திங்கள், 30 டிசம்பர், 2019

ஒரு நண்பனிருந்தால் - குடைக்காலம் - மனுஷி

குடைக்காலம்

ஆரோவில்லில் உள்ள இடையன்சாவடியில் குடைக்காலம் நிகழ்வுக்குச் சென்னையில் இருந்து தோழி அகிலா, நண்பர்கள் பாலமுரளி, பிரவீண், இளையராஜா, தோழர் கரன்கார்க்கி, தம்பி ஷிஜு ஆகியோர் வந்திருந்தார்கள்.

அகிலாவும் பிரவீணும் ஸ்கூட்டியில் வந்திருந்தார்கள். ஸ்கூட்டி பயணப் புகைப்படத்தை முகநூலில் பார்த்த கணத்தில் மனசுக்குள் அப்படியொரு சந்தோஷம். நானே ஈசிஆர் சாலையில் பயணிப்பது போலொரு உணர்வு.

நண்பர் பாலாவும் சபரி மலைக்குப் போய்விட்டு அன்றைக்குக் காலையில் தான் சென்னை திரும்பியிருந்தார். மலைக்குப் போய் திரும்பிய காலோடு ஆரோவில் வந்து சேர்ந்தார் ஷிஜுவுடன்.

நிகழ்வு தொடங்கியதும் அனைவரையும் வரவேற்று முடித்தபின், நான் எனது கவிதைகளில் சிலவற்றைப் பார்வையாளர்கள் முன்பு வாசிக்கத் தொடங்கினேன். எந்தச் சூழ்நிலையில், எந்த மனநிலையில், எதன் பாதிப்பில் அந்தக் கவிதைகளை எழுதினேன் எனும் சூழலை விளக்கிக் கவிதைகளை வாசித்தேன். அங்கே வந்திருந்த சிலருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது. அதனால், நான் கவிதைகளை வாசித்தபோது தோழி மாளவிகா, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த கவிதைகளை வாசித்தேன். ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

நான் மட்டுமே வாசித்துச் சொல்வதோடு வந்திருந்த நண்பர்கள், அதிலும் என்னையும் என் கவிதைகளையும் நன்றாக அறிந்த நண்பர்கள் அவர்களுக்குப் பிடித்த என் கவிதைகளை வாசிக்க வைக்கலாம் என அகிலாவிடமும் பாலாவிடமும் கேட்டேன். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் என்மீது கொண்ட பிரியத்தினால் உடனே ஒப்புக் கொண்டார்கள்.

அகிலா, கருநீல முக்காடிட்ட

புகைப்படம் தொகுப்பிலிருந்து ஒரேயொரு கவிதையை மட்டும் அழுவதற்கு முன்னால் என்னும் கவிதையைத் தனக்குப் பிடித்த கவிதை என வாசித்தார். நான் எந்த மனநிலையில் இருந்து கவிதையை எழுதினேனோ அதே உணர்வைக் கவிதை வாசிப்பில் அவர் உணர்த்தினார். அந்தக் கவிதையில் மைய ஆன்மா எது என நான் நினைத்து எழுதினேனோ அந்த வரிகளைக் கூடுதல் அழுத்தமும் உணர்வும் கொடுத்து வாசித்தபோது நான் நெகிழ்ந்து போனேன். அதைவிட ஆச்சரியமும் பெருமையும் தந்தது அகிலாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு. கவிதை வரிகளை வாசித்து உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அங்கிருந்த தமிழ் அறியாத பார்வையாளர்களும் கவிதையை உணரச் செய்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அகிலா நல்ல வாசிப்பாளர். விமர்சகர். அழகுணர்ச்சி மிக்கவர் எனத் தெரியும். சில நேரம், தொலைபேசியில் ஆங்கிலத்தில் பதில் சொல்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். கவிதைகளை மொழிபெயர்க்கும் அளவுக்கான ஆங்கிலப் புலமையை அன்றைக்குத்தான் அறிந்து கொண்டேன். தமிழுக்கு நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்துவிட்டார் எனத் தோன்றியது.

அகிலா, உன்னிடம் புத்தாண்டு பரிசாக நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். பிறமொழிகளில் இருந்து ஆங்கிலம் வாயிலாக நிறைய இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழிலிருந்து அந்தளவுக்குப் பிற மொழிக்கு நமது இலக்கியங்கள் போய்ச் சேரவில்லை. நீ வாசித்தவற்றில் / வாசிப்பவற்றில் உன்னைக் கவர்ந்த, நீ சிலாகித்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்பாளராக உனது அடையாளத்தை நீ உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. நிச்சயமாக, நீ செய்வாய் என நம்புகிறேன்.

அகிலாவைப் போலவே, பாலாவும் எனது கவிதைகளில் சிலவற்றை வாசித்தார். இயல்பாகவே பாலா, கலை அழகுணர்ச்சி மிக்கவர் என்பது அவரது புகைப்படங்களைப் பார்த்தாலே எல்லோருக்கும் தெரியும். பாலாவிடம் நான் வியந்து பார்ப்பது, மனிதர்களின் இயல்பான சிரிப்பைத் தனது கேமராவில் பதிவு செய்யும் அந்தக் கலைக்கண் தான். நல்ல கேமராக் கலைஞன் என்பதைப் போல நல்ல சிறுகதை எழுத்தாளர், வாசிப்பாளர்.

அவர் ஒரேயொரு கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் முத்தங்களின் கடவுள், கருநீல முக்காடிட்ட புகைப்படம் ஆகிய இரண்டு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்தார். மாயா கவிதைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை என்று சொன்னாலும் கூட வாசித்த சொச்ச நேரத்திலேயே எனது மாயா யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்வுக்கு வந்திருந்த ஆரோவில் நண்பர்கள் அகிலாவும் பாலாவும் வாசித்த கவிதைகளையும், வாசித்த விதத்தையும் பாராட்டிச் சொன்ன போது உச்சிமுகர்ந்து போனேன்.

என் உலகம் எப்போதும் நண்பர்களால் முழுமை பெறுகிறது. காலம் எனக்காக அனுப்பி வைத்த பிரியத்தின் சாயல் கொண்டவர்கள். 

**மனுஷி**

வியாழன், 26 டிசம்பர், 2019

சