திங்கள், 27 ஜூன், 2016

பெருங்காதலின் கீச்சொலிகள்

எனது ஞாபகக் கிண்ணங்களில்
நிரம்பித் ததும்பும்
உனது காதலை
அள்ளிப் பருகியபடியே உயிர்த்திருக்கிறேன்.
நேசத்தின் கரங்களில்
நாம் சிறு பிள்ளையாய் தவழ்ந்த காலம்
ஒன்று இருந்தது.

அதீத அன்பினால் மெருகூட்டப்பட்ட நாட்களின் மீது
வீசிய ஒளிக்கற்றைகள் ஒன்றுதிரண்டு
முழுநிலவாய் வான் மீதேறிவிட்டதென
சொல்லி
இறுகத் தழுவிக் கொண்டாய்.

இதழ்களைச் சுவைத்துவிட்டு
'நான் போதையேறிக் கிடக்கிறேன்'
எனப் பிதற்றினாய்.

நாம் கூடிக் களித்த இரவுகளில்
நட்சத்திரங்கள் புதிதாய்ப் பிறக்கின்றன
எனச் சொல்லிப்
பித்தம் கொள்ளச் செய்தாய்.

என் அன்பனே!
உன்மத்தமான உனதன்பிலிருந்து
பெருங்காதலின் கீச்சொலிகள்
கேட்டவண்ணம் இருக்கின்றன.
நீ எங்கிருக்கிறாய்?
-- மனுஷி