#தனித்திருத்தலின்_காலம்
நாம் தனித்திருக்க வேண்டிய காலத்தில், தனியாக வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு இது புதியதாகத் தெரியவில்லை.
ஆனால் வெளியில் செல்ல முடியாது என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் கடினமான விடயம் தான். சூழலைப் புரிந்து கொண்டு வெளியில் செல்வதைத் தவிர்த்து விட்டேன்.
வெளியூர்களுக்குச் செல்ல முடியாத நாட்களில் கூட குறைந்த பட்சம் பாண்டிச்சேரி கடற்கரை, ஆரோவில் காடு, ஈசிஆர் சாலை எனச் சுற்றியலைந்த கால்கள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது புதிதாக இருக்கிறது.
இந்த நாட்களில் என் பூனைக்குட்டிகளோடு நிறைய நேரம் செலவிட முடிகிறது. அவர்கள் நிச்சயம் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் இருப்பார்கள். இருக்கிறார்கள்.
என்னோடு உரையாடிக் கொள்ள முயற்சிக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பிரியத்தை முழுதாக உணர்கிறேன்.
வழக்கமாக மதிய நேரங்களில் மீன் குழம்பு மீன் வருவலுடன் சாப்பாடு கடை நடத்தி வரும் அம்மா, நேற்று கடையில் காய்கறி வாங்கும்போது, "பாப்பா வெளியில வரக் கூடாதாம் ஏதோ ஒரு காய்ச்ச நோய் வருதாம்.. எதுக்கும் வெளிய வராத. பசிச்சா யாருக்கும் தெரியாமல் இங்க வந்து சாப்ட்டு போய்டு பட்டினி கிடக்காத என்றார்.
மீனம்மா, அம்மா பாரதி மீன் கிடைக்கல இன்னும் உன் பூனைகளுக்கும் உனக்கும் சாப்பாடு பண்ணி கொண்டு வரட்டா என்று போன் பண்ணி அக்கறையாகக் கேட்கிறார்.
காலையில் நண்பர் செல்போனில் அழைத்து, நான் சிலிண்டர் எடுக்கப் பாண்டிக்குப் போறேன் வீட்டுல சமைக்க என்னலாம் இல்லனு சொல்லு வாங்கிட்டு வந்து தருகிறேன் என்றார். வேண்டாம் என்று தவிர்த்த போதும், நீ அப்படித்தான் சொல்வ இருப்பதை வாங்கி வருகிறேன் என்று சொல்லி, அரிசி காய்கறிகள் வாங்கி வந்து வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்றார்.
நெருங்கிய நண்பர்களும் தோழிகளும், கவிதை மூலமாக மட்டுமே என்னை அறிந்த நண்பர்களும் முகநூலில், வாட்சப்பில் தொடர்பு கொண்டு எங்கயும் சுத்த வேண்டாம். கொஞ்ச வீட்ல பத்திரமா இருங்க என்று அன்பாகக் கடிந்து கொள்கிறார்கள்.
எப்படி உன்னால தனியா இருக்க முடியுது என ஆச்சரியத்தோடு பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பழகிவிட்டது என்று சொல்லி மழுப்பி இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் பெரிய காரணங்கள் இருந்ததில்லை.
எனக்காக நான் மட்டுமே இருக்கிறேன், என்னை நான் எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால் தனியாக உணர்ந்ததில்லை.
ஆனால் நேற்றும் இன்றும் வேறொரு விடை கிடைத்திருக்கிறது. என்னை நேசிக்கும் இத்தனை பிரியமானவர்களின் அன்பு தான் நான் தனித்து இல்லை எனும் நம்பிக்கையை என்னுள் விதைத்துக் கொண்டே இருக்கிறது.
குடும்பத்தோடு வாழ்வதைப் போலத்தான் மனிதர்களோடு வாழ்வதும்.
சின்னஞ்சிறு வாழ்க்கையில் எளிய மனிதர்களின் அன்பு யாரையும் தனித்திருக்க விடுவதில்லை.