வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

எனக்குப் பிடித்த சிறுகதை - வெறும் நுரை -- டொனால்ட் ஏ ஏட்ஸ்

உலக சிறுகதை

வெறும் நுரை

(டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர். பத்திரிகையாளராகவும், அயல் உறவுத்துறை அதிகாரியாகவும் செனட்டராகவும் பணியாற்றியவர். நிறைய கட்டுரைகளும், குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் எழுதியவர். 'வெறும் நுரை மட்டும்' என்ற இந்த கதையாலேயே கொலம்பியா முழுக்க பிரபலமடைந்தவர். லத்தீன் அமெரிக்க சிறுகதைத் தொகுப்புகளில் அடிக்கடி இடம்பெறும் கதை இது. Patmenees என்பவரால் தொகுக்கப்பட்ட 'Contemporary Latin American, Short Stories (1974)’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு தேர்ந்த தொழிலாளி. தன் தொழில் மேல் தான் கொண்ட மரியாதையை எந்தக் காரணத்தாலும் சிதைத்துக் கொள்ளமாட்டான். வாய்ப்பு கிடைத்தாலும் கூட, ஒரு கலைஞன் தன் கடமை தவறமாட்டான் என்கிறது இந்த உலகப் புகழ் பெற்ற சிறுகதை.)

உள்ளே நுழைந்தபோது அவன்  ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக் கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை. என்னுடைய உணர்ச்சியை மறைத்துக்கொள்ளும் முயற்சியில் நான் தொடர்ந்து தீட்டிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் அவனுடைய துப்பாக்கி உறை தொங்கவிடப்பட்டதும், குண்டுகள் பொருத்தப்பட்டதுமான பெல்ட்டை அவிழ்த்து சுவற்றிலிருந்த ஒரு கொக்கியில் தொங்கவிட்டு அதன்மேல் தன்னுடைய ராணுவத் தொப்பியை வைத்தான். பிறகு என் பக்கம் திரும்பி கழுத்துப்பட்டியின் முடிச்சை நெகிழ்த்திக்கொண்டு, "வெப்பம் கடுமையாக இருக்கிறது எனக்கு சவரம் செய்து விடு'' என்று நாற்காலியில் உட்கார்ந்தான்.

நான் கவனமாக சோப்பைத் தயாரித்தேன். சிறு துண்டுகளாக வெட்டி கப்பில் போட்டு கொஞ்சம் வெந்நீர் விட்டு பிரஷ்ஷால் கலக்க ஆரம்பித்தேன். உடனே நுரை எழத் தொடங்கியது. 'எங்கள் பிரிவில் இருக்கும் மற்ற சிப்பாய்களுக்கும் இதே அளவு தாடி இருக்கும்' என்று அவன் சொன்னான். புரட்சியாளர்களை பிடிக்கும் பரபரப்பில் சில நாட்களாக இவனும் இவனது குழுவினரும் சவரம் செய்யவில்லை. நான் நுரை கலக்குவதைத் தொடர்ந்தேன். 

"நாங்கள் காரியத்தை சரியாகச் செய்தோம். தெரியுமா. முக்கியமானவர்களைப் பிடித்து விட்டோம். சிலரைப் பிணமாக எடுத்து வந்தோம்; சிலரை உயிருடன் பிடித்துள்ளோம். ஆனால் விரைவில் அவர்கள் எல்லாரும் இறப்பது நிச்சயம்.'

"எத்தனை பேரை பிடித்தீர்கள்?'' நான் கேட்டேன்.

"பதினாலு பேர். காட்டுக்குள் ரொம்பதூரம் போய்தான் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்களைப் பழிவாங்கியே தீருவோம். ஒரு ஆள்கூட இந்த வேட்டையில் உயிர்தப்ப முடியாது'' என்றபடியே நாற்காலியில் பின்புறமாக சாய்ந்தான். 

'எங்கள் செய்கையிலிருந்து இந்த ஊர் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்' என்றான் அவன்.

'ஆமாம்' என்றேன்.

'அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் நடந்தது அற்புதமான சம்பவம், இல்லையா?'

'ஆமாம். நன்றாக இருந்தது' என்று சொல் லியபடி பிரஷ்ஷை எடுக்கத் திரும்பினேன்.

களைப்பை வெளிப்படுத்தும் பாவத்தோடு அவன் கண்களை மூடிக்கொண்டு சோப்பின் குளிர்ச்சியான ஸ்பரிசத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இவ்வளவு நெருக்கமாக எப்போதும் அவன் என்னருகில் இருந்ததில்லை. நான்கு புரட்சியாளர்களைத் தூக்கிலிடுவதைப் பார்ப்பதற்காக பள்ளிக்கூட உள்முற்றத்தில் நகர மக்கள் எல்லாரையும் கூடச் சொல்லி அவன் உத்தரவிட்டிருந்த அந்த ஒரு நாளில் அவனை முகத்துக்கு நேராக ஒரே ஒரு கணம் பார்த்திருக்கிறேன். சிதைந்துபோன உடல்களின் கோரக் காட்சி, அன்றைய சம்பவத்தை ஏவி நடத்திய அவனுடைய முகத்தை நான் பார்ப்பதைத் தடுத்தது. அந்த முகத்தை இப்போது நான் என் கையில் ஏந்தப் போகிறேன்.

அவனுடைய பெயர் கேப்டன் டோரெஸ். கற்பனை நிரம்பியவன்தான். ஏனென்றால் வேறு யார் புரட்சியாளர்களை நிர்வாண மாக்கி தூக்கிலிட்டபிறகு சுட்டுப் பயிற்சி பெற அவர்களுடைய உடல்களை இலக்குக் குறிகளாக்குவார்கள்?

சோப் நுரையைப் பூசுவதை நிறுத்திவிட்டு ஆர்வம் தொனிக்காத பாவனையில் கேட்டேன், 'புரட்சியாளர்களை சுட்டுக் கொல்லப் போகிறீர்களா?'

'அதுமாதிரிதான். ஆனால் போன தடவைபோல வேகம் இருக்காது.'

அவனுடைய தாடிக்கு நான் தொடர்ந்து சோப் நுரையைத் தடவினேன். என்னுடைய கைகள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. அதை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எனக்கு சாதகமாக இருந்தது. அவன் என்னுடைய கடைக்கு வராமலிருப்பதையே நான் விரும்பியிருப்பேன். என்னுடைய குழுவிலிருக்கும் பலபேர் அவன் இங்கு நுழைந்ததைப் பார்த்திருக்கக்கூடும். 

என்னிடம் வரும் எந்த வாடிக்கை யாளருடைய தாடியையும், கவனமாக வும், மென்மையாகவும் எந்த ஒரு மயிர் கண்ணும் ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட வெளியேற்றாதபடியும் சவரம் செய்யும் கடமை எனக்கு உண்டு. நான் ஒரு ரகசிய புரட்சியாளன் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயம் நான் ஒரு மனசாட்சி யுள்ள நாவிதனும்தான். என்னுடைய தொழிலுக்குத் தேவைப்படும் துல்லியம் குறித்த பெருமிதமும் எனக்குண்டு.

ஒரு பக்க காதோர முடி யிலிருந்து கீழ்நோக்கி  சவரத்தைத் தொடங்கி னேன். கண்களை மூடிக் கொண்டிருந்த அவன் அப்போது கண்களைத் திறந்து துணியின் அடியி லிருந்து ஒரு கையை எடுத்து சோப்பு நுரை நீங்கி சவரம் செய்யப்பட்ட இடத்தைத் தடவிப் பார்த்துவிட்டு சொன்னான். 'இன்றைக்கு ஆறு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா.'

'அன்றைக்கு நடந்தது போலவா?' என்று பீதியுடன் கேட்டேன்.

'அதைவிட மேலானதாகவும் இருக்கலாம்' என்றான் அவன்.

மீண்டும் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். நான் சவரத்தைத் தொடர்ந் தேன். 

'அவர்கள். எல்லாரையும் தண்டிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா?' மருட்சியுடன் கேட்டேன்.

'எல்லாரையும்தான்.'

இப்போது மறுபக்க காதோர முடியிலிருந்து சவரக்கத்தி கீழ்வாக்காக இறங்கியது. கழுத்துப்பகுதியை மிருதுவாக சவரம் செய்ய முயன்றேன்.

எங்களில் எத்தனை பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரின் உடல்களை உருக்குலைக்க அவன் உத்தரவிட்டிருக்கிறான்? அதைப் பற்றி நினைக்காமலிருப்பதே நல்லது. நான் அவனுடைய எதிரி என்பது டோரெஸுக் குத் தெரியாது. பிறருக்கும் தெரியாது. கொஞ்ச பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது. அப்படி இருந்தால்தான் நகரத்தில் டோரெஸ் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையும், புரட்சி யாளர்களை வேட்டையாட அவன் என்ன திட்டமிடுகிறான் என்பதையும் என்னால் புரட்சியாளர்களுக்குத் தெரிவிக்க முடியும்.

நான் ஒரு புரட்சியாளன். கொலைகார னில்லை. இவனைக் கொல்வது எவ்வளவு எளிதானது. கொல்லப்பட வேண்டியவன் தான். 

ஒரு சிறு சத்தத்துடன் இந்தத் தொண்டையை என்னால் அறுத்துவிட முடியும்! எதிர்த்துப் போராட அவனுக்கு நான் நேரம் தரமாட்டேன். கண்களை மூடிக்கொண்டிருப்பதால் மின்னும் கத்தி யையோ அல்லது என்னுடைய மின்னும் கண்களையோ அவன் பார்க்கமாட்டான்.

ஒரு உறுதியான இழுப்பு, ஒரு ஆழ்ந்த வெட்டு எந்த வலியையும் தடுத்துவிடும் என்று நான் திடமாக நம்புகிறேன். அவன் துன்பப்படமாட்டான். ஆனால் நான் அந்த உடலை என்ன செய்வது? எங்கே மறைப் பேன்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் வெகு தொலைவில் எங்காவது அடைக்கலம் தேடவேண்டியிருக்கும். ஆனால் என்னைப் பின்தொடர்ந்து அவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள். 'கேப்டன் டோரெஸைக் கொன்றவன். அவனுக்கு சவரம் செய்யும்போது அவனுடைய கழுத்தை அறுத்தவன்-கோழை' என்பார்கள்.

அடுத்து மறுதரப்பில்  'நம் எல்லார் சார்பிலும் பழிவாங்கியவன். நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய பெயர் அவனுடையது. அவன் நம் ஊரில் நாவிதனாக இருந்திருக் கிறான். நம்முடைய போராட்டத்தை ஆதரித்திருக்கிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை' என்பார்கள்.

கொலைகாரனா? அல்லது வீரனா? இந்த சவரக்கத்தியின் முனையைச் சார்ந்து தான் என்னுடைய விதி இருக்கிறது. என்னுடைய கையை லேசாக திருப்பி, கத்திக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து அதை உள்ளே அமிழ்த்திவிட முடியும்.

ஆனால் நான் ஒரு கொலைகாரனாக ஆக விரும்பவில்லை. நீ வந்தது சவரம் செய்துகொள்வதற்காக. நான் என்னுடைய வேலையை கௌரவமாக செய்கிறேன். என்னுடைய கைகளில் ரத்தம் படிவதை நான் விரும்பவில்லை. வெறும் நுரை மட்டும் போதும். நீ தூக்கிலிடுபவன். நான் வெறும் நாவிதன். சமூக அமைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.

இப்போது அவனுடைய தாடை சுத்தமாகவும் மழமழப்பாகவும் சவரம் செய்யப்பட்டு விட்டது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடியில் பார்த்தான். கையால் முகத்தைத் தடவி அதன் புத்துணர்ச்சியை உணர்ந்தான்.

'நன்றி' என்று சொன்னான். கொக்கியிலிருந்து அவனுடைய பெல்ட், துப்பாக்கி, மற்றும் தொப்பி ஆகியவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டான். கால் சட்டைப் பையிலிருந்த சில நாணயங்களை எடுத்து என்னுடைய வேலைக்காகக் கொடுத்துவிட்டு கதவை நோக்கி நடந்தான்.

வாசற்படியில் கொஞ்சம் தயங்கி நின்றபின் அவன் சொன்னான். 'நீ என்னைக் கொன்று விடுவாய் என்று அவர்கள் சொன்னார்கள். அது நடக்குமா என்று பார்க்கத்தான் வந்தேன்.

ஆனால் கொல்வது அவ்வளவு எளிதல்ல.   இந்த  விஷயத்தில் நீ என்னுடைய வார்த் தையை நம்பலாம்' என்று சொல்லிவிட்டுத் திரும்பிய அவன் நடந்து போய்விட்டான்.

நன்றி: ஆக்கிரமிக்கப்பட்ட வீடு 
(புதுப்புனல் வெளியீடு)
டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர்

Via : http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=621:2015-01-31-14-27-13&catid=40:-2015

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அம்மா என்பவள்

யாருடைய முகநூல் பக்கத்தில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. இறக்கை குறும்படம் பற்றி சின்ன பதிவு கூடவே ஒரு லிங்க். யூடியூபில் பார்த்தபின்   வானத்தில் பறந்து போகும் பறவைகளின் சாயலில் அம்மாக்களின் முகம் தெரிந்தது.

அன்னையர் தினம் அன்று அம்மா குறித்து எழுதப்பட்ட பிரபஞ்சனின் சிறுகதை, சுமதி ரூபனின் சிறுகதை, கரிகாலனின் கவிதை, இளம்பிறையின் கவிதை இவற்றுடன் ம நவீன் இயக்கிய இறக்கை குறும்படத்தையும் நினைத்துக் கொண்டேன். (நவீன், வல்லினம் எனும் இணைய இதழையும் நடத்தி வருகிறார்)
இறக்கை குறும்படம் அம்மா எனும் பிம்பம் குறித்த சமூக மதிப்பீட்டின்மீது காத்திரமான விமர்சனத்தை முன்வைக்கிறது.

அம்மா என்பவள் எப்போதும் சமைத்துக் கொண்டேயிருப்பவள். வீட்டு வேலைகளைப் பார்ப்பவள். குழந்தைகளை வளர்ப்பவள். அப்பாவின் பேச்சினை மீறி யாதொன்றும் செய்யத் துணியாதவள். கருணை மிக்கவள். சகிப்புத் தன்மை கொண்டவள். விட்டுக்கொடுப்பவள். கருணையும் அன்பும் கொண்டவள்..... இப்படி இப்படியாகத்தான் அம்மாவை வடிவமைத்து வைத்திருக்கிறது சமூகம். உணர்வுகளும் கனவுகளும் சுய விருப்பு வெறுப்புகளும் கொண்ட சக மனுசி என்கிற உணர்வு கிஞ்சித்தும் அவளுக்கு இருந்துவிடக் கூடாது. அப்படி கனவுகளைச் சுமப்பவள் 'நல்ல' அம்மா என்ற வரையறைக்குள் வரமாட்டாள்.

நமது ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே இது தொடங்கி விடுகிறது. குடும்பம் என்றால் என்ன என்று குழந்தைக்குக் கற்பிக்கையில் அம்மா சமைப்பாள்; அப்பா பேப்பர் வாசிப்பார்; அக்கா வீடு பெருக்குவாள்; தம்பி விளையாடுவான். அங்கேயே தொடங்கிவிடுகிறது குடும்ப அமைப்பிற்குள் அம்மா என்பவள் யார் என்பது குறித்த கற்பிதம். அக்காவும் கூட அம்மாவின் இன்னொரு நீட்சியாக ஆகிப் போகிறாள். வெண்ணிலாவின் கவிதை ஒன்றில் பேப்பர்க்காரன் வந்தால் அப்பாவைக் கூப்பிடவும் காய்கறிக்காரன் வந்தால் அம்மாவைக் கூப்பிடவும் யாரும் சொல்லித் தராமலேயே கற்றுக் கொள்கிறது குழந்தை என்று எழுதியிருப்பார். குழந்தைகள் வீட்டில் இருந்தே கற்றலை துவங்கிவிடுகிறார்கள். வீட்டில் உள்ள பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள். அதன்பின்பு பள்ளிக்கூடத்தில் தங்களது கற்றலை விரிவுபடுத்திக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஆண் பெண் உறவுநிலைசார் மதிப்பீடுகள் இப்படித்தான் குழந்தைகள் மனதில் பதியப்படுகின்றன.

என் அம்மாவுக்கு இறக்கைகள் இருக்கிறது. அவள் வானத்தில் பறப்பாள். அவளது எல்லை வானம் தான். ஆனால் சமையலறையும் படுக்கையறையும் தான் அவளது எல்லையாகச் சுருக்கப்படும் அவலம் தான் நிதர்சனம் என்பதை நறுக்கென ஆறு நிமிடத்தில் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கதைக்கருவுக்கான களனாக பள்ளிக்கூடத்தைத் தேர்வு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது. என் அம்மா குறித்து அந்தச் சிறுமி எழுதி வந்த 'நிஜ' அம்மாவைச் சிவப்பு மையால் அடித்துக் காட்டியிருப்பதும், அம்மா செய்யும் வீட்டு வேலைகளைப் பட்டியல் போடும் மாணவனைப் பாராட்டுவதும் கல்விமுறை மீதான காத்திரமான விமர்சனம்.
நமது கல்விமுறையில் இருக்கின்ற கோளாறுகள் களையப்பட வேண்டும் மாற்றுக் கல்விக்கான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இக்குறும்படம்.

கடைசிக் காட்சியில் குறைந்த ஒளியில் சமையலறையில் வானலில் எதையோ வறுத்துக் கொண்டிருக்கும் அந்த அம்மா ஜன்னலின் வழியாக பறந்து விரிந்த ஆகாயத்தில் வெள்ளைப் பறவை பறந்து செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பதாகக் காட்டியிருபது கவித்துவம்.

பள்ளிகளில் இம்மாதிரியான குறும்படங்களைத் திரையிட்டு அது சார்ந்த ஒரு உரையாடலை / விவாதத்தை நிகழ்த்த வேண்டும்.
மாற்றத்தை நோக்கி நமது கால்கள் நகரட்டும்.

படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

குறும்படத்தைக் காண :- 

https://youtu.be/kvBKlA9KrSU

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஒரு ரூபாய் காயின் போன்கள்

ஒரு ரூபாய் காயின் போட்டு பேசும் போனைப் பார்த்து வருடக் கணக்காகிறது.

மஞ்சள், நீலம், சிவப்பு என மூன்று வண்ணங்களில் அங்கங்கே சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும். குறிப்பாக பெட்டிக்கடைகளுக்கு அருகில். பேருந்து நிலையம் என்றால் எப்போதும் யாராவது யாருக்காவது பேசுவதற்காக அந்த ரிசீவரைக் காதில் வைத்தபடி நம்பரை அழுத்திக் கொண்டு அல்லது கீ கீ சப்தம் வரும்போது 'டொக்'கென்று இன்னொரு நாணயத்தைப் போட்டு பேச்சைத் தொடர்வதைப் பார்த்திருக்கிறேன். காயின் போன் பயன்படுத்துவோருக்குச் சில்லறை தரவெனவே தனியாகச் சில்லறைகளை வைத்திருப்பார்கள் சில கடைகளில்.

ஊருக்குச் சென்றால் பேருந்தை விட்டு இறங்கியதும் முதலில் கண்கள் தேடுவது காயின் போனைத்தான். அப்போதெல்லாம் பல மொபைல் நம்பர்கள் என் நினைவில் இருந்தன. இப்போது போல் சார்ஜ் தீர்ந்து மொபைல் செத்துப் போக, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைச் சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பு அப்போது இல்லை. ஆண்ட்ராய்டு காலம் போல் அது ஒரு காயின் போன் காலம்.

மொபைல் வாங்குவதற்கு முன்பு கடிதம் வழியாகத்தான் நண்பர்களிடன் உரையாடிக் கொண்டிருந்தேன். எம்.ஏ. சேரும் வரை இந்த நிலை தான். (கடித உரையாடல் போல சுகமாய் இருப்பதில்லை மொபைல் உரையாடல்). எம்.ஏ. சேரும்போது எங்கள் வகுப்பில் ஒரேயொரு பையன் மட்டும் மொபைல் வைத்திருந்தான். அதுவும் ரிலையன்ஸ் மொபைல். அதனுடைய ரிங்டோன் கேட்கும்போதெல்லாம் போன் வச்சுட்டு ரொம்ப தான் சீன் போடுறான் என்று மனசுக்குள் நினைத்ததுண்டு.

பத்து நண்பர்கள் இருந்தால் அதில் ஒருத்தர் அல்லது இரண்டு பேர் தான் மொபைல் வைத்திருப்பார்கள். அது கிட்டதட்ட பொது செல்போன் போலத்தான். யாரேனும் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் அந்த நம்பரைக் கொடுத்து விடுவோம்.

எங்கள் விடுதி வாசலில் கூட ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் போன் வைக்கப்பட்டது. மஞ்சள் நிறப் பெட்டி அது. வெளியிலிருந்து யாரும் அழைக்க முடியாது. இங்கிருந்து யாருக்கு வேண்டுமானாலும் நாணயத்தைப் போட்டுப் பேசிக் கொள்ளலாம். அந்தக் காயின் போன் பிஸியாகவே இருக்கும். கொஞ்ச நாளில் எல்லோர் கையிலும் போன் புழக்கம் வர ஆரம்பிக்கவே காயின் போனுக்கு வேலை இல்லாமல் போனது.

போன் வாங்குவதற்கு முன்பு மாலைப் பொழுதில் தோழிகளுக்கும் சில ஆண் நண்பர்களுக்கும் போன் செய்வதுண்டு. ஆனால் ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு மட்டுமே அழைப்பேன். கையில் சில்லறைகளை வைத்துக் கொண்டு செகண்ட்ஸைக் கண்கள் மேய, கொண்டு வந்த சில்லறைக் காசுகளுக்குள் பேசி முடித்து விட வேண்டும் என்கிற சிறு பதற்றத்துடன் பேசியிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு ரூபாயிலும் அதிகபட்சம் 10 ரூபாய் வரையிலும் பேசியிருப்பதாக எனக்கு நினைவு.

ஒருமுறை நான் காயின் போனில் பேசிவிட்டுச் சென்ற பிறகு, அருகிலிருந்த யாரோ ஒரு பையன் அதே எண்ணுக்கு ரீடயல் போட்டு எனது நண்பன் எனப் பேசி, அது ஒரு சில மாதங்கள் வரை எனக்குத் தெரியாமலேயே நட்பாகத் தொடர்ந்து, பின் காதலாக மலர்ந்தது தனிக்கதை.

ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு கிடைத்த பரிசுத் தொகையில் எனக்கே எனக்காக இரண்டு பொருட்கள் வாங்கினேன். ஒன்று சைக்கிள். இன்னொன்று மொபைல். ஆயிரம் ரூபாயில் நோக்கியா 1100 கருப்பு வெள்ளை மொபைல். அதுவும் தோழி பயன்படுத்திய மொபைல். செல் வாங்கியதும் சிம் கார்டு போட்டால் தான் பேச முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட அப்போது இல்லை. அந்த அறியாமை நிறைந்த நாட்கள் கூட அழகானவை தான்.

நாட்கள் உருண்டோட உருண்டோட மொபைல்கள் மாறிக் கொண்டேயிருந்தன. நிறைய அனுபவங்கள். கண்ணுக்குத் தெரியாமல் சிலவும் தெரிந்து சிலவும் மாறியிருந்தன. சில காணாமல் போயிருந்தன. சில இருந்த தடம் தெரியாமல் மறைந்துவிட்டிருந்தன. அப்படித்தான் கண்ணைவிட்டு மறைந்து போயிருந்தது ஒற்றை நாணய போன்.

