வெள்ளி, 19 ஜனவரி, 2018

தமிழ் சினிமா : நகைச்சுவை எனும் நஞ்சு

கல்லூரியில் மாணவிகளுக்கு சங்க இலக்கியம் அறிமுக பாடமாக வைக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு இவற்றில் ஒவ்வொரு பாடல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு எல்லாவற்றையும் ஒரு கதை போல ஒரு குறும்படம் போல பாடலின் பின்புலம் சொல்லி நடத்த முயற்சி செய்கிறேன். மாணவிகளும் சங்க இலக்கியத்தின் பால் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக வகுப்பில் கவனிப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

எட்டுத்தொகை வரிசையில் புறநானூறு பாடல் நடத்தும்போது புறநானூறு குறித்த முழு அறிமுகத்தை வகுப்பில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஔவையார் அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது போனது, பாரி எனும் குறுநில மன்னனை மூவேந்தர்களும் சேர்ந்து வீழ்த்தியது என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தேன். பாரியைப் பற்றிச் சொல்லும்போது பாரியின் மகள்களான அங்கவை சங்கவை பற்றிச் சொல்லத் தொடங்கியதும் வகுப்பில் பயங்கரமான சிரிப்பு. சிரிப்புக்குக் காரணம் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது.

எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல்.

இந்த நூற்றாண்டிலும் கூட உறவுகளை இழந்து தவிக்கும் மனதின் கண்ணீர்க் குரலோடு இந்தப் பாடலோடு பொருத்திப் பார்த்து ஆற்றிக் கொள்ள முடியும். அவ்வளவு உன்னதமான படைப்பாளுமை மிக்க பெண்கவிகளைக் கொச்சைப் படுத்தி நகைச்சுவை எனும் பெயரில் நஞ்சை விதைத்த தமிழ் சினிமாவை என்ன சொல்லித் திட்டுவது? சங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குநர், ஆன்மீக அரசியல் செய்யவிருக்கும் ரஜினிகாந்த், பட்டிமன்றங்கள் நடத்தி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சாலமன் பாப்பையா, நடிகர் விவேக், இப்படியொரு கீழ்த்தரமான வசனம் எழுதிய சுஜாதா என எல்லோருக்கும் இதில் சமபங்கு இருக்கிறது.

அங்கவை மற்றும் சங்கவை அவ்வளவு கருப்பாக இருந்தார்கள் என்று இவர்களுக்கு யார் சொன்னது? கருப்பாக இருந்தாலும் அது அழகற்றது என்றும் நகைப்புக்குரியது என்றும் யார் சொன்னது? அங்கவை சங்கவை எனும் பெயரைச் சொன்னதும் இருவரின் ஆளுமை குறித்த பெருமையும், அவர்களின் துயர வாழ்வின் மீதான இரக்கமும் கொள்ளாமல் பொங்கிச் சிரிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியதற்காக எப்போதாவது இந்த இயக்குநரும் நடிகர்களும் குற்றவுணர்வு கொள்வார்களா?

சினிமாவில் இரட்டை அர்த்த நகைச்சுவை எனும் கொடுமையைக் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம் போல. இப்படியான நச்சு விதைகளை நகைச்சுவை என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழ்மொழி, அறுபடாத இலக்கிய வளங்கள் கொண்ட தமிழ் இனம் என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்ளும் நமக்கு, ஏன் இப்படியான வசனங்களின் மீது கோபம் வருவதில்லை.

கவுண்டமணி செந்தில், வடிவேல், விவேக், சந்தானம் என நகைச்சுவை மன்னர்கள், நகைச்சுவை புயல்கள்  எவருமே இதில் தப்பவில்லை. அழகு குறித்த மதிப்பீடுகளை நகைச்சுவை எனும் பெயரில் கிண்டலடிக்கும்போது சிரித்துவிட்டுக் கடந்துபோவதில் இருக்கிறது இனவெறி உணர்வு. உருவத்தைக் கிண்டலடிப்பது, திருநங்கைகளைக் கிண்டலடிப்பது, உடல் ஊனத்தைக் கிண்டலடிப்பது, நிறத்தை வைத்துக் கிண்டலடிப்பது - இதையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நகைச்சுவை என்று சொல்லி நம்ப வைப்பார்கள்?
சினிமா எனும் கலை சமூக மாற்றத்துக்கான விதையாக இல்லாமல் பொதுப்புத்தியில் இனவெறி எனும் நஞ்சை விதைப்பது கலைக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையோம் எம்இல்லில் இன்பத்தின் ஊற்றும் உடையோம்.
இற்றைத்திங்கள் இல்லில் இன்பத்தின்
எள்முனையும் இல்லை..
யாம் எந்தையும் இலமே.

இந்த அவலக்குரலை, அழிக்கப்பட்ட இனத்தின் வேதனைக் குரலை நம் தலைமுறைக்குச் சொல்லித் தரவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. நீரோடையின் போக்கில் மிதந்து போவதில் என்ன சுகமிருக்கிறது. நதிநீரை எதிர்த்து நீந்தி வருவது தானே பெரும் சுகம்.

கல்வி என்பது மதிப்பெண்ணுக்கானது அல்ல. அறிவுத் தெளிவுக்கானது என்று உரத்துச் சொல்வோம்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

ஆரோவில் பொங்கல் கொண்டாட்டம்

#ஆரோவில் #Youth_Center இல் பொங்கல் விழா கொண்டாட்டத்தைப் பார்க்கப் போயிருந்தேன். ஏற்கனவே வேறொரு சந்தர்ப்பங்களில் இரண்டு முறை அங்கே சென்றிருந்தாலும் இந்த முறையும் ஆரோவில் காட்டின் ஒற்றையடிப் பாதையில் வழி தெரியாமல் தேடித்தான் போக வேண்டியிருந்தது.

ஒருவழியாக யூத் செண்டர் போய்ச் சேர்ந்ததும் அவ்வளவு கூட்டம். பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். ஆரோவில்வாசிகள்.
கொண்டாட்டத்தின் கூக்குரலை அந்தக் காட்டுக்குள் கேட்க முடிந்தது.

நுழைவாயிலில் ஒரு சிறு வாகனத்தில் இருந்தபடி இரண்டு மூன்று பேர் டோக்கன் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நிறைய உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு இருந்தன. #no_money_only_tokens என்ற வாசகம் வாகனத்தின் மேல் எழுதப்பட்டிருந்தது. சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் டோக்கன் வாங்குவதில் பிஸியாக இருந்தார்கள். ஏற்கனவே மதிய உணவைச் சாப்பிட்டிருந்ததால் அங்கே சாப்பிட வாய்ப்பில்லாமல் போனது.

ஒருபக்கம் சீசா விளையாட்டைக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிரமிக்க வைக்கும் உயரம் வரை சீசா மரம் மேலெழும்பிக் கீழே வந்தது. இன்னும் சில குழந்தைகள் சருக்குமரம் விளையாடினர். அதற்கடுத்து கொஞ்சம் உள்ளே ஈஃபிள் டவர் போல உயர்ந்த கோபுரம் ஒன்று செம்மாந்து நின்றிருந்தது. இன்னொரு இடத்தில் கீழிருந்து மேலாக தொங்கும் ஏணி ஒன்று அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதன் மீது சிறுவர்களும் சில இளைஞர்களும் ஏறி மரத்தின் உச்சியை எட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் நான்கு வெளிநாட்டு இளைஞர்கள் ஷாட்ஷும் டீ ஷர்ட்டும் அணிந்தபடி இளநீர் சீவிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நேர் எதிரில் சற்றுத் தள்ளிச் சுடச் சுட பீட்சா தயாராகி விற்பனையாகிக் கொண்டிருந்தது. கேழ்வரகு மாவு தோசை முதலான இந்திய, தமிழ்நாட்டு உணவுகளும் தயார் செய்யப்பட்டு டோக்கன்களுக்குக் கொடுக்கப்பட்டன. அழகழகான ஓவியங்கள் வரையப்பட்ட டீசர்ட்டுகள், கைவினைப் பொருள் கம்மல்கள், வளையல்கள் விற்பனைக்கு இருந்தன.

இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சூடான மசாலா டீ செய்து குக்கீஸுடன் சேர்த்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஆங்கில இசை நிகழ்ச்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. துள்ளலான இசையினூடே சூடான தேநீரையும் இனிப்பான குக்கீஸும் வாங்கிட்டு சாப்பிட்டபோது மாலைப் பொழுது இன்னும் அழகாக இருப்பதாக உணர்ந்தேன்.

ஆங்கில மொழியின் வாசம் சுற்றிலும் இருந்தது. தெரிந்தவர், நண்பர், தெரியாதவர் என்கிற பேதம் இல்லாமல் புன்னகையோடு ஹெலோ சொல்லிக் கடந்து போன மனிதர்களின் முகங்கள் அந்நியப்பட்டு ஒதுங்கியிருக்கச் செய்யவில்லை. அங்கே புன்னகை, அன்பின் மொழியாக இருந்தது.

மரங்களின் சலசலப்புகளுக்கு இடையில், குருவிகளின் கீச்சொலிகளுக்கு இடையில் மொழி பேதமற்று ஒரு சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகத்தின் ஊற்றுக் கண்ணாகப் பொங்கிக் கொண்டிருந்தது.

இப்படியொரு பொங்கல் கொண்டாட்டம் ஆரோவில்லில் நடக்கிறது என்று சொல்லி, என்னை அழைத்துச் சென்ற நண்பன் Kaba Yoவுக்குத்தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். நன்றியும் அன்பும் கபா. <3


வியாழன், 11 ஜனவரி, 2018

HotFriday.com article

Meet The Sahitya Akademi Yuva Puraskar Awardee From Tamil Nadu

By AsadhaJanuary 11, 2018

Manushi Bharathi is still in university doing her doctoral degree but has carved a niche in Tamil poetry and the Sahitya Akademi Yuva Puraskar is an endorsement to that. This young litterateur hails from a humble village in Northern Tamil Nadu and is the first graduate to emerge from her family. She lost her mother very early in her life and it was reading that gave her the much needed solace and helped to cope with the void and lonesomeness.

When she started scribbling her ideas on paper she had never imagined that these writings would one day be made into books. In fact it was from the year 2008 that she started to safekeep her writings. Her first book of poems, ‘The Glowing Words of Little Princess’, got published in 2013. It was noted literary critic Venkat Swaminathan’s review that drew the attention of readers to this book.

When she started scribbling her ideas on paper she had never imagined that these writings would one day be made into books

Enthused by the reception Manushi published her second book of poems in 2014, ‘God of Kisses’, and it was followed by ‘Reminiscence of a Primal Love’ in 2015. Manushi Bharathi’s original name is Jayabharathi. She chose the nom de plume Manushi in order to ascertain her being a woman which is in no way inferior to that of a man. The second part of her name is taken from the name of unparalleled Tamil poet Subramanya Bharathi.

Manushi has carved a niche in Tamil poetry and the Sahitya Akademi Yuva Puraskar is an endorsement to that

In her poems Manushi speaks about caste, social issues, love, friendship etc. She turns very poignant with her expression in poems which narrate the wretched lives of women in the society. There is a poem titled ‘The Land of Nirbhayas’ in the collection ‘Reminiscence of a Primal Love’. “Nirbhayas are fearless- always-they taste death-in their struggle to live… I have come out of the kitchen now- not to draw ‘kolam’ in the courtyard- not to dispose of the garbage- not to fetch water- but for some other reason”.

Of all the accolades to her poems she considers particularly the following one to be very precious. While she was readying her poems for her first collection she went to take print outs of her poems in a DTP shop. The guy at the shop was much impressed by her poem, ‘There is Nothing to Live for’, and asked whether he could keep a copy of it with him. She considers this as one of the biggest honours ever bestowed on her poems.

Her inspirations in poems are Malayalam poets Kamaladas and Balachandran Chullikad, and Taslima Nasrin. Manushi also loves the poems of Neruda, Mahmoud Darwish and Sylvia Plath. In contemporary Tamil poetry she admires Ilampirai, Kutti Revathi and Leena Manimekalai. Manushi has plans to explore the world of children and in the near future she will be working on it.

TAGS 

CultureManushi BharathiSahitya Akademi Yuva Puraskar Award

 

தீராநதி நேர்காணல்

துவக்ககால எழுத்துக்கள்?

கவிதை எழுதுவதில் இருந்துதான் எனது எழுத்துப் பயணம் துவங்கியது. என் நினைவு சரியாக இருந்தால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து கவிதை எழுத முயற்சி செய்திருக்கிறேன். அப்போது கவிதையைப் பற்றி எந்தப் புரிதலும் எனக்கு இல்லை. ஒரு வரிக்குக் கீழே இன்னொரு வரி. இரண்டாவது வரியைக் கொஞ்சம் உள்ளே தள்ளி எழுதனும் என்கிற அளவில் தான் கவிதை குறித்த புரிதல் இருந்தது. அப்படி எழுதிப் பழகிய கவிதைகளில் ஒன்று கூட என் நினைவில் இல்லை. ஏனெனில் எழுதிப் பார்த்து அதை அப்படியே ஒன்றிரண்டு வாரங்களில் கிழித்துப் போட்டு விடுவேன். இதுதான் கவிதை, இப்படித்தான் எழுத வேண்டும், இதுதான் கவிதை என்று சொல்லித்தர யாரும் இல்லை. நானாக வாசித்து, எழுதிப் பழகிக் கற்றுக் கொண்டதுதான்.

 வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த விருது அறிவிக்கும் வரை நான் கவிதைகள் எழுதுவேன் என்பதெல்லாம் தெரியாது. இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும்போது எப்போ பாரு ஊருக்குப் போறேன் ஊருக்குப் போறேன்னு காச கரியாக்குறா என்று புலம்புவார்கள். புத்தகம் வாங்கி காசை வீணாக்குறதுக்கு நகை வாங்கலாம்ல என்று சொல்வார்கள். அவர்களுடைய வார்த்தைகளை நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதில் பெரிய வருத்தம். பேப்பரிலும் டீவியிலும் எனது பெயரும் புகைப்படமும் வரும் வரை தான் அந்த வருத்தம். இப்போது அக்கா பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார் என் தங்கச்சி ஒரு எழுத்தாளர். விருதுலாம் வாங்கி இருக்காங்க என்று.  பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கிய மாணவியாகச் சேர்ந்தபோது நவீன இலக்கியம், இலக்கியக் கோட்பாடுகள், சிறுபத்திரிகைகள் எனக்கு அறிமுகமாயின. குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகள் அறிமுகமாயின. பெண் எழுத்து குறித்து நிகழ்ந்த வாத விவாதங்களை வாசித்தேன். அவற்றை வாசிக்க வாசிக்க நான் எழுதிய கவிதைகளைக் கிழித்து எறிந்தது சரி என்று தோன்றியது. அப்பொழுது கூட கவிதை எழுத வேண்டும், புத்தகம் போட வேண்டும் என்கிற முன் திட்டமிடல் எழுதுவுமின்றி வாசித்துக் கொண்டிருந்தேன். 

எனது வாசிப்பைச் செழுமைபடுத்தியதில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஒருவர் எனது நெறியாளர் பா.இரவிக்குமார். இன்னொருவர் நாடக ஒளியமைப்பாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான செ. ரவீந்திரன். இருவருமே நவீன இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம்  செய்தனர். நூல்களைக் கொடுத்து வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தினர். ரவீந்திரன் சார் உலக இலக்கியம் குறித்து, உலக சினிமாக்கள் குறித்து பேசிய உரையாடல்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. இந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது நான்  கவிதைகள் எழுதினேன். எனது முதல் கவிதை கீற்று.காமில் வெளியானது. பிறகு வடக்குவாசல் பத்திரிகையில் சில கவிதைகள் வெளிவந்தன. முதல் தொகுப்பு வெளியாகும் வரை வேறெந்த சிறுபத்திரிகையிலும் எனது கவிதைகள் வெளிவந்திருக்கவில்லை. தொகுப்பு வெளிவந்த பிறகு உயிர்மை, உயிரெழுத்து, தளம், கனவு, திணை, நிகரன், தாமரை, செம்மலர் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவரத் தொடங்கின. 

இலக்கியத்திற்காக வாங்கிய முதல் பரிசு?

எனது முதல் கவிதைத் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் வெளிவந்த பிறகு 2014இல் ஈரோடு தமிழன்பன் விருது வழங்கப்பட்டது. எனது கவிதைகளுக்காக நான் பெற்ற முதல் விருது அதுதான். அதன் பிறகு 2015இல் முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருதும், 2017இல் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் நூலுக்காக திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சக்தி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கவிதை எழுதத் துவங்கிய பொழுது கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில், புதுவை மாநில அளவில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். பிறகு போட்டிகளுக்காக எழுதுவதில் பெரிய விருப்பங்கள் இல்லாமல் போய்விட்டன. கவிதை எழுதுவது ஆத்மார்த்தமான உணர்வு.  பெரும் விடுதலை. மன நெருக்கடிகளின் வடிகால்.  திட்டமிட்டு வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருப்பது எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை அல்ல.. கவிதையோ கதையோ எழுது என்று என்னைத் தூண்ட வேண்டும். அப்படி இல்லாதபோது வாசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் கவிதை நூல் வெளிவந்தபிறகு கவிஞர் ரமேஷ் பிரேதன் படித்துவிட்டுப் பாராட்டியதும், விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கணையாழியில் எழுதிய மதிப்புரையும் என் கவிதைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அதேபோல, ஜெராக்ஸ் கடையில் எனது கவிதைகளை மித்ர பதிப்பகத்திற்குக் கொடுப்பதற்காக பிரிண்ட் அவுட் எடுத்தபோது ஜெராக்ஸ் கடை அண்ணா அதில் ஒரு கவிதையை வாசித்துவிட்டு கவிதை ரொம்ப நல்லா இருக்கு யார் எழுதியது இதை நான் வச்சுக்கலாமா என்று கேட்டார். ‘வாழ்வதில் ஒன்றுமில்லை / வாழ்க்கை / பிய்த்தெறியப்பட்ட ஒரு மலராகிவிட்டபிறகு / மரணத்திலும் ஒன்றுமில்லை / அது வெறும் சொல்லாகிவிட்ட பிறகு’ என்ற கவிதைதான் அது. எனது கவிதைக்குக் கிடைத்த முகமறியாத முதல் பாராட்டு. இப்போது வரை முகநூல் நண்பர்கள் பலரும் எனது கவிதை நூலை வாசித்துவிட்டு அவர்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது எழுதுவது குறித்த பெரும் நிறைவு இருக்கிறது. யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து குயில் பாடிக் கொண்டிருப்பதில்லை. ஆனால், குயில் கூவுவதை யாரோ ஒருவர் எங்கேயோ அமர்ந்து கேட்டு லயித்துக் கொண்டிருப்பர். அது சந்தேகமேயில்லை. 

 அப்பா அம்மா பெயர்? என்ன பணியாற்றுகிறார்கள்? சகோதரர்கள்? வசிப்பிடம்?

அப்பா பெயர் அம்பலவாணன். அம்மா பெயர் கல்யாணி. அக்காவும் அண்ணனும் இருக்கிறார்கள். நான் கடைசிப் பெண்.  விவசாயக் குடும்பப் பின்னணியில் வளர்ந்தவள் நான்.  என்னுடைய பத்து வயதில் அம்மா கேன்சர் நோயால் இறந்து விட்டார். என் நினைவு தெரிந்து அப்பாவோடு எந்தப் பிணைப்பும் பாசமும் இருந்ததில்லை. அம்மா தான் என் உலகம். அம்மா இல்லாத வெற்றிடத்தை கவிதை நிரப்பிக் கொண்டிருக்கிறது. கவிதையால் நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

கவிதைகள் மீது தனிப்பட்ட ஆர்வம் வரக் காரணம் என்ன?

எல்லாரையும் போல முதலில் எழுதிப் பார்த்தது கவிதை வடிவம் தான். எனது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிப் பார்க்க கவிதை தான் நல்ல துணையாக இருந்தது. கவிதை எனது மொழியாக, நான் நிகழ்த்த விரும்புகிற உரையாடலாக இருப்பதை நான் உணர்கிறேன்.

கதைகள் மீதான ஆர்வத்திற்கு, எழுத்துக்கு யாரையாவது ஆசான் என்று சொல்ல முடியுமா?

இவர் தான் எனது ஆசான் என்று யாரையும் சொல்வதற்கில்லை. அப்படி யாரையும் நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. வாசித்தவரையில் என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இருந்து புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நான் கொண்டிருந்த மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளனர். வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியமைத்துள்ளனர். அன்பைச் சொல்லித் தரும் எழுத்துகள், மனிதத்தைக் கொண்டாடும் படைப்புகளில் இருந்துதான் என்னைச் செதுக்கிக் கொள்கிறேன். சொல்லப் போனால் பாவமே செய்யாதவர்கள் இவள் மீது கல்லெறியுங்கள் என்று சொன்ன யேசுவிடமிருந்தும் நான் கற்றுக் கொள்கிறேன். 

தமிழில் பாரதியார் தொடங்கி இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் வரை எல்லோரும் எனக்கு ஆசான்கள்தான். என் பள்ளி பருவத்தில் கதைகள் சொன்ன என் பெரியப்பா கூட ஒருவகையில் எனது எழுத்துலக வழிகாட்டி தான். ஒவ்வொருவர் கதைகளை வாசிக்கும்போதும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். எப்படி எழுத வேண்டும், எப்படி எழுதக் கூடாது, எதை எழுத வேண்டும் என பலவற்றையும்.

விரும்பி வாசிக்க கூடிய புத்தகங்கள் என்னென்ன?

பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள்,  பெண் ஏன் அடிமையானாள், டோட்டோசான் - ஜன்னலில் ஒரு சிறுமி நாவல், பெண் எனும் இரண்டாம் இனம், குட்டி இளவரசன் நாவல், ஆண்டன் செகாவ் சிறுகதைகள், தஸ்லீமா நஸ்ரின் கவிதைகள், பாப்லோ நெரூடா கவிதைகள், கமலாதாஸ் கதைகள், சமகால உலகக் கவிதைகள், பாலஸ்தீனக் கவிதைகள்,  பிரபஞ்சன் சிறுகதைகள், வண்ணதாசன் கதைகள், கந்தர்வன் கதைகள், மனுஷ்ய புத்திரன் கவிதைகள், மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள், லண்டாய் - வரை பட்டியல் நிறைய இருக்கின்றது. என்னுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பிரதிபலிக்கனும், எனது உணர்வுகளுக்கு நெருக்கமாக இருக்கனும், அல்லது எனக்குப் புதிய உலகத்தை, நான் அறிந்திராத மனிதர்களை, எனக்குப் பரிச்சயமில்லாத வாழ்வியலைச் சொல்லித் தருகிற புத்தகங்கள் தான் எனக்கு நல்ல நண்பர்கள். ஆசான்கள்.

சமீபத்திய சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது அறிவிப்பு வந்த போது எப்படி இருந்தது? இந்த விருது உங்களுக்கு கிடைக்குமென எதிர்பாத்திங்களா?

நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. திருவனந்தபுரத்தில் நடந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தேன். இந்த வருடம் யுவபுரஷ்கார் விருது எனது கவிதை  நூலுக்கு என்ற செய்தி அலைபேசி வழியாக வந்து சேர்ந்தது. என் அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்? இந்த மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொள்ள அம்மாவின் அன்பையொத்த நண்பர்கள் இருக்கிறார்கள். அது பெரும் மகிழ்ச்சி.

எழுத்துலகில் எனக்கொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண் கவிதைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. இந்த விருதின் மூலம் எழுத்தில் எனக்கிருக்கும் பொறுப்பு கூடுதலாகியிருக்கிறது. அந்தப் பொறுப்பை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஏற்றுக் கொள்கிறேன். 

விருது விழா எப்போது?

இந்த நேர்காணலுக்கான பதிலை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் விருது விழா குறித்து சாகித்ய அகாடமி அனுப்பியிருந்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். சண்டிகரில் வருகின்ற டிசம்பர் 22 அன்று விருது விழா நடைபெற உள்ளது. இந்தத் தகவலை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்திய எழுத்தாளர்களின் தொடரும் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது. ஒரு போராத காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்கிற கேள்வி தினம் தினம் எழுகிறது. கருத்து சுதந்திரம் கேள்விக்குரியாகி இருக்கிறது. படைப்பாளிகள் மீதான அடக்குமுறை இன்று நேற்று நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. பாரதியார், பெரியார், அம்பேத்கர் என வரலாறு முழுக்க படைப்பாளிகள் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இனத்தை அழிக்க நினைக்கையில் எல்லாம் நூலகத்தை எரித்தது தானே வரலாறு. எப்போதுமே பேனாவைக் கண்டு அதிகார வர்க்கம் அளவற்ற அச்சம் கொண்டிருக்கிறது. அந்தப் பேரச்சத்தின் காரணமாக  எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் எழுத்துகளில் மேலெழும் கலகக்குரலை அழித்துவிட முடியாது.  வெட்ட வெட்ட மரம் துளிர்த்துக் கொண்டே இருப்பது போல அடக்குமுறை மேலோங்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படைப்பின் குரல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பெண் படைப்பாளி என்ற முறையில் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை எதுவென்று நினைக்கிறீங்க? இதே நேரம் பெண்படைப்பாளிக்கு இந்த சமூகம் உண்மையான அங்கீகரிப்பைக் கொடுக்கிறதா?.

இப்படியொரு கேள்வியை ஆண் படைப்பாளிகளிடம் நாம் கேட்போமா? ஆண் படைப்பாளி என்கிற முறையில் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை எது? கேட்க வாய்ப்பில்லை. ஒருவகையில் இப்படியான கேள்வி பெண்ணின் எழுத்தாளுமையை, பொதுவெளி செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவே பார்க்கிறேன். பெண் என்பதால் சிறப்பு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன, அவர்களுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதெல்லாம் வெற்றுக் கற்பிதம். ஒரு எழுத்தாளர் அங்கீகரிக்கப்படுகிறார் என்றால் படைப்பு தான் முதற்காரணம். யார் எழுதியது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்தப் படைப்பில் கொண்டாடத் தகுந்த ஓர் உணர்வு இருக்கப் போய்த்தான் அது அங்கீகரிக்கப்படுகிறது.

பெண் என்கிற சிறப்பு சலுகையையும் பெற்றுக் கொண்டு சம உரிமை, சமத்துவம், விடுதலை என்றெல்லாம் பேச முடியாது. எழுத்துலகில் பெண் என்பதற்காக எந்தச் சிறப்புச் சலுகையும் அங்கீகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. எழுத்தில் உண்மையும் எழுத்துக்கான அறமும் இருக்கும்போது அது வாசகர்களைப் போய்ச் சேருகிறது. சிலாகிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படுகிறது. ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற வேறுபாடு இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

விலங்குகள் மீது அளப்பரிய அன்பு வைத்துக்கொள்வது போல் தெரியுது. அதுக்கு தனிப்பட்ட ஏதாவது காரணம் இருக்கா?

அன்பு தேவையாய் இருக்கிறது எனக்கு. பேரன்பு இந்த வாழ்வை நகர்த்திச் செல்கிறது என முழுமையாக நம்புகிறேன். செல்லப் பிராணிகளின் பேரன்பு தனித்துவமானது. அவர்கள் கொட்டித் தருகிற பேரன்பில் வாழ்க்கை அழகாகிறது. விடுதியில் தங்கிப் படித்தபோதே நாய்க்குட்டிகளை வளர்த்திருக்கிறேன். பறவைகளில் கிளிகள் ரொம்ப பிடிக்கும். காக்கைகளுக்கும் எனக்கும் பெரிய பந்தம் எப்போதும் உண்டு. ஆரோவில்லில் நான் தங்கியிருக்கிற வீட்டில் நான்கைந்து காக்கைகள் உரிமையாக வந்து அழைத்து உணவு கேட்கிற அளவுக்குப் பந்தம். இப்போது வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கிறேன். தற்செயல் என்று நினைக்க முடியாதபடி தினமும் நான் வகுப்பெடுக்கும் அறையின் ஜன்னலில் வந்தமர்ந்து இரண்டு நிமிடம் விடாமல் கத்திவிட்டுப்  போகும். நம் மரபில் சொல்லப்படுவது போல என் அம்மாவாகக் கூட இருக்கலாம். அதன்மீது சினேகம் பெருகுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.  முயல் குட்டிகளைக் கூட வளர்த்திருக்கிறேன். 

என்னுடைய நாய்க்குட்டி கதிர். அவன் என் வாழ்க்கையில் வந்த பிறகு அவ்வளவு மாற்றங்கள் எனக்குள்.  நான் தனியாக இல்லை என்பதை உணரச் செய்த சின்னஞ்சிறு அன்பு. வெளியூருக்குப் போய்த் திரும்புகையில் எனக்காக வீட்டில் ஒரு ஜீவன் காத்திருக்கிறது எனும் உணர்வு அற்புதமானது. அவனுக்கு எனது மொழி புரியும். அவனது மொழி எனக்குப் புரியும். நாய்க்குட்டி வடிவில் இருக்கும் குழந்தை அவன். 

மனுசி - பெயருக்குப் பின்புலம்? இயற்பெயரா?

இயற்பெயர் ஜெயபாரதி. எழுதுவதற்காக மனுசி என்ற பெயரை வைத்துக் கொண்டேன். மனுசி என்ற பெயரைப் பலரும் கிண்டலடித்திருக்கிறார்கள். நீ மனுசி என்றால் அப்போ நாங்க என்ன மிருகமா? நாங்க என்ன பேயா என்றெல்லாம். என்ன வருத்தம் என்றால் சில பெண்களே இப்படி கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் கிண்டல் செய்வார்கள். சுயமரியாதை உணர்வுள்ள எந்தப் பெண்ணும் மனுசியே. மனுசன் – மனுசி. அவ்வளவு தான். மனுசி, சுயமான பெண். 

எத்தனைக் கவிதைத் தொகுப்பு எழுதியிருக்கீங்க? எந்த கவிதைத் தொகுப்புக்கு  விருது?

இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. முதல் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள். இரண்டாவது முத்தங்களின் கடவுள். மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் சண்டிகரில் விருது விழா நடைபெறவுள்ளது.

நாவல் சிறுகதை எழுதுற நோக்கமிருக்கா?

நிச்சயமாக. கவிதை தான் my cup of tea. என்றாலும் விரைவில் சிறுகதைத் தொகுப்பு வெளிவரவுள்ளது. நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது.   

என்ன வேலைப் பாத்துட்டுருக்கீங்க?

சென்னையில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன்.

ஒரு கவிதை சொல்லுங்க? 

ஒரு கவிதை என்றால் நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த கவிதையா? அல்லது நான் எழுதியதில் கவிதையா? புதிதாக எழுதிய கவிதையா? எதைச் சொல்ல? பிடித்த கவிதை என்றால் வாழ்க்கையை / வாழ்க்கையில் இருந்து கற்றேன் / காதலை / ஒரு முத்தத்தில் இருந்து என்ற பாப்லோ நெருடாவின் கவிதை மிகவும் பிடிக்கும். 

இலக்கியத்துல என்ன செய்ய திட்டம்?  

பெரிய திட்டம் என்பதெல்லாம் இல்லை. பெரிய பெரிய திட்டங்களோடு வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடிகார முட்களும் நாட்காட்டியின் தாள்களும் என்னை இயக்குவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அதேபோல விடிந்து இரவு வந்து சேர்வதற்குள் ஒரு கவிதை அல்லது ஒரு கதை எழுதி முடித்தாக வேனும் என்ற முன் தீர்மானம் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. மனம் எழுத உந்தித் தள்ளும் போது எழுதுவதும் மற்ற நேரங்களில் வாசிப்பதுமாக நகர்கின்றன எனது வாழ்க்கை. இந்த நிமிடம், இந்த நாள் சிக்கல் இல்லாமல் போகிறது. அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

காலம் அனுமதிக்கும் வரை எழுத வேண்டும். நிறைய பயணம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் குழந்தைகள் உலகத்திற்குள் சென்று இணைந்து கொள்ள வேண்டும்.

நன்றி :
#தீராநதி நேர்காணல் டிசம்பர் 2017