செவ்வாய், 29 மார்ச், 2016

கங்கனா - குயின்

சாவித்ரி, சில்க் சுமிதா, ஸ்மிதா பாட்டில், நந்திதா தாஸ், இவர்கள் வரிசையில் எனக்கு மிகப் பிடித்த நடிகை கங்கணா ரணாவத்.
தாம் தூம் படத்தில் மனதில் ஒட்டாத கிராமத்து தாவணிப் பெண்ணாக அறிமுகம் ஆனவர் கங்கணா. பெரிதாக ஈர்க்கவில்லை அந்தப் படத்தில். (தமிழில் சரியாக அவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்).
ஆனால், காட்சிப்பிழைத் திரை இதழில் குயின் திரைப்படம் குறித்த கட்டுரை ஒன்றை வாசித்த பின் அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன். அதன்பிறகு தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் கங்கணாவின் இரட்டை வேடம் என்னை வியக்க வைத்தது. கணவனிடம் இருந்து பிரிந்த தனது சுயத்தோடு வாழ முற்படும் ஒரு பெண், விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் கல்லூரிப் பெண் என இரண்டு வேடங்கள். படத்தின் இறுதிக் காட்சி வரை அந்தக் கல்லூரிப் பெண் வேடத்தில் கங்கணாவின் சாயலை என்னால் அனுமானிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியான பாத்திர வார்ப்பு. உடல்மொழி. குயின் திரைப்படமெல்லாம் நான்கைந்து முறை பார்த்தும் சலிக்காத படம். கங்கணாவின் நடிப்புக்காக மட்டுமே தான் பார்த்தேன்.
எனது தோழி அடிக்கடி சொல்லிப் பார்த்த படம் ஃபேஷன். ஃபேஷன் உலகத்தில் ஒரு பெண் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது, ஃபேஷன் துறை எவ்வளவு கொடுமையானது பெண்களைப் பொறுத்தவரை என்பதை முகத்தில் அறைவது போல சொல்லும் படம் அது. அதிலும் கங்கணாவின் நடிப்பு என்னை அசர வைத்தது.
இதனோடு சேர்த்து, தமிழ் ஃஃபெமினா இதழின் நேர்காணல் ஒன்றில் அவரது நேர்காணல் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. உங்களது ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ”எனக்கு ரசிகர்கள் தேவையில்லை. பார்வையாளர்கள் போதும்” எனச் சொன்ன துணிச்சல் அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது.
நேற்று தற்செயலாக கங்கணா ரணாவத் நடித்த படங்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டிருந்தேன் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக. சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருப்பதை அறிந்தபோது what a co incident என்று தோன்றியது.
முத்தங்களும் வாழ்த்துகளும் கங்கணா.

