சனி, 1 பிப்ரவரி, 2020

கோனேரியும் குருவம்மா அக்காவும்

கழுகுமலை பயணம் முடித்து அடுத்த நாள் மடவார் வளாகம் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை - இரண்டு இடங்களுக்கும் செல்வதென முடிவு செய்தோம். 

திருவண்ணாமலை என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் நெருப்பு வடிவமாக நின்று, மலையாகக் குளிர்ந்த திருவண்ணாமலையைத்தான் சொல்வார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலையா? அதிலும் பெருமாள் கோவிலா? ஆச்சரியத்தோடு கிளம்பினேன்.
நானும் சங்கீதாவும் ஸ்கூட்டியில் பறந்தோம் என்று சொல்ல முடியாது. மிதமான வேகத்தில் திருவண்ணாமலை கிராமத்தை நெருங்கியதும் பிரம்மாண்டமான யானை ஒன்று கால் நீட்டிப் படுத்திருப்பது போல இருந்தது அம்மலை. மலையை நோக்கி ஸ்கூட்டி விரைந்து செல்ல, மலை பின்னோக்கி நகர்வது போலிருந்தது. சென்ற வருடத்தில் திருச்சி சென்றிருந்தபோது, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு ஸ்கூட்டியில் சென்றிருந்தேன். அப்போதும் அப்படித்தான். மலையை நோக்கி ஸ்கூட்டி பயணம் செய்ய, மலை பின்னோக்கி நகர்ந்து விளையாட்டுக் காட்டுவது போலிருந்தது. சங்கீதாவிடம் அதைச் சொன்னேன். நான் சொன்னதை அவரும் ஒப்புக் கொண்டார். 

திருவண்ணாமலை கோவிலில் கோனேரி என்றொரு ஏரி உள்ளது. குலசேகராழ்வார் அந்த ஏரியைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்று சொன்னார். ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் அளவுக்கு யாரும் என்னை அவ்வளவு ஈர்த்ததில்லை. ஆண்டாளுக்குப் பெருமாளின் மேல் காதல் என்றால் எனக்கு ஆண்டாளின் மேல் மாளாக்காதல். ஆண்டாளின் கவிதைகளின் மேல் தீராக் காதல். 
கோயிலை நெருங்கியதும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அதனருகில் செருப்பைக் கழற்றிவிட்டு நடக்கத் தொடங்கினோம். மொட்டை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் கோயில் வளாகம் குளிர்ந்திருந்தது. கிளை பரப்பி, அசைந்து கொண்டிருந்த மரத்தின் குளுமை தரையெங்கும் படர்ந்திருந்தது. 

கோயிலுக்குப் படியேறிச் செல்வதற்கு முன், வலது புறம் திரும்பி கோனெரியைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என அங்கே சென்றோம். 

செக்கச் சிவந்திருந்த கோனேரியின் படிக்கட்டுகளில் இரண்டு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். 
காற்றின் தீராத பேச்சுகள் ஏரியில் நீர் வளையங்களாய் நெளிந்து கொண்டிருந்தன. ஏரியின் கரையைச் சுற்றிலும் மரங்கள். ஏரியின் நீரைக் கவ்விக் குடிப்பது போல ஏரி நீரை நோக்கித் தாழ்ந்திருந்தன. வெள்ளை வெள்ளையாய் இலைகளுக்கு நடுவில் பூக்கள். அவ்வப்போது பூக்கள் பறந்தன. உற்றுக் கவனித்தபோது தான் தெரிந்தது. பூக்கள் அல்ல. நாரைகள். 

மரத்தில் அமர்ந்திருந்த நாரைகளையும், ஏரியையும் செல்போனில் படம் பிடித்தேன். படிக்கட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரும் துணி துவைப்பதை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். நம்ம ஃபோக்கஸ் ஏரியும் நாரையும் தான் என்பது போல நான் க்ளிக் செய்து கொண்டிருந்தேன். எம்மா நீ இவங்களை போட்டோ எடுக்கறனு அவங்க போஸ் கொடுக்கறாங்க பாரு என்றார் சங்கீதா. 

சாரி அக்கா, கவனிக்கல என்று சொல்லிவிட்டு அவர்களைப் படம் பிடித்தேன். இடுப்பளவு நீரில் அமர்ந்தபடி ஈரப்புடவையுடன்  முகமெல்லாம் புன்னகையாக போஸ் கொடுத்தார்கள். 

ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என நினைத்துத்தான் ஏரியின் பக்கம் காலடி எடுத்து வைத்தோம். முதலில் படிக்கட்டில் அமர்ந்தோம். இரண்டு மூன்று செல்ஃபிக்களுக்குப் பிறகு ஏரி, உள்ளே இறங்கி வா வா எனக் கூப்பிட, ஜீன்ஸைக் கொஞ்சம் மேலே தூக்கி விட்டு கடகடவென ஏறி நீரில் கால் வைத்தேன். அடுத்து இரண்டாம் படிக்கட்டு, அடுத்து முன்று, அடுத்து நான்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கினேன். இடுப்பு வரை நனைந்து விட்டேன். நான் கால் வைத்த முதல் படிக்கட்டில் இருந்த நீரின் குளிர்ச்சிக்கும் ஐந்தாவது ஆறாவது படிக்கட்டில் இருந்த குளிர்ச்சிக்கும் வித்தியாசம் இருந்தது. படிக்கட்டின் உள்ளே இறங்க இறங்க சில்லிட்ட நீரின் அதீத குளிர்ச்சி உடலெங்கும் பரவியது. 
போட்டோவுக்கு போஸ் கொடுத்த இரண்டு அக்காக்களும் எங்கள் இருவரைப் பற்றி விசாரித்தார்கள். நான் பாண்டிச்சேரியில் இருந்து வருகிறேன் என்றதும் அவர்களுக்கு ஆச்சரியம். சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வந்திருக்கிறேன் என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கம் போலவே எனது ஒற்றைக்கால் கொலுசைப் பார்த்து, மா, இன்னொரு கால் கொலுசைக் காணோம் என்றார். இல்லக்கா இது ஸ்டைல் என்றேன் சிரித்துக் கொண்டே.  அவர்களும் சிரித்தார்கள்.

துணி துவைக்கும் சத்தத்திற்கு இடையில் செல்ஃபோனில் கானா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. துணி துவைத்துப் பிழிந்து ஏரிக்குள் தான் அழுக்கு நீரை ஊற்றினார்கள். சிவந்த நீரில் சோப்பு நுரை கலந்த அழுக்கு நீர் கலந்தாலும் அப்படியே இருந்தது. சிவந்த நீரில் அலசிய துணி சுத்தமாகவே இருந்தது. 

ஏரியின் இடதுபுறம் நான்கைந்து பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கும் ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி இரண்டு மாடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. 

துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரின் அருகில் இடுப்பு வரை நனைய இறங்கி, சங்கீதாவை போட்டோ எடுக்கச் சொன்னேன். விதவிதமாகப் போட்டோ எடுத்துத் தள்ளினார். இதற்கிடையில் அந்த அக்காக்களோடு பேச்சு வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களோடு தேநீருக்குச் சியர்ஸ் சொல்கிற அளவுக்கு... 
கோயிலுக்குப் போயிட்டு வரும்போது வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும் என அழைத்தார்கள். வீட்டின் அடையாளம் சொன்னார்கள். வர்றோம்க்கா என்று பேச்சுக்கு வாக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வெறும் பேச்சுக்கு அழைத்தார்கள் எனச் சொல்ல முடியவில்லை. வாஞ்சையான அழைப்பு தான். 

அக்கா உங்க பேரு என்னக்கா என்றேன். ஊதப்புடவை அணிந்த அக்கா, என் பேரு குருவம்மா. இவங்க பேரு முனீஸ்வரி என்றார். குருவம்மா அக்கா உங்க பேருல ஒரு பாட்டு இருக்கு. இருங்க யூடியூபில் போடறேன் என்று சொல்லி, தேடி "குறுக்குப் பாறையிலே மறிச்சு வழியில் நின்னு... பார்க்காமல் போறியே நீ குருவம்மா..." பாடலை ஒலிக்கச் செய்ததும் குருவம்மா அக்கா முகத்தில் அடக்க முடியாத வெள்ளந்தி சிரிப்பு. 

கோனேரியில் ஐந்து நிமிடம் என்பது குருவம்மா அக்காவுடனான தேநீர் உரையாடலில் ஒரு மணி நேரமாக நீண்டிருந்தது. எங்களின் உரையாடலை படித்துரையில் அமர்ந்து ஒரு குருகும் கேட்டுக் கொண்டிருந்தது.
கோனேரி வாழ் குருகாய்ப் பிறப்பேனே என்ற குலசேகராழ்வாரின் குரலை அங்கே உணர்ந்தேன். 

கோனேரியின் ஈரம் என்பது எளிய மனிதர்களின் வெள்ளந்தி அன்பினால் துளிர்த்துக் கொண்டிருக்கிறது எப்போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக