செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மாணிக் பாட்சாவும் ப்ரியாவும்

கரண்ட் பில் கட்ட கடைசி தேதி என்று வேகவேகமாகப் போனால் சிஸ்டம் சரியில்லை. ஆன்லைனில் கட்டுங்க என்று சொல்லிவிட்டார்கள். (கம்யூட்டர் சிஸ்டம் தானுங்க சரியில்லையாம்).

சரி வீட்டு வாடகைக் கொடுத்து விடலாம் என்று வீட்டு ஓனருக்குக் கால் பண்ணால் அவர் வெளியூரில் இருக்கேன் நாளை மாலை வந்து கொடுங்க என்று சொல்லிவிட்டார். என்னடா இது சோதனை?

வங்கி வேலையையாவது முடிக்கலாம் என்று நானும் தோழியும் வங்கிக்குக் கிளம்பினோம். ஏடிஎம் கார்டு தொலைஞ்சு போய் ஒன்றரை மாதம் ஆகியும் கல்லூரியில் விடுமுறை கிடைக்காததால் கார்டை பிளாக் செய்ததோடு சரி. பணம் தேவைப்படும்போது செக் புக்கைக் கொண்டு போய் பணம் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போ செக் புக்கும் காலி ஆகிவிட்டது. வேறு வழியே இல்லை. கிடைத்த இரண்டு நாள் விடுமுறையில் வங்கி வேலையை முடிப்பது என முடிவு செய்தேன். எனது வங்கிக் கிளையில் ஏடிஎம் கார்டுக்காக ஒரு லெட்டர் கொடுத்துவிட்டு செக் புக் ஒன்று வாங்கி வரலாம் என்று போனால் இன்றைக்கு முடியாது நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

திங்கள் கிழமையில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்று திட்டமிட்ட எதுவுமே செய்ய முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா... பாடலைப் பாடிக் கொண்டே மதிய உணவு சாப்பிடக் கிளம்பினோம். சுவையான பீஃப் பிரியாணியும் வறுத்த மீனும் மீன் போண்டாவும் சாப்பிட்டு முடித்த பின் உருப்படியா ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஆரோவில்லுக்குள் ஒரு ரவுண்டு போகலாம். மாலை நேரத் தேநீரை அங்கே குடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பினோம்.

தோழி கேமாரவும் கையுமாகக் கிளம்பினார். ஆரோவில்லில் உள்ள தாமரைக்குளம் அருகில் பைக்கைப் பார்க் செய்து விட்டு பக்கத்தில் இருந்த தேநீர்க் கடையில் டீ இருக்கா அண்ணா என்று கேட்டால் ஒரு பத்து நிமிடம் ஆகும் என்றார். இது சரிப்பட்டு வராது என்று, பத்தடி தூரத்தில் ஒரு பாட்டி மலர்ச்செடி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் இளநீர் இருந்தது. இளநீர் குடிக்கலாம் என்று நல்ல வழுக்கையாக இரண்டு இளநீர் சொன்னோம். சீவிக் கொடுத்த இளநீரை வாங்கிக் கொண்டு குளக்கரையின் மீதமர்ந்து குடித்தோம்.சுவையான இளநீர் மாலை வெயிலுக்கு இதமாக இருந்தது.

இளநீர்க் குடித்து முடித்ததும் எங்கள் அருகில் நீண்டு வளர்ந்த காதுகளும் மை பூசியது போல கறுத்த விழிகளும் கொண்ட இரண்டு நாய்க்குட்டிகள் வந்தார்கள். அவர்களோடு இரண்டு நிமிடம் தான் பேசி இருப்போம். அதன்பின் இரண்டு பேரும் எங்களை விட்டுப் போகவேயில்லை.

தோழி, கேமராவை வெளியில் எடுத்து, குளத்தருகில் போய் நீரில் அலையும் புற்களின் நிழலைப் படமெடுத்தார். தாமரை இலைகளை, தாமரை மலரை, நீர் அருந்த வந்த பறவையைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பின் தொடர்ந்து வந்த நாயாரில் ஒருவர், தோழி படமெடுப்பதை உடனிருந்து மேற்பார்வையிட்டார். இன்னொருத்தர் என்னருகில் அமர்ந்து கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கழுத்தையும் காது மடலையும் தடவிக் கொடுக்க, காலருகில் சொக்கிப் படுத்து விட்டார்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. செவ்வானத்தின் பேரெழில் குளத்து நீரில் படரத் தொடங்கியபோது கிளம்பலாம் என்று மேலேறி வந்தால் இரண்டு நாயாரும் உடன் வந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் சூடா இரண்டு டீ சொன்னோம்.

