புதன், 25 மார்ச், 2020

தனித்திருத்தலின் காலம் - மனுஷி

#தனித்திருத்தலின்_காலம் 
நாம் தனித்திருக்க வேண்டிய காலத்தில், தனியாக வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு இது புதியதாகத் தெரியவில்லை. 
ஆனால் வெளியில் செல்ல முடியாது என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் கடினமான விடயம் தான். சூழலைப் புரிந்து கொண்டு வெளியில் செல்வதைத் தவிர்த்து விட்டேன்.

வெளியூர்களுக்குச் செல்ல முடியாத நாட்களில் கூட குறைந்த பட்சம் பாண்டிச்சேரி கடற்கரை, ஆரோவில் காடு, ஈசிஆர் சாலை எனச் சுற்றியலைந்த கால்கள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது புதிதாக இருக்கிறது. 

இந்த நாட்களில் என் பூனைக்குட்டிகளோடு நிறைய நேரம் செலவிட முடிகிறது. அவர்கள் நிச்சயம் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் இருப்பார்கள். இருக்கிறார்கள்.

என்னோடு உரையாடிக் கொள்ள முயற்சிக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பிரியத்தை முழுதாக உணர்கிறேன். 

வழக்கமாக மதிய நேரங்களில் மீன் குழம்பு மீன் வருவலுடன் சாப்பாடு கடை நடத்தி வரும் அம்மா, நேற்று கடையில் காய்கறி வாங்கும்போது, "பாப்பா வெளியில வரக் கூடாதாம் ஏதோ ஒரு காய்ச்ச நோய் வருதாம்.. எதுக்கும் வெளிய வராத. பசிச்சா யாருக்கும் தெரியாமல் இங்க வந்து சாப்ட்டு போய்டு பட்டினி கிடக்காத என்றார். 

மீனம்மா, அம்மா பாரதி மீன் கிடைக்கல இன்னும் உன் பூனைகளுக்கும் உனக்கும் சாப்பாடு பண்ணி கொண்டு வரட்டா என்று போன் பண்ணி அக்கறையாகக் கேட்கிறார். 

காலையில் நண்பர் செல்போனில் அழைத்து, நான் சிலிண்டர் எடுக்கப் பாண்டிக்குப் போறேன் வீட்டுல சமைக்க என்னலாம் இல்லனு சொல்லு வாங்கிட்டு வந்து தருகிறேன் என்றார். வேண்டாம் என்று தவிர்த்த போதும், நீ அப்படித்தான் சொல்வ இருப்பதை வாங்கி வருகிறேன் என்று சொல்லி, அரிசி காய்கறிகள் வாங்கி வந்து வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். 

நெருங்கிய நண்பர்களும் தோழிகளும், கவிதை மூலமாக மட்டுமே என்னை அறிந்த நண்பர்களும் முகநூலில், வாட்சப்பில் தொடர்பு கொண்டு  எங்கயும் சுத்த வேண்டாம். கொஞ்ச வீட்ல பத்திரமா இருங்க என்று அன்பாகக் கடிந்து கொள்கிறார்கள். 

எப்படி உன்னால தனியா இருக்க முடியுது என ஆச்சரியத்தோடு பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பழகிவிட்டது என்று சொல்லி மழுப்பி இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் பெரிய காரணங்கள் இருந்ததில்லை.
 
எனக்காக நான் மட்டுமே இருக்கிறேன், என்னை நான் எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால் தனியாக உணர்ந்ததில்லை. 

ஆனால் நேற்றும் இன்றும் வேறொரு விடை கிடைத்திருக்கிறது. என்னை நேசிக்கும் இத்தனை பிரியமானவர்களின் அன்பு தான் நான் தனித்து இல்லை எனும் நம்பிக்கையை என்னுள் விதைத்துக் கொண்டே இருக்கிறது. 

குடும்பத்தோடு வாழ்வதைப் போலத்தான் மனிதர்களோடு வாழ்வதும். 

சின்னஞ்சிறு வாழ்க்கையில் எளிய மனிதர்களின் அன்பு யாரையும் தனித்திருக்க விடுவதில்லை.

ஞாயிறு, 15 மார்ச், 2020

அரண்மனை_நகரத்தில்_ஒரு_காஃபி - மனுஷி


#கானாடுகாத்தான்_அரண்மனை

புதுக்கோட்டை பக்கத்தில் கானாடுகாத்தான் எனும் ஊர் இருக்கு. அங்கே ஒரு அரண்மனை இருக்கு. அவசியம் போய் பாரு என்று நண்பர் சொல்லி இருந்தார். 

ஊருக்குக் கிளம்பும் முன் அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினேன். உடன் முகநூல் தோழி அபியும் இணைந்து கொண்டார். இருவருமாகக் காரில் கிளம்பினோம். 
பாதி தூரம் சென்றபிறகு தான் தெரிந்தது அரண்மனை பார்வையிட முன் அனுமதி வாங்க வேண்டுமென. 

அரண்மனை இருக்கு போய் பாரு என ஆர்வத்தைத் தூண்டிவிட்ட நண்பர், அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பதைச் சொல்லவே இல்லை. உள்ளே செல்ல எப்படியும் முயற்சிக்கலாம் வழி கிட்டும் எனப் பயணத்தைத் தொடர்ந்தோம். 

கோல்சப் விளம்பரத்திற்குப் புன்னகைப்பதைப் போல வெண்ணிற மாளிகை பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து கம்பீரமாய் காட்சியளித்தது. 
ஏற்கனவே அங்கே சிலர், உள்ளே செல்ல விரும்பி, அரண்மனை உள்ளே இருந்த சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். 

உள்ளிருந்த இருவரும், செக்யூரிட்டியும் நாம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தார்கள். 
அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் வெளிப்புறத்தில் இருந்தபடியே அரண்மனையைச் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அப்படியே அரண்மனையை வெளிப்புறமாகச் சுற்றி வந்தோம். 

சுற்றிப் பார்ப்பது என முடிவு செய்து விட்டபின் உள்ளே என்ன வெளியே என்ன? 

அரண்மனையைச் சுற்றி வரும்போது தான் கவனித்தேன். அந்த அரண்மனை மட்டுமல்ல. அந்த ஊரே அரண்மனை போன்ற வீடுகளால் ஆனது என. வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனாலும் நான் ஆவலோடு காண வந்த அரண்மனையின் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை எனும் ஏமாற்றத்தை ஒரு காஃபி குடித்து ஆற்றிக் கொள்ளலாம் அங்கே கடைகள் ஏதேனும் இருக்கிறதா என விசாரித்தோம். 

பக்கத்தில் ஓர் அரண்மனையை ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். 
#செட்டிநாடு_நாரயணா_விலாஸ் ஹோட்டல்.  உணவகம் மற்றும் தங்குவதற்கான ஹோட்டலும் கூட. பாரம்பரியக் கட்டிடத்திற்குள் பழமையின் சுவடுகள் புதுப் பொலிவு பெற்று வசீகரித்தது

வழக்கமாக ஹோட்டல்களில் இருக்கும் டேபிள் சேர்கள் தவிரவும் ஷோஃபாக்கள், சாய்வு நாற்காலி வசதியுடன் இருந்தன. அபிக்கும் எனக்குமாக காஃபி ஆர்டர் சொல்லிவிட்டுச் சாய்ந்து படுத்துவிட்டேன். 
சற்றே ஆசுவாசமாக இருந்தது.