புதன், 23 மார்ச், 2016

ஆண்ட்ராய்டுகளின் காலம் - மனுஷி



ஆண்ட்ராய்டுகளின் காலம்
எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் நூலின் வெளியீட்டு விழாவுக்குக் கிளம்ப வேண்டும். இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியிடும்போது இருந்த உற்சாகம், மகிழ்ச்சி எதுவுமே இல்லை. மனம் முழுக்க வெறுமை. எல்லாவற்றின்மீது நம்பிக்கையற்று, வாழ்தல் என்பது நாட்களைக் கடத்துதல் என்பது மட்டும் தானா என்பது போன்ற ஒரு உணர்வு.
வெளியீட்டு விழாவுக்குச் செல்வதா வேண்டாமா? போகாமல் இருந்தாலும் நிகழ்ச்சி நடக்கத்தானே போகிறது? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கை தவறி விழுந்தது ரசித்து ரசித்து வாங்கிய என் செல்போன். மிக நீண்ட யோசனைக்குப் பின், விழுந்த செல்போனைப் பற்றி எடுத்து வைத்துவிட்டு, புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு பார்வையாளரைப் போல கலந்து கொண்டுவிட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
கிளம்பி முடித்தபின், கிளம்பிவிட்டேன் என்ற தகவலைச் சொல்வதற்காக மொபைலை எடுத்து, ஸ்கீரினைத் தொட்டால் செத்துப் போன பிணம் போல உணர்ச்சியற்று இருந்தது. இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அது தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது. டெம்ப்பர் கிளாஸ் தான் உடைந்திருக்கிறது, அதை எடுத்துவிட்டால் டச் வேலை செய்யும் என அதை உரித்து எடுத்த பின்னும், வேலை செய்யவில்லை. அவ்வளவுதான். அவ்வளவே தான். புத்தக வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ், முகவரி, நண்பர்களின் தொடர்பு எண்கள் எல்லாமும் செல்பேசிக்குள். துரதிஷ்டவசமாக யாருடைய எண்ணும் நினைவில் இல்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை. மொபைல் இல்லாமலே பயணிக்கலாம் என்று முடிவு செய்து பேருந்தில் ஏறியபின், நிகழ்ச்சிக்கு வர அரை மணி நேரம் தாமதமாகும் என்கிற தகவலை எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று மனதுக்குள் ஓடியது.
பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் மொபைல் வாங்கி குத்துமதிப்பாக இரண்டு மூன்று முறை முயற்சி செய்து திநகரில் இருக்கும் நண்பரின் எண்ணைக் கண்டு பிடித்தேன். மொபைல் இல்லை என்ற செய்தியைச் சொல்லி, திநகரில் சந்தித்துவிட்டு, பிறகு நிகழ்ச்சிக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லி, எந்த இட்த்தில், எத்தனை மணிக்குக் காத்திருக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டேன். சொன்னதைப் போல 4 மணிக்கு திநகர் பேருந்து நிலையத்தை அடையமுடியவில்லை. சென்னை வாகன நெரிசலில் சிக்கி, கிண்டி போய்ச் சேரவே 4.45 ஆகி இருந்தது. எங்காவது ஒரு ரூபாய் காய்ன் போன் அல்லது போன் பூத் இருந்தால் தகவல் சொல்லிவிடலாம் என்று தேடினால் எங்குமே இல்லை காய்ன் போன். போன் பூத்தும் தான். சரி, திநகரில் போய் தேடிக் கொள்ளலாம் என்றால் அங்கும் அதே நிலைமைதான். என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு என்று மனதுக்குள் ஒரு குரல். சரசரவென நடந்து போகும் மக்களைப் பார்த்தால் எல்லோர் கையிலும் ஒரு ஆண்ட்ராய்டு போன். காய்ன் போனுக்கான வேலையே இல்லை. ஒரு கால் பண்ணனும் கொஞ்சம் போன் கொடுங்க என்று கேட்க தன்மானம் இடம் தரவில்லை. முகம் தெரியாத ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பதற்கென்று ஒரு தைரியமான மனம் வேண்டும் என்று புரிந்தது. எல்லோராலும் அப்படிக் கேட்டுவிட முடியாது.
ஆறு வருடங்களுக்கு முன்பு கையில் செல்போன் இல்லாமல் எத்தனையோ முறை சென்னைக்கு எந்தவிதப் பதற்றமும் பயமும் இல்லாமல் வநது போயிருக்கிறேன். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் நான்கைந்து காய்ன் போன்கள் சுவற்றைப் பற்றியபடித் தொங்கிக் கொண்டிருக்கும். அந்தச் சமயங்களில் ஒரு ரூபாய் நாணயத்தைப் பத்திரப்படுத்தவென குட்டி டப்பா ஒன்று எப்போதும் என் பையில் இருக்கும். காயின் போனிலேயே இருபது நிமிடம் பேசிய நாட்களெல்லாம் உண்டு. சத்தமில்லாமல் காணாமல் போயிருக்கின்றன காயின் போன்களும் எஸ்டிடி பூத்துகளும்.
செல்போன் இல்லாமல் இருக்கும் இந்த ஐந்து நாட்களில் மனம் அலையற்ற ஒரு கடலைப் போல அமைதியாக இருக்கிறது. முகநூலில் போடப்படுகிற நிலைத்தகவல் சண்டைகள், சர்ச்சைகள் எதுவும் காதுக்கும் கண்ணுக்கும் வந்து சேரவில்லை. ஆன்லைனில் இருக்க, ஆனால் பதில் சொல்ல மாட்டியா என்ற கேள்விகள் இல்லை. போன் பண்ணேன். எடுக்கல. ரொம்ப பெரிய ஆளா ஆகிட்ட அதனால் மதிக்க மாட்டேங்கற என்ற புகார்கள் இல்லை.
நானுண்டு. என் வேலையுண்டு. என் பறவைகள் உண்டு. என் தொட்டிச் செடிகள் உண்டு. கவிதைகளுண்டு என்று போகிறது வாழ்க்கை.
அவசரத்திற்கு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவும், என் குரல் கேட்கத் தவிக்கும் சில அன்பு மனங்களைத் தவிக்கவிடக் கூடாது என்பதால், சின்னதாக ஒரு செல்போனை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டால் போதும் என்றிருக்கிறது.
##ஆண்ட்ராய்டு போன்லாம் எதுக்கு சார்?

எழுதித் தீராத வார்த்தைகள்



எழுதித் தீராத வார்த்தைகள்


மூன்றாவது தொகுப்பு வரும் இந்த வேளையில், எனது முன்னுரை அவசியமா என்ற கேள்வி எழுகிறது. எனது கவிதைகள் மட்டுமே பேசினால் போதும் என்று தோன்றுகிறது. எனது கவிதைகளே எனது மொழி. எனது கவிதைகளே நான் நிகழ்த்துகின்ற உரையாடல். எனது கவிதைகளே நான் கடந்து வந்த பாதையின் சுவடுகள்.

அதைப் பற்றித் தனியாக என்ன சொல்ல?

உறக்கத்தையும் கவிதையையும் போல மாமருந்து ஏதுமில்லை.

எனது இருப்பு, எனது அடையாளம், இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் யாவும் என் கவிதைகளில் தான் இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். எனது கவிதைகள் கோட்பாடுகளில் இருந்து பிறப்பவை அல்ல. வாழ்க்கையிலிருந்தும் உணர்வுகளிலிருந்துமே ஜீவிக்கின்றன.

எழுதி எழுதித் தீராத வார்த்தைகளாக என் பின்னால் பயணிக்கின்றன கவிதைகள், எவ்வளவு எழுதினாலும் இன்னும் எழுதுவதற்கு ஏதொவொன்றை மிச்சம் வைத்தபடி.

வாழ்க்கை, ஒரு கவிதையைப் போல இருக்க வேண்டும் எனும் பேரவா எனக்கு. அப்படி இல்லாமல் இருக்கிறது இந்த வாழ்க்கை. ஆனால், கவிதையே வாழ்க்கையாக ஆகிப் போனதில் பெருமகிழ்ச்சியே.

என் கவிதைகளோடும் என்னோடும் பயணிக்கும் நண்பர்களுக்கும், எனது கவிதைகளைப் பதிப்பிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் எனது அன்பும் நன்றிகளும்.

--  மனுஷி