதி நமக்கான மொழியைக் கண்டடைவோம்.
வாழ்த்துகளும் அன்பும் நர்மி.

நூல் : பனிப்பூ (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : ம. நர்மி
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை.
விலை : 100/-

புதன், 12 டிசம்பர், 2018

ஜிட்டு எனும் அன்பன்




கடைக்குப் போகிறேன் என்றாலே டைகர், மைக்கண்ணி கூடவே வருவார்கள். இப்போதெல்லாம் டைகர் - மைக்கண்ணியின் மகன் ஜிட்டுவும் கூடவே வரத் தொடங்கிவிட்டான். தெருவில் பாட்சா தீம் மியூசிக் போடாத குறையாக, புடைசூழத்தான் சென்று வருகிறேன். கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் அதுவே தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. டைகர், தெருவில் போகிற வருகிற பைக்குகளைத் துரத்திக் கொண்டோடுவதால் சிலர் நின்று திட்டிவிட்டுப் போவார்கள். வீட்டுக்குப் போடா என்று விரட்டினாலும் கேட்கவே மாட்டான். ஆனாலும், இரவில் கடைக்குப் போய் வருவதானால் டைகர் தான் எனது பாதுகாப்பாளன். அவன் கூட வந்தால் இரவு மனிதர்களின் பயமின்றி எந்த நேரத்திலும் வெளியில் நடக்கலாம். அவ்வளவு பாதுகாப்பு.

இரவு சமைப்பதற்கான மனநிலை இல்லாததால் ஆரோவில் பஸ் ஸ்டாப்
எதிரில் உள்ள பிரியாணி விலாஸில் பிரியாணி வாங்கக் கிளம்பினேன். தெருவில் நடக்கத் தொடங்கியதும் டைகர் பின்னாடியே வந்தான். அவ்வளவு ஒன்று நேரமாகிவிடவில்லை என்பதால் டைகரைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடியே நடந்து சென்றேன். பாதி தூரம் நடந்து சென்றபின் அவதானித்தேன். என் பின்னால் நிழலைப் போல ஜிட்டு நடந்து வந்தான். தெருமுனை வரை தான் அவன் பின் தொடர்ந்து வரப் பழகியிருந்தான். இப்போது பஸ் ஸ்டாப் வரை வர ஆரம்பித்துவிட்டான். ஐம்பதடி தூரத்தில் ஈசிஆர் பஸ் ஸ்டாப். டைகர் மெயின் ரோடு வரை வருவான். சாலையைக் கடக்க வேண்டும் என்றால் மனிதர்களைப் போல நின்று இருபுறமும் பார்த்துவிட்டு பஸ்ஸோ காரோ பைக்கோ வரவில்லை என்றால் தான் சாலையைக் கடப்பான்.

கதிர் கூட துருதுருவென்று சாலையைக் கடக்கப் போய் தான் விபத்தில் அடிபட்டுப் போனான். அவன் அடிபட்ட சாலையை இப்போது பார்க்க நேர்ந்தாலும் மனம் நடுங்கும். ஜிட்டு அத்தனை துருதுரு பையன் இல்லை. ஆனாலும், அவனும் கதிரைப் போலத்தான்.

ஜிட்டு, என்ன இது புதுப்பழக்கம். இவ்ளோ தூரம் நடந்து வர. இங்கல்லாம் வரக் கூடாது. வீட்டுக்குப் போ என்றேன். என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

சொல்றதைக் கேளு. பஸ், கார்லாம் போகும். உனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. வீட்டுக்குப் போ. நான் பிரியாணி வாங்கிட்டு வர்றேன் என்றேன் அதட்டலாக. அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.

சும்மா மிரட்டுவதற்காக ஒரு சிறு குச்சியை எடுத்து வீட்டுக்குப் போ என்றேன். திரும்பிப் போவது போல பாவனைக் காட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் என் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

நேரம் ஆகுது தம்பி. படுத்தாத. சரி. இந்த இடத்திலேயே நில்லு. நான் போய் பிரியாணி வாங்கி வர்றேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். ஐந்தடி போனதும் திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். என்னையே பார்த்தபடி. சின்ன அசைவு கூட இல்லை. நானும் அவன் அந்த இடத்திலிருந்து நகர்கிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

சாலையைக் கடந்து பிரியாணி விலாஸ் போய் பிரியாணி ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருந்தது. பிரியாணி வாங்கிய கையோடு பால் பாக்கெட் சர்க்கரை டீத்தூள் வாங்கிக் கொண்டு போகலாம் என அங்கிருந்து பத்து கடைகள் தள்ளி இருந்த மளிகைக் கடைக்குச் சென்றேன். பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து இன்னொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினேன்.

சட்டென்று மனம் நின்றது. ஜிட்டுவை அங்கே இருக்கச் சொன்னோமே கிளம்பியிருப்பானா இல்லை அங்கேயே இருப்பானா என்று ஒரு சிறு சந்தேகம். நிச்சயம் கிளம்பியிருப்பான் என்றது ஒரு மனம். ஒருவேளை அங்கேயே நின்றிருந்தால்..... அந்தக் கேள்வியில் அங்கேயே ஒரு கணம் நின்று எதற்கிந்த தயக்கம் என்றபடி வந்த சாலைவழியே திரும்பி நடந்தேன்.

நான் எங்கே காத்திருக்கச் சொன்னேனோ அங்கே ஓரமாக அதே போஸில் நின்றிருந்தான் ஜிட்டு வாலையை ஆட்டிக் கொண்டு.

ஜிட்டுக் குட்டி... என்றதும் என்னை நோக்கி ஓடிவந்தான்.

ஓடிப் போய் அள்ளி அணைத்துக் கொண்டேன்.

அன்பிற்கு மொழியில்லை. அது உணர்வுகளால் ஆனது.

வியாழன், 6 டிசம்பர், 2018

அன்பின் உண்டியல்

உண்டியல் வாங்க வேண்டுமென
நானும் தோழியும் கிளம்பினோம்.
பாண்டிச்சேரியில் காலாப்பட்டு குளம் அருகில் உள்ள இரண்டு கடைகள், கோட்டக்குப்பத்தில் இருக்கும் இரண்டு கடைகள், அஜந்தா சிக்னல் அருகில் இருக்கும் ஒரு கடை இவைகள் தான் எனக்குத் தெரிந்தவை.
இது தவிர, மகாத்மா காந்தி சாலை, சிவன் கோவில் எதிரில் சிவராத்திரி சமயங்களில் பொம்மைக்கடையில் உண்டியல் விற்கும். கொலுவுக்கு வைக்கும் கலர்கலரான பொம்மைகளுடன், அரைடவுசரும் தொப்பியும் போட்ட குட்டிப் பையன் உண்டியல், மீன் உண்டியல், ஆப்பிள் உண்டியல், மாம்பழ உண்டியல், கப்பம் உண்டியல், ஆரஞ்சுப் பழ உண்டியல் என விதவிதமான உண்டியல் அங்கே இருக்கும்.
அஜந்தா சிக்னல் அருகில் உள்ள மண்பானைக் கடை மூடியிருந்தது. கோட்டக்குப்பத்தில் இருக்கின்ற இரண்டு மண்பானைக் கடைகளிலும் உண்டியல் தவிர பானை, சட்டி, தொட்டிச் செடிகள் என எல்லாமும் இருந்தன. அதைவிட்டால் பாண்டிச்சேரியில் முன்பு மத்தியச் சிறைச்சாலை இருந்த இடத்தில் சரியாகச் சொன்னால் கொசக்கடை வீதியில் நான்கைந்து மண் பானைக் கடையில் வாங்கலாமெனக் கிளம்பினோம். வார நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை.
முதல் கடையில் உண்டியல் இல்லை. அடுத்த கடையில் ஆப்பிள் உண்டியல் இரண்டு வைத்திருந்தார் கடைக்காரம்மா.
ஆரோவில் வீட்டுக்கு வந்த புதிதில் தொட்டிச் செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டபோது மொத்தமாகப் பத்துத் தொட்டிகள் வாங்கி எடுத்து வந்தேன். வெயில் காலத்தில் மண்பானை ஒரு முறை வாங்கியிருக்கிறேன். அதன்பிறகு தோழிகள் சட்டிப்பானை, தொட்டிச் செடிகள் வாங்க வேண்டும் என்று கேட்டால் இங்கே தான் அழைத்து வருவேன்.

வண்டியை நிறுத்திவிட்டு உண்டியல் விலை கேட்டோம். ஒரு உண்டியல் விலை முப்பது ரூபாய் என்றார். எங்களுக்கு நான்கு உண்டியல் வேண்டுமே என்றதும் கடைக்குள் போய் வைத்திருந்த எல்லா உண்டியல்களையும் எடுத்து வந்து காட்டினார். மொத்தம் எட்டு உண்டியல். எம்மா, உண்டியல் வாங்கினால் உள்ள உங்க கையால் காசு போட்டு விஷ் பண்ணிக் கொடுக்கனும் என்றோம். அவர் வைத்திருந்த கல்லாப் பெட்டியில் இருந்து சில்லறையை எடுத்து நான்கு உண்டியலிலும் காசைப் போட்டுக் கையில் கொடுத்தார். விளையாட்டுக்குத்தான் சொன்னோம்மா என்றதும் பரவால்ல எங்க ஊட்டுப் புள்ளைங்க மாதிரி தான் என்று சிரித்துக் கொண்டே உண்டியல் போனி பண்ணார்.
உண்டியல்தான் வாங்குவது திட்டம். கூடவே, மீன்குழம்பு வைக்க ஒரு சட்டியும், கீரைக் கடைய ஒரு சட்டியும் எடுத்து விலை கேட்டோம். ஒரு சட்டி நாப்பது ரூபாம்மா. உண்டியல் வேற வாங்குறிங்க. ஒரு சட்டிக்கு முப்பது ரூபாய் கொடுங்க போதும் என்றார். அதெல்லாம் குறைக்க வேண்டாம். நீங்க என்ன விலை வைச்சிங்களோ அதையே சொல்லுங்க என்று, சட்டியைத் தட்டிப் பார்த்து இரண்டு சட்டி எடுத்து வைத்தோம். நான்கு உண்டியல் வாங்கும் திட்டத்தைக் கொஞ்சம் நீட்டித்து மீதி இருக்கும் நான்கு உண்டியலையும் எடுத்துக் கொள்கிறோம் என்று எட்டு உண்டியலையும் எடுத்து வைத்துக் கொண்டோம். அந்த உண்டியலிலும் சில்லறை காசைப் போட்டு போனி செய்து ஒரு மஞ்சள்நிறச் சாக்குப் பையில் சட்டியையும் உண்டியல்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கட்டிக் கொடுத்தார்.
அங்கே குட்டி குட்டி அகல் விளக்குகள் குவியல் இருந்தது. அதன் விலையைத்தான் கேட்டோம். கை நிறைய விளக்கை அள்ளி இந்தாம்மா இந்தக் குட்டிப் பொண்ணுக்கு இது என பத்து அகல்விளக்குகளை என் கையில் கொடுத்தார். இது உனக்கு என என் தோழிக்கு ஆறு விளக்குகளைக் கொடுத்தார். எவ்ளோமா என்றேன். வச்சிக்கம்மா. நீ அந்த அகலை வைச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டே இருந்தல்ல. அம்மா கொடுக்கிறேன் வச்சிக்க என்றார்.

ம்மா, உங்க கடையோட சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றேன். நல்லா எடுத்துக்க என்று சேலையைச் சரி செய்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தார். தேங்க்ஸ் மா என்று சொல்லிவிட்டு, கட்டி வைத்த மூட்டையை வண்டியின் முன்பு வைத்துக் கொண்டு கிளம்பினோம். எம்மா, அடுத்தமுறை வரும்போது இந்தப் போட்டோவை ஒரு காப்பி எடுத்து வந்து கொடுக்கனும் என்றார்.

அவசியம்மா என்றபடி  பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
அந்த எளிய அன்பு மனதைச் சிலிர்க்கச் செய்தது.
மனித வாழ்வின் ஆணிவேர் எளிய அன்பன்றி வேறென்ன.

செவ்வாய், 2 அக்டோபர், 2018

காஃபியும் நானும்

காஃபியும் நானும்

செல்வம் ராமசாமி சார் முகநூல் பக்கத்தில், சர்வதேச காஃபி  தினம் போஸ்ட் பார்த்தவுடன் காஃபிக்கும் எனக்குமான டாம் அண்டு ஜெர்ரி நினைவுகள் ஓடிப் பிடித்து விளையாடின.

மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டுமெனில் என்னுடைய முதல் தேர்வு தேநீர். சிறுவயதிலிருந்து தேநீரின் மீது ஒருவித ஈர்ப்பு. காஃபிக்கு இரண்டாமிடம் தான். 


புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த பிறகு விடுதி மெஸ்ஸுக்கு முதல் இரண்டு நாள் போகவே இல்லை.

கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்த எனக்கு, பல்கலைக்கழக வளாகமும் விடுதி சூழலும் வேற்றுக்கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற பிரம்மையை உண்டு பண்ணி இருந்தது. யமுனா ஹாஸ்டலில் நான் ஒருத்தி தான் தமிழ்ப் பெண். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மணிப்பூர், நாகாலாந்து, மும்பை, குஜராத், அசாம், மேகாலயா...... இப்படி ஒரு குட்டி இந்தியாவே எங்கள் விடுதியில் இருந்தது. அப்போது அவர்களிடம் உரையாடும் அளவிற்கு ஆங்கிலம் தெரியாததால் வகுப்பறைக்குச் சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கதவைச் சாத்திக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பேன். ஒரு வாரம் வரை தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

மெஸ்ஸில் சாப்பாடும் கூட மனதுக்கும் நாவுக்கும் உவப்பானதாக இல்லை. காலையில் சப்பாத்தி, பூரி, ஆலு பரோட்டா, பரோட்டா வகையறாக்கள் காலை உணவைத் தவிர்க்கும்படியாகச் செய்துவிட்டன. மதியத்தில் சாம்பாரும் கூட நம்ம ஊர் சாம்பார் போல இருக்காது. அதனால் தினமும் மோர் அல்லது ரசம் இதோடு முடித்துக் கொள்வேன். பிரட் ஜாம் மற்றும் பிஸ்கட்  எப்போதும் இருக்கும். அது ஓரளவு பசியாற்றிவிடும்.

விடுதியில் இரண்டாவது வாரத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலைப்பொழுதில் மெஸ் பக்கம் சென்றேன்.ஒரு கேன் நிறைய பால், ஒரு கேனில் காஃபி டிக்காஷன், ஒரு கேனில் டீ. பக்கத்தில் ஒரு தட்டில் சில பிஸ்கட்டுகள். ஹாஸ்டலில் மாலையில் டீ காஃபி உண்டு என்பதே அன்று தான் தெரிந்து கொண்டேன்.

அப்போது என்னிடம் தனியா டீ கப் இல்லை. அதனால் மெஸ் அக்காவிடன் சில்வர் டம்ளர் கேட்டு வாங்கி காஃபி கேனைத் திறந்து  கிளாஸ் நிறைய டிக்காஷனை ஊற்றிவிட்டேன். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த அந்தக்கா, எம்மாடி இரும்மா இப்படிப் பண்ணக் கூடாது என்று என்னுடைய டம்ளரில் இருந்த டிக்காஷனை மறுபடி காஃபி கேனில் ஊற்றிவிட்டு, கொஞ்சம் பால், கொஞ்சம் டிக்காஷன், கொஞ்சம் சர்க்கரை மூன்றையும் ஒரு ஸ்பூனால் கலக்கிவிட்டு இப்போ குடி என்றார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

எனக்கு நினைவு தெரிந்து நான் சுவைத்த முதல் காஃபி. வேண்டாத காலம் போல. முதல் மிடறு உள்ளிறங்கியதும் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தேன். மொட்டை மாடி சுவரின் மீதிருந்த காஃபியை அதன் பிறகு தொடவே இல்லை. 

டீக்கடைக்குச் சென்றால் கூட உடனிருக்கும் நண்பர்கள், தோழிகள் காஃபி சொல்லலாமா என்றால் எனக்கு மட்டும் டீ சொல்லுங்க என்பேன். சுமார் எட்டு வருடம் காஃபியும் நானும் பாராமுகமாவே இருந்துவிட்டோம்.

ஆரோவில் வீட்டுக்கு வந்த பிறகும் டீ மட்டும் தான் எனக்குத் துணை.

எதிர்வீட்டில் வசிக்கும் தோழி மாளவிகாவின் அறிமுகம் கிடைத்தபிறகு ஹாய் ஹவ் ஆர் யூ என்பதைத் தாண்டி ஒருநாள் காஃபி குடிக்கலாமா பாரதி என்று அழைத்தார். முதல் அழைப்பு வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அதேசமயம் எனக்கு டீ தான் பிடிக்கும் என்று சொல்லி என் விருப்பத்தை வெளிப்படுத்தவும் முடியவில்லை. சரி என்று அவர்களோடு காஃபி சந்திப்பிற்குச் சென்றேன்.

காலம் ரொம்பவே விசித்திரமானது. நான் அருந்திய இரண்டாவது காஃபி அத்தனை கசப்பான அனுபவத்தைக் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் முதல் குமட்டலான காஃபி அனுபவத்திலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுவையான காஃபி. ரம்மியமான உரையாடல். மனம் நிறைவாக இருந்தது.

டீ குடிக்க வேண்டும் என்றால் பாரதி ஒரு டீ என்பார் மாளவிகா. எனக்கு காஃபி குடிக்க வேண்டும் என்றால் மாளவிகா ஒரு காஃபி குடிக்கலாமா என்பேன். நான் போடும் தேநீருக்கு மாளவிகா ரசிகை. மாளவிகாவின் காஃபிக்கு நான் பரம ரசிகை.

சொல்லப்போனால் சில மாதங்களாக தினமும் அதிகாலையில் மாளவிகா மொபைலில் ஒலிக்கும் ஆளுமா டோலுமா பாடலும் மாளவிகா போடும் காஃபியும் தான் எனது அதிகாலையைச் சோம்பல் முறித்து எழுப்பி விடுகிறது.

அதன்பிறகு, பிரபஞ்சன் சாருடைய நட்பு கிடைத்தபிறகு அவரோடு சேர்ந்து பாண்டிச்சேரி இண்டியன் காஃபி ஹவுஸில் காஃபி அருந்தி இருக்கிறேன். அவர் ஒரு காஃபி பிரியர். அவரோடு உரையாடிக் கொண்டே காஃபி அருந்திய தருணங்கள் மறக்க முடியாதவை. தந்தையின் நெருக்கத்தை உணரச் செய்யும் இயல்பான அன்பு அவருடையது.

அடுத்தது, சமீபத்தில் சென்னையில் தோழி அகிலாவின் வீட்டில் அதிகாலை குடித்த ஃபில்டர் காஃபி. அடடே, பேஷ் பேஷ், ரொம்ப நல்லாருக்கே டைப் காஃபி ரகம். சென்னைக்குச் சென்றால் அகிலாவின் அன்பு மணக்கும் சூடான காஃபி குடிக்கலாம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது..

காஃபியும் தோழமையும் தான் எத்தனை உன்னதமானது.


**மனுஷி**

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மீனம்மா


ஆரோவில்லுக்கு வந்த நாள் முதலாய் தினமும் காலையில் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு ஓங்கி ஒலிக்கும் குரல் மீனம்மாவுடையது. எங்கள் தெருவின் கர்ஜனை குரல். எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் மீனும்மா… எம்மா மீனும்மா… என்ற மீனம்மாவின் குரல் டங்கென்று வந்து தட்டி எழுப்பிவிடும்.

நாற்பதைக் கடந்த பெண்மணி. அநாயசமாக அள்ளிச் சொருகிய நூல் சேலை. கொஞ்சம் ஒல்லியான தேகம். ஆனால் உருவத்துக்கும் குரலுக்கும் ஏக தூரம். பத்து வீட்டுக்குக் கேட்கும் அவர் குரல்.

எனக்கும் மீனம்மாவுக்கும் இடையிலான வியாபார நிமித்த தொடர்பு வெறும் ஐம்பது ரூபாய் தான். ஏனென்றால் தொடக்கத்தில் ஐம்பது ரூபாய்க்கு சங்கரா மீன் வாங்குவதோடு நிறுத்திக் கொள்வேன். வேறெந்த உரையாடலும் இருக்காது. 

நான் சமைக்கக் கற்றுக் கொண்டது ஆரோவில் வீட்டுக்கு வந்தபிறகுதான். அதிலும் அசைவம் சமைக்கக் கற்றுக் கொண்டது மீனம்மாவால்தான். பிறகு சங்கரா மீன் தான் என்னுடைய பிரதான அசைவ உணவாக ஆகிப் போனது.

ஐம்பது ரூபாய்க்கு மீனம்மா கொடுக்கின்ற பத்து அல்லது பன்னிரெண்டு மீன்கள் எனக்கும் டைகருக்கும் போதுமானது. டைகர் அசைவம் தவிர வேறொன்றும் சாப்பிடாதவன். பின்னாளில் தயிர் சாதம் கூட சாப்பிடும் அளவுக்கு அவன் தாராள மனம் கொண்டவனாக மாறிப் போனான் என்பது வேறு கதை. இப்போது டைகருக்கும் அவன் மனைவி மைக்கன்னிக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டியிருக்கிறது. 

ஒருமுறை மீன் வாங்கினால் பாதிப் பாதியாகப் பிரித்து இரண்டு நாட்களுக்கு மீன் குழம்பும் மீன் வறுவலும் என சமையல் களைகட்டும்.

ஒருநாள் இறால் கொண்டு வந்தார் மீனம்மா. எம்மாஃப்ரஷ்ஷா எறா இருக்கு வாங்கிக்க என்றார்.

இறால் நண்டு என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு. என் பால்ய காலம் தொடங்கி, கல்லூரியில் படிக்கும் வரை நான் சுத்த சைவம். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் இவை தவிர வேறு சாப்பிட்டதாக நினைவில்லை. முட்டை கூட சாப்பிட மறுத்த காலம் அது. ஆனால், அக்கா வீட்டில் இறால் சமைத்தாலோ, நண்டு சமைத்தாலோ சைவத்திற்குப் பிரேக் விட்டுவிடுவேன். சோறு கூட சாப்பிட மாட்டேன். இறால், நண்டு மட்டும் தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுவேன். வீட்டில் கிண்டல் செய்வார்கள். இறால் நண்டு என்றால் மட்டும் சைவம் கண்ணுக்குத் தெரியாது இவளுக்கு என்று. 

எது தேவையோ அதுவே தர்மம் என்று அப்போதே இருந்திருக்கிறேன் போல. 

மீனம்மா இறால் கொண்டு வந்திருக்கிறார் என்றதும் நேராகப் போய் நூறு ரூபாய்க்கு வாங்கி, ஆய்ந்து தரச் சொல்லிவிட்டு, கூடவே எப்படிச் சமைக்க வேண்டும் என்கிற சமையல் டிப்ஸையும் கேட்டுக் கொண்டேன்.

அன்றைய இறால் தொக்கு அவ்வளவு சுவையாக இருந்தது.

அடுத்த சில நாட்களில் நண்டு கொண்டு வந்தார். மீன் கூடையில் இருந்த நண்டைப் பார்த்ததும் ஆர்வம் தாங்காமல் இருநூறு என்று சொன்னதும் பேரம் பேசாமல் வாங்கிக் கொண்டேன். கூடவே நண்டு சமைப்பது எப்படி என்று சமையல் குறிப்பையும் கேட்டுக் கொண்டேன்.

எங்கள் தெருவுக்குத் தினமும் மீனம்மா வந்தாலும் வாரத்தில் இரண்டு நாளாவது என்னிடம் மீன், இறால், நண்டு இவற்றை விற்றுவிட்டுத்தான் கிளம்புவார். காசு இல்லம்மா என்றாலும் பொறவு கொடேன். என்னா இப்போ ஆயிப் போச்சு. இப்பவே எடுத்து வச்சா தான் ஆச்சுனு நிக்கற போல பேசுற. ஆக்கித் துன்னுட்டு நல்லா இருந்தா குடு. இந்தா என்று கூறு கட்டி வைத்துவிடுவார்.

சில நாள் மீனம்மா வந்து குரல் கொடுத்தால் இன்று மீன் வாங்குவதே இல்லை என்று தீர்மானத்தோடு இருப்பேன். ஆனாலும் அவர் மீன்களை எடுத்து வைத்துவிட்டு இந்தா இந்தக் கூறு எடுத்துக்க. நூறு ரூபா தான். ஐஸ்ல லாம் வச்சு எடுத்துனு வர மாட்டேன். வலை மீன். சும்மா எடுத்துக்க என்பார். 

இவ்வளவு உரிமையா எடுத்து வைக்கிறாங்களே, வேண்டாம் என்று சொல்லக் கூடாது எனச் சங்கடத்தோடு வாங்கிச் சென்று விடுவேன். ஆனால், அவர் சொல்வது போல மீன் ஃப்ரெஷ்ஷாகத்தான் இருக்கும்.

வலைக்குள் மாட்டிய மீன் போல மீனம்மாவின் வாய்ச் சாமர்த்தியத்திற்கு நான் மட்டுமல்ல. பக்கத்து வீடு, எதிர்வீடு, மேல்வீடு என சிக்காமல் இருக்க முடியாது. வெறும் வியாபார யுக்தி மட்டும் அல்ல அந்தக் குரல். தொடக்கத்தில் மீனம்மாவின் சத்தமான குரல் கேட்கும்போது என்ன இவ்ளோ அதிகாரமா மீன் வாங்கிக்க சொல்றாங்க எனத் தோன்றும். ஆனால் போகப் போகப் புரிந்தது அது வெள்ளந்தி மனதின் குரல் என.

இப்போதெல்லாம் அதிகமாக நண்டும் இறாலும் கொண்டு வருகிறார். ஒருமுறை நான் சொல்லி இருந்தேன். நண்டு இறால் என்றால் எனக்கு உயிர் என்று. அதனால் நண்டு எடுத்து வந்தால் ஒரு கூறு எடுத்து ஆய்ந்து ஒரு கவரில் போட்டு எனக்காக எடுத்து வைத்துவிட்டுப்போகிற அளவுக்கு அவருக்கும் எனக்கும் உரிமை உண்டாகி இருந்தது.

இன்றும் ஃப்ரெஷ் நண்டு கொண்டு வந்திருந்தார். பெரிய பெரிய நண்டு. கவலை மீனும் இருந்தது. பெரிதாகச் சமைக்கிற மனநிலை இல்லை. அதனால் புல்லட்டுக்கும் புரூஸ்லிக்கும் மட்டும் ஐம்பது ரூபாய்க்கு வாங்கலாம் என்று மீனம்மாவிடம் போனால் ஏழு பெரிய நண்டைக் கூறு கட்டி வைத்து எறனூரு ரூபாய் எடுத்துக்க என்றார். எம்மா, ஏற்கனவே உனக்கு நான் பாக்கித் தரனும், நண்டுலாம் வேண்டாம். மீன் மட்டும் ஐம்பது ரூபாய்க்குக் கொடுங்க என்றேன்.
நண்டு வாங்க வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் இருந்தாலும் பாக்கியைக் கொடுத்துவிட்டுத்தான் வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டேன். அதற்குள் புல்லட்டும் புரூஸ்லியும் மீனம்மாவின் குரல் கேட்டு மீன் கூடை அருகில் மீன் கேட்டு பெரிய கலாட்டாவே செய்து விட்டார்கள். பெரிய மீன் என்பதால் அவரிடம் கேட்டு ஒரு மீனை இரண்டு துண்டாக்கி இரண்டு பேருக்கும் போட்டதும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அடுத்த மீனுக்காகக் கத்தினார்கள்.

மீனை ஆய்ந்து கொண்டே, எம்மா, நண்டு தான் உனக்குப் பிடிக்குமே ஒரு கூறு எடுத்துக்க என்றார். இல்லம்மா பாக்கி செட்டில் பண்ணிட்டு வாங்கிக்கிறேன் என்றேன் மீண்டும். அட காசு யாரு கேட்டா. சும்மா செஞ்சு சாப்டு. சாப்பிடறதுக்குத்தானே எல்லாம். காசு இருக்கும்போது அம்மாகிட்ட கொடு. இல்லனா பரவால்ல. என்னா வந்துடுச்சு இப்ப. காசு இல்லனுலாம் வேனாம்னு சொல்லாத.

அவர் சொன்னதும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்திருந்தேன். அந்த மீன் நண்டை விற்றால் தான் அவருக்கு வருமானம். ஆனாலும் எப்படி இவ்வளவு நம்பிக்கையும் தாராள மனமும். நினைக்க நினைக்க மனம் நெகிழ்ந்தது.

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் மீனை ஆய்ந்து பாத்திரத்தில் போட்டுவிட்டு நண்டை ஓடு நீக்கி ஆய்ந்து கொடுத்தார்.

மீதி இருந்த நண்டை விலைபேசி பக்கத்து வீட்டில் விற்றுவிட்டு, எம்மா, பாரதி ஒரு டீத்தண்ணி போட்டு கொடேன் என்றார்.

மீனம்மாவின் அன்பினால் தேநீரின் சுவை கூடியிருந்தது.

நானும் மீனம்மாவின் சியர்ஸ் சொல்லிக் காலை நேரத் தேநீரைக் குடித்து முடித்தோம்.

சியர்ஸ்……