ஞாயிறு, 15 மார்ச், 2020

அரண்மனை_நகரத்தில்_ஒரு_காஃபி - மனுஷி


#கானாடுகாத்தான்_அரண்மனை

புதுக்கோட்டை பக்கத்தில் கானாடுகாத்தான் எனும் ஊர் இருக்கு. அங்கே ஒரு அரண்மனை இருக்கு. அவசியம் போய் பாரு என்று நண்பர் சொல்லி இருந்தார். 

ஊருக்குக் கிளம்பும் முன் அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினேன். உடன் முகநூல் தோழி அபியும் இணைந்து கொண்டார். இருவருமாகக் காரில் கிளம்பினோம். 
பாதி தூரம் சென்றபிறகு தான் தெரிந்தது அரண்மனை பார்வையிட முன் அனுமதி வாங்க வேண்டுமென. 

அரண்மனை இருக்கு போய் பாரு என ஆர்வத்தைத் தூண்டிவிட்ட நண்பர், அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பதைச் சொல்லவே இல்லை. உள்ளே செல்ல எப்படியும் முயற்சிக்கலாம் வழி கிட்டும் எனப் பயணத்தைத் தொடர்ந்தோம். 

கோல்சப் விளம்பரத்திற்குப் புன்னகைப்பதைப் போல வெண்ணிற மாளிகை பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து கம்பீரமாய் காட்சியளித்தது. 
ஏற்கனவே அங்கே சிலர், உள்ளே செல்ல விரும்பி, அரண்மனை உள்ளே இருந்த சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். 

உள்ளிருந்த இருவரும், செக்யூரிட்டியும் நாம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தார்கள். 
அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் வெளிப்புறத்தில் இருந்தபடியே அரண்மனையைச் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அப்படியே அரண்மனையை வெளிப்புறமாகச் சுற்றி வந்தோம். 

சுற்றிப் பார்ப்பது என முடிவு செய்து விட்டபின் உள்ளே என்ன வெளியே என்ன? 

அரண்மனையைச் சுற்றி வரும்போது தான் கவனித்தேன். அந்த அரண்மனை மட்டுமல்ல. அந்த ஊரே அரண்மனை போன்ற வீடுகளால் ஆனது என. வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனாலும் நான் ஆவலோடு காண வந்த அரண்மனையின் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை எனும் ஏமாற்றத்தை ஒரு காஃபி குடித்து ஆற்றிக் கொள்ளலாம் அங்கே கடைகள் ஏதேனும் இருக்கிறதா என விசாரித்தோம். 

பக்கத்தில் ஓர் அரண்மனையை ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். 
#செட்டிநாடு_நாரயணா_விலாஸ் ஹோட்டல்.  உணவகம் மற்றும் தங்குவதற்கான ஹோட்டலும் கூட. பாரம்பரியக் கட்டிடத்திற்குள் பழமையின் சுவடுகள் புதுப் பொலிவு பெற்று வசீகரித்தது

வழக்கமாக ஹோட்டல்களில் இருக்கும் டேபிள் சேர்கள் தவிரவும் ஷோஃபாக்கள், சாய்வு நாற்காலி வசதியுடன் இருந்தன. அபிக்கும் எனக்குமாக காஃபி ஆர்டர் சொல்லிவிட்டுச் சாய்ந்து படுத்துவிட்டேன். 
சற்றே ஆசுவாசமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக