செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

நேத்ரா எனும் குட்டி இளவரசி - மனுஷி


ஆரோவில்லில் மாரத்தானில் கலந்து கொள்வதற்காகச சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சாரதாம்மா வந்திருந்தார். அவரோடு இன்னும் இரண்டு சினேகிதிகளும். அவர்களைச் சந்தித்து ஹாய் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். 

க்ரீன் ஹவுஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரோடு வந்திருந்த நேத்ரா குட்டிப் பாப்பாவைச் சந்தித்தேன். எனது அந்த இரவைக் கூடுதல் அழகாக்கிடும் குட்டி தேவதை அவள் என்பதை அவளது முதல் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன். 

சாரதா அந்தக் குட்டிப் பாப்பாவிடம் என்னை அறிமுகம் செய்யும்போது, இவங்க பேரு மனுஷி... இவங்க கதைலாம் சொல்வாங்க. நாய்க்குட்டி கூட, பூனைக்குட்டி கூடலாம் பேசுவாங்க என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். இதுவரை இப்படி க்யூட்டாக யாரும் என்னை அறிமுகம் செய்ததில்லை. 

அக்கா, நிஜமாவே நீங்க நாய்க்குட்டி கூட பேசுவிங்களா... ஆச்சரியம் அவள் கண்களில் தெரிந்தது. பேசுவேனே என்றேன். அப்படினா இந்த நாய் கிட்ட பேசுங்க பார்ப்போம் என்றாள் அங்கே உணவகத்தில் இருந்த ஒரு வெள்ளை நாயைக் காட்டி. 

இது எனக்கு வைக்கப்பட்ட சின்ன டெஸ்ட். சாரதாம்மா அறிமுகம் செய்யும்போது இருந்த குஷி இப்போது கொஞ்சமா ஜர்க் வாங்கியது. ஒருவேளை நம் குரலுக்கு அந்த வெள்ளையன் மதிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? நேத்ராவிடம் பங்கமாக மாட்டிக் கொள்வோம். ஆனாலும் மனம் தளராமல் ஹேய்... இங்க வா என்று கை நீட்டி அழைத்தேன். அந்த வெள்ளையன் அருகில் வந்துவிட்டான். கொஞ்சமாய் அவன் காது மடல்களை, கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே என்ன டா பண்ற இங்க... சாப்பிட்டியா என்றேன். என்ன புரிந்து கொண்டானோ... என் கையை நக்கிக் கொடுத்தான். என் கால் முட்டியில் தலையை முட்டி மீண்டும் தடவிக் கொடுக்கச் சொன்னான்.

நேத்ராவின் முன்பு என் கெத்தைக் காப்பாத்திட்டடா தம்பி என்று நெற்றியில் முத்தமிட்டேன். நேத்ராவுக்கோ குரலில் ஆச்சரியம்... அக்கா நிஜமாவே சூப்பர்க்கா என்று என்னோடு ஒட்டிக் கொண்டாள். 

அதன் பிறகு, நாய்க்குட்டி, நக்கி கொடுத்தால் என்ன அர்த்தம், வாலை ஆட்டினால் என்ன அர்த்தம், பூனைக்குட்டி பசி எடுப்பதை எப்படிச் சொல்லும், மிஸ் பண்ணால் என்ன செய்யும் என்றெல்லாம் சொல்லச் சொல்ல அவளுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம். 

அக்கா... நீங்க எங்க கூடவே இன்னைக்கு நைட் வந்து தங்கிடுங்க. கதை சொல்லுங்க என்றாள். இல்லடா மா நான் நாளைக்கு வந்து சொல்றேன். என் வீட்ல பூனைக்குட்டிக்குச் சாப்பாடு வைக்கனும் என்று சொல்லிக் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டேன். 

என்னை அனுப்பவே மனசில்லை.

அடுத்த நாள் சாரதாம்மாவும் அவரோடு வந்த தோழிகளும் மாரத்தானில் ஓட வேண்டும். நேத்ராவை எங்கே விட்டுச் செல்வது என்ற யோசனையில் இருந்தபோது என்னோடு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். அடுத்த நாள் முழுக்க என்னோடு இருக்கப் போகிறோம் என்பதால் என்னை வழியனுப்பி வைத்தாள். 

அடுத்த நாள் மாரத்தான் தொடங்கும் இடத்திற்கு நண்பரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, ஒரு சூடான காபியைக் குடித்துவிட்டு அவரை அழைத்துக் கொண்டு விசிட்டர் செண்டர் சென்றேன். அங்கே அவரை இறக்கிவிட்ட பின் சாரதாம்மாவிற்கு அழைத்தால் சிக்னல் கிடைக்கவில்லை. ஆறரை மணிக்கு ஓடிக் கொண்டே வாட்ஸ் அப் காலில், நேத்ரா குட்டியும் எங்களோடு மாரத்தான் ஓடிட்டு இருக்கா... நாங்க முடிச்சிட்டு கால் பண்றோம் என்றார். 

வேறென்ன செய்ய. வீட்டுக்குக் கிளம்பினேன்.

சொன்னபடியே மாரத்தான் ஓடி முடித்து, காலை உணவும் முடித்துவிட்டு எனக்கு அழைத்தார்கள். குட்டி மாரத்தான் ஓட்டக்காரியைச் சந்திக்கும் ஆவலில் விரைவாகச் சென்றேன்.. இல்லை.. ஸ்கூட்டியில் பறந்தேன். 

அவளைப் பார்த்ததும் அள்ளிக் கட்டிக் கொண்டேன். இந்தச் சின்ன வயதில் நான்கு கிலோ மீட்டர் வரை ஓடியிருக்கிறாள். பெரிய விஷயம். அவள் முகத்தில் ஓடிய களைப்பு எதுவும் இல்லை. அன்று காலை பூத்த சின்னஞ்சிறு பூ போலத்தான் இருந்தாள். 

அக்கா நீங்க கதை சொல்றேன்னு சொன்னிங்க சொல்லவே இல்லை.. இப்ப சொல்லுங்க வாங்க என்று கையைப் பிடித்து இழுத்தாள். சொல்றேன் டா. உனக்குச் சொல்லாமல் இருப்பேனா என்று சொல்லிக் கொண்டிருக்கு போதே... நேத்ராவின் அம்மா, முதலில் ரூம் போய் குளிச்சிட்டு, ட்ரெஸ் மாத்திட்டு பிறகு கதை கேட்கலாம். அக்கா கதை சொல்வாங்க என்றார். சென்னை திரும்ப வேண்டிய அவசரம் அவர் குரலில் இருந்தது. 

அவளுக்கு அதெல்லாம் ஒரு விஷயமாகவே இல்லை.. அவள் வைத்திருந்த சுனாமிகா பொம்மையை வைத்துக் கதை சொல்ல சொன்னாள். அவள் அம்மாவிற்கோ கிளம்ப வேண்டிய அவசரம்.

அதைப் புரிந்து கொண்டு, ஆமா நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகு அக்கா வந்து கதை சொல்றேன் என்றேன். இல்ல நீங்க வாங்க என்று அடம் பிடித்தாள். நிஜமா நான் வந்து கதை சொல்வேன்.. நீ இப்போ அம்மா கூட போ என்றேன். 

ப்ராமிஸா..... என்றாள் கையை நீட்டியபடி.

பிராமிஸ் என்றேன் அவள் கை மேல் கை வைத்து.

காட் பிராமிஸா...

காட் பிராமிஸ்...

மதர் பிராமிஸா...

மதர் பிராமிஸ்...

டெட் பிராமிஸா..

டெட் பிராமிஸ்...

அவள் கேட்ட எல்லாவற்றின் மீதும் ப்ராமிஸ் செய்து கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன். 

ஆனால், அவளைப் பஸ் ஸ்டாப் வரை சென்று வழியனுப்பி வைக்க முடியவில்லை. ஆரோவில்லில் அன்றைய தினம் அவ்வளவு பரபரப்பாக இருந்தது எனக்கு. 

அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியம் அப்படியே என்னிடம் இருக்கிறது. 

அவளுக்கென தினம் ஒரு கதையைச் சொல்வது எனத் தீர்மானித்து விட்டேன்.

அவள் முகம் பார்த்துக் கொண்டே கதை சொல்லும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். 

என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது அவள் அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா, இந்த அக்காவை நம்ம கூடவே கூட்டிட்டுப் போய்டலாம்மா... 

என் உலகத்திற்குள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்ட குட்டி இளவரசியின் பேரன்பின் பெருநிழல் தான் அந்த வார்த்தை. 





3 கருத்துகள்:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் மிகவும் தனித்துவம் மிக்கவர் உங்கள் விருப்பங்கள் உங்களை வாழ்க்கை பயணங்களில் கடத்தி செல்கிறது என்று எண்ணுகிறேன்.பயணங்கள் மகிழ்ச்சி அளிக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Nice and a feel-good moment.. Thanks for sharing :)
    Be loved and stay with love...

    பதிலளிநீக்கு