இரண்டு நாயாரும் பக்கத்தில் வந்து விளையாடத் தொடங்கிவிட்டன. கடையில் இருந்து இரண்டு மில்க் பிக்கிஸ் வாங்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்து, கையை உயர்த்திப் பிடித்தால் எக்கி எக்கி வாயில் கவ்விக் கொண்டன. அது விளையாட்டைப் போலவே இருந்தது எங்களுக்கு.

இரண்டு நாயாரும் ஒரே மாதியான வெள்ளை நிறம். வெள்ளை நிறத்தில் அங்கங்கே பிஸ்கட் நிறம் ஒழுங்கற்ற வட்ட வடிவில் இருந்தது. அதில் ஒருவர் ஆண். ஒருவர் பெண். ஆண் நாயார் கொஞ்சம் உடல் வளர்த்தியாகவும், பெண் நாயார் அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவாகவும் இருந்தது. தேநீர்க் கடை அம்மாவிடம் இவங்களை யாரும் வளர்க்கறாங்களா என்ன பேர் என்று கேட்டேன். யாரும் வளர்க்கல மா. இங்க தான் சுத்திட்டு இருக்கும் என்றார்.

கிளம்புவதற்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்று யோசித்தோம். ஹேய் உனக்கு என்ன டா பேர் வைக்கலாம். உன் பேர் என்ன டா என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த வழியாக ஒரு ஆட்டோ கடந்து போனது. இவனுக்கு மாணிக் பாட்சா என்று பெயர் வைப்போமா.. கொஞ்சம் ஸ்டைலா இருக்கானே என்றேன். உடனே தோழியும் ஒப்புக் கொண்டார். டேய் மாணிக் பாட்சா. இந்தப் பேர் சொல்லிக் கூப்பிட்டால் வரனும். சரியா? என்றோம். எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக் பாட்சா. வந்து கையை நக்கி அன்பைச் சொன்னார்.

இவருக்கு மாணிக் பாட்சா என்று பெயர் வைத்தாகிவிட்டது. அவரது காதலி பெயர் என்ன? யோசித்துப் பார்த்தால் மாணிக் பாட்சாவின் காதலி பெயர் நினைவுக்கு வரவில்லை. ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸ்டைலு இந்த ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான் என்ற பாட்டு மட்டும் தான் நினைவுக்கு வந்தது. பாட்சாவின் வாழ்க்கையில் காதலி கமர்சியல் காரணங்களுக்காகத்தானே உருகி உருகிக் காதல் செய்பவளாக வருகிறாள். அல்லது அப்படியாக உருவாக்கப்படுகிறாள். அவளுக்குப் பெயரா முக்கியம். இந்த யோசனைகளூடே இருந்தபோது ஐ திங்க் பிரியா.. கேரக்டர் நேம் என்றார் தோழி. சரி இவளுக்கு ப்ரியா என்றே பெயர் வைப்போம் என்று முடிவு செய்தோம். மாணிக் பாட்சாவுக்கும் ப்ரியாவுக்கும் இந்தப் பெயரில் உடன்பாடு இருக்கும் என்றே நம்புகிறோம்.

காதலர்களுக்கு விடை கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

மாலைப்பொழுதுக்குள் இருந்த இரவு கண்விழிக்கத் தொடங்கியது.

திங்கள், 9 ஏப்ரல், 2018

கல்லூரி வாழ்வெனும் பெருங்கனா

கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்குப் பிரியா விடையளிக்கும் விழா இன்று.

கல்லூரி எங்கும் வானவில் போல வண்ண வண்ண உடைகளில் மாணவிகள். ஒப்பனை செய்து நடந்து வரும் மலர்க் கூட்டங்கள் போல அங்கும் இங்கும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துறையிலும் வண்ண மின்விளக்குகள் ஒளிர பாட்டும் சிரிப்பும் ஆட்டமும் என கொண்டாட்டத்தின் சாயல். கேம்பஸ் முழுக்க குரூஃபிக்கள். செல்ஃபிக்கள். அழகழகாய் படம் பிடித்துக் கொண்டார்கள்.

கல்லூரியில் மாணவிகளைப் பார்த்தவுடன் நான் படித்த பாரதிதாசன் கல்லூரியின் நினைவில் கரைந்து போனேன். எனது கல்லுரி வளாகத்தில், நான் படித்த வகுப்பறையிலும், அதிக நேரம் செலவிட்ட கல்லூரி நூலகத்திலும் மனம் சென்று அமர்ந்து கொண்டது.

கல்லூரி வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படியான கலாட்டா நினைவுகள் எனக்கு எதுவும் இல்லை. வகுப்பறை, வகுப்பறை விட்டால் நூலகம், கல்லூரி முடிந்தவுடன் வீடு. இவ்வளவு தான் மூன்று ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கையும் கடந்து போனது. படிக்கனும். படிக்கனும். படிக்கனும். இதைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தக் கூடாது என எனக்கு நானே தூக்கிச் சுமந்த சிலுவைக்காலம்.

பாரதி மகளிர்க் கல்லூரியில் மாணவிகளைப் பார்க்கும்போது, அவர்களது குறும்புகளைப் பார்க்கிறபோது கல்லூரி வாழ்க்கையின் கலாட்டாக்கள், குறும்புகள் இதையெல்லாம் தவற விட்டதற்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.

என் வகுப்பில் உள்ள எல்லாருமே என்னிடம் நன்றாகப் பேசுவார்கள் என்றாலும் அது படிப்பு சம்பந்தமானதாக மட்டும் தான் இருக்கும். முதல் பெஞ்ச் என்பதால் அரட்டைக் கச்சேரிகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் கடைசி பெஞ்ச்காரிகள். அவ படிப்ஸ் பா. அவளை வச்சிக்கிட்டு பேச முடியாது என்று நக்கலடிப்பார்கள். நானும் நகர்ந்து விடுவேன்.

ஆனாலும் முதல் பெஞ்சில் என்னோடு அமரும் ஷீலா, லலிதா, ரமணி, ஜெயபாரதி, தனலட்சுமி - இவர்களோடு மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கொஞ்சம் சினேகம் அதிகமானது. கேண்டீன் போய் கட்லட் சாப்பிடும் அளவுக்கான சினேகம் மட்டுமே. மற்றபடி எங்கள் உரையாடல்கள் பாடம் சம்மந்தமானதாக மட்டும் தான் இருக்கும்.

கல்லூரியின் இறுதிப் பருவம் நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமாக மனசுக்குள் பிரியப் போகும் துயரம் வந்து ஒட்டிக் கொண்டது.

ஏற்கனவே ஷீலா வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ரமணியும் அந்த லிஸ்ட்டில் இருந்தாள். லலிதாவுக்கும் அதே நெருக்கடி. தனலட்சுமி பி எட் படிப்பது என முடிவு செய்திருந்தாள். எனக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்பதில் எந்த முன்முடிவும் இல்லை. பி.ஏ. படிக்கும்வரை என் வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்கும் உரிமை என்னிடம் இருக்கவில்லை.

எதிர்பார்த்தது போல farewell விழா நாள் நெருங்கியது. எப்போதும் போலவே கல்லூரிக்கு வந்தோம். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக வகுப்பறையில் அமர்ந்திருந்தோம். மதிய உணவுக்குப் பிறகு செமினார் ஹாலில் விழா. ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வாழ்த்திப் பேசினார்கள். மூன்றாம் ஆண்டு மாணவிகள் பற்றி ஜூனியர்ஸ் பேசினாங்க. கடைசியாக பேச விருப்பம் உள்ள மூன்றாம் ஆண்டு மாணவிகள் பேசலாம் என்ற போது யாரும் முன்வரவில்லை. கடைசி பெஞ்ச்காரிகள் கண்கள் குளமாகி இருந்தன. நான் முதலில் போய் பேசினேன். பிறகு இன்னும் இரண்டு மூன்று பேர் பேசினார்கள். இனிப்பு, மிக்சர், தேநீர் இவற்றுடன் விழா நிறைவு பெற்றது.

இப்போது இருப்பது போல் செல்போன்கள் இல்லை. அதனால் நோ செல்ஃபி. நோ குரூஃபி. கட்டி அணைத்து விடை பெற்றோம். எல்லாரும் என்னிடம் சொன்ன வார்த்தை " பாரதி, உன் பேரை எல்லாரும் சொல்ற மாதிரி பெரிய ஆளா வரனும். அப்போ நாங்க கூட இருக்கமோ இல்லையோ தெரியாது. எங்க ஞாபகத்துல நீ இருப்ப" என்று. அந்த வார்த்தைகளை இப்போது நினைத்து நெகிழ்ந்து போகிறேன்.

அதன்பிறகு கடைசியாக, வகுப்பறையில் எங்க பெஞ்சில் போய் அமர்ந்து ஆசை தீர அழுதோம். இதுதான் கடைசி. இதுதான் கடைசி என்பதைத் தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை.

அந்த நிமிடம் சட்டென்று முடிவெடுத்து நாம ஏன் இன்னைக்கு ஒருநாள் பீச் போகக் கூடாது என்று ஷீலா கேட்டாள். மூன்று வருடத்தில் எங்குமே போனதில்லை. இன்றைக்குப் போய் தான் பார்ப்போம். பிறகு வீட்டில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டோம்.

மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் முதல் முறையாக பீச் போனோம். ஐஸ் க்ரீம் சாப்பிட்டோம். சுண்டல் வாங்கினோம். கொஞ்சம் வாயில் போட்டது போக மீதி சுண்டலை ஒவ்வொன்றாக யார் தூரமாக எறிகிறார்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு கடலை நோக்கி எறிந்தோம். பாறைகளில் மோதிச் சிதறும் அலைகளினூடாகத் தெரிந்த வானவில்லை ரசித்தோம்.

அன்றைக்கு மார்ச் 22. நாங்க ஆறு பேரும் ஒரு முடிவெடுத்தோம். நாம் அடிக்கடி மீட் பண்ணிக்க முடியல என்றால் கூட ஒவ்வொரு வருடமும்  யார் எங்க இருந்தாலும் மார்ச் 22 அன்று நாம இதே பீச்ல மீட் பண்ணலாம். யாரும் மிஸ் பண்ணக் கூடாது.

கொஞ்சம் சினிமாத்தனமாக இப்போ தோனுது. ஆனால் அப்போ அது மிகப்பெரிய கனவு. திருமணம் ஆகிவிட்டால் பெண்கள் இப்படியான கனவுகளைச் சமையலறைக்குள் பூட்டி வைத்து விட வேண்டியதுதான் என்பது அப்போது புரியவில்லை. கணவன், குடும்பம், குழந்தை எனச் சுருங்கிப் போய்விடுவார்கள் என்பது புரியவில்லை.

தேர்வு முடிந்தபிறகு மதிப்பெண் சான்றிதழ் & மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காகச்  சந்தித்தோம் மீண்டும். அதன்பின் ஷீலாவின் திருமணத்தில் எல்லாரையும் பார்த்தேன். அந்தத் திருமண மண்டபத்தில் பார்த்து பேசி சிரித்து கைகுலுக்கிப் பிரிந்து சென்றதோடு சரி. ஒவ்வொருத்தரும் எங்கோ ஒரு ஊரில் திருமணமாகிப் போய் விட்டார்கள். ஷீலா மட்டும் பாண்டிச்சேரியில் இருப்பதால் அவளை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று எந்தத் தகவலும் இல்லை. அவரவர் குடும்பம். அவரவர் குழந்தைகள். அவரவர் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.

நான் மட்டும் தனியளாய் அவர்களின் நினைவுகளோடு.

இப்போது என் வாழ்க்கையை நான் என் விருப்பப்படி வாழ்கிறேன். அதனால் ஒவ்வொரு மார்ச் 22 அன்றும் மறக்காமல் பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போய் அந்தப் பாறைகளின்மீது அமர்ந்து வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன். அந்த நாளின் பசுமையான நினைவுகள் அலைகளாக உருத்திரண்டு வருகின்றன என்னை நோக்கி.

சனி, 31 மார்ச், 2018

நீர்க்குமி வாழ்க்கை

இன்று மாலை மகளிர் மட்டும் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மாளவிகா வீட்டில் வேலை செய்கிற சேகரி அம்மா "இது யாரு சூர்யா பொண்டாட்டி தானே" என்று கேட்டார். ஒரு நடிகையாக அவருக்கான அடையாளம் தொலைந்து போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். எத்தனைப் படங்கள் நடித்திருக்கிறார். அந்த நடிகை ஜோதிகாவை இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாக மறந்து விட்டது.

பெண்ணுக்கான அடையாளம் அவளைச் சார்ந்ததாக இல்லாமல் போவதன் துயரம்  எப்போதும் மனதைத் துருத்திக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் இதுவரை யாருக்கும் ரசிகை என்று சொல்லிக் கொண்டது இல்லை.  முகவரி படத்தைப் பார்த்த பிறகு ஜோதிகாவின் மீது சின்ன கவனம் திரும்பியது.

கொழு கொழு கன்னம், துறுதுறு கண்கள், காற்றில் அலைவீசும் கேசம், இப்படி ஜோதிகாவைப் பிடித்துப் போக காரணங்கள் அதிகரித்துக் கொண்டே போயின. ஏப்ரல் மாதத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா என்ற பாடலுக்கு அஜித் குமார் வாயசைத்து நடித்துக் கொண்டிருந்த போது, எவ்ளோ க்யூட்டான மாம்பழக் கன்னம், திராட்சைக் கண்கள் என வியந்து வியந்து ரசித்தேன் ஜோதிகாவை. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சுடிதார் அணிந்த வந்த சொர்க்கமாவே தெரிந்தார்.