நேற்று புதுவையில் செஞ்சி சாலை அருகில் ஒரு தேநீர்க் கடை பக்கத்தில் இந்த காயின் போனைப் பார்த்ததும் சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஒரு ஒற்றை நொடியில் எட்டு வருடங்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டது மனம். இப்போது பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன் தராத மகிழ்ச்சியை காயின் போன் தந்தது.
-- மனுஷி

கதை - கவிதை - கடற்கரை

இலக்கிய உரையாடல்கள் மீண்டும் மீண்டும் குளிரூட்டப்பட்ட அல்லது குளிரூட்டப்படாத அறைகளுக்குள் விவாதிக்கப்படுகின்றன. அந்த அறையைத் தாண்டி கலை இலக்கிய உரையாடல்கள் பொதுவெளியில் மக்கள் கூடும் இடங்களை நோக்கி இடம்பெயர வேண்டும் என்பதைத் தொடர்ந்து நண்பர்களோடு பேசி வருகிறேன். எனது கருத்தினைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது சனிக்கிழமை மாலை மெரினா கடற்கரை மணலில் நிகழ்ந்த நான்கு நூல்கள் அறிமுகக் கூட்டம்.
மேடை, மைக், பேசுபவர், பார்வையாளர்கள் என்கிற அமைப்பு, நான் சரியா தான் பேசுறேனா என்கிற சின்ன பதற்றத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.
ஆனால் கடற்கரை மணலில், மக்கள் பார்வையில் படும்படியாக வட்டமாக அமர்ந்து வாசித்த நூல் குறித்து நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது போல ஒரு நிகழ்வை ஒருங்கமைத்த கார்த்திக் புகழேந்தி மற்றும் அகரமுதல்வனுக்கு அன்பும் பிரியங்களும். மிக இயல்பாக உரையாடலை நிகழ்த்த முடிந்த நிறைவையும் மகிழ்வையும் தந்தது அந்த நிகழ்வு.
லதா அருணாச்சலம், கணேஷ் பாலா, விஜய் மகேந்திரன், தேவர் அப்பா என அன்பின் இனிய நண்பர்கள் பலரைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி.
இலக்கிய உரையாடலில் பங்கெடுக்க மேகம் கூட இறங்கி வந்தது மழையாக.
கடற்கரை காற்றும், மணலும் கதையும் கவிதையும் நண்பர்களுமாக ஒரு நாளைக் கொண்டாடுவது வரமன்றி வேறென்ன?

##அரசனின் இண்டமுள்ளு சிறுகதைத் தொகுப்பு குறித்த பதிவு விரைவில்...

செவ்வாய், 26 ஜூலை, 2016

பேரனுபவத்தின் நிழலில் - மனுஷி

எனது நெருங்கிய நண்பர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்பீட் போஸ்ட் அனுப்பினேன் வந்ததா என்று மெசேஜ் அனுப்பினார். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று ஓடிக் கொண்டிருக்கிற காலத்தில் இன்னமும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி ஆச்சரியத்தில் மூழ்கடிப்பவர். (வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பேசிக் கொண்டாலும் அவ்வப்போது கடிதங்கள் வந்து சேரும்).

திடீரென்று அனுப்புனர் முகவரி இல்லாமல் ஒரு பார்சல் வந்து சேரும். எனக்குப் பிடித்த ஏதோவொரு இனிப்பு வகையோ ஒரு புத்தகமோ அல்லது நான் பயன்படுத்தும் ஏதோவொரு பொருளோ இருக்கும். அது பற்றி நான் பகிர்ந்து கொள்ளும்போதுதான் தெரியும் அது அந்த நண்பர் அனுப்பியது என்று.

புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கும் புத்தகப்புழு. எந்நேரமும் ஏதாவது ஒன்றை அது சிறுபத்திரிகையாகவோ, மொழிபெயர்ப்பு நாவலாகவோ, கவிதை நூலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரை நூலாகவோ அல்லது வெகுஜன பத்திரிகையில் வந்த ஏதோவொரு படைப்பாக அல்லது நேர்காணலாகவோ ஏதாவதொன்றை வாசித்துக் கொண்டேயிருப்பார். வாசித்ததில் பிடித்த பத்திகளை, அல்லது பிடித்த வரிகளை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்வதில்தான் தொடங்கும் பெரும்பாலும் எங்களது உரையாடல். வாசித்த நூல்கள் குறித்து உடனடியாக மதிப்புரை ஒன்றையும் எழுதி முடித்து விடுவார். அவரிடம் நான் வியந்து பார்க்கிற விடயம் அது.

சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் அவர் வாங்கிய நூல்களின் பெயர்ப் பட்டியலை எனக்கு அனுப்பி வைத்தார். என்னுடைய ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதை நூல் அந்தப் பட்டியலில் இல்லை. கொஞ்சம் ஏமாற்றம். நிறைய மகிழ்ச்சி.
காரணம், மார்ச் மாதம் புத்தக வெளியீடு முடிந்த அடுத்த வாரத்தில் அவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். எனது நூல் என் கைவசம் இல்லை. கடைகளிலும் கிடைக்கவில்லை. புத்தகம் கைக்கு வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என மற்ற நண்பர்களுக்குச் சொன்னது போலவே அவரிடமும் சொல்லி இருந்தேன். ஆனால் அனுப்பவேயில்லை. அவரும் அதைப் பற்றி இரண்டு மூன்று முறைக்கு மேல் அனுப்பச் சொல்லி, பிறகு கேட்கவுமில்லை. அவரிடம் சொல்லாமலேயே புத்தகத்தை அனுப்பிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன். நூல் வெளியாகி மூன்றே மாதத்திற்குள் கிடைக்காமல் இருப்பது வரமா சாபமா தெரியவில்லை.

இந்தச் சூழலில் தான் ஸ்பீட் போஸ்ட் அனுப்பி அது வந்து சேர்ந்ததா என நச்சரித்தார் நண்னர்.
போஸ்ட் மேன் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து குரல் கொடுத்துவிட்டுப் போயிருப்பார் போல. சரி அஞ்சல் அலுவலகம் போய் நேரில் கேட்டு விடலாம் என்று கிளம்பினேன். வழக்கம் போல ஏதாவது நூல் அல்லது புதிதாக வந்த இதழ் அனுப்பியிருப்பார் அல்லது அவரது நூல் அனுப்பியிருப்பார் அதனால்தான் திரும்ப திரும்ப கிடைத்ததா எனக் கேட்கிறார் என நானாக யூகித்துக் கொண்டேன். அல்லது வேறெதுவும் விலை மதிக்க முடியாத பொருள் அந்தப் பார்சலில் இருக்கிறதா? ஆர்வம் என்னக் குடைந்தெடுத்தது.

ஒரேயொரு கட்டிடம் கொண்ட சின்ன அறை தான் அஞ்சல் அலுவலகம்.
அஞ்சல் அலுவலகத்தில் இருந்த பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரிந்தது அடிக்கடி போஸ்ட் வாங்க வந்து போயிருந்ததால். எனது பெயர் கூட நினைவு வைத்திருந்தார். போஸ்ட் மேன் வெளியில் போயிருக்கார் கால் பண்ணி கேளுங்கள் என்று நம்பர் கொடுத்தார். அந்த எண்ணுக்கு அழைத்தால் பதினைந்து நிமிடங்களில் வருகிறேன் வெயிட் பண்ணுங்க என்று சொன்னவர் அரை மணி நேரம் கழித்து வந்தார். அதற்குள் என் நண்பர் மூன்று முறை போன் பண்ணி வாங்கியாச்சா என்று கேட்டுவிட்டார். போஸ்ட் மேன் வந்ததும் ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா என்றபடி பார்சலைக் கொடுத்தார். அவர் நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு நன்றி சொல்லிவிட்டு அந்தச் சின்ன கட்டிடத்தை விட்டு தள்ளி வந்து பார்சலைப் பிரித்தேன். எதிர்பார்த்தது போலவே புத்தகம்தான். பார்சலின் வடிவம் பிரிக்காமலேயே சொன்னது. பிளாஸ்டிக் கவரால் கவர் செய்யப்பட்டிருந்தது ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள். நான் எதிர்பாராதது. கண்கள் தளும்பி விட்டன. காணாமல் போன குழந்தை திரும்ப கிடைத்தவுடன் அக்குழந்தையைத் தொட்டுத் தடவி அள்ளி முத்தமிடுவதைப் போல எனது நூலைத் தொட்டுத் தடவிப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து நுகர்ந்து வாசனையை உள்ளிழுத்தேன். வெளியீட்டு விழாவுக்குப் பிறகு அப்போது தான் கையில் தொடுகிறேன் எனது நூலை.

நான் கையெழுத்திட்டு அனுப்பியிருக்க வேண்டும். அவர் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். நாம் இந்நாள் வரை நூல் அனுப்பாமல் இருப்பதால் குத்திக் காட்டுகிறாரோ என்று ஒருகணம் தோன்றியது. அப்படியான நோக்கம் அவருக்கு இருக்காது என உடனடியாக மனதிலிருந்து அந்த நினைப்பை விலக்கி விட்டேன். மானசீகமாக அன்பான நன்றிகளை அவரிடத்தில் சொன்னேன்.
நூலை எழுதியவருக்கே ஒரு வாசகனின் அன்புப் பரிசு என எழுதியவரின் நூலை, எழுதியவருக்கே கையெழுத்திட்டு அனுப்பி வைத்த நிகழ்வு இதற்கு முன்பு எந்தப் படைப்பாளிக்கேனும் நிகழ்ந்திருக்கிறதா? அதைப் பெற்றுக் கொண்ட அனுபவம் வேறு யாருக்கும் வாய்த்திருக்குமோ என்னவோ?
மறக்கமுடியாத பேரனுபவம் அது.
- மனுஷி

ஞாயிறு, 10 ஜூலை, 2016

எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்

எழுத்தாளர் சா தேவதாஸ் சுதந்திர சிந்தனை அமைப்பின் சார்பில் ஒருங்கிணைத்த எழுத்தாளர் பிரபஞ்சனுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு பேரனுபவம்.

திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி இருந்தார்கள்.  காற்றோட்டமான அறை. எந்தவிதமான அலங்கார மேடையமைப்புகளும் இல்லாமல் கிட்டத்தட்ட வட்ட வடிவ ஒழுங்கமைப்பில் தோழர்கள் அந்த அறையில் அமர்ந்திருந்தனர். எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய சிறு அறிமுகத்திற்குப் பிறகு சா.தேவதாஸ் பேசும்போது "எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்" என்றொரு வாசகத்தை முன்னிறுத்திச் சில நிமிடங்கள் பேசினார். சக படைப்பாளியை இவ்வளவு குறைந்த வார்த்தையில் அழகாக அங்கீகரிக்க முடியுமா? தெரியவில்லை.

அவருக்குப் பிறகு, பிரபஞ்சன் பேச எழுந்தார். ஒரு பத்து நிமிடம் பேசுகிறேன். பிறகு நீங்கள் கலந்துரையாட, பேச்சினைத் தொடர்வோம் என்று சொன்னார். அப்போது மணி காலை பத்தரை. ஒரு நாட்டுப்புறக் கதையிலிருந்து பேச்சைத் தொடங்கினார். அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் சொல்லி முடித்தார். பிறகு, புரட்சிக் கவிதையாக எழுதிக் கொண்டிருந்த காலத்தில் தன்னைச் சரியான எழுத்தை நோக்கி புதுமைப்பித்தனின் கதைகள் தான் நகர்த்திச் சென்றன என்று சொன்னவர் புதுமைப்பித்தன் எழுதிய மெஷின் மனிதன் கதையை அழகாகத் தனக்கேயுரிய பாவனையுடனும் ஏற்ற இரக்கங்களுடனும் சொன்னார்.

இப்படியாகக் கொஞ்சம் கதைகள், பிறகு அவரது அப்பா - அம்மா - குடும்ப சூழல், சிறு வயதில் தான் வாசிப்புக்குள் நுழைந்த அனுபவம், இளமைக்காலக் குறும்புகள், தான் எழுதிய முதல் கதை, அந்தக் கதை முதலில் நிராகரிக்கப்பட்டு பிறகு வேறொரு பத்திரிகையால் அங்கீகரிக்கப்பட்ட கதை, பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம், மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்களின் பால் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு, மகாபாரதக் கதைகளைக் களைத்துப் போட்டு வேறொரு கோணத்தில் பாரதக் கதை மாந்தர்களை முன்வைத்த அவரது பார்வை, இன்றைய இலக்கியச் சூழல் - இப்படி ஏராளமான அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் தனது பேச்சினூடாகச் சொன்ன ஒரு விடயம் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டது. "சமூகத்தை நேசிக்கின்ற ஒருவனை, சமூகம் ஒருபோதும் கைவிடுவதில்லை. தோழர்களை நேசிக்கின்ற ஒருவனை, தோழர்கள் ஒருபோதும் கை விடுவதில்லை" என்பதுதான் அது. உண்மை.

கிட்டத்தட்ட மணி 12.45ஐத் தொட்டிருந்தது இத்தோடு முடிச்சுக்கலாமா என்று அவர் கேட்டபோது. கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கூட சோர்வடையவில்லை என்பதுதான் அந்த நிகழ்வின் வெற்றி. உடலும் மனமும் ஒரேயிடத்தில் இருக்கும்படியாகப் பேச்சினால் கட்டிப் போடுவது அவ்வளவு சுலபம் இல்லை.
பிரபஞ்சனின் பேச்சு கூட்டத்திற்கு வந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. நெகிழ வைத்தது. மனம் ஒன்றி அங்கேயே இருக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்தது. அதுதான் பிரபஞ்சன் என்ற எழுத்தாளனின் வெற்றி. ஏனெனில் அந்தப் பேச்சில் உண்மை இருந்தது.
சமூகத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் எனக்கு அன்பு இருக்கும் வரை நான் எழுதிக் கொண்டிருப்பேன் என்று சொல்ல அவரால் முடிகிறது எனில் மனிதர்கள் மீது இன்னமும் நம்பிக்கையும் அன்பும் வற்றிப் போகாத ஓர் ஆன்மாவாக அவர் எழுதிக் கொண்டேயிருப்பார்.

கவிஞர் இரா ஆனந்தி, ஸ்ரீமதி பிரசன்னா, தோழர் ரத்தினவேல், கண்மணி ராசா, பெரியார் குமார், நிகரன் பாஸ்கரன், பால்ராஜ் உள்ளிட்ட பல தோழர்களையும் நண்பர்களையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. சிறப்பான நிகழ்வை ஒருங்கமைத்த தோழர் சா தேவதாஸ் அவர்களுக்கு எனது அன்பு எப்போதும்.