புதன், 29 ஜனவரி, 2020

பசி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது

#கழுகுமலை_பயணம் 
கழுகுமலையில் சமண சிற்பங்களையும் வெட்டுவான் கோயிலையும் பார்த்து முடித்த பின் சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலுக்குச் சென்றோம். சங்கர நாராயணன் கோவில் செல்வது எனது திட்டத்தில் இல்லை. உடன் வந்த தோழிகள் விருப்பம். எனவே அவர்களோடு நானும் சென்றேன். 

மிகப் பழமையான கோவில். எப்போதும் போல கோவிலில் சிற்பங்களையும் அதன் குளுமையையும் ரசித்தபடி இருந்தேன். 

நாக தோஷம் நீங்க பால் வாங்கி அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்திச் செய்து கொள்வார்கள் என அங்கே சென்ற பின் அறிந்தேன். என்னோடு வந்த தோழிகள் பாலும் பூ மாலையும் வாங்கிக் கொண்டு சென்றனர். 

கருவரையில் இருந்த சிவ லிங்கத்தைப் பார்த்துவிட்டு, பால் அபிஷேகம் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றோம். நாக தோஷப் பரிகாரம் செய்யும் இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பிள்ளையாரை வணங்கிவிட்டு, அக்கோவிலைச் சுற்றிச் செல்லும்போது, சுவர் ஓரமாக சாம்பல் நிற குட்டிப் பூனை ஒன்று படுத்திருந்தது. உடலைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்ததைப் பார்த்ததும் குரல் கொடுத்தேன். 

பூனைகள் அசந்து தூங்கும்போது சிறு சத்தம் கேட்டால் கூட உடனே தலை தூக்கிப் பார்க்கும். நான் குரல் கொடுத்தும் கூட அதனிடம் அசைவில்லை. தலையில் கை வைத்துத் தடவிக் கொடுத்தேன். அப்போது கூட அசையாமல் படுத்திருந்தது. 

பசியில் மெலிந்த உடல். தூங்கவில்லை. நினைவு தப்பிக் கொண்டிருந்தது. தோழிகளிடம் இருந்த பாலைத் தர முடியுமா எனக் கேட்டேன். அவர்கள் அபிஷேகம் செய்வதற்கான பால், வேண்டுமெனில் போய் வாங்கி வா என சங்கீதா சொன்னார். அவரிடம் இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு வாசலுக்கு ஓடினேன். பிளாஸ்டிக் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்த பால் இருபது ரூபாய். வாங்கிக் கொண்டு கூடவே பாலை ஊற்றி வைக்க ஒரு சிறிய தொன்னையைக் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தேன். 

அதே இடத்தில் அசைவின்றி படுத்திருந்தது அந்தக் குட்டிப் பூனை. 

அதன் அருகில் அமர்ந்து கவரில் சுற்றப்பட்டிருந்த நூலைக் கழற்றினேன். அநியாயத்துக்கு நூலைச் சுற்றோ சுற்றென சுற்றி இருந்தார்கள். நூலைப் பிரித்துப் பாலைத் தொன்னையில் ஊற்றிய சத்தம் கேட்டு சட்டென்று எழுந்து கொண்டது பூனை. அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அது எழுந்து கொண்டதே தவிர நிற்க முடியவில்லை. தடுமாறியது. தள்ளாட்டத்துடன் இருந்த பூனைக்கு அருகில் பால் ஊற்றி நிரப்பப்பட்ட தொன்னையை நகர்த்தி வைத்தேன். அதனால் குனிந்து குடிக்க முடியவில்லை. தலையை மெல்ல அழுத்தினேன். அப்போதும் குடிக்கவில்லை.

தொன்னையைக் கையிலெடுத்து அதன் வாயருகில் வைத்தேன். நக்கிக் குடித்தது. கொஞ்சம் தான் குடித்திருக்கும். பிறகு தலையை எடுத்துக் கொண்டது. மீண்டும் அதன் வாயருகில் பாலைத் தூக்கிப் பிடித்தேன். இன்னும் கொஞ்சம் குடித்தது. 

அப்போது தான் கவனித்தேன். அதன் பின்னங்காலில் லேசாக அடிபட்டிருந்தது. மேலும் அதற்கு வயிற்றுப்போக்கு வேறு. அருகில் இருந்த பேப்பரைக் கொண்டு பின்பக்கத்தைத் துடைத்து விட்டேன். லேசாக வலியில் முனகியது. மீண்டும் கொஞ்சம் பாலைக் குடித்தபின் தெம்பு வந்திருக்கும் போல. என் கையைத் தலையால் உரசியது. பின்பு நடந்து என் மடிமீது ஏறிக் கொண்டது. மடிமீது ஏறுவதும், கையைத் தலையால் உரசுவதும், மடியில் இருந்து இறங்குவதும், மீண்டும் கையை உடலால் உரசிக் கொண்டு மடியில் ஏறுவதுமாக இருந்தது. 

என்னை உன்னோடு அழைத்துச் சென்று விடு என்று கெஞ்சுவது போல இருந்தது அதன் செய்கை. என்னோடு அழைத்துச் செல்ல முடியாத குற்றவுணர்வு எனக்குள். 

பாண்டிச்சேரி என்றால் நீ கேட்காமலேயே எடுத்துச் சென்று விடுவேன், இப்பொழுது முடியாது, என்னை மன்னித்து விடு என அந்தக் குட்டியிடம் சொல்லி, தலையை வருடிக் கொடுத்தேன். சூழலைப் புரிந்து கொண்டது போல எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டது. 

மிச்சப் பாலையும் தொன்னையில் ஊற்றி, சுவர் அருகில் அதன் பார்வையில் படும்படி வைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து கொண்டேன். 

பக்கத்தில் நாக சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.  நேர்த்திக்கடன் எனும் பெயரில் தரையில் அவ்வளவு பாலும் வீணாக வழிந்தோடியது. இன்னும் அபிஷேகம் செய்வதற்கான பாலைக் கையில் ஏந்தியபடி நிறைய பேர் மனம் நிறைய வேண்டுதல்களுடன், பக்தியோடு போய்க் கொண்டிருந்தார்கள். அதன் அருகில் தான் பசியில் உடல் மெலிந்த பூனைக்குட்டி சுருண்டு கிடந்தது. நேர்த்திக் கடன் செய்ய வந்த யாருடைய கண்களுக்கும் பூனையின் பசி தெரியவேயில்லை. பாவம், பக்தி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டிருந்தது போல.

பசி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. 
இந்த உலகம் எல்லோருக்குமானது. பசித்திருக்கும் ஜீவன்களுக்கு உணவளிப்பதும் கூட ஆன்மீகம் தானே.

3 கருத்துகள்:

  1. நீதான் பூனைக்குட்டிகளின் இளவரசி...நீ பசிபப்கிணியகற்றும் அமுதசுரபி... முத்தங்கள் உனக்கு...

    பதிலளிநீக்கு
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    பதிலளிநீக்கு