புதன், 12 டிசம்பர், 2018

ஜிட்டு எனும் அன்பன்




கடைக்குப் போகிறேன் என்றாலே டைகர், மைக்கண்ணி கூடவே வருவார்கள். இப்போதெல்லாம் டைகர் - மைக்கண்ணியின் மகன் ஜிட்டுவும் கூடவே வரத் தொடங்கிவிட்டான். தெருவில் பாட்சா தீம் மியூசிக் போடாத குறையாக, புடைசூழத்தான் சென்று வருகிறேன். கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் அதுவே தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. டைகர், தெருவில் போகிற வருகிற பைக்குகளைத் துரத்திக் கொண்டோடுவதால் சிலர் நின்று திட்டிவிட்டுப் போவார்கள். வீட்டுக்குப் போடா என்று விரட்டினாலும் கேட்கவே மாட்டான். ஆனாலும், இரவில் கடைக்குப் போய் வருவதானால் டைகர் தான் எனது பாதுகாப்பாளன். அவன் கூட வந்தால் இரவு மனிதர்களின் பயமின்றி எந்த நேரத்திலும் வெளியில் நடக்கலாம். அவ்வளவு பாதுகாப்பு.

இரவு சமைப்பதற்கான மனநிலை இல்லாததால் ஆரோவில் பஸ் ஸ்டாப்
எதிரில் உள்ள பிரியாணி விலாஸில் பிரியாணி வாங்கக் கிளம்பினேன். தெருவில் நடக்கத் தொடங்கியதும் டைகர் பின்னாடியே வந்தான். அவ்வளவு ஒன்று நேரமாகிவிடவில்லை என்பதால் டைகரைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடியே நடந்து சென்றேன். பாதி தூரம் நடந்து சென்றபின் அவதானித்தேன். என் பின்னால் நிழலைப் போல ஜிட்டு நடந்து வந்தான். தெருமுனை வரை தான் அவன் பின் தொடர்ந்து வரப் பழகியிருந்தான். இப்போது பஸ் ஸ்டாப் வரை வர ஆரம்பித்துவிட்டான். ஐம்பதடி தூரத்தில் ஈசிஆர் பஸ் ஸ்டாப். டைகர் மெயின் ரோடு வரை வருவான். சாலையைக் கடக்க வேண்டும் என்றால் மனிதர்களைப் போல நின்று இருபுறமும் பார்த்துவிட்டு பஸ்ஸோ காரோ பைக்கோ வரவில்லை என்றால் தான் சாலையைக் கடப்பான்.

கதிர் கூட துருதுருவென்று சாலையைக் கடக்கப் போய் தான் விபத்தில் அடிபட்டுப் போனான். அவன் அடிபட்ட சாலையை இப்போது பார்க்க நேர்ந்தாலும் மனம் நடுங்கும். ஜிட்டு அத்தனை துருதுரு பையன் இல்லை. ஆனாலும், அவனும் கதிரைப் போலத்தான்.

ஜிட்டு, என்ன இது புதுப்பழக்கம். இவ்ளோ தூரம் நடந்து வர. இங்கல்லாம் வரக் கூடாது. வீட்டுக்குப் போ என்றேன். என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

சொல்றதைக் கேளு. பஸ், கார்லாம் போகும். உனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. வீட்டுக்குப் போ. நான் பிரியாணி வாங்கிட்டு வர்றேன் என்றேன் அதட்டலாக. அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.

சும்மா மிரட்டுவதற்காக ஒரு சிறு குச்சியை எடுத்து வீட்டுக்குப் போ என்றேன். திரும்பிப் போவது போல பாவனைக் காட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் என் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

நேரம் ஆகுது தம்பி. படுத்தாத. சரி. இந்த இடத்திலேயே நில்லு. நான் போய் பிரியாணி வாங்கி வர்றேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். ஐந்தடி போனதும் திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். என்னையே பார்த்தபடி. சின்ன அசைவு கூட இல்லை. நானும் அவன் அந்த இடத்திலிருந்து நகர்கிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

சாலையைக் கடந்து பிரியாணி விலாஸ் போய் பிரியாணி ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருந்தது. பிரியாணி வாங்கிய கையோடு பால் பாக்கெட் சர்க்கரை டீத்தூள் வாங்கிக் கொண்டு போகலாம் என அங்கிருந்து பத்து கடைகள் தள்ளி இருந்த மளிகைக் கடைக்குச் சென்றேன். பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து இன்னொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினேன்.

சட்டென்று மனம் நின்றது. ஜிட்டுவை அங்கே இருக்கச் சொன்னோமே கிளம்பியிருப்பானா இல்லை அங்கேயே இருப்பானா என்று ஒரு சிறு சந்தேகம். நிச்சயம் கிளம்பியிருப்பான் என்றது ஒரு மனம். ஒருவேளை அங்கேயே நின்றிருந்தால்..... அந்தக் கேள்வியில் அங்கேயே ஒரு கணம் நின்று எதற்கிந்த தயக்கம் என்றபடி வந்த சாலைவழியே திரும்பி நடந்தேன்.

நான் எங்கே காத்திருக்கச் சொன்னேனோ அங்கே ஓரமாக அதே போஸில் நின்றிருந்தான் ஜிட்டு வாலையை ஆட்டிக் கொண்டு.

ஜிட்டுக் குட்டி... என்றதும் என்னை நோக்கி ஓடிவந்தான்.

ஓடிப் போய் அள்ளி அணைத்துக் கொண்டேன்.

அன்பிற்கு மொழியில்லை. அது உணர்வுகளால் ஆனது.

வியாழன், 6 டிசம்பர், 2018

அன்பின் உண்டியல்

உண்டியல் வாங்க வேண்டுமென
நானும் தோழியும் கிளம்பினோம்.
பாண்டிச்சேரியில் காலாப்பட்டு குளம் அருகில் உள்ள இரண்டு கடைகள், கோட்டக்குப்பத்தில் இருக்கும் இரண்டு கடைகள், அஜந்தா சிக்னல் அருகில் இருக்கும் ஒரு கடை இவைகள் தான் எனக்குத் தெரிந்தவை.
இது தவிர, மகாத்மா காந்தி சாலை, சிவன் கோவில் எதிரில் சிவராத்திரி சமயங்களில் பொம்மைக்கடையில் உண்டியல் விற்கும். கொலுவுக்கு வைக்கும் கலர்கலரான பொம்மைகளுடன், அரைடவுசரும் தொப்பியும் போட்ட குட்டிப் பையன் உண்டியல், மீன் உண்டியல், ஆப்பிள் உண்டியல், மாம்பழ உண்டியல், கப்பம் உண்டியல், ஆரஞ்சுப் பழ உண்டியல் என விதவிதமான உண்டியல் அங்கே இருக்கும்.
அஜந்தா சிக்னல் அருகில் உள்ள மண்பானைக் கடை மூடியிருந்தது. கோட்டக்குப்பத்தில் இருக்கின்ற இரண்டு மண்பானைக் கடைகளிலும் உண்டியல் தவிர பானை, சட்டி, தொட்டிச் செடிகள் என எல்லாமும் இருந்தன. அதைவிட்டால் பாண்டிச்சேரியில் முன்பு மத்தியச் சிறைச்சாலை இருந்த இடத்தில் சரியாகச் சொன்னால் கொசக்கடை வீதியில் நான்கைந்து மண் பானைக் கடையில் வாங்கலாமெனக் கிளம்பினோம். வார நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை.
முதல் கடையில் உண்டியல் இல்லை. அடுத்த கடையில் ஆப்பிள் உண்டியல் இரண்டு வைத்திருந்தார் கடைக்காரம்மா.
ஆரோவில் வீட்டுக்கு வந்த புதிதில் தொட்டிச் செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டபோது மொத்தமாகப் பத்துத் தொட்டிகள் வாங்கி எடுத்து வந்தேன். வெயில் காலத்தில் மண்பானை ஒரு முறை வாங்கியிருக்கிறேன். அதன்பிறகு தோழிகள் சட்டிப்பானை, தொட்டிச் செடிகள் வாங்க வேண்டும் என்று கேட்டால் இங்கே தான் அழைத்து வருவேன்.

வண்டியை நிறுத்திவிட்டு உண்டியல் விலை கேட்டோம். ஒரு உண்டியல் விலை முப்பது ரூபாய் என்றார். எங்களுக்கு நான்கு உண்டியல் வேண்டுமே என்றதும் கடைக்குள் போய் வைத்திருந்த எல்லா உண்டியல்களையும் எடுத்து வந்து காட்டினார். மொத்தம் எட்டு உண்டியல். எம்மா, உண்டியல் வாங்கினால் உள்ள உங்க கையால் காசு போட்டு விஷ் பண்ணிக் கொடுக்கனும் என்றோம். அவர் வைத்திருந்த கல்லாப் பெட்டியில் இருந்து சில்லறையை எடுத்து நான்கு உண்டியலிலும் காசைப் போட்டுக் கையில் கொடுத்தார். விளையாட்டுக்குத்தான் சொன்னோம்மா என்றதும் பரவால்ல எங்க ஊட்டுப் புள்ளைங்க மாதிரி தான் என்று சிரித்துக் கொண்டே உண்டியல் போனி பண்ணார்.
உண்டியல்தான் வாங்குவது திட்டம். கூடவே, மீன்குழம்பு வைக்க ஒரு சட்டியும், கீரைக் கடைய ஒரு சட்டியும் எடுத்து விலை கேட்டோம். ஒரு சட்டி நாப்பது ரூபாம்மா. உண்டியல் வேற வாங்குறிங்க. ஒரு சட்டிக்கு முப்பது ரூபாய் கொடுங்க போதும் என்றார். அதெல்லாம் குறைக்க வேண்டாம். நீங்க என்ன விலை வைச்சிங்களோ அதையே சொல்லுங்க என்று, சட்டியைத் தட்டிப் பார்த்து இரண்டு சட்டி எடுத்து வைத்தோம். நான்கு உண்டியல் வாங்கும் திட்டத்தைக் கொஞ்சம் நீட்டித்து மீதி இருக்கும் நான்கு உண்டியலையும் எடுத்துக் கொள்கிறோம் என்று எட்டு உண்டியலையும் எடுத்து வைத்துக் கொண்டோம். அந்த உண்டியலிலும் சில்லறை காசைப் போட்டு போனி செய்து ஒரு மஞ்சள்நிறச் சாக்குப் பையில் சட்டியையும் உண்டியல்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கட்டிக் கொடுத்தார்.
அங்கே குட்டி குட்டி அகல் விளக்குகள் குவியல் இருந்தது. அதன் விலையைத்தான் கேட்டோம். கை நிறைய விளக்கை அள்ளி இந்தாம்மா இந்தக் குட்டிப் பொண்ணுக்கு இது என பத்து அகல்விளக்குகளை என் கையில் கொடுத்தார். இது உனக்கு என என் தோழிக்கு ஆறு விளக்குகளைக் கொடுத்தார். எவ்ளோமா என்றேன். வச்சிக்கம்மா. நீ அந்த அகலை வைச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டே இருந்தல்ல. அம்மா கொடுக்கிறேன் வச்சிக்க என்றார்.

ம்மா, உங்க கடையோட சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றேன். நல்லா எடுத்துக்க என்று சேலையைச் சரி செய்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தார். தேங்க்ஸ் மா என்று சொல்லிவிட்டு, கட்டி வைத்த மூட்டையை வண்டியின் முன்பு வைத்துக் கொண்டு கிளம்பினோம். எம்மா, அடுத்தமுறை வரும்போது இந்தப் போட்டோவை ஒரு காப்பி எடுத்து வந்து கொடுக்கனும் என்றார்.

அவசியம்மா என்றபடி  பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
அந்த எளிய அன்பு மனதைச் சிலிர்க்கச் செய்தது.
மனித வாழ்வின் ஆணிவேர் எளிய அன்பன்றி வேறென்ன.