புதன், 12 டிசம்பர், 2018

ஜிட்டு எனும் அன்பன்




கடைக்குப் போகிறேன் என்றாலே டைகர், மைக்கண்ணி கூடவே வருவார்கள். இப்போதெல்லாம் டைகர் - மைக்கண்ணியின் மகன் ஜிட்டுவும் கூடவே வரத் தொடங்கிவிட்டான். தெருவில் பாட்சா தீம் மியூசிக் போடாத குறையாக, புடைசூழத்தான் சென்று வருகிறேன். கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் அதுவே தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. டைகர், தெருவில் போகிற வருகிற பைக்குகளைத் துரத்திக் கொண்டோடுவதால் சிலர் நின்று திட்டிவிட்டுப் போவார்கள். வீட்டுக்குப் போடா என்று விரட்டினாலும் கேட்கவே மாட்டான். ஆனாலும், இரவில் கடைக்குப் போய் வருவதானால் டைகர் தான் எனது பாதுகாப்பாளன். அவன் கூட வந்தால் இரவு மனிதர்களின் பயமின்றி எந்த நேரத்திலும் வெளியில் நடக்கலாம். அவ்வளவு பாதுகாப்பு.

இரவு சமைப்பதற்கான மனநிலை இல்லாததால் ஆரோவில் பஸ் ஸ்டாப்
எதிரில் உள்ள பிரியாணி விலாஸில் பிரியாணி வாங்கக் கிளம்பினேன். தெருவில் நடக்கத் தொடங்கியதும் டைகர் பின்னாடியே வந்தான். அவ்வளவு ஒன்று நேரமாகிவிடவில்லை என்பதால் டைகரைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடியே நடந்து சென்றேன். பாதி தூரம் நடந்து சென்றபின் அவதானித்தேன். என் பின்னால் நிழலைப் போல ஜிட்டு நடந்து வந்தான். தெருமுனை வரை தான் அவன் பின் தொடர்ந்து வரப் பழகியிருந்தான். இப்போது பஸ் ஸ்டாப் வரை வர ஆரம்பித்துவிட்டான். ஐம்பதடி தூரத்தில் ஈசிஆர் பஸ் ஸ்டாப். டைகர் மெயின் ரோடு வரை வருவான். சாலையைக் கடக்க வேண்டும் என்றால் மனிதர்களைப் போல நின்று இருபுறமும் பார்த்துவிட்டு பஸ்ஸோ காரோ பைக்கோ வரவில்லை என்றால் தான் சாலையைக் கடப்பான்.

கதிர் கூட துருதுருவென்று சாலையைக் கடக்கப் போய் தான் விபத்தில் அடிபட்டுப் போனான். அவன் அடிபட்ட சாலையை இப்போது பார்க்க நேர்ந்தாலும் மனம் நடுங்கும். ஜிட்டு அத்தனை துருதுரு பையன் இல்லை. ஆனாலும், அவனும் கதிரைப் போலத்தான்.

ஜிட்டு, என்ன இது புதுப்பழக்கம். இவ்ளோ தூரம் நடந்து வர. இங்கல்லாம் வரக் கூடாது. வீட்டுக்குப் போ என்றேன். என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

சொல்றதைக் கேளு. பஸ், கார்லாம் போகும். உனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. வீட்டுக்குப் போ. நான் பிரியாணி வாங்கிட்டு வர்றேன் என்றேன் அதட்டலாக. அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.

சும்மா மிரட்டுவதற்காக ஒரு சிறு குச்சியை எடுத்து வீட்டுக்குப் போ என்றேன். திரும்பிப் போவது போல பாவனைக் காட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் என் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

நேரம் ஆகுது தம்பி. படுத்தாத. சரி. இந்த இடத்திலேயே நில்லு. நான் போய் பிரியாணி வாங்கி வர்றேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். ஐந்தடி போனதும் திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். என்னையே பார்த்தபடி. சின்ன அசைவு கூட இல்லை. நானும் அவன் அந்த இடத்திலிருந்து நகர்கிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

சாலையைக் கடந்து பிரியாணி விலாஸ் போய் பிரியாணி ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருந்தது. பிரியாணி வாங்கிய கையோடு பால் பாக்கெட் சர்க்கரை டீத்தூள் வாங்கிக் கொண்டு போகலாம் என அங்கிருந்து பத்து கடைகள் தள்ளி இருந்த மளிகைக் கடைக்குச் சென்றேன். பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து இன்னொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினேன்.

சட்டென்று மனம் நின்றது. ஜிட்டுவை அங்கே இருக்கச் சொன்னோமே கிளம்பியிருப்பானா இல்லை அங்கேயே இருப்பானா என்று ஒரு சிறு சந்தேகம். நிச்சயம் கிளம்பியிருப்பான் என்றது ஒரு மனம். ஒருவேளை அங்கேயே நின்றிருந்தால்..... அந்தக் கேள்வியில் அங்கேயே ஒரு கணம் நின்று எதற்கிந்த தயக்கம் என்றபடி வந்த சாலைவழியே திரும்பி நடந்தேன்.

நான் எங்கே காத்திருக்கச் சொன்னேனோ அங்கே ஓரமாக அதே போஸில் நின்றிருந்தான் ஜிட்டு வாலையை ஆட்டிக் கொண்டு.

ஜிட்டுக் குட்டி... என்றதும் என்னை நோக்கி ஓடிவந்தான்.

ஓடிப் போய் அள்ளி அணைத்துக் கொண்டேன்.

அன்பிற்கு மொழியில்லை. அது உணர்வுகளால் ஆனது.

வியாழன், 6 டிசம்பர், 2018

அன்பின் உண்டியல்

உண்டியல் வாங்க வேண்டுமென
நானும் தோழியும் கிளம்பினோம்.
பாண்டிச்சேரியில் காலாப்பட்டு குளம் அருகில் உள்ள இரண்டு கடைகள், கோட்டக்குப்பத்தில் இருக்கும் இரண்டு கடைகள், அஜந்தா சிக்னல் அருகில் இருக்கும் ஒரு கடை இவைகள் தான் எனக்குத் தெரிந்தவை.
இது தவிர, மகாத்மா காந்தி சாலை, சிவன் கோவில் எதிரில் சிவராத்திரி சமயங்களில் பொம்மைக்கடையில் உண்டியல் விற்கும். கொலுவுக்கு வைக்கும் கலர்கலரான பொம்மைகளுடன், அரைடவுசரும் தொப்பியும் போட்ட குட்டிப் பையன் உண்டியல், மீன் உண்டியல், ஆப்பிள் உண்டியல், மாம்பழ உண்டியல், கப்பம் உண்டியல், ஆரஞ்சுப் பழ உண்டியல் என விதவிதமான உண்டியல் அங்கே இருக்கும்.
அஜந்தா சிக்னல் அருகில் உள்ள மண்பானைக் கடை மூடியிருந்தது. கோட்டக்குப்பத்தில் இருக்கின்ற இரண்டு மண்பானைக் கடைகளிலும் உண்டியல் தவிர பானை, சட்டி, தொட்டிச் செடிகள் என எல்லாமும் இருந்தன. அதைவிட்டால் பாண்டிச்சேரியில் முன்பு மத்தியச் சிறைச்சாலை இருந்த இடத்தில் சரியாகச் சொன்னால் கொசக்கடை வீதியில் நான்கைந்து மண் பானைக் கடையில் வாங்கலாமெனக் கிளம்பினோம். வார நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை.
முதல் கடையில் உண்டியல் இல்லை. அடுத்த கடையில் ஆப்பிள் உண்டியல் இரண்டு வைத்திருந்தார் கடைக்காரம்மா.
ஆரோவில் வீட்டுக்கு வந்த புதிதில் தொட்டிச் செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டபோது மொத்தமாகப் பத்துத் தொட்டிகள் வாங்கி எடுத்து வந்தேன். வெயில் காலத்தில் மண்பானை ஒரு முறை வாங்கியிருக்கிறேன். அதன்பிறகு தோழிகள் சட்டிப்பானை, தொட்டிச் செடிகள் வாங்க வேண்டும் என்று கேட்டால் இங்கே தான் அழைத்து வருவேன்.

வண்டியை நிறுத்திவிட்டு உண்டியல் விலை கேட்டோம். ஒரு உண்டியல் விலை முப்பது ரூபாய் என்றார். எங்களுக்கு நான்கு உண்டியல் வேண்டுமே என்றதும் கடைக்குள் போய் வைத்திருந்த எல்லா உண்டியல்களையும் எடுத்து வந்து காட்டினார். மொத்தம் எட்டு உண்டியல். எம்மா, உண்டியல் வாங்கினால் உள்ள உங்க கையால் காசு போட்டு விஷ் பண்ணிக் கொடுக்கனும் என்றோம். அவர் வைத்திருந்த கல்லாப் பெட்டியில் இருந்து சில்லறையை எடுத்து நான்கு உண்டியலிலும் காசைப் போட்டுக் கையில் கொடுத்தார். விளையாட்டுக்குத்தான் சொன்னோம்மா என்றதும் பரவால்ல எங்க ஊட்டுப் புள்ளைங்க மாதிரி தான் என்று சிரித்துக் கொண்டே உண்டியல் போனி பண்ணார்.
உண்டியல்தான் வாங்குவது திட்டம். கூடவே, மீன்குழம்பு வைக்க ஒரு சட்டியும், கீரைக் கடைய ஒரு சட்டியும் எடுத்து விலை கேட்டோம். ஒரு சட்டி நாப்பது ரூபாம்மா. உண்டியல் வேற வாங்குறிங்க. ஒரு சட்டிக்கு முப்பது ரூபாய் கொடுங்க போதும் என்றார். அதெல்லாம் குறைக்க வேண்டாம். நீங்க என்ன விலை வைச்சிங்களோ அதையே சொல்லுங்க என்று, சட்டியைத் தட்டிப் பார்த்து இரண்டு சட்டி எடுத்து வைத்தோம். நான்கு உண்டியல் வாங்கும் திட்டத்தைக் கொஞ்சம் நீட்டித்து மீதி இருக்கும் நான்கு உண்டியலையும் எடுத்துக் கொள்கிறோம் என்று எட்டு உண்டியலையும் எடுத்து வைத்துக் கொண்டோம். அந்த உண்டியலிலும் சில்லறை காசைப் போட்டு போனி செய்து ஒரு மஞ்சள்நிறச் சாக்குப் பையில் சட்டியையும் உண்டியல்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கட்டிக் கொடுத்தார்.
அங்கே குட்டி குட்டி அகல் விளக்குகள் குவியல் இருந்தது. அதன் விலையைத்தான் கேட்டோம். கை நிறைய விளக்கை அள்ளி இந்தாம்மா இந்தக் குட்டிப் பொண்ணுக்கு இது என பத்து அகல்விளக்குகளை என் கையில் கொடுத்தார். இது உனக்கு என என் தோழிக்கு ஆறு விளக்குகளைக் கொடுத்தார். எவ்ளோமா என்றேன். வச்சிக்கம்மா. நீ அந்த அகலை வைச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டே இருந்தல்ல. அம்மா கொடுக்கிறேன் வச்சிக்க என்றார்.

ம்மா, உங்க கடையோட சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றேன். நல்லா எடுத்துக்க என்று சேலையைச் சரி செய்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தார். தேங்க்ஸ் மா என்று சொல்லிவிட்டு, கட்டி வைத்த மூட்டையை வண்டியின் முன்பு வைத்துக் கொண்டு கிளம்பினோம். எம்மா, அடுத்தமுறை வரும்போது இந்தப் போட்டோவை ஒரு காப்பி எடுத்து வந்து கொடுக்கனும் என்றார்.

அவசியம்மா என்றபடி  பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
அந்த எளிய அன்பு மனதைச் சிலிர்க்கச் செய்தது.
மனித வாழ்வின் ஆணிவேர் எளிய அன்பன்றி வேறென்ன.

செவ்வாய், 2 அக்டோபர், 2018

காஃபியும் நானும்

காஃபியும் நானும்

செல்வம் ராமசாமி சார் முகநூல் பக்கத்தில், சர்வதேச காஃபி  தினம் போஸ்ட் பார்த்தவுடன் காஃபிக்கும் எனக்குமான டாம் அண்டு ஜெர்ரி நினைவுகள் ஓடிப் பிடித்து விளையாடின.

மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டுமெனில் என்னுடைய முதல் தேர்வு தேநீர். சிறுவயதிலிருந்து தேநீரின் மீது ஒருவித ஈர்ப்பு. காஃபிக்கு இரண்டாமிடம் தான். 


புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த பிறகு விடுதி மெஸ்ஸுக்கு முதல் இரண்டு நாள் போகவே இல்லை.

கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்த எனக்கு, பல்கலைக்கழக வளாகமும் விடுதி சூழலும் வேற்றுக்கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற பிரம்மையை உண்டு பண்ணி இருந்தது. யமுனா ஹாஸ்டலில் நான் ஒருத்தி தான் தமிழ்ப் பெண். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மணிப்பூர், நாகாலாந்து, மும்பை, குஜராத், அசாம், மேகாலயா...... இப்படி ஒரு குட்டி இந்தியாவே எங்கள் விடுதியில் இருந்தது. அப்போது அவர்களிடம் உரையாடும் அளவிற்கு ஆங்கிலம் தெரியாததால் வகுப்பறைக்குச் சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கதவைச் சாத்திக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பேன். ஒரு வாரம் வரை தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

மெஸ்ஸில் சாப்பாடும் கூட மனதுக்கும் நாவுக்கும் உவப்பானதாக இல்லை. காலையில் சப்பாத்தி, பூரி, ஆலு பரோட்டா, பரோட்டா வகையறாக்கள் காலை உணவைத் தவிர்க்கும்படியாகச் செய்துவிட்டன. மதியத்தில் சாம்பாரும் கூட நம்ம ஊர் சாம்பார் போல இருக்காது. அதனால் தினமும் மோர் அல்லது ரசம் இதோடு முடித்துக் கொள்வேன். பிரட் ஜாம் மற்றும் பிஸ்கட்  எப்போதும் இருக்கும். அது ஓரளவு பசியாற்றிவிடும்.

விடுதியில் இரண்டாவது வாரத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலைப்பொழுதில் மெஸ் பக்கம் சென்றேன்.ஒரு கேன் நிறைய பால், ஒரு கேனில் காஃபி டிக்காஷன், ஒரு கேனில் டீ. பக்கத்தில் ஒரு தட்டில் சில பிஸ்கட்டுகள். ஹாஸ்டலில் மாலையில் டீ காஃபி உண்டு என்பதே அன்று தான் தெரிந்து கொண்டேன்.

அப்போது என்னிடம் தனியா டீ கப் இல்லை. அதனால் மெஸ் அக்காவிடன் சில்வர் டம்ளர் கேட்டு வாங்கி காஃபி கேனைத் திறந்து  கிளாஸ் நிறைய டிக்காஷனை ஊற்றிவிட்டேன். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த அந்தக்கா, எம்மாடி இரும்மா இப்படிப் பண்ணக் கூடாது என்று என்னுடைய டம்ளரில் இருந்த டிக்காஷனை மறுபடி காஃபி கேனில் ஊற்றிவிட்டு, கொஞ்சம் பால், கொஞ்சம் டிக்காஷன், கொஞ்சம் சர்க்கரை மூன்றையும் ஒரு ஸ்பூனால் கலக்கிவிட்டு இப்போ குடி என்றார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

எனக்கு நினைவு தெரிந்து நான் சுவைத்த முதல் காஃபி. வேண்டாத காலம் போல. முதல் மிடறு உள்ளிறங்கியதும் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தேன். மொட்டை மாடி சுவரின் மீதிருந்த காஃபியை அதன் பிறகு தொடவே இல்லை. 

டீக்கடைக்குச் சென்றால் கூட உடனிருக்கும் நண்பர்கள், தோழிகள் காஃபி சொல்லலாமா என்றால் எனக்கு மட்டும் டீ சொல்லுங்க என்பேன். சுமார் எட்டு வருடம் காஃபியும் நானும் பாராமுகமாவே இருந்துவிட்டோம்.

ஆரோவில் வீட்டுக்கு வந்த பிறகும் டீ மட்டும் தான் எனக்குத் துணை.

எதிர்வீட்டில் வசிக்கும் தோழி மாளவிகாவின் அறிமுகம் கிடைத்தபிறகு ஹாய் ஹவ் ஆர் யூ என்பதைத் தாண்டி ஒருநாள் காஃபி குடிக்கலாமா பாரதி என்று அழைத்தார். முதல் அழைப்பு வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அதேசமயம் எனக்கு டீ தான் பிடிக்கும் என்று சொல்லி என் விருப்பத்தை வெளிப்படுத்தவும் முடியவில்லை. சரி என்று அவர்களோடு காஃபி சந்திப்பிற்குச் சென்றேன்.

காலம் ரொம்பவே விசித்திரமானது. நான் அருந்திய இரண்டாவது காஃபி அத்தனை கசப்பான அனுபவத்தைக் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் முதல் குமட்டலான காஃபி அனுபவத்திலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுவையான காஃபி. ரம்மியமான உரையாடல். மனம் நிறைவாக இருந்தது.

டீ குடிக்க வேண்டும் என்றால் பாரதி ஒரு டீ என்பார் மாளவிகா. எனக்கு காஃபி குடிக்க வேண்டும் என்றால் மாளவிகா ஒரு காஃபி குடிக்கலாமா என்பேன். நான் போடும் தேநீருக்கு மாளவிகா ரசிகை. மாளவிகாவின் காஃபிக்கு நான் பரம ரசிகை.

சொல்லப்போனால் சில மாதங்களாக தினமும் அதிகாலையில் மாளவிகா மொபைலில் ஒலிக்கும் ஆளுமா டோலுமா பாடலும் மாளவிகா போடும் காஃபியும் தான் எனது அதிகாலையைச் சோம்பல் முறித்து எழுப்பி விடுகிறது.

அதன்பிறகு, பிரபஞ்சன் சாருடைய நட்பு கிடைத்தபிறகு அவரோடு சேர்ந்து பாண்டிச்சேரி இண்டியன் காஃபி ஹவுஸில் காஃபி அருந்தி இருக்கிறேன். அவர் ஒரு காஃபி பிரியர். அவரோடு உரையாடிக் கொண்டே காஃபி அருந்திய தருணங்கள் மறக்க முடியாதவை. தந்தையின் நெருக்கத்தை உணரச் செய்யும் இயல்பான அன்பு அவருடையது.

அடுத்தது, சமீபத்தில் சென்னையில் தோழி அகிலாவின் வீட்டில் அதிகாலை குடித்த ஃபில்டர் காஃபி. அடடே, பேஷ் பேஷ், ரொம்ப நல்லாருக்கே டைப் காஃபி ரகம். சென்னைக்குச் சென்றால் அகிலாவின் அன்பு மணக்கும் சூடான காஃபி குடிக்கலாம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது..

காஃபியும் தோழமையும் தான் எத்தனை உன்னதமானது.


**மனுஷி**

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மீனம்மா


ஆரோவில்லுக்கு வந்த நாள் முதலாய் தினமும் காலையில் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு ஓங்கி ஒலிக்கும் குரல் மீனம்மாவுடையது. எங்கள் தெருவின் கர்ஜனை குரல். எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் மீனும்மா… எம்மா மீனும்மா… என்ற மீனம்மாவின் குரல் டங்கென்று வந்து தட்டி எழுப்பிவிடும்.

நாற்பதைக் கடந்த பெண்மணி. அநாயசமாக அள்ளிச் சொருகிய நூல் சேலை. கொஞ்சம் ஒல்லியான தேகம். ஆனால் உருவத்துக்கும் குரலுக்கும் ஏக தூரம். பத்து வீட்டுக்குக் கேட்கும் அவர் குரல்.

எனக்கும் மீனம்மாவுக்கும் இடையிலான வியாபார நிமித்த தொடர்பு வெறும் ஐம்பது ரூபாய் தான். ஏனென்றால் தொடக்கத்தில் ஐம்பது ரூபாய்க்கு சங்கரா மீன் வாங்குவதோடு நிறுத்திக் கொள்வேன். வேறெந்த உரையாடலும் இருக்காது. 

நான் சமைக்கக் கற்றுக் கொண்டது ஆரோவில் வீட்டுக்கு வந்தபிறகுதான். அதிலும் அசைவம் சமைக்கக் கற்றுக் கொண்டது மீனம்மாவால்தான். பிறகு சங்கரா மீன் தான் என்னுடைய பிரதான அசைவ உணவாக ஆகிப் போனது.

ஐம்பது ரூபாய்க்கு மீனம்மா கொடுக்கின்ற பத்து அல்லது பன்னிரெண்டு மீன்கள் எனக்கும் டைகருக்கும் போதுமானது. டைகர் அசைவம் தவிர வேறொன்றும் சாப்பிடாதவன். பின்னாளில் தயிர் சாதம் கூட சாப்பிடும் அளவுக்கு அவன் தாராள மனம் கொண்டவனாக மாறிப் போனான் என்பது வேறு கதை. இப்போது டைகருக்கும் அவன் மனைவி மைக்கன்னிக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டியிருக்கிறது. 

ஒருமுறை மீன் வாங்கினால் பாதிப் பாதியாகப் பிரித்து இரண்டு நாட்களுக்கு மீன் குழம்பும் மீன் வறுவலும் என சமையல் களைகட்டும்.

ஒருநாள் இறால் கொண்டு வந்தார் மீனம்மா. எம்மாஃப்ரஷ்ஷா எறா இருக்கு வாங்கிக்க என்றார்.

இறால் நண்டு என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு. என் பால்ய காலம் தொடங்கி, கல்லூரியில் படிக்கும் வரை நான் சுத்த சைவம். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் இவை தவிர வேறு சாப்பிட்டதாக நினைவில்லை. முட்டை கூட சாப்பிட மறுத்த காலம் அது. ஆனால், அக்கா வீட்டில் இறால் சமைத்தாலோ, நண்டு சமைத்தாலோ சைவத்திற்குப் பிரேக் விட்டுவிடுவேன். சோறு கூட சாப்பிட மாட்டேன். இறால், நண்டு மட்டும் தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுவேன். வீட்டில் கிண்டல் செய்வார்கள். இறால் நண்டு என்றால் மட்டும் சைவம் கண்ணுக்குத் தெரியாது இவளுக்கு என்று. 

எது தேவையோ அதுவே தர்மம் என்று அப்போதே இருந்திருக்கிறேன் போல. 

மீனம்மா இறால் கொண்டு வந்திருக்கிறார் என்றதும் நேராகப் போய் நூறு ரூபாய்க்கு வாங்கி, ஆய்ந்து தரச் சொல்லிவிட்டு, கூடவே எப்படிச் சமைக்க வேண்டும் என்கிற சமையல் டிப்ஸையும் கேட்டுக் கொண்டேன்.

அன்றைய இறால் தொக்கு அவ்வளவு சுவையாக இருந்தது.

அடுத்த சில நாட்களில் நண்டு கொண்டு வந்தார். மீன் கூடையில் இருந்த நண்டைப் பார்த்ததும் ஆர்வம் தாங்காமல் இருநூறு என்று சொன்னதும் பேரம் பேசாமல் வாங்கிக் கொண்டேன். கூடவே நண்டு சமைப்பது எப்படி என்று சமையல் குறிப்பையும் கேட்டுக் கொண்டேன்.

எங்கள் தெருவுக்குத் தினமும் மீனம்மா வந்தாலும் வாரத்தில் இரண்டு நாளாவது என்னிடம் மீன், இறால், நண்டு இவற்றை விற்றுவிட்டுத்தான் கிளம்புவார். காசு இல்லம்மா என்றாலும் பொறவு கொடேன். என்னா இப்போ ஆயிப் போச்சு. இப்பவே எடுத்து வச்சா தான் ஆச்சுனு நிக்கற போல பேசுற. ஆக்கித் துன்னுட்டு நல்லா இருந்தா குடு. இந்தா என்று கூறு கட்டி வைத்துவிடுவார்.

சில நாள் மீனம்மா வந்து குரல் கொடுத்தால் இன்று மீன் வாங்குவதே இல்லை என்று தீர்மானத்தோடு இருப்பேன். ஆனாலும் அவர் மீன்களை எடுத்து வைத்துவிட்டு இந்தா இந்தக் கூறு எடுத்துக்க. நூறு ரூபா தான். ஐஸ்ல லாம் வச்சு எடுத்துனு வர மாட்டேன். வலை மீன். சும்மா எடுத்துக்க என்பார். 

இவ்வளவு உரிமையா எடுத்து வைக்கிறாங்களே, வேண்டாம் என்று சொல்லக் கூடாது எனச் சங்கடத்தோடு வாங்கிச் சென்று விடுவேன். ஆனால், அவர் சொல்வது போல மீன் ஃப்ரெஷ்ஷாகத்தான் இருக்கும்.

வலைக்குள் மாட்டிய மீன் போல மீனம்மாவின் வாய்ச் சாமர்த்தியத்திற்கு நான் மட்டுமல்ல. பக்கத்து வீடு, எதிர்வீடு, மேல்வீடு என சிக்காமல் இருக்க முடியாது. வெறும் வியாபார யுக்தி மட்டும் அல்ல அந்தக் குரல். தொடக்கத்தில் மீனம்மாவின் சத்தமான குரல் கேட்கும்போது என்ன இவ்ளோ அதிகாரமா மீன் வாங்கிக்க சொல்றாங்க எனத் தோன்றும். ஆனால் போகப் போகப் புரிந்தது அது வெள்ளந்தி மனதின் குரல் என.

இப்போதெல்லாம் அதிகமாக நண்டும் இறாலும் கொண்டு வருகிறார். ஒருமுறை நான் சொல்லி இருந்தேன். நண்டு இறால் என்றால் எனக்கு உயிர் என்று. அதனால் நண்டு எடுத்து வந்தால் ஒரு கூறு எடுத்து ஆய்ந்து ஒரு கவரில் போட்டு எனக்காக எடுத்து வைத்துவிட்டுப்போகிற அளவுக்கு அவருக்கும் எனக்கும் உரிமை உண்டாகி இருந்தது.

இன்றும் ஃப்ரெஷ் நண்டு கொண்டு வந்திருந்தார். பெரிய பெரிய நண்டு. கவலை மீனும் இருந்தது. பெரிதாகச் சமைக்கிற மனநிலை இல்லை. அதனால் புல்லட்டுக்கும் புரூஸ்லிக்கும் மட்டும் ஐம்பது ரூபாய்க்கு வாங்கலாம் என்று மீனம்மாவிடம் போனால் ஏழு பெரிய நண்டைக் கூறு கட்டி வைத்து எறனூரு ரூபாய் எடுத்துக்க என்றார். எம்மா, ஏற்கனவே உனக்கு நான் பாக்கித் தரனும், நண்டுலாம் வேண்டாம். மீன் மட்டும் ஐம்பது ரூபாய்க்குக் கொடுங்க என்றேன்.
நண்டு வாங்க வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் இருந்தாலும் பாக்கியைக் கொடுத்துவிட்டுத்தான் வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டேன். அதற்குள் புல்லட்டும் புரூஸ்லியும் மீனம்மாவின் குரல் கேட்டு மீன் கூடை அருகில் மீன் கேட்டு பெரிய கலாட்டாவே செய்து விட்டார்கள். பெரிய மீன் என்பதால் அவரிடம் கேட்டு ஒரு மீனை இரண்டு துண்டாக்கி இரண்டு பேருக்கும் போட்டதும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அடுத்த மீனுக்காகக் கத்தினார்கள்.

மீனை ஆய்ந்து கொண்டே, எம்மா, நண்டு தான் உனக்குப் பிடிக்குமே ஒரு கூறு எடுத்துக்க என்றார். இல்லம்மா பாக்கி செட்டில் பண்ணிட்டு வாங்கிக்கிறேன் என்றேன் மீண்டும். அட காசு யாரு கேட்டா. சும்மா செஞ்சு சாப்டு. சாப்பிடறதுக்குத்தானே எல்லாம். காசு இருக்கும்போது அம்மாகிட்ட கொடு. இல்லனா பரவால்ல. என்னா வந்துடுச்சு இப்ப. காசு இல்லனுலாம் வேனாம்னு சொல்லாத.

அவர் சொன்னதும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்திருந்தேன். அந்த மீன் நண்டை விற்றால் தான் அவருக்கு வருமானம். ஆனாலும் எப்படி இவ்வளவு நம்பிக்கையும் தாராள மனமும். நினைக்க நினைக்க மனம் நெகிழ்ந்தது.

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் மீனை ஆய்ந்து பாத்திரத்தில் போட்டுவிட்டு நண்டை ஓடு நீக்கி ஆய்ந்து கொடுத்தார்.

மீதி இருந்த நண்டை விலைபேசி பக்கத்து வீட்டில் விற்றுவிட்டு, எம்மா, பாரதி ஒரு டீத்தண்ணி போட்டு கொடேன் என்றார்.

மீனம்மாவின் அன்பினால் தேநீரின் சுவை கூடியிருந்தது.

நானும் மீனம்மாவின் சியர்ஸ் சொல்லிக் காலை நேரத் தேநீரைக் குடித்து முடித்தோம்.

சியர்ஸ்……

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கோல்கொண்டா கோட்டையும் காளி ஓவியமும்




மழைத் தூறிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் நானும் எனது தோழியும் தேநீர் அருந்தியபடிப் பேசிக் கொண்டிருந்தோம்.

பேச்சினூடாக, ஒரு சிறு பயணத்தைத் திட்டமிட்டோம். நாங்க தேர்வு செய்த நகரம் ஹைதராபாத். அந்த நகரம் எந்தவித சலனமும் இல்லாமல் எங்களை அழைத்தது. அதன் குரலை மதித்து அடுத்த நாளே டிக்கெட் புக் செய்து கிளம்பிவிட்டோம். எந்த நகரத்திற்குச் சென்றாலும் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. என்னுடைய தோழிக்கு தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் அத்துப்படி. அதனால் மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

கூகுளின் உதவியுடன் தினம் ஒரு இடத்திற்குச் செல்வது என எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அதுவொரு நல்ல அனுபவம். சார்மினார், பிர்லா மந்திர் கோயில், அருங்காட்சியகம் எனப் பல இடங்களுக்குச் சென்றிருந்தோம். அதில் கோல்கொண்டா கோட்டைக்குச் சென்றபோது மனதில் இனம் புரியாத பரவசம்.

ஹைதராபாத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று கோல்கொண்டா கோட்டை என்று சொல்கிறார்கள். ஆம். அதிசயம் தான். அது மன்னர்கள் வாழ்ந்த கோட்டையா அல்லது ஒரு நகரமா என்று ஆச்சரியம் வருவது தவிர்க்க முடியாது. பரந்து விரிந்த மதில்களும் கட்டிடங்களும் பிரம்மாண்டத்தின் உச்சம். எனக்குத் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையை நினைவுக்குக் கொண்டு வந்தது.

கோல்கொண்டா கோட்டையின் அரசியல் வரலாற்றைவிடவும் கோட்டையின் அழகியல் மனதைக் கவ்விக் கொள்ளும். ஏனெனில் வரலாற்றுத் தகவல்கள் கூகுளில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் கோட்டையின் உச்சியில் இருக்கும் பாறை ஓவியத்தின் வரலாறுதான் கிடைக்கவே இல்லை. அந்த ஓவியம் சொல்லும் கதை என்ன என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஏனெனில், கோட்டையின் பிரம்மாண்டத்தை விட என்னைக் கவர்ந்தது கோட்டையின் உச்சியில் இருந்த காளி கோவில் தான். கோவில், கருவறை காளி, கோவிலின் எதிரில் இருக்கும் மரம், மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கலர் கலரான ஜிகினா மாலைகள், ஊஞ்சல்கள், கயிறுகள்  என பெண் தெய்வக் கோயிலுக்கான அடையாளங்களுடன் இருந்தன.

காளி கோவிலுக்கு இடதுபுறம் இருந்த பாறையும் அந்தப் பாறையில் வரையப்பட்டிருந்த நீல வண்ணத்தாலான ஓவியமும் மிக முக்கியமானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் காளி ஓவியத்தில் மண்டையோட்டு மாலைகளுடன் அச்சமூட்டும் கண்களுடன் ஆக்ரோஷமாக நாக்கைத் தொங்கவிட்டபடி ஒரு காலைத் தூக்கி ஒரு காலைத் தரையில் வைத்து சூளாயுதத்துடன் காளி நின்று கொண்டிருப்பாள். அவளது பாதத்தின் கீழ் அரக்கனின் உருவம் கிடந்தநிலையில் இருக்கும். அந்த அரக்கனின் உடலின் மீது காளியின் கால்கள் பதிந்திருக்கும்.
கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் பாறையில் வரையப்பட்டிருக்கும் காளி, நீல வண்ணத்தில் மேலே சொன்ன தோற்ற அமைப்புடன் இடையில் புலித்தோல் அணிந்து ஆக்ரோஷமாக இருக்கிறது. ஆனால், பாதத்தின் கீழ் அரக்கனுக்குப் பதிலாக மயங்கிய நிலையில் சிவன் உடுக்கையைக் கையில் பிடித்தபடி வீழ்ந்து கிடக்கிறார். சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு கையில் இருக்கும் உடுக்கையை நோக்கி நகர்வது போன்றதொரு தோற்றம் இருக்கிறது. தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இந்த ஓவியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.


பாறை நின்றிருந்த தோற்றம், காளி கோவிலுக்குச் செல்லும் பாதையை  பாதியாக அடைத்தபடி இருந்தது. லாவகமற்ற வகையில் பிரம்மாண்டமானத் தோற்றம் அது. எவ்வளவோ முயன்றும் முழு ஓவியத்தைப் படமாக எடுக்க முடியவில்லை. அதனால் காளியின் முகத்தில் இருக்கின்ற கம்பீரத்தை இரு கண் கொண்டு தான் பார்க்க வேண்டும்.
ஓவியத்தின் அருகில் அமர்ந்து கொண்டேன். காளியின் உக்கிரமும் மயங்கிய கிடக்கும் சிவனும் ஆழமாகக் கண்களுக்குள் இறங்க, எனக்குள் காளி சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாள். வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது அந்த அனுபவம்.