ஜோதிகாவின் நடிப்பை ஓவர் ஆக்‌ஷன் என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். ஆனால், குஷி படத்தை ஜோதிகாவுக்காகவே பலமுறை பார்த்தேன். குஷி மட்டுமில்ல. காக்க காக்க, பூவெல்லாம் உன்வாசம்,  மொழி ஆகிய படங்களும் கூட. மாயாவி படத்தில் மட்டும் ஏனோ ஜோதிகாவை என்னால் ரசிக்கவே முடியவில்லை.  இப்பவும் நான் அடிக்கடி பார்க்கிற 5 தமிழ்ப் படங்களில் மொழி படம் முக்கியமானது. வாய் பேச முடியாத, காது கேட்காத, ஆனால் சுயமரியாதை கொண்ட பெண்ணாக அசத்தியிருப்பார்.

ஜில்லுனு ஒரு காதல் படத்துக்குப் பிறகு காதல், கல்யாணம் என சினிமாத் துறையில் இருந்து காணாமல் போய் தமிழ்நாட்டின் மருமகளாய் ஆகிப் போனார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கைக்குள் தங்களைப் புகுத்திக் கொண்டு, நடிப்புக்கு பை பை சொன்ன நடிகைகள் வரிசையில் ஜோதிகாவும் சேர்ந்து போனது பெரிய வருத்தமே.

36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ட்ரி கொடுத்த போது அவ்வளவு சந்தோஷம். படத்தில் நடுத்தர வயது பெண்ணின் கதாப்பாத்திரம் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

மீண்டும் பழைய துருதுரு ஜோதிகாவைப் பார்க்க மனசு ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மகளிர் மட்டும் படம் பெரிய ஆறுதல். அதே பேரழகோடு மாடர்ன் தேவதையாக வலம் வந்தார்.
அதிலும் கூட நடுத்தர வயதை எட்டிய மூன்று குடும்பத் தலைவிகளை அவர்களது தோழிகளோடு சேர்த்து வைத்து, அவர்களுக்கான சுயத்தை அவர்களுக்குக் காட்டுகிற ஒரு நவீனப் பெண். அவ்வளவு தான்.

திருமணத்திற்குப் பிறகும் பழையபடியே ஹீரோயின்களோடு காதல் இளவரசன்களாக நடிக்கின்ற ஹீரோக்கள் போல காதல் தேவதைகளாக ஹீரோயின்கள் நடிக்க வாய்ப்பதில்லை.

நீர்க்குமிழி வாழ்க்கை தான் நடிகைகளின் சினிமாப் பயணம்.

#jothika 😮

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சில்லென்று ஒரு மதியம்

கல்லூரியில் இருந்து பயங்கர பசியோடும் சீக்கிரம் அறைக்குப் போக வேண்டும் என்ற பேராவலோடும் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினேன். சென்ட்ரல் ரயில் நிலைய சிக்னலில் நிற்கும்போது வந்த வேகத்தில் பிரேக் போட்டேன். வலது புறம் நின்றிருந்த பைக் கண்ணாடியில்  என்னுடைய வண்டி கண்ணாடி லேசாக இடித்தது.
பொதுவாக சென்னையில் காலையில் கல்லூரி போகும் போது அல்லது கல்லூரியில் இருந்து மதியம் வரும்போது ஆட்டோ அல்லது பைக்காரர்கள் யாரையாவது திட்டாமல் கடந்து போவதில்லை. நானும் சில நேரங்களில் திட்டு வாங்கி இருக்கிறேன். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சாரி சார் என்று சொன்னால் கூட சலித்துக் கொள்பவர்கள் தான் அதிகம்.
இன்று மதியம் அப்படியான திட்டு இல்லை. முகத்தில் கடுகடுப்பு இல்லை. கண்ணாடியில் இடித்த அடுத்த நொடி, சாரி என்பது போல தலையசைத்தேன். அந்தப் பைக்காரன் என் கண்களை மட்டும்தான் பார்த்திருக்க வேண்டும். முகத்தைத் துப்பட்டாவால் மூடிக் கொண்டிருந்தேன். சென்னை சாலையில் புழுதியில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லை. முகமூடி கொள்ளைக்காரி போலத்தான் சுற்ற வேண்டியிருக்கு.
நல்ல வெள்ளை நிறத்தில் ஃபிட்டான சட்டை. நீல ஜீன்ஸ். ஹெல்மெட் தலை. முறுக்கு மீசை. லேசான தாடி. உயரத்திற்கேற்ற அளவான உடல். பார்த்தவுடன் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் முகம். நான் சாரி சொன்னதும் அந்த அழகான முகத்தில் சட்டென்று சிறு எரிச்சல் மறைந்து புன்னகைத்தான். மண்டையைப் பிளக்கும் வெயிலில் குல்பி சாப்பிட்டது போல அவ்வளவு கூல் ஆக இருந்தது அந்தப் புன்னகை. ஒரு சினேகத்துக்கான அறிகுறி அது.
ஒரு நிமிடம் கூட இல்லை. சிக்னல் பச்சை விளக்கு விழுந்ததும் நான் மீண்டும் சிறு புன்னகையோடு அவனைக் கடந்து விரைந்து வந்துவிட்டேன். மனசு இன்னமும் அங்கேயே அந்தப் புன்னகையைப் பற்றிக் கொண்டு நிற்கிறது. அவன் யாரோ. எங்கே இருக்கிறானோ. யாதொரு கேள்வியும் தேவையில்லை.
பெருநகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் இப்படியான சின்னஞ்சிறு புன்னகைகள் மனசுக்குள் முடங்கிக் கிடக்கும் சிறகுகளை நீவி விடுகிறது பறக்கச் சொல்லி. போதும்.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

தமிழ் சினிமா : நகைச்சுவை எனும் நஞ்சு

கல்லூரியில் மாணவிகளுக்கு சங்க இலக்கியம் அறிமுக பாடமாக வைக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு இவற்றில் ஒவ்வொரு பாடல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு எல்லாவற்றையும் ஒரு கதை போல ஒரு குறும்படம் போல பாடலின் பின்புலம் சொல்லி நடத்த முயற்சி செய்கிறேன். மாணவிகளும் சங்க இலக்கியத்தின் பால் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக வகுப்பில் கவனிப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

எட்டுத்தொகை வரிசையில் புறநானூறு பாடல் நடத்தும்போது புறநானூறு குறித்த முழு அறிமுகத்தை வகுப்பில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஔவையார் அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது போனது, பாரி எனும் குறுநில மன்னனை மூவேந்தர்களும் சேர்ந்து வீழ்த்தியது என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தேன். பாரியைப் பற்றிச் சொல்லும்போது பாரியின் மகள்களான அங்கவை சங்கவை பற்றிச் சொல்லத் தொடங்கியதும் வகுப்பில் பயங்கரமான சிரிப்பு. சிரிப்புக்குக் காரணம் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது.

எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல்.

இந்த நூற்றாண்டிலும் கூட உறவுகளை இழந்து தவிக்கும் மனதின் கண்ணீர்க் குரலோடு இந்தப் பாடலோடு பொருத்திப் பார்த்து ஆற்றிக் கொள்ள முடியும். அவ்வளவு உன்னதமான படைப்பாளுமை மிக்க பெண்கவிகளைக் கொச்சைப் படுத்தி நகைச்சுவை எனும் பெயரில் நஞ்சை விதைத்த தமிழ் சினிமாவை என்ன சொல்லித் திட்டுவது? சங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குநர், ஆன்மீக அரசியல் செய்யவிருக்கும் ரஜினிகாந்த், பட்டிமன்றங்கள் நடத்தி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சாலமன் பாப்பையா, நடிகர் விவேக், இப்படியொரு கீழ்த்தரமான வசனம் எழுதிய சுஜாதா என எல்லோருக்கும் இதில் சமபங்கு இருக்கிறது.

அங்கவை மற்றும் சங்கவை அவ்வளவு கருப்பாக இருந்தார்கள் என்று இவர்களுக்கு யார் சொன்னது? கருப்பாக இருந்தாலும் அது அழகற்றது என்றும் நகைப்புக்குரியது என்றும் யார் சொன்னது? அங்கவை சங்கவை எனும் பெயரைச் சொன்னதும் இருவரின் ஆளுமை குறித்த பெருமையும், அவர்களின் துயர வாழ்வின் மீதான இரக்கமும் கொள்ளாமல் பொங்கிச் சிரிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியதற்காக எப்போதாவது இந்த இயக்குநரும் நடிகர்களும் குற்றவுணர்வு கொள்வார்களா?

சினிமாவில் இரட்டை அர்த்த நகைச்சுவை எனும் கொடுமையைக் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம் போல. இப்படியான நச்சு விதைகளை நகைச்சுவை என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழ்மொழி, அறுபடாத இலக்கிய வளங்கள் கொண்ட தமிழ் இனம் என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்ளும் நமக்கு, ஏன் இப்படியான வசனங்களின் மீது கோபம் வருவதில்லை.

கவுண்டமணி செந்தில், வடிவேல், விவேக், சந்தானம் என நகைச்சுவை மன்னர்கள், நகைச்சுவை புயல்கள்  எவருமே இதில் தப்பவில்லை. அழகு குறித்த மதிப்பீடுகளை நகைச்சுவை எனும் பெயரில் கிண்டலடிக்கும்போது சிரித்துவிட்டுக் கடந்துபோவதில் இருக்கிறது இனவெறி உணர்வு. உருவத்தைக் கிண்டலடிப்பது, திருநங்கைகளைக் கிண்டலடிப்பது, உடல் ஊனத்தைக் கிண்டலடிப்பது, நிறத்தை வைத்துக் கிண்டலடிப்பது - இதையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நகைச்சுவை என்று சொல்லி நம்ப வைப்பார்கள்?
சினிமா எனும் கலை சமூக மாற்றத்துக்கான விதையாக இல்லாமல் பொதுப்புத்தியில் இனவெறி எனும் நஞ்சை விதைப்பது கலைக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையோம் எம்இல்லில் இன்பத்தின் ஊற்றும் உடையோம்.
இற்றைத்திங்கள் இல்லில் இன்பத்தின்
எள்முனையும் இல்லை..
யாம் எந்தையும் இலமே.

இந்த அவலக்குரலை, அழிக்கப்பட்ட இனத்தின் வேதனைக் குரலை நம் தலைமுறைக்குச் சொல்லித் தரவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. நீரோடையின் போக்கில் மிதந்து போவதில் என்ன சுகமிருக்கிறது. நதிநீரை எதிர்த்து நீந்தி வருவது தானே பெரும் சுகம்.

கல்வி என்பது மதிப்பெண்ணுக்கானது அல்ல. அறிவுத் தெளிவுக்கானது என்று உரத்துச் சொல்வோம்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

ஆரோவில் பொங்கல் கொண்டாட்டம்

#ஆரோவில் #Youth_Center இல் பொங்கல் விழா கொண்டாட்டத்தைப் பார்க்கப் போயிருந்தேன். ஏற்கனவே வேறொரு சந்தர்ப்பங்களில் இரண்டு முறை அங்கே சென்றிருந்தாலும் இந்த முறையும் ஆரோவில் காட்டின் ஒற்றையடிப் பாதையில் வழி தெரியாமல் தேடித்தான் போக வேண்டியிருந்தது.

ஒருவழியாக யூத் செண்டர் போய்ச் சேர்ந்ததும் அவ்வளவு கூட்டம். பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். ஆரோவில்வாசிகள்.
கொண்டாட்டத்தின் கூக்குரலை அந்தக் காட்டுக்குள் கேட்க முடிந்தது.

நுழைவாயிலில் ஒரு சிறு வாகனத்தில் இருந்தபடி இரண்டு மூன்று பேர் டோக்கன் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நிறைய உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு இருந்தன. #no_money_only_tokens என்ற வாசகம் வாகனத்தின் மேல் எழுதப்பட்டிருந்தது. சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் டோக்கன் வாங்குவதில் பிஸியாக இருந்தார்கள். ஏற்கனவே மதிய உணவைச் சாப்பிட்டிருந்ததால் அங்கே சாப்பிட வாய்ப்பில்லாமல் போனது.

ஒருபக்கம் சீசா விளையாட்டைக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிரமிக்க வைக்கும் உயரம் வரை சீசா மரம் மேலெழும்பிக் கீழே வந்தது. இன்னும் சில குழந்தைகள் சருக்குமரம் விளையாடினர். அதற்கடுத்து கொஞ்சம் உள்ளே ஈஃபிள் டவர் போல உயர்ந்த கோபுரம் ஒன்று செம்மாந்து நின்றிருந்தது. இன்னொரு இடத்தில் கீழிருந்து மேலாக தொங்கும் ஏணி ஒன்று அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதன் மீது சிறுவர்களும் சில இளைஞர்களும் ஏறி மரத்தின் உச்சியை எட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் நான்கு வெளிநாட்டு இளைஞர்கள் ஷாட்ஷும் டீ ஷர்ட்டும் அணிந்தபடி இளநீர் சீவிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நேர் எதிரில் சற்றுத் தள்ளிச் சுடச் சுட பீட்சா தயாராகி விற்பனையாகிக் கொண்டிருந்தது. கேழ்வரகு மாவு தோசை முதலான இந்திய, தமிழ்நாட்டு உணவுகளும் தயார் செய்யப்பட்டு டோக்கன்களுக்குக் கொடுக்கப்பட்டன. அழகழகான ஓவியங்கள் வரையப்பட்ட டீசர்ட்டுகள், கைவினைப் பொருள் கம்மல்கள், வளையல்கள் விற்பனைக்கு இருந்தன.

இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சூடான மசாலா டீ செய்து குக்கீஸுடன் சேர்த்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஆங்கில இசை நிகழ்ச்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. துள்ளலான இசையினூடே சூடான தேநீரையும் இனிப்பான குக்கீஸும் வாங்கிட்டு சாப்பிட்டபோது மாலைப் பொழுது இன்னும் அழகாக இருப்பதாக உணர்ந்தேன்.

ஆங்கில மொழியின் வாசம் சுற்றிலும் இருந்தது. தெரிந்தவர், நண்பர், தெரியாதவர் என்கிற பேதம் இல்லாமல் புன்னகையோடு ஹெலோ சொல்லிக் கடந்து போன மனிதர்களின் முகங்கள் அந்நியப்பட்டு ஒதுங்கியிருக்கச் செய்யவில்லை. அங்கே புன்னகை, அன்பின் மொழியாக இருந்தது.

மரங்களின் சலசலப்புகளுக்கு இடையில், குருவிகளின் கீச்சொலிகளுக்கு இடையில் மொழி பேதமற்று ஒரு சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகத்தின் ஊற்றுக் கண்ணாகப் பொங்கிக் கொண்டிருந்தது.

இப்படியொரு பொங்கல் கொண்டாட்டம் ஆரோவில்லில் நடக்கிறது என்று சொல்லி, என்னை அழைத்துச் சென்ற நண்பன் Kaba Yoவுக்குத்தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். நன்றியும் அன்பும் கபா. <3


வியாழன், 11 ஜனவரி, 2018

HotFriday.com article

Meet The Sahitya Akademi Yuva Puraskar Awardee From Tamil Nadu

By AsadhaJanuary 11, 2018

Manushi Bharathi is still in university doing her doctoral degree but has carved a niche in Tamil poetry and the Sahitya Akademi Yuva Puraskar is an endorsement to that. This young litterateur hails from a humble village in Northern Tamil Nadu and is the first graduate to emerge from her family. She lost her mother very early in her life and it was reading that gave her the much needed solace and helped to cope with the void and lonesomeness.

When she started scribbling her ideas on paper she had never imagined that these writings would one day be made into books. In fact it was from the year 2008 that she started to safekeep her writings. Her first book of poems, ‘The Glowing Words of Little Princess’, got published in 2013. It was noted literary critic Venkat Swaminathan’s review that drew the attention of readers to this book.

When she started scribbling her ideas on paper she had never imagined that these writings would one day be made into books

Enthused by the reception Manushi published her second book of poems in 2014, ‘God of Kisses’, and it was followed by ‘Reminiscence of a Primal Love’ in 2015. Manushi Bharathi’s original name is Jayabharathi. She chose the nom de plume Manushi in order to ascertain her being a woman which is in no way inferior to that of a man. The second part of her name is taken from the name of unparalleled Tamil poet Subramanya Bharathi.

Manushi has carved a niche in Tamil poetry and the Sahitya Akademi Yuva Puraskar is an endorsement to that

In her poems Manushi speaks about caste, social issues, love, friendship etc. She turns very poignant with her expression in poems which narrate the wretched lives of women in the society. There is a poem titled ‘The Land of Nirbhayas’ in the collection ‘Reminiscence of a Primal Love’. “Nirbhayas are fearless- always-they taste death-in their struggle to live… I have come out of the kitchen now- not to draw ‘kolam’ in the courtyard- not to dispose of the garbage- not to fetch water- but for some other reason”.

Of all the accolades to her poems she considers particularly the following one to be very precious. While she was readying her poems for her first collection she went to take print outs of her poems in a DTP shop. The guy at the shop was much impressed by her poem, ‘There is Nothing to Live for’, and asked whether he could keep a copy of it with him. She considers this as one of the biggest honours ever bestowed on her poems.

Her inspirations in poems are Malayalam poets Kamaladas and Balachandran Chullikad, and Taslima Nasrin. Manushi also loves the poems of Neruda, Mahmoud Darwish and Sylvia Plath. In contemporary Tamil poetry she admires Ilampirai, Kutti Revathi and Leena Manimekalai. Manushi has plans to explore the world of children and in the near future she will be working on it.

TAGS 

CultureManushi BharathiSahitya Akademi Yuva Puraskar Award