செவ்வாய், 26 ஜூலை, 2016

பேரனுபவத்தின் நிழலில் - மனுஷி

எனது நெருங்கிய நண்பர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்பீட் போஸ்ட் அனுப்பினேன் வந்ததா என்று மெசேஜ் அனுப்பினார். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று ஓடிக் கொண்டிருக்கிற காலத்தில் இன்னமும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி ஆச்சரியத்தில் மூழ்கடிப்பவர். (வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பேசிக் கொண்டாலும் அவ்வப்போது கடிதங்கள் வந்து சேரும்).

திடீரென்று அனுப்புனர் முகவரி இல்லாமல் ஒரு பார்சல் வந்து சேரும். எனக்குப் பிடித்த ஏதோவொரு இனிப்பு வகையோ ஒரு புத்தகமோ அல்லது நான் பயன்படுத்தும் ஏதோவொரு பொருளோ இருக்கும். அது பற்றி நான் பகிர்ந்து கொள்ளும்போதுதான் தெரியும் அது அந்த நண்பர் அனுப்பியது என்று.

புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கும் புத்தகப்புழு. எந்நேரமும் ஏதாவது ஒன்றை அது சிறுபத்திரிகையாகவோ, மொழிபெயர்ப்பு நாவலாகவோ, கவிதை நூலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரை நூலாகவோ அல்லது வெகுஜன பத்திரிகையில் வந்த ஏதோவொரு படைப்பாக அல்லது நேர்காணலாகவோ ஏதாவதொன்றை வாசித்துக் கொண்டேயிருப்பார். வாசித்ததில் பிடித்த பத்திகளை, அல்லது பிடித்த வரிகளை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்வதில்தான் தொடங்கும் பெரும்பாலும் எங்களது உரையாடல். வாசித்த நூல்கள் குறித்து உடனடியாக மதிப்புரை ஒன்றையும் எழுதி முடித்து விடுவார். அவரிடம் நான் வியந்து பார்க்கிற விடயம் அது.

சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் அவர் வாங்கிய நூல்களின் பெயர்ப் பட்டியலை எனக்கு அனுப்பி வைத்தார். என்னுடைய ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதை நூல் அந்தப் பட்டியலில் இல்லை. கொஞ்சம் ஏமாற்றம். நிறைய மகிழ்ச்சி.
காரணம், மார்ச் மாதம் புத்தக வெளியீடு முடிந்த அடுத்த வாரத்தில் அவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். எனது நூல் என் கைவசம் இல்லை. கடைகளிலும் கிடைக்கவில்லை. புத்தகம் கைக்கு வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என மற்ற நண்பர்களுக்குச் சொன்னது போலவே அவரிடமும் சொல்லி இருந்தேன். ஆனால் அனுப்பவேயில்லை. அவரும் அதைப் பற்றி இரண்டு மூன்று முறைக்கு மேல் அனுப்பச் சொல்லி, பிறகு கேட்கவுமில்லை. அவரிடம் சொல்லாமலேயே புத்தகத்தை அனுப்பிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன். நூல் வெளியாகி மூன்றே மாதத்திற்குள் கிடைக்காமல் இருப்பது வரமா சாபமா தெரியவில்லை.

இந்தச் சூழலில் தான் ஸ்பீட் போஸ்ட் அனுப்பி அது வந்து சேர்ந்ததா என நச்சரித்தார் நண்னர்.
போஸ்ட் மேன் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து குரல் கொடுத்துவிட்டுப் போயிருப்பார் போல. சரி அஞ்சல் அலுவலகம் போய் நேரில் கேட்டு விடலாம் என்று கிளம்பினேன். வழக்கம் போல ஏதாவது நூல் அல்லது புதிதாக வந்த இதழ் அனுப்பியிருப்பார் அல்லது அவரது நூல் அனுப்பியிருப்பார் அதனால்தான் திரும்ப திரும்ப கிடைத்ததா எனக் கேட்கிறார் என நானாக யூகித்துக் கொண்டேன். அல்லது வேறெதுவும் விலை மதிக்க முடியாத பொருள் அந்தப் பார்சலில் இருக்கிறதா? ஆர்வம் என்னக் குடைந்தெடுத்தது.

ஒரேயொரு கட்டிடம் கொண்ட சின்ன அறை தான் அஞ்சல் அலுவலகம்.
அஞ்சல் அலுவலகத்தில் இருந்த பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரிந்தது அடிக்கடி போஸ்ட் வாங்க வந்து போயிருந்ததால். எனது பெயர் கூட நினைவு வைத்திருந்தார். போஸ்ட் மேன் வெளியில் போயிருக்கார் கால் பண்ணி கேளுங்கள் என்று நம்பர் கொடுத்தார். அந்த எண்ணுக்கு அழைத்தால் பதினைந்து நிமிடங்களில் வருகிறேன் வெயிட் பண்ணுங்க என்று சொன்னவர் அரை மணி நேரம் கழித்து வந்தார். அதற்குள் என் நண்பர் மூன்று முறை போன் பண்ணி வாங்கியாச்சா என்று கேட்டுவிட்டார். போஸ்ட் மேன் வந்ததும் ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா என்றபடி பார்சலைக் கொடுத்தார். அவர் நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு நன்றி சொல்லிவிட்டு அந்தச் சின்ன கட்டிடத்தை விட்டு தள்ளி வந்து பார்சலைப் பிரித்தேன். எதிர்பார்த்தது போலவே புத்தகம்தான். பார்சலின் வடிவம் பிரிக்காமலேயே சொன்னது. பிளாஸ்டிக் கவரால் கவர் செய்யப்பட்டிருந்தது ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள். நான் எதிர்பாராதது. கண்கள் தளும்பி விட்டன. காணாமல் போன குழந்தை திரும்ப கிடைத்தவுடன் அக்குழந்தையைத் தொட்டுத் தடவி அள்ளி முத்தமிடுவதைப் போல எனது நூலைத் தொட்டுத் தடவிப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து நுகர்ந்து வாசனையை உள்ளிழுத்தேன். வெளியீட்டு விழாவுக்குப் பிறகு அப்போது தான் கையில் தொடுகிறேன் எனது நூலை.

நான் கையெழுத்திட்டு அனுப்பியிருக்க வேண்டும். அவர் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். நாம் இந்நாள் வரை நூல் அனுப்பாமல் இருப்பதால் குத்திக் காட்டுகிறாரோ என்று ஒருகணம் தோன்றியது. அப்படியான நோக்கம் அவருக்கு இருக்காது என உடனடியாக மனதிலிருந்து அந்த நினைப்பை விலக்கி விட்டேன். மானசீகமாக அன்பான நன்றிகளை அவரிடத்தில் சொன்னேன்.
நூலை எழுதியவருக்கே ஒரு வாசகனின் அன்புப் பரிசு என எழுதியவரின் நூலை, எழுதியவருக்கே கையெழுத்திட்டு அனுப்பி வைத்த நிகழ்வு இதற்கு முன்பு எந்தப் படைப்பாளிக்கேனும் நிகழ்ந்திருக்கிறதா? அதைப் பெற்றுக் கொண்ட அனுபவம் வேறு யாருக்கும் வாய்த்திருக்குமோ என்னவோ?
மறக்கமுடியாத பேரனுபவம் அது.
- மனுஷி

ஞாயிறு, 10 ஜூலை, 2016

எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்

எழுத்தாளர் சா தேவதாஸ் சுதந்திர சிந்தனை அமைப்பின் சார்பில் ஒருங்கிணைத்த எழுத்தாளர் பிரபஞ்சனுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு பேரனுபவம்.

திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி இருந்தார்கள்.  காற்றோட்டமான அறை. எந்தவிதமான அலங்கார மேடையமைப்புகளும் இல்லாமல் கிட்டத்தட்ட வட்ட வடிவ ஒழுங்கமைப்பில் தோழர்கள் அந்த அறையில் அமர்ந்திருந்தனர். எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய சிறு அறிமுகத்திற்குப் பிறகு சா.தேவதாஸ் பேசும்போது "எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்" என்றொரு வாசகத்தை முன்னிறுத்திச் சில நிமிடங்கள் பேசினார். சக படைப்பாளியை இவ்வளவு குறைந்த வார்த்தையில் அழகாக அங்கீகரிக்க முடியுமா? தெரியவில்லை.

அவருக்குப் பிறகு, பிரபஞ்சன் பேச எழுந்தார். ஒரு பத்து நிமிடம் பேசுகிறேன். பிறகு நீங்கள் கலந்துரையாட, பேச்சினைத் தொடர்வோம் என்று சொன்னார். அப்போது மணி காலை பத்தரை. ஒரு நாட்டுப்புறக் கதையிலிருந்து பேச்சைத் தொடங்கினார். அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் சொல்லி முடித்தார். பிறகு, புரட்சிக் கவிதையாக எழுதிக் கொண்டிருந்த காலத்தில் தன்னைச் சரியான எழுத்தை நோக்கி புதுமைப்பித்தனின் கதைகள் தான் நகர்த்திச் சென்றன என்று சொன்னவர் புதுமைப்பித்தன் எழுதிய மெஷின் மனிதன் கதையை அழகாகத் தனக்கேயுரிய பாவனையுடனும் ஏற்ற இரக்கங்களுடனும் சொன்னார்.

இப்படியாகக் கொஞ்சம் கதைகள், பிறகு அவரது அப்பா - அம்மா - குடும்ப சூழல், சிறு வயதில் தான் வாசிப்புக்குள் நுழைந்த அனுபவம், இளமைக்காலக் குறும்புகள், தான் எழுதிய முதல் கதை, அந்தக் கதை முதலில் நிராகரிக்கப்பட்டு பிறகு வேறொரு பத்திரிகையால் அங்கீகரிக்கப்பட்ட கதை, பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம், மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்களின் பால் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு, மகாபாரதக் கதைகளைக் களைத்துப் போட்டு வேறொரு கோணத்தில் பாரதக் கதை மாந்தர்களை முன்வைத்த அவரது பார்வை, இன்றைய இலக்கியச் சூழல் - இப்படி ஏராளமான அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் தனது பேச்சினூடாகச் சொன்ன ஒரு விடயம் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டது. "சமூகத்தை நேசிக்கின்ற ஒருவனை, சமூகம் ஒருபோதும் கைவிடுவதில்லை. தோழர்களை நேசிக்கின்ற ஒருவனை, தோழர்கள் ஒருபோதும் கை விடுவதில்லை" என்பதுதான் அது. உண்மை.

கிட்டத்தட்ட மணி 12.45ஐத் தொட்டிருந்தது இத்தோடு முடிச்சுக்கலாமா என்று அவர் கேட்டபோது. கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கூட சோர்வடையவில்லை என்பதுதான் அந்த நிகழ்வின் வெற்றி. உடலும் மனமும் ஒரேயிடத்தில் இருக்கும்படியாகப் பேச்சினால் கட்டிப் போடுவது அவ்வளவு சுலபம் இல்லை.
பிரபஞ்சனின் பேச்சு கூட்டத்திற்கு வந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. நெகிழ வைத்தது. மனம் ஒன்றி அங்கேயே இருக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்தது. அதுதான் பிரபஞ்சன் என்ற எழுத்தாளனின் வெற்றி. ஏனெனில் அந்தப் பேச்சில் உண்மை இருந்தது.
சமூகத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் எனக்கு அன்பு இருக்கும் வரை நான் எழுதிக் கொண்டிருப்பேன் என்று சொல்ல அவரால் முடிகிறது எனில் மனிதர்கள் மீது இன்னமும் நம்பிக்கையும் அன்பும் வற்றிப் போகாத ஓர் ஆன்மாவாக அவர் எழுதிக் கொண்டேயிருப்பார்.

கவிஞர் இரா ஆனந்தி, ஸ்ரீமதி பிரசன்னா, தோழர் ரத்தினவேல், கண்மணி ராசா, பெரியார் குமார், நிகரன் பாஸ்கரன், பால்ராஜ் உள்ளிட்ட பல தோழர்களையும் நண்பர்களையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. சிறப்பான நிகழ்வை ஒருங்கமைத்த தோழர் சா தேவதாஸ் அவர்களுக்கு எனது அன்பு எப்போதும்.

புதன், 6 ஜூலை, 2016

டைகர் ( ஒரு நாயின் கதை) - மனுஷி

டைகர்

(ஒரு நாயின் கதை)

n  மனுஷி

          எதிர்வீட்டு மனோஜ் அந்த நாயை ஒரு பெரிய குச்சி ஒன்றினால் விளாசிக் கொண்டிருந்தான். தன் அம்மாவிடம் அடிவாங்கிக் கொண்டு அலறும் பத்து வயது சிறுவனைப் போல செய்வதறியாது வீறிட்டுக் கதறிக் கொண்டிருந்தது அந்த நாய். அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு ஏன் அங்கேயே கத்திக் கொண்டிருந்தது என யோசனையாக இருந்தது. அதன் கழுத்துச் சங்கிலி வெளி இரும்புக் கேட்டில் கட்டப்பட்டிருந்தது. அதன் கதறல், அது செய்த மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றிற்கு மன்னிப்புக் கேட்பது போல இருந்தது.

          “நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வச்சாலும் அது எங்கயோ போகுமாம்.. சரியாதான் இருக்கு. சனியனுக்கு என்ன கொற வச்சேன். இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது. வீட்டுப் பக்கம் வரலாம்ன்ற எண்ணத்தையே மறந்திடு”.

          அவன் அவ்வளவு வன்மத்தோடு கத்தினான். அந்த நாய், தான் செய்தது தவறுதான் மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லிக் கெஞ்சுவது போல தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. அவன் அடித்து முடிந்து ஓய்ந்தவனாய் இரும்புக் கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டான். போவதற்கு  முன்பு அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டுப் போனான். அது இரும்புக் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தது. அதன் அழுகை அவனது காதில் விழவே இல்லை. காதில் விழாதபடி கதவை அடைத்துக் கொண்டு அந்தப் பங்களா வீட்டுக்குள் அடைந்து கொண்டான்.

          அப்படி என்னதான் தவறு செய்துவிட்டது அந்த நாய்? (இனிமேல் அதை நாய் என்று சொல்ல வேண்டாம். அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. அதன் பெயர் டைகர்). டைகருக்காக அப்போதைக்கு வருத்தப்பட மட்டுமே முடிந்தது அந்தத் தெருவில் இருப்பவர்களால்.

          “அநியாயமா ஒரு வாயில்லா ஜீவனுடைய பாவத்தை அள்ளிக் கொட்டிக்கறானே. எல்லாம் பங்களா வீட்டில இருக்கோம்ன்ற திமிர். வேற என்ன” என்று அங்கலாய்த்தார் பாலாமணி அக்கா.

          சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கண்ணீருடன் இரும்பு கேட்டின் முன்னால் நின்று அழுத டைகர் களைத்துப் போய்ப் படுத்துக் கொண்டது. பாலாமணி அக்கா கொஞ்சமாய் சாம்பார் சாதம் கொண்டு வந்து அதன் பக்கத்தில் வைத்தார். தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. பூட்டப்பட்ட கதவுகள் திறக்காதா என்ற ஏக்கம் அதன் கண்களில் வழிந்தது.

***************

          டைகர் செய்த தவறெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அன்று மதிய உணவுக்குப் பிறகு சாப்பிட்டு முடித்தபின், கழுத்துச் சங்கிலியை அவிழ்த்து விட்டிருக்கிறான் மனோஜ். இரும்புக் கதவுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த டைகர், அந்தப் பக்கமாக வந்த தெருநாய்மீது கொஞ்சம் பார்வையைத் திருப்பிவிட்டது. முதல் பார்வையிலேயே காதல் மயக்கம் கொண்ட டைகர், தெருநாயின் பின்னால் போய்விட்டது. அரைமணி நேரத்திற்குப் பிறகு டைகரைக் காணாமல் தேடிக் கொண்டு தெருமுனைக்கு வந்தால், அங்கே புதிதாக முளைத்திருந்த முருகன் கோயில் பின்புறத்தில் டைகரும் அவனது ஜோடியும் ஈருடல் ஓருயிராகக் கலந்திருந்தனர்.

***********

          மாலைப்பொழுது கரைந்து கொண்டிருந்தது. பாலாமணி அக்கா உட்பட அந்தத் தெருவில் உள்ள இரண்டு பெண்களும் டைகருக்காக வருத்தப்பட்டது போதும் என்பதுபோல எழுந்து போய் மெகாசீரியலில் நுழைந்து கொண்டனர்.

          பங்களா வீட்டின் எதிரில் இருந்த மாலினியின் வீட்டு வாசல் முன்பு போய் நின்று கொண்டு குரல் கொடுத்தது டைகர். அதன் குரலில் அவ்வளவு பசி.

**********

          இரண்டு மாதம் தீவிரமான வீடு தேடல் படலத்துக்குப் பிறகு மாலினி அந்த வீட்டிற்குக் குடிவந்தாள். வீட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே  அவளுக்குப் பிடித்துப் போனது. அவளுக்கு வீடு பிடித்துப் போவது ஒரு விஷயமே இல்லை. வீட்டு ஓனர்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். வீடு தருவதாய் அவர் வாய் திறந்து சொல்லவே இல்லை. எல்லா வீட்டு ஓனர்களையும் போல சம்பிராதாயமான கேள்விகளைக் கேட்டு முடித்தார். அவள் எல்லாவற்றிற்கும் ஓக்கே சார் சரிங்க சார் என்பதைத் தவிர வேறு எதையும் பதிலாகச் சொல்லவில்லை. சொல்லவும் வாய்ப்பு அங்கே இல்லை. என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பெரிய பட்டியலாகச் சொன்னார். அவர் சொன்னவற்றில் சில எரிச்சலாக இருந்தது. ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரர். அவர் வீடு. அவருக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கும் தானே.

அது பெரிய வீடுதான். ஒரு பெட்ரூம், ஒரு ஹால், உள்ளே இன்னொரு ஹால், ஒரு கிச்சன், ஒரு சாமி (?) அறை, ஒரு பாத்ரூம், வெளியில் ஒரு வராண்டா. அவள் ஒருத்திக்கு அந்த வீடு மிகப்பெரியதுதான். இதற்கு முன்பு ஒரு சைனாக்காரப் பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் அங்கே வாடகைக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டைக் காலி செய்த ஒரு வாரத்தில் அந்த வீட்டை அவள் தேடிப் பிடித்தாள் தோழியின் மாமா மூலமாக. வீட்டு வாசல் கதவைத் திறக்கும்போதே பீர் வாசம் வயிற்றைக் குமட்டியது. அட்வான்ஸ், வாடகை எல்லாம் பேசி முடித்து, வீடு ஓக்கே ஆன மறுநாள் தனி ஆளாகவே அந்த வீட்டைக் கழுவிச் சுத்தப்படுத்தினாள். இரண்டு நாள் கடுமையான சுத்தப்படுத்தலுக்குப் பிறகு ரூம் ஸ்பிரே வாங்கி அடித்துவிட்டாள். மூன்றாம் நாள் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. இங்கே இனி வசிக்கலாம்  என்ற நம்பிக்கை அப்போதுதான் வந்தது. பக்கத்து வீட்டு பாலாமணி அக்காவும், மேல் வீட்டில் குடியிருக்கும் புதிதாகத் திருமணம் ஆகியிருந்த கீதாவும்கூட சொன்னார்கள். “இப்போதான் இந்த வீட்டுக்குள் இருந்து நல்ல வாசனை வருது”.

**************

கூகுளில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் குறிப்பு பார்த்து  மீன் குழம்பு செய்திருந்தாள் மாலினி. வாசனையே குழம்பின் சுவையைச் சொன்னது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் டைகரின் ஞாபகம் வந்தது.  வெளியில் வந்து பார்த்தாள். மாடிப்படிக்குக் கீழே படுத்திருந்தது. அவளிடம் ஐந்து தட்டுகள் இருந்தன. தினம் ஒரு தட்டில் சாப்பிடுவது அவளது வழக்கம். அதில் ஒரு தட்டை டைகருக்கென ஒதுக்கினாள். தட்டில் சோற்றைப் போட்டு, போதுமான அளவுக்குக் குழம்பை ஊற்றி, இரண்டு மீன் துண்டுகளை எடுத்துப் போட்டாள். மீனின் முள்ளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, சதைப் பகுதியைச் சோற்றில் வைத்து எடுத்துக் கொண்டு போய் டைகருக்கு வைத்தாள். அவள் சைவ உணவுப் பிரியையாக இருந்த சின்ன வயதில் அவளை மீன் சாப்பிட வைக்கவென அவளது அம்மா படாதபாடு படுவாள். முள் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து ஒரு டம்ளர் நீரில் அலசி, காரம் இல்லாமல் கொடுப்பாள். அதையும்கூட மாத்திரையை விழுங்குவது போல வாயில் போட்டு தண்ணீர் ஒரு வாய் ஊற்றி விழுங்கி விடுவாள். சிறு வயது ஞாபகங்கள் தலைதூக்க, கனத்த மனதுடன் மீன் குழம்பைச் சாப்பிட்டாள். டைகரும் சுவைத்துச் சாப்பிட்டு முடித்திருந்தது.

அதன்பிறகு, டைகருக்கும் சேர்த்து ஒரு பிடி அரிசி, கூட வைத்துச் சமைத்தாள். வெளியில் கடையில் சாப்பிட்டால்கூட பாதி சாப்பாட்டைப் பார்சல் செய்து டைகருக்குக் கொண்டு வந்தாள். சிலநாள் அவள் ஹோட்டலில் இருந்து மிச்சம் கொண்டு வரும் மீல்ஸை டைகர் சாப்பிடாமல் படுத்தே கிடக்கும். வீட்டில் சமைத்த சாம்பார், கீரை, தக்காளி சாதம் செய்தால் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தது. எங்காவது சாப்பிட்டிருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இப்படியாகப் இருபது நாட்களுக்கு மேல் கடந்து போனது.  அப்போதுதான் டைகரைப் பற்றி ஒரு விடயம் புரிந்தது. டைகர், பயங்கரமான அசைவப் பிரியர். பங்களா வீட்டின் செல்லப் பிள்ளையாக டைகர் இருந்தபோது பந்தாவாக ஏசி காரில் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியாகத் தெருவில் இருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகும். பஞ்சுபோல பளபளக்கும் வெள்ளை மேனி. சில்க் போல வழவழக்கும் முடி. மனோஜ் மற்றும் அவனது நண்பர்களுடன் அது விளையாடும் அழகைப் பார்க்கக் கண்கோடி வேண்டும். தினமும் லெக் பீஸ் வாங்கிப் போட்டுப் பழக்கி இருந்தார்கள். பொறந்தா இந்த டைகர் மாதிரி பொறக்கனும் என்று பாலாமணி அக்கா சொல்லாத நாள் இல்லை. டைகருக்கு வந்த வாழ்வ பாரு என்ற அங்கலாய்ப்பு இல்லாமல் அவரது நாள் முடியவே முடியாது. டைகருக்கு அவ்வளவு சொகுசான வாழ்க்கை. ராஜ வாழ்க்கை.

‘அந்தநாள்’ ஞாபகத்திலிருந்து டைகரின் நாக்கு மீண்டு வரவே இல்லை. கறி சோறும், கறி வாசனையும் மூன்று வேளையும் தேவைப்பட்டது. தினமும் சமைக்கும் அளவுக்கு மாலினிக்குப் பொறுமை இல்லை. சிலசமயம் பிஸ்கட்டுகள் அல்லது பழங்கள் ஒரு கப் ப்ளாக் காஃப்பி இதுவே அவளது காலை மற்றும் இரவு உணவு. மதியம் வெளியில் சாப்பிட்டு விடுவாள். ஆனால், வெளியில் போய் வரும்போதெல்லாம் டைகர் பசியோடு இருக்குமே என மீன் வறுவல், பீப் ஃப்ரை, சிக்கன் 65, ட்ரில்டு சிக்கன், சிக்கன் ஃப்ரை - இவற்றில் ஏதாவது ஒரு பார்சலுடன்தான் வருவாள். அவள் தெருமுனைக்கு வருவதைப் பார்த்தவுடனேயே டைகர் குஷியாகிவிடும்.

டைகருக்கு நாக்கு ருசியாகச் சாப்பாடு போடுவது தொடக்கத்தில் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. நாட்கள் போகப் போக ஒரு நாயை ஏன் இவ்வளவு சொகுசாகப் பழக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அன்றைக்குத் தயிர் சாதம்தான். நெல்லிக்காய் ஊறுகாய். அமுதம் போல்  இருந்தது. ருசித்துச் சாப்பிட்டபின், டைகருக்குத் தயிர் சாதம் பிசைந்து கொண்டுபோய் வைத்தாள். தலைதூக்கிப் பார்த்த டைகர் சாப்பாட்டில் வாய் வைக்கவேயில்லை. அவளுக்குக் கோபம் வந்தது.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க. ஒரு நாளைக்குத் தயிர் சாதம் சாப்பிட்டா கொறைஞ்சு போய்டுவியா? தினம் நான்-வெஜ் வேணும்னா நான் எங்க போறது? என் பட்ஜெட்டுக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகாது. நானே பிரட், பிஸ்கட் என்று சிலசமயம் சாப்பிட்டுப் போறேன். உனக்கென்ன? இங்க பாரு, இனிமேல் நான் என்ன சாப்பிடறனோ அதைத்தான் தருவேன். சாப்பிட்டுத்தான் ஆகனும். இல்லனா பட்டினி கிட. யார் வேண்டாம்னு சொன்னது?”

அவள் பேசப் பேச தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. டைகர்மா, என்ன செல்லக்குட்டி, என்ன  பண்றிங்க, இங்க வாங்க என்று கொஞ்சும்போதெல்லாம் முகத்துக்கு நேராக முகத்தைக் கொண்டு வரும். அன்பில் குழையும். குழந்தையைப் போல ஆகிவிடும்.

“டைகர் இங்க பாரு, நான் சொல்றது எதாவது புரியுதா? சும்மா கடைக்குப் போகும்போதெல்லாம்கூட வருவது, வெளியில் போய்ட்டு வரும்போது வாலை ஆட்டிக் கொண்டு குழைவது, ஊருக்குப் போய்ட்டு வந்தால் மேலே ஏறி விளையாடுவது இதெல்லாம் ஓக்கேதான். அதைத்தாண்டி கொஞ்சம் சிச்சுவேஷனைப் புரிஞ்சுக்கோ.”

டைகர் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. அவளைப் பார்க்கவேயில்லை. போ இன்னைக்கு உனக்குச் சோறு கிடையாது. பட்டினி கிட என்று கோபமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், ஒரு ஆம்லேட் போட்டுக் கொண்டு வந்து தயிர் சோற்றில் பிசைந்து வைத்தாள். சாப்பிட்டு விட்டு அமைதியாகப் படுத்துக் கொண்டது. அவளும் எதுவும் பேசவில்லை அதனிடம்.

****************

ஆறு மாத காலமாக ஊர்ப் பயணங்கள் அதிகம் இருந்ததால் டைகரை அவள் பார்ப்பதே அரிதாக இருந்தது. குளிப்பது, தூங்குவது இதற்கு மட்டும்தான் வீடு என்பது போல ஆகியிருந்தது அவளது வேலைப்பளு. மற்ற நேரங்களில் பேருந்து பயணம் அல்லது பைக் பயணம். இதில் டைகரைக் கவனிக்க மறந்து போயிருந்தாள். எப்போதாவது வீட்டில் சாப்பிடும் நேரங்களில் மட்டும் டைகருக்கு மறக்காமல் உணவு வைத்தாள். முன்பு போல, அது சாப்பிட்டு முடிக்கும் வரை அதனருகில் இருந்து பேசுவது இல்லை.  

டைகரின் வெள்ளை முடி செம்பழுப்பு நிறமாக மாறியிருந்தது. உடலும் இளைத்திருந்தது. மொசுமொசுவென்று வழுக்கிச் செல்லும் சில்க் முடி கொட்டிப்போய் தோல் தெரிந்தது. இது டைகர்தானா என்று நம்ப முடியாதபடி அதனது தோற்றம் மாறியிருந்தது.  தோற்றம் தான் மாறியிருந்ததே தவிர குணம் அப்படியேதான் இருந்தது. அவள் விஷயத்தில் அதன் பழக்கவழக்கங்களில் பெரிதான மாற்றம் இருக்கவில்லை. ஒவ்வொருமுறை இரவில் வீடு திரும்பும்போது டைகர் அவள் முன்னால் வந்து நின்று வாலை ஆட்டி அன்பை வெளிப்படுத்தியது. சின்னதாகக் குரலெழுப்பி அவளது கவனத்தை ஈர்க்க நினைத்தது.  மேலும், பதினோரு மணிக்கும் மேல் தெருவில் நடந்து வருகையில் மற்ற நாயின் அச்சுறுத்தலில் இருந்து அவளைக் காப்பாற்றி அழைத்து வந்தது. டைகரின் தலை தென்பட்டவுடன் மற்ற நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு அமைதியாகிவிடுவதை அவள் கவனித்திருக்கிறாள். டைகரை நினைத்துப் பெருமைப்படும் கணங்களில் அதுவும் ஒன்று.

டைகரைக் கண்டிப்பதற்கு யாருமில்லை என்பதால் இந்தத் தெருவில் மட்டுமில்லாமல் பக்கத்துத் தெருவில் உள்ள இன்னும் சில நாய்களுக்கும் காதலனாக ஆகி இருந்தது. முடி நிறம் மாறியதற்கு அது காரணமா என்றெல்லாம் தெரியவில்லை. அதுமட்டுமில்லை. அதனுடைய உணவுப் பழக்கமும் மாறியிருந்தது. இப்போதெல்லாம் நான்–வெஜ் வாசம் வீசும் உணவு வைத்தால்தான் சாப்பிடுவேன் என்ற தனது பிடிவாதத்தைத் தளர்த்தியிருந்தது. ஒருநாள் பழைய சாதத்தில் தயிர் ஊற்றிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு, பாதியை டைகருக்கு வைத்தாள். அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்தில் கிண்ணத்தில் வைத்திருந்த கொஞ்சம் பாலையும் நக்கிக் குடித்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டது. கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.

டைகருக்கு ஏதோ வியாதி சீக்கிரமே செத்துரும் போலிருக்கு என்று பாலாமணி அக்கா சொல்லிக் கொண்டே இருந்தார். அவரது வாய் முகூர்த்தம் பலித்தே விட்டது ஒருநாள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடற்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது தான் மாலினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். முருகன் கோவிலின் பின்புறம் உடல் இளைத்து, முடியெல்லாம் கொட்டிப் போய், தோலுக்கு வெளியே எலும்புகள் துரித்திக் கொண்டு தெரியும்படியாக டைகர் செத்துக் கிடந்தது. காலையில் அல்லது அதற்கு முந்தின நாள் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும்.

வாழ்ந்து கெட்ட ஒரு மனிதனின் சவத்தைப் பார்ப்பதைப் போல பார்த்தாள். அனுதாபம் கூடியது. சொகுசாகவும் பிரபலமாகவும் வாழ்ந்து, அன்பின் பெயரால் ஏமாற்றப்பட்டு, துரோகமிழைக்கப்பட்டு, கைவிடப்பட்டு, விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட, நாதியற்றுச் செத்துப் போன சில மனித பிம்பங்கள் அவளது மனசுக்குள் வந்து போயின. வீட்டில் இருந்த போத்தீஸ் கட்டைப் பையைக் கொண்டு வந்து, டைகரை அதற்குள் திணித்துக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி ஓர் ஓடையில் புதைத்துவிட்டு வந்தாள்.

காலையில் எழுந்து செய்தித்தாள் எடுக்க வாசலுக்கு வந்தபோது, அவளது தொட்டிச் செடி அருகில் நாய்க்குட்டி ஒன்று படுத்திருந்தது. காலைநேரக் குளிர்ந்த காற்றில் பஞ்சு மாதிரி இருந்த அதன் வெள்ளை முடி வெல்வெட் போன்று மினுமினுத்தது. 

நன்றி : ஃபெமினா ஜூலை 2016