வெள்ளி, 29 மே, 2020

ஆசானின் அனுபவ மொழி - தேவதேவன் கவிதைகள் - மனுஷி

திருவண்ணாமலையில் #தளம்_சமூக_உரையாடல்_மையம் & #வெற்றி_டிஜிட்டல் ஒருங்கிணைப்பில் #கவிஞர்_தேவதேவன்_கவிதைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மனதுக்குள் மெல்லிய இசையைப் போல ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தேவதேவன் கவிதைகள் குறித்துப் பேச வேண்டும் என்று #தோழர்_ஷபி கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். ஆனால், தேவதேவன் கவிதைத் தொகுப்பு அப்போது கைவசம் இல்லை. நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் இல்லை என்றே சொல்லிவிட்டார்கள். நம்முடைய புத்தகச் சேகரிப்பில் ஒரு தொகுப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா புத்தகங்களையும் கலைத்துப் போட்டுத் தேடியதில் #விண்_வரையும்_தூரிகை நூல் மட்டுமே கண்டெடுத்தேன். அது மட்டுமில்லாமல் தேவதேவன் வலைப்பூவில் (poetdevadevan.blogspot.com) சில கவிதைகள் இருந்தன. அவற்றை வாசிக்கத் தொடங்கியபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது. 

பொதுவாக, நவீன கவிதைகளை வாசிப்பது போல ஒரே வாசிப்பில் அல்லது இரண்டாவது வாசிப்பில் தேவதேவன் கவிதைக்குள் நுழைந்து பயணித்துவிட முடியும் என்று தோன்றவில்லை. அவரது கவிதைகள், நண்பர்களோடு உரையாடுவது போன்ற உணர்வினைத் தரவில்லை. மாறாக, அனுபவம் முதிர்ந்த ஓர் ஆசானுடன் அமர்ந்து மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் ஒருநிலைப்பட்ட மனதுடன் உரையாடுவது போல இருந்தன. 

எந்தெந்த கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும் என்கிற திட்டம் இருந்தாலும், தேவதேவன் கவிதை குறித்துப் பேசப்போவதில் ஒருவிதத் தயக்கம் இருக்கவே செய்தது. அந்தக் கவிதை அனுபவத்தைப் பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது மனம். எல்லாமும் நிகழ்வு நடக்கும் இடத்தை அடையும் வரைதான்.

சிலுசிலு காற்று இதமாகத் தழுவிச் செல்லும் மரத்தடி. கருங்கல் பெஞ்சுகள். இரவின் ரம்மியத்தை உணரச் செய்யும் ஒளியமைப்பு. பிரம்மாண்டமான தேவதேவன் பேனர். அதன் முன்னால் சிறு புள்ளியென நான்கைந்து நாற்காலிகள். அந்தத் திறந்தவெளி, தேவதேவன் கவிதைகளைப் போலவே பெரும் அனுபவத்தைக் கொடுத்தது. 

இருளில் அமர்ந்து கொண்டு / எதையும் வாசிக்க முடியாது / ஒளி? / கண்முன் உள்ள / இருளைக் / கண்டு கொள்வதிலன்றோ / தொடங்குகிறது அது? (தேவதேவன்) 

பழுத்து விழாது / ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள் / தான் தொட்டதனால்தான் உதிர்ந்தது என்றிருக்கக் கூடாது என்ற / எச்சரிக்கை நேர்ந்து / அப்படி ஒரு மென்மையை / அடைந்திருந்தது காற்று (தேவதேசன்)

இந்தக் கவிதைகளை, அந்தக் குறைந்த ஒளியில், மெல்லிய மரங்களின் அசைவில்  வாசித்தபோது மனதுக்குள் எழுந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விடமுடியாது. அது பேரனுபவம். 

பறத்தலின் ரகசியத்தைச் சிற்றுயிர்களுக்கும் கற்பித்துவிடும் தேவதேவனின் கொக்கு போல, அவரது கவிதைகள் இப்பிரபஞ்சத்தின் இரகசியத்தை யாவருக்கும் சொல்லித் தருகிறது அனுபவ மொழியுடன். 

நிகழ்வில் கலந்து கொண்டு தேவதேவன் கவிதைகள் குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் பச்சோந்தி, கவிஞர் ஃபீனிக்ஸ், கவிஞர் ஜெகதீசன், கவிதைகள் வாசித்த மொழிபெயர்ப்பாளர்கள் கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, அமரபாரதி, நா.கோகிலன் என அனைவருமே தேவதேவன் கவிதைகள் தரும் மௌனத்தை, அனுபவத்தை அந்த இரவின் மீது படரச் செய்தனர். 

இறுதியாக, தேவதேவனின் ஏற்புரை புது அனுபவத்தைக் கொடுத்தது. 
நிகழ்வு முடிந்து திரும்புகையில் நேர்மறை எண்ணங்கள் மனதை இலகுவாக்கின. திறந்தவெளி இலக்கிய அரங்குகள் இப்படித்தான் மனதின் சுவர்களை உடைத்து, காற்றில் மிதந்துவரும் இறகென இலகுவாக்கிவிடும்போல. 
நிகழ்வினை ஒருங்கமைத்த தோழமைகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து சொல்லவேண்டும் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை.

வியாழன், 28 மே, 2020

அதிரப்பள்ளி எனும் யட்சி - மனுஷி

ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் தொடங்கும்போதெல்லாம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மழையில் நனைந்து மகிழ்ந்துவிட்டு அடுத்து நனையாமல் போய் வர வேண்டும் என குடை வாங்குவேன். குடை வாங்கிய கொஞ்ச நேரத்தில் அல்லது மாலைக்குள் மழை நின்று விடும். மழைதான் நின்றுவிட்டதே என குடையை யாருக்காகவது தானம் கொடுத்துவிடுவேன். பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த காலங்களில் ஹாஸ்டலில் வேலை செய்யும் அக்காக்களில் யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன். அந்தக் குடைக்காக வாரத்தின் இரண்டு நாட்கள் மீன் குழம்பு கொண்டு வருவார்கள். அடிக்கடி வீட்டு சாப்பாடு சாப்பிடும் யோகம் கிடைக்கும். மீண்டும் மழை கொட்டத் துவங்கும். மழை பெய்யத் தொடங்கியதும் கொடுத்த குடையைத் திருப்பிக் கேட்பது நியாயமில்லை தானே. 

மழை பெய்வதும் குடை வாங்குவதும் குடை வாங்கியதும் மழை நிற்பதும் தற்செயலாக நடக்கிறது என விட்டுவிட்டேன்.

எனது சிறிய கேரளப் பயணத்தில் வந்திறங்கிய நிமிடத்திலிருந்து மழை. ஏற்கனவே பெய்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் வெயிலைச் சுமந்தலையும் எனக்குத்தான் அது தெரியாமல் இருந்தது. மழையில் நனைந்தபடியே கேரளா பயணத்தைத் தொடர்ந்தேன்.

முதல்நாள் கொச்சின் கடற்கரை பயணம் மனதுக்கு நிறைவாக அமைந்தது. அதிலும் அரபிக் கடலில் நின்றிருந்த சமயம் துளித்துளியாய் சொட்டு வைத்த மழை, நான்கைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சமயம் பேரிரைச்சலுடன் பெய்யத் தொடங்கியது. தொப்பலாக நனைந்தபடி சூடாகத் தேநீர் அருந்திவிட்டு, தேசாந்திரியைப் போல சுற்றிவிட்டு இரவு ஒன்பது மணிக்கு மேல் அறைக்குத் திரும்பினேன். 

அடுத்த நாள் அதிரப்பள்ளி செல்வதென திட்டம். அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது. அன்றைக்கு என் பிறந்தநாள். அதிரப்பள்ளி அருவியின் அருகில் கொண்டாடுவது எனத் தீர்மானம் செய்திருந்தேன். 

கேரளாவில் தொடர் மழை என்பதை மறந்தே போனேன். காலை எழுந்ததில் இருந்து மழை. முந்தின நாள் பெய்த மழையின் தொடர்ச்சிதான். ஆனாலும் எனக்கான வாழ்த்தாகவே நினைத்தேன். ஏனெனில் மழை என்றால் அப்படியொரு மழை. 

மழைக்காக ஒதுங்கி நின்றால் அன்றைய நாள் அறைக்குள்ளேயே முடங்கிவிடும். எனவே, நனைந்து கொண்டே கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு குடை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கினால் அது வரை அடித்துப் பெய்த மழை தூறலாக மாறிவிட்டது. 
சாலக்குடி போகும் பேருந்தில் ஏறி அமர்ந்து டிக்கட் எடுப்பதற்குள் மழை மொத்தமாக நின்றுவிட்டது.
பேருந்தில் போகும்போது வழியில் கொஞ்சம் மீண்டும் மழை. போகும் வழியெல்லாம் மழை தான். குடைக்கு வேலை வந்துவிட்டது என்று நினைத்தேன். அதிரப்பள்ளி அருவி நிறுத்தத்தில் இறங்கிய ஐந்து நிமிடத்தில் மீண்டும் மழை நின்று விட்டது.

என்னடா என் குடைக்கு வந்த சோதனை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். 

மழை பெய்த ஈரம் சாலையெங்கும் படர்ந்திருந்தது. சில்லென்ற மழைக்காற்றில் கைவிரல்கள் விரைத்துக் கொண்டன. இயல்பாகவே குளிர் தாங்காது எனக்கு. மரங்கள் அடர்ந்த, மழை பெய்து அடங்கிய அதிரப்பள்ளி காடு குளிரின் உச்சத்தில் இருந்தது. 

அருவியின் சத்தம் காதுகளைத் தொட்டுத் தழுவியது. என் கனவு தேசத்தில் தனித்து உலவும் யட்சியைப் போல மனம் படபடக்கக் குளிரில் நடுங்கியபடி வேகவேகமாக நடந்தேன். ஆனால் என் மனதின் வேகத்திற்குக் கால்கள் ஈடுகொடுக்கவில்லை. 

டிக்கெட் கவுண்ட்டர் அருகில் இருந்த ஒரு பெண் என் நடையைத் தடுத்து டிக்கெட் வாங்கிச் செல்ல வேண்டும் என மலையாளத்தில் சொன்னார். துல்கர், நிவின் பாலி, பகத் ஃபாசில் படங்கள் பார்த்து சூழலைச் சமாளிக்கும் அளவுக்கு   மலையாளம் தெரிந்து வைத்திருந்தேன். 

ஒரு டிக்கெட் என்றதும் அந்தப் பெண் ஏற இறங்கப் பார்த்தார். ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். ஒரு காக்கி சீருடை அணிந்த போலீஸ் மேன் வந்தார். அவர் பார்வையும் தோரணையும் அத்தனை உவப்பானதாக இல்லை. 

யார் என்ன என்பதை விசாரித்தார். நானும் எனக்குத் தெரிந்த மலையாளத்தையும் ஆங்கிலத்தையும் கலந்து பதில் சொன்னேன். அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை. ஆதார் கார்டு கேட்டார். பிறகு நான் தங்கியிருந்த ஹோட்டல் நம்பரை வாங்கி அவரது செல்போனில் அழைத்து உறுதி செய்து கொண்டார். அப்படியும் கூட அவரால் சந்தேகப் பார்வையைக்.கைவிட முடியவில்லை. ஒரு பெண் எப்படித் தனியாகச் சுற்றிப் பார்க்க பாண்டிச்சேரியில் இருந்து இங்கே வர முடியும்? அதைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டார். எனது பிறந்தநாள் இன்று அதனால் வந்தேன் என்று சொன்னேன். அந்தக் காரணம் அவருக்குப் போதுமானதாக இல்லை. நீங்க என்ன பண்றிங்க என்றார். நான் ஒரு கவிஞர் என்றேன். எனது பெயரைச் சொன்னேன். வேண்டுமெனில் கூகுளில் செக் பண்ணிக்கலாம் என்றேன். அவரது மொபைலில் என் பெயரை டைப் செய்து பார்த்தார். கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்க வேண்டும். 

அவர் பேச்சு தோரணை மாறியது. மேடம் இங்கே பெண்கள் தனியாக வரக் கூடாது. பாதுகாப்பில்லை நீங்க திரும்பிப் போய்டுங்க என்றார். இல்ல சார். அருவி பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன் பார்க்காமல் போக மாட்டேன். சொல்லும் போதே கண் கலங்கியது. 

முதன்முறையாக என்னை நினைத்துக் கழிவிரக்கம் எனக்குள். நான் மட்டுமே தனியாக இருப்பது போலொரு உணர்வு. நண்பர்கள் சூழ வந்திருந்தால் அல்லது ஒரு பையனாக இருந்திருந்தால் இவ்வளவு விசாரணை, இத்தனை கேள்விகள், சந்தேகப் பார்வை இருந்திருக்காது. நான் வந்த நேரத்திற்கு மற்றவர்களைப் போல அருவியின் சாரலில் நனைந்து கொண்டிருப்பேன். ஆனால் இப்போது?... பிறந்தநாள் அதுவுமா அழக்கூடாது எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். 

நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பெண்ணை எனக்குத் துணைக்கு அனுப்பி, மேடம் இங்க ஒரு வியூ பாயிண்ட் இருக்கு. அங்க போய் பார்க்கலாம் ஆனால் சீக்கிரம் கிளம்பிடனும் என்றார் கொஞ்சம் கனிவுடன். தேங்க் யூ சார் என்று கிளம்பினேன். ஹேப்பி பர்த் டே மனுஷி என்றார் புன்னகையோடு. அந்தப் பெண்ணும் பர்த் டே வா என்று கேட்டு கை குலுக்கி வாழ்த்து சொன்னார். 

கொஞ்சம் தூரம் நடந்ததும் அருவியின் சத்தமும், புகை போல் எழும் சில்லென்ற அருவியும் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரின் சூட்டைத் தணித்தது. குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருக்க, நான் நின்றிருந்த பச்சை கேட்டைத் தாண்டி அருவில் நனைந்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது மனசு. 

அங்கே எதிரில் இருந்த தேநீர்க் கடையில் உடன் வந்த பெண்ணுக்கும் சேர்த்து இரண்டு தேநீரை வாங்கினேன். முதலில் தயக்கத்தோடு மறுத்தவர் பிறகு சினேகத்துடன் வாங்கிக் கொண்டார். டீ குடித்து முடித்ததும் கடைசி பஸ் எப்போ என்று கேட்டேன். 5.30 மணிக்கு மேல் வரும் என்றார். நீங்க போய் டியூட்டி பாருங்க நான் கொஞ்ச தூரம் நடந்து சென்று விட்டு பஸ் வந்ததும் கிளம்புகிறேன் என்றேன். பத்திரமா இருப்பிங்களா என்று கேட்டார். நிச்சயமாக என்று கை கொடுத்து விடை பெற்றேன். 

பெயர் கேட்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. உள்ளங்கையின் இளம்சூடு போதுமானதாக இருந்தது அந்தச் சின்னஞ்சிறு சினேகத்திற்கு.
அவர் கிளம்பிய பிறகுதான் கவனித்தேன். என்னருகில் இருந்த பச்சை கேட்டில் அமர்ந்து உன்னிப்பாக என்னைக் கவனித்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. என் கையில் இருந்த தேநீர் கப்பையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தது. தேநீர்ப் பிரியர்களின் மொழி புரியாதா என்ன? மிச்சமிருந்த தேநீரை அதன் கையில் கொடுத்தேன். ஒரு மனிதக் குழந்தையைப் போல வாங்கிக் கொண்டு தேநீரைச் சுவைத்தது. இன்னொரு தேநீரை வாங்கி வந்து பாதிக் குடித்து விட்டு மீதியைக் கொடுத்தேன். தீர்ந்து போன பழைய கப்பைக் கீழே போட்டுவிட்டு நான் கொடுத்த கோப்பையை வாங்கிச் சுவைத்தது. 
தனித்திருகிறேன் எனும் கழிவிரக்கத்தை அந்தக் குரங்கு காணாமல் போகச் செய்தது.  அதற்கு நன்றி சொல்லிவிட்டு மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

ஆள் நடமாட்டம் இல்லாத சாலை. இடது புறம் மழை ஈரம் கசியும் மரங்கள். பாசி படர்ந்த மலை. வலது புறம் சரிந்து கிடக்கும் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பேரிரைச்சலுடன் பொங்கிப் பெருகி அருவியாகித் தரையில் வீழும் ஆவலும் ஓடிக் கொண்டிருந்தது. 
மழையில் நனைந்த மாலைப் பொழுதில் யாருமற்ற இந்த அதிரப்பள்ளி வனத்தில் நான் ஒரு யட்சியாகியிருந்தேன்.

ஞாயிறு, 10 மே, 2020

பிரம்மாண்டத்தின் பெரும் கனவு : யானை மலை - மனுஷி

முதன்முதலாக மதுரைக்கு வந்த போது பார்த்து வியந்தது பெரிய யானை ஒன்று கம்பீரமாகப் படுத்திருப்பது போன்ற அந்த மலைதான்.

ஒருநாள் இந்த மலையில் ஏறவேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டேன்.
ஒவ்வொரு முறை மதுரைக்கு வரும்போதெல்லாம் யானை மலையின் மீதான பிரமிப்பும் மலையில் ஏற வேண்டும் எனும் ஆர்வமும் துளிர்த்துச் செழித்து வளர்ந்து கொண்டே இருந்தது. 

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு நாள் எனக்கு வாய்த்தது. 

இராஜபாளையத்தில் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்றைய இரவே மதுரைக்குத் திரும்பி இருந்தேன். 
அதிகாலையில் கிளம்பினால்தான் மலை ஏற முடியும் என்பதால் அன்றைக்கு இரவு சீக்கிரமே தூங்க வேண்டியிருந்தது. ஆனாலும் வழக்கம் போல 2 மணிக்குத் தூக்கம் கண்களைத் தழுவியது. 
மலை ஏற வேண்டும் எனும் பெரு விருப்பம் அதிகாலையில் விழிக்க வைத்தது. எனக்கு நானே நன்றி சொல்லிக் கொண்டு எழுந்து கிளம்பினேன். 

சூடான தேநீர் அருந்திவிட்டு யானை மலையின் அடிவாரத்தை நெருங்கும்போது நன்றாக விடிந்திருந்தது. 
மலை ஏறும் அனுபவத்தைப் போல வேறெதுவும் அத்தனை குதூகலத்தையும் நிறைவையும் தருமா எனத் தெரியவில்லை. 
எனது முதல் மலைப் பயணம் சதுரகிரி தான். வாழ்வில் மறக்க முடியாதது. அதேபோல யானை மலையும். 
பாறையில் செதுக்கப்பட்ட, படிக்கட்டுகள் என்று சொல்ல முடியாத குறுகிய வழியில் மலைக்கு ஏறினேன். கருவேல மரங்களின் ஒல்லியான கிளைகள் வழியைத் தடுப்பது போல குறுக்காக நீண்டிருந்தன. அவைகளைக் கைகளால் விலக்கிவிட்டு நடக்கும்போது கையைக் கீறியது. 
டிஸ்கவரி சேனலில் காடு மலை என கேமராவோடு பயணிக்கும் பியர் கிரில்ஸ் எனக்குள் கூடு பாய்ந்தது போலிருந்தது. 
பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு நடக்கப் படிக்கட்டுகள் இல்லை. வெறும் பாறைகள் தான். மொட்டைப் பாறையில் பார்த்துப் பார்த்து மேலே ஏற வேண்டியிருந்தது. மலை ஏற ஏற வெயிலும் ஏறிக் கொண்டிருந்தது. 
என் கால்களை விடவும் மனம் வேகமாக மலை ஏறியது. 

அரை மணி நேரத்தில் யானையின் கழுத்துப் பகுதிக்குச் சென்றுவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நுனா மரங்கள். கோரைப்புற்கள் வெயிலில் காய்ந்து ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. காலை வெயிலில் செங்குத்தான பாறையில் ஏறியதால் உடல் வேர்த்தது. மருந்துக்கும் ஒரு காற்று இல்லை. 

அங்கிருந்து பார்த்தால் ஒரு குகை தெரிந்தது. அதன் மேல் ஏறுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. செங்குத்தான வழுக்குப் பாறை. உடும்பைப் போல பாறையைப் பற்றிக் கொண்டு வேகவேகமாக ஏறி யானையின் கண் பகுதிக்குச் சென்றேன். 

யானையின் முதுகுப் பகுதி போல செங்குத்தாக இருந்த பாறையினால் வெயில் இல்லாமல் அந்த இடத்தில் கொஞ்சம் குளுமையை உணர முடிந்தது. மலை ஏறியக் களைப்பில் கொஞ்சம் நேரம் கால் நீட்டிப் படுத்துக் கொண்டேன். 
அங்கிருந்து பதினைந்தடி தூரத்தில் ஒரு குகை. சமணப்படுகைகள். இவ்வளவு உயரத்தில் வந்து எப்படி சமணர்கள் தவம் செய்திருப்பார்கள் என நினைக்க ஆச்சரியமாக இருந்தது. தலையையும் உடலையும் குறுக்கிக் கொண்டால் அந்தக் குகைக்குள் அமரலாம். தலையை முட்டிக் கொள்ளும் உயரம்தான் குகை. 

அங்கே குகைக்குள் குங்குமம், மஞ்சள், விளக்கு வைத்த அடையாளம். அதற்குள் போய் அமர்ந்து கொண்டு பதினைந்து நிமிட தியானம். எந்தச் சிரமமும் இல்லாமல் மனம் ஒருநிலைப் பட்டது. குகையின் வாசனையும் சில்லென்ற காற்றும் காலம் தாண்டி அழைத்துச் சென்றது. மனசுக்குள் இன்னமும் உயிர்த்திருக்கும் ஆதிமனுஷியை உணரத் தொடங்கினேன். 
கண்முன்னால் நிகழ்ந்த மேஜிக் அது. 
வாழ்க்கைவின் மீதான தேடலை மலைப்பயணங்களில் கண்டடைய முடியும். வாழ்வில் நிகழ்ந்துவிடுகிற மேஜிக் அதுவாகத்தான் இருக்க முடியும். 

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஐஸ்கிரீமைப் போல கரைந்திருந்தது. அங்கிருந்து கீழிறங்கும் போது ஏறியதை விடவும் கடினமாக இருந்தது. வழுக்கும் பாறையில் ஒரு அடி சருக்கினாலும் அவ்வளவு தான். என்னால் இறங்க முடியும் எனத் தோன்றவில்லை. ஆனாலும் இறங்கித்தான் ஆக வேண்டும். முதலில் ஷூவைக் கழற்றி எறிந்துவிட்டு, வெறும் காலில் மெல்ல மெல்ல இறங்கினேன். 
அந்தப் பாறையின் மேலேறியதும் இறங்கியதும் நினைத்துப் பார்த்தால் கனவு போலிருக்கிறது. 

மலையிலிருந்து இறங்கும் வழி மறந்திருந்தது. மறந்திருந்தது என்பதை விடவும் வேறு ஏதேதோ பாதையில் தடுமாறிக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். 

மலைப் பயணங்கள் மிகப் புதிரானவை, நாம் வந்த வழியை மறந்து தேட வைப்பதில் மலைகளுக்கு அலாதி இன்பமுண்டு என ஒருமுறை நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது. கொஞ்சம் தேடி, வந்த வழியை அடையாளம் கண்டு கீழிறங்கியதும் நின்று அந்த மலையைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 400 மீட்டர் உயரம் கொண்ட அந்த பிரம்மாண்டம் கண்களை விட்டு அகல மறுத்தது. 
கனவின் பிரமையிலிருந்து விலகாத மனதுடன் யானை மலையின் இடது புறத்தில் இருக்கும் சமண புடைப்புச் சிற்பங்களைக் காணச் சென்றேன். அடிவாரத்தில் இருந்த வீட்டில் வழி கேட்டுக் கொண்டு மிகச் சரியாகவே சென்று சேர்ந்தேன். 

கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால் தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையின் இடது புறம் பாறையின் உச்சியில் செதுக்கப்பட்டிருந்தன.  எதிரில் இருந்த பாறையில் அமர்ந்து சிற்பங்களைப் பார்த்துக்.கொண்டிருந்தேன். அது சிலை செதுக்குவதற்கு வாட்டமில்லாத பகுதி அது. மேலும் எட்டாத உயரமும் கூட. அப்படிப்பட்ட இடத்தில் பாறையின் முகப்பில் இத்தனை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் அந்தக் கலைஞனை நினைத்து மனம் வியந்தது. 
சிலைக்கு அருகில் பெரும்பாறையை ஒட்டியபடி சிறு ஒட்டுப்பாறை ஒன்று இருந்தது. அதன்மீது தாவி ஏறி அமர்ந்து கொண்டேன். கம்பீரமாக இருந்தது. 

மலையை விட்டு இறங்கிய பிறகும் அந்தக் குகையிலும், ஒட்டுப்பாறையின்மீதும்  மாறி மாறி அமர்ந்திருக்கிறது மனம் ஒரு கற்சிலையைப் போல. 

செவ்வாய், 5 மே, 2020

அன்பின் பெருவழிப் பயணம் : சமணர் மலை - மனுஷி




இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு கிளம்பும்போதே சமணர் மலைக்குச் செல்ல வேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டிருந்தேன்.
அந்த சமயம் தோழி அகல்யா மதுரையில் இருந்தாள். அவளுக்கும் பயணத்தின் மீது பெருவிருப்பம். சமணர் மலைக்கு உடன் வருவதாகச் சொன்னாள். தனிப்பயணிக்கு ஒரு துணைப் பயணி கிடைத்ததில் பெருமகிழ்ச்சியாக இருந்தது.
மதுரைக்கு வந்திறங்கியதும் முதல் வேலையாக சமணர் மலைக்கு வெயிலுக்கு முன்பாகச் சென்று மலை ஏறி விட வேண்டும் என்பது திட்டம்.
தோழியின் வீட்டில் இருந்து நடைப்பயணமாகச் சென்றோம். நடக்கிற தூரம் தான். நடக்கிற தூரம் என்றால் உலகமே நடந்து செல்கிற தூரம் தான். ஆனால் இது உண்மையிலேயே நடந்து செல்கிற தூரத்தில், பார்வைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.
காலைநேர நடைப்பயணமாகவும் அது அமைந்தது.
நாங்கள் செல்லச் செல்ல கண் தொடும் தூரத்தில் இருந்த மலை பின்னோக்கி நகர்வது போலொரு மாயை உண்டானது. சமணர் மலை நம்மோடு விளையாடுகிறது என நினைத்துக் கொண்டேன்.
சமணர் கல்வெட்டுகள், சிற்பங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. ஆனால், எனக்கு வரலாற்று சிறப்பை விடவும் அந்த மலையில் ஏறும் அந்த அனுபவம் தான் சிலிர்ப்பாக இருந்தது.
மலையின் அடிவாரத்தில் ஒரு கூரைக் கொட்டகையில் ஒரு கடை. தேநீரும் கூட. மலை ஏறிட்டு வந்தபின் டீ குடித்துக் கொள்ளலாம் என உடனடியாக மலைக்குச் சென்றோம்.
சமணர் மலையின் இடதுபுறம் கொஞ்ச நேரம் நடந்தால் ஒரு குகை இருந்தது. அங்கே ஒரு பெரிய பாறையில் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தைச் செட்டிப் புடவு என்று சொல்கிறார்கள். அதற்கு கூகுளில் தேடிப் பார்த்தால் பெயர்க்காரணம் இருந்தது.
வானுலகவாசிகள் சாமரம் வீச, ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பற்றியிருக்க, செம்மாந்து அமர்ந்திருந்தார் மகாவீரர்.
மலையின் அடிவாரத்தில் சிறு கோவில் ஒன்று. கோவிலின் முகப்பில் பெருத்த உருவத்துடன் துவாரபாலகர் போல ஒரு சிலை. கருத்த பெரிய மீசை, முட்டைக்கு கண், தொந்தி வயிறு, இடுப்பில் கட்டியிருக்கும் அரையாடை, கையில் நீண்ட வீச்சரிவாள் எனத் தோற்றமே மிகக்  கம்பிரமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால்  காத்தவராயன், கருப்பசாமி, அய்யனார் - இப்படியான சிறுதெய்வங்களின் கம்பீரமான முகச்சாயல்.
அந்தக் காவல் தெய்வத்த்தை வணங்கிவிட்டு கோயிலுக்குள் சென்றபோது சுடச்சுட புளியோதரை, பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புளியோதரை மற்றும் பொங்கலுக்காக கோயிலுக்குள் இருந்த சாமியைக் கண்மூடி வேண்டி வணங்கினோம். பூசாரி தீபாராதனை தட்டுடன் வந்து விபூதியைக் கொஞ்சமாக அள்ளி உள்ளங்கையில் கொடுத்தார். பயபக்தியோடு நெற்றியில் இட்டுக் கொண்டு பிரசாதத்திற்கான தொன்னையை வாங்கிக் கொண்டோம்.
காலை உணவு முடிந்த திருப்தியுடன் கோயிலின் எதிரில் இருந்த குளத்திற்குச் சென்று கையைக் கழுவிக் கொண்டு, குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தாமரை அல்லி மலர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். வெயில் ஏறுது அப்புறம் மலை எற முடியாது என்று அகல்யா நினைவுறுத்தியதும் சமணர் மலையின் மீது ஏறத் தொடங்கினோம்.
மலை ஏறும் ஆர்வம் மனதை வேகமாக உந்தித் தள்ளினாலும் ஐந்து நிமிடத்திலேயே மூச்சு வாங்கியது. சுள்ளென்று இருக்கும் காலை வெயில். செங்குத்தான மொட்டைப் பாறை. பாறையிலேயே செதுக்கப்பட்ட சிறிய படிக்கட்டுகள். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நடக்கும் அளவுக்கான வழி. இருபுறமும் பற்றிக் கொண்டு படியேற இரும்புக்குக் கம்பி. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே செல்ல அரை மணி நேரம் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்.

படிக்கட்டுகள் முடிந்த இடத்தில் கண்ணெதிரே சிறிய இரும்புக்கு கம்பி வேலைகளுக்கு மேலே பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள். அங்கே இயற்கையாக அமைந்த ஒரு சுனை இருந்தது. பேச்சிப் பள்ளம் சுனை. கொஞ்சமே கொஞ்சமான பச்சை நிறத் தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது. அதற்கு அருகில் தான் எட்டு தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக இருந்ததன.
சிற்பங்களின் அருகில் கொஞ்ச நேரம் அமர்ந்து கொண்டிருந்தேன். எதிரில் படர்ந்து கிளைபரப்பி கிளிப்பச்சை நிறத்தில் துளித்திருக்கும் இலைகளோடு வளைகாப்பு முடிந்த பெண்ணின் பொலிவான முகம் போல அரசமம் சூரிய ஒளியில் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை பார்த்து முடித்தபின், அதற்கும் மேலே மலையின் உச்சியில் இருக்கும் தீபத்தினைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். 
அந்த மரத்தடிக்குப் போகலாம் என அகல்யாவை அங்கு அழைத்துச் சென்றேன். மொட்டைப் பாறையில் சுட்டெரிக்கும் காலை வெயிலுக்கு அரச மரத்தின் நிழலும் அங்கேயே பரவியிருந்த இளங்காற்றும் ரம்மியமாக இருந்தது. மரத்தின் வேர் தரையெங்கும் படர்ந்திருந்தது. வேரில் மடியில் சற்று நேரம் அமர்ந்து தியானம். புத்தனாகும் பெருங்கனவைத் தூண்டிவிட்டது. புத்தனாதல் அத்தனைச் சுலபமல்ல. அது ஒரு பெருவாழ்வு. இன்னும் இன்னும் செல்ல வேண்டிய பயணங்கள் வாழ்வை, மனிதர்களைக் கொண்டாடுகிற, அன்பின் பெரும்சுவையை உணர்கின்ற மனபக்குவத்தைத் தரலாம். புத்தனாதல் பெரும் கனவு தான். அது வாழ்வின் பேருண்மை.

அரச மரத்தடி இளைப்பாறலில் வியர்வை அடங்கியிருந்தது.
மீண்டும் மொட்டைப்பாறையில் மேலே நடக்க வேண்டும். தீபத்தூணை நோக்கி நடக்கலானேன். படிக்கட்டுகள் இல்லாத வழுவழு பாறை. மெல்ல நடந்து உச்சியை அடைந்தேன்.
மாதேவிப்பெரும்பள்ளி எனும் சமணப்பள்ளியின் அது. தீபத்தூணை எல்லோரும் தொட்டு வணங்கினார்கள். சுற்றி வந்தார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
பாறையின் விளிம்பில் போய் அமர்ந்து கொண்டேன்.  வெயில் ஒருபக்கம் நடுமண்டையில் சுள்ளென்று சுட்டெரித்தது. இன்னொருபக்கம் எங்கிருந்தோ காற்று அவ்வப்போது இதமாக வீசியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான இயற்கை. சுற்றிலும் மலைகள் வேறு. ஸ்பைடர் மேன் போல உள்ளங்கையில் இருந்து நூல் விட்டு அடுத்தடுத்த மலைக்குத் தாவி விட வேண்டும் போலொரு பேராசை.
கைகளைத் தலைக்கு வைத்து கால் நீட்டிப் படுத்துக்க கொண்டேன்.
இந்தப் பிரபஞ்சமே எனக்காக என்பது போலிருந்தது.

இதற்கு மேல் இங்கே இருந்தால் வெயில் ஸ்ட்ரா போட்டு மொத்த எனர்ஜியையும் உறிஞ்சிவிடும் எனத் தோன்றவே மெல்ல மலையிலிருந்து கீழே இறங்கினோம்.
மீண்டும் ஒருமுறை நீ வருவாய் எனும் குரல் கேட்டது.


திங்கள், 4 மே, 2020

கவிஞராய் வாழ்வதன் துயரம் – மனுஷி


கவிஞராய் வாழ்வதன் துயரம் மனுஷி

இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார்.
பொதுவாக ட்விட்டரில் யாரேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. காரணம், ட்விட்டரில் 90% ஐடிக்கள் சொந்தப் புகைப்படம் வைப்பதில்லை. சொந்தப் பெயரில் இருப்பதில்லை. முகத்தையும் பெயரையும் மறைத்துக் கொண்டு மாயாவி மனிதர்களைப்போல உலாவரும் மர்மம் எனக்கு விளங்கவில்லை. விளங்கிக் கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.
சொந்தப் பெயரில் இருப்பதில்லை என்பது ஒருபுறம் என்றால் வைத்துக்கொள்கின்ற பெயர்கள் கூட வித்தியாசமாக இருக்கும். அதில் சமீபத்தில் எனக்கு ஒரு ஐடியில் இருந்து ஒருவர் பின்தொடர்ந்தார். அந்த ஐடியின் பெயர்கொரானா அத்தைமகன்’. பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?
மேலும், முகநூல் பதிவர்கள் போல அல்ல ட்விட்டர் பதிவர்கள். முகநூல் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது ட்விட்டரில் இருப்பவர்களின் செயல்பாடுகள். சகட்டுமேனிக்குக் கெட்டவார்த்தைகள் புழங்குகின்ற இடமாக ட்விட்டர் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.கருத்து சொல்வார்கள். தத்துவங்களை அள்ளி வழங்குவார்கள். ஆனால் ஆரோக்கியமான வாதங்களுக்கு அங்கே இடமில்லை. பெண்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் அடங்கிய ஐடிக்கள் இருப்பதிலேயே பெரும் அசூயை.
ட்விட்டர் மீதான ஒவ்வாமை ஒருபுறம் என்றாலும், இந்தப் புத்தகக் கண்காட்சியில் என்னை வந்து சந்தித்த பெரும்பாலா இளைஞர்கள், பெண்கள் ட்விட்டரில் என் கவிதைகளைப் பின் தொடர்வதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார்கள். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். என்ன புத்தமெல்லாம் வாங்கி வாசிக்கலாம் என ஆலோசனைகளும் கேட்டுக்கொண்டார்கள். அந்தக் கணம் சிறு நம்பிக்கை துளிர்த்த்து. என் தலைமுறை அவ்வளவு ஒன்றும் பாதாளத்திற்குள் விழுந்துவிடவில்லை. புத்தகங்களைத் தேடி வாசிக்கின்ற, கவிதைகளை நேசிக்கின்ற பண்பை அவர்கள் கைவிட்டுவிடவில்லை என்பது பெரும் ஆறுதல்.
இருக்கட்டும்.
இங்கே பேச வந்தது வேறொரு விஷயத்தைப் பற்றி.
கொரானா எனும் நோய் மனித சமூகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான காலத்தில் முகநூல், ட்விட்டர் மாதிரியான சமூக வலைதளங்கள் பெரிய வடிகால்களாக  இருக்கின்றன. கட்டாயத் தனிமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நமது எல்லோருடைய மனநிலையும், வாழ்க்கைப்பாடுகளும் என்ன என்பதை அவர்கள் பதிவிடும் பதிவுகள் வெளிப்படுத்திவிடுகின்றன.
இந்தச் சமயத்தில் யாரேனும் நலம் விசாரித்துக் குறுஞ்செய்தி அனுப்பினால் பதில் சொல்கிறேன். பார்த்தப் படங்கள் குறித்து, வாசித்த நூல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தால் அவர்களோடு பேசுகிறேன். புத்தகங்கள் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்பவர்களுக்குச் சமீபத்தில் வாசித்த புத்தகங்கள் குறித்தும், என் வாசிப்பு அனுபவத்திலிருந்து வாசிக்க வேண்டிய நூல்களையும் அவர்களுக்குச் சொல்கிறேன்.
ஒருமுறை கணேஷ் பாலா வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், அவருடைய கணிணியில் இருந்து மொபைலுக்கு அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகத்தின் பிடிஎஃப் காப்பியை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அதில் சில ஏற்கனவே வாசித்தவை என்றாலும் அடிக்கடி வாசிக்கத் தூண்டுபவை. எனது பயணங்களின் போது வாசிக்க ஏதுவாக இந்த பிடிஎஃப் புத்தகங்கள் எனக்குத் துணையாக இருக்கின்றன.
இந்தக் கொரானா காலத்தில் புத்தகம் வாசிக்க விருப்பமுள்ள நபர்களுக்கு பிடிஎஃப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன்.
தொடக்கத்தில் நான் சொன்ன ட்விட்டர் ஐடியின் மெசேஜை முதலில் அப்படித்தான் பார்த்தேன்.
அக்கா, எனக்கொரு உதவி. செய்ய முடியுமா?
இதுதான் அந்த மெசேஜ்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றால் நிச்சயமாக இந்த மெசேஜை அப்படியே கடந்து போயிருப்பேன். உதவி எனக் கேட்கும் காலகட்டம் அப்படிக் கடந்துபோக முடியவில்லை.
என்ன, சொல்லுங்க என்று பதில் அளித்தேன்.
அரை மணி நேரத்திற்குப்பிறகு, நான் என் லவ்வரை ரொம்ப மிஸ் பண்றேன். அவளுக்கு அனுப்ப ஒரு கவிதை வேண்டும். எனக்கு எழுதித்தர முடியுமா என்று மெசேஜ் வந்தது.
நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது எனும் 23ம் புலிகேசியின் துயரம் தோய்ந்த குரல் எனக்குள் கேட்டது.
முதல் வேலையாக அந்த உதவி கேட்டத் தம்பியின் ஐடியை ப்ளாக் செய்தேன்.
கவிஞர் என்றால் இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் கேள்விக்குள் உடனே செல்லவில்லை.
ஒரேயொரு கேள்வி தான். காதலிக்கத் தெரிகிறவர்களுக்குத் தன் நேசத்திற்குரியவர்களுக்கு மனசுக்குள்ளிருந்து நான்கு வரி எழுதத் தெரியாதா? தெரியவில்லை என்றால் அப்புறம் என்னத்துக்கு கவிதை கேட்கிறது?
எங்க ஏரியாவில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், தேர்வுகளுக்காகவோ, போட்டிகளுக்காகவோ கவிதை எழுதிக் கொடுங்க அக்கா என்று சில தலைப்புகளோடு வருவார்கள். எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதில் சிலர் பரிசும் வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் காதலியின் பிறந்தநாள் வருகிறது, அவளுக்குச் சொல்ல ஒரு கவிதை வேண்டும், காதலியைப் பிரிந்திருக்கிறேன் அவளைச் சமாதானம் செய்வது போல ஒரு எழுதிக் கொடுங்க, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் அவளை ப்ரோபொஸ் பண்ண ஒரு கவிதை கொடுங்க, தங்கச்சிக்குப் பிறந்தநாள் வருது ஒரு கவிதை கொடுங்க, அண்ணனுடைய பிறந்தநாளுக்குக் கவிதை வேண்டும், காலேஜ் ஃபேர்வெல் டே வருது அதுல ஃப்ரண்ட்ஸ்க்குச் சொல்றபோல கவிதை வேண்டும்…. இப்படி கவிதை வேண்டும்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
காதலிப்பவர்கள், காதலின் உன்மத்தத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னாலும் அது கவிதையாகத்தானே இருக்கும். பிரிவின் துயரத்தில் இருப்பவர்களுக்கு மனதின் கண்ணீரிலிருந்து சொல்லும் எந்த ஒரு சொல்லும் காதலை வலுப்படுத்தும் தானே. இருந்தும் இவர்களது உணர்வுகளுக்கு இன்னொருவரைச் சிந்திக்கச் சொல்லிக் கேட்கும் அபத்தம் ஏன் இங்கே நிகழ்கிறது? நமக்கு என்ன வருமோ அதைச் செய்யலாமே. கவிதையில் சொன்னால் தான் சொன்னதாகுமா?  
இது போதாதென்று என் பள்ளிக்கல்லூரித் தோழிகள் ஏய் நீ கவிஞர்னு சொல்ற என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்லு என்பார்கள். 96 படத்தில் ராமிடம் ஜானு கேட்பது போல செல்லச் சிணுங்களோடு இல்லாமல், நீ என்னைப் பற்றிக் கவிதை சொன்னால் தான் நீ கவிஞர் என நாங்க நம்புவோம் என்பதாகத்தான் இருக்கும்.
எனக்கு அப்படியெல்லாம் கவிதை எழுத வராதும்மா என்று சொன்னால், அப்போ நீயெல்லாம் என்ன கவிஞர் என்று நக்கலடிப்பார்கள். கவிதை என்பது உணர்வும் அனுபவமும் சார்ந்தது, தனிப்பட்ட நபரைப் புகழ்ந்து போற்றித் துதிபாடும் கவிதைகளை நான் எழுதுவதில்லை என்று சொன்னால் அவர்களுக்குப் புரியவில்லை. கவிஞர் என்றால் சொன்னால் எழுதனும் என்ற அந்தக் கோட்டிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.
இவர்கள் மத்தியில் தான் கவிதைக்கென வாழ்க்கையை ஒப்புக் கொடுத்துவிட்டு வாழவேண்டியும் இருக்கிறது.
நா. முத்துக்குமாரின் கவிதை ஒன்று உண்டு.
காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்.
-       நா. முத்துக்குமார்
இந்த வரிகளை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

என் ஆகச் சிறந்த துயரம், கவிதை.
பெரும் சாபம் கவிஞராய் வாழ்தல்.

ஞாயிறு, 3 மே, 2020

போதும் லாக் டவுன் நாட்கள் - மனுஷி

மொபைல் சார்ஜர் மற்றும் பென் ட்ரைவ் வாங்குவதற்காக ராஜா தியேட்டர் சிக்னல் வரை சென்றேன். தெரிந்த மொபைல் கடை என்பதால் நேற்றே கடை திறப்பார்களா எனக் கேட்டுக் கொண்டேன். சில நாட்களாக காலை 10 மணி முதல் 1 மணி வரை கடை திறந்திருக்கும் என்றதால் சென்றேன். 
கிளம்புவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை போனில் அழைத்து கடை திறந்திருக்கிறதா என உறுதிப் படுத்திக் கொண்டேன். 
பதினோரு மணிக்கே வெயில் பல்லை இளித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது. 
இன்றைக்கு வெளியில் செல்ல ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு கிளம்பினேன். 
ஆரோவில் பஸ் ஸ்டாப் அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்த காவல்துறை நண்பர்கள் என் வண்டியைப் பார்த்ததும் புன்னகையோடு கையசைத்தார்கள். நானும் வணக்கம் சொன்னேன். 
வழக்கத்திற்கு மாறாக சாலையில் பைக்குள் அதிகமாகவே போவதும் வருவதுமாக இருந்தன. 
பேருந்துகள், லாரிகள், கார்கள் செல்லாத ஈசிஆர் சாலையை ரசித்தபடியே போய்க் கொண்டிருந்தேன். 
சிவாஜி சிலை சிக்னல் அருகில் இருந்த காவல் நண்பர்களும் பெரிதாக வண்டிகளை நிறுத்தவில்லை. உட்கார்ந்தபடியே எங்கே என்றார்கள். வண்டியின் வேகத்தைக் குறைத்து மொபைல் ஷாப் என்றேன். சரி சரி என்றபடி அனுப்பி வைத்தார்கள். 
ஒன்றரை மாதத்திற்குப் பிறகு சிவாஜி சிலை தாண்டி முத்தியால்பேட்டை வழியாகச் சென்றேன். 
அங்கிருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரையிலும் ஏராளமான பைக்குகள். ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியிருக்கும் பாண்டிச்சேரியின் சாலைகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதா பதற்றம் கொள்வதா எனத் தெரியவில்லை. அஜந்தா சிக்னலில் காத்திருந்து சிக்னலைக் கடக்கும் அளவுக்கு பைக்குகள். 
எப்பொழுதும் பளபளப்பான உடைகள் தொங்கிக் கொண்டிருக்கும் மேக்ஸ் ஷோரூம் பூட்டியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காந்தி வீதியின் சில கடைகள் திறந்திருந்தன. முக்கியமாக, பெட்டிக்கடைகள். 
கந்தன் காப்ளக்ஸ் சிக்னல் அருகில் தடுப்பு போடப்பட்டதால் பைக்குகள் பாரதி வீதி வழியாகச் செல்ல திருப்பி விடப்பட்டன. 
பாரதி வீதியில் இருக்கும் பழக்கடைகள், மளிகைக் கடைகள், சாலையோரத்தில் கீரை, முருங்கைக்காய் முதலிய பொருட்கள் விற்கும் கடைகள் பரப்பான விற்பனையில் இருந்தன. கடைகளில் நின்று பொருட்கள் வாங்கப்படுவதால் வாகன நெரிசலில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று மொபைல் ஷாப்பை அடைய மணி பன்னிரண்டைத் தொட்டிருந்தது. 
கடையைப் பாதியாக இழுத்து மூடியிருந்தார்கள். கடையின் வெளியில் நின்றிருந்த ஒருவர் என்ன வேண்டும் எனக் கேட்டு கடையிலிருந்து ஒருவர் வெளியேறிய பின் மற்றொருவரை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். 
கடையில் வாங்க வேண்டிய பொருட்களுக்குப் பில் போடும்போதுதான் கவனித்தேன். 
கடையில் மொபைல் ரிப்பேர் செய்யும் மணி அண்ணா மும்முரமாக ஒரு மொபைலைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். இந்த லாக்டவுன் நாட்களில் கூட இவ்வளவு மொபைல்கள் பழுது பார்க்கவென கொண்டு வருகிறார்களா என ஆச்சரியமாக இருந்தது. 
கடையிலிருந்து வெளியே வரும்போது சின்னதாக ஒரு பேராசை. ஏதாவது ஒரு டீ கடை திறந்திருக்கிறதா எனத். தேடினேன். ஒன்று கூட இல்லை. ஜூஸ் கடையும் இல்லை. 
இவ்வளவு தூரம் வந்தபிறகு ஒரு சுற்று சுற்றி விடலாம் என நேரு வீதி வழியாக மிஸ்ஸன் வீதி வரை போய் செஞ்சி சாலையில் இணைந்து அஜந்தா சிக்னலைப் பிடித்து, வீடு வந்து சேர்ந்தேன். 
இனியும், கையைக் கழுவு, வீட்டுக்குள் இரு என்று சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. வயிற்றுப் பாட்டுக்கு வெளியில் வந்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இன்று உணர்ந்தேன். 
சமூக இடைவெளியைப் பின்பற்றி அவரவர் வேலையைச் செய்தாக வேண்டும் வழக்கம் போல. சுத்தமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேசமயம், 
வயிறு என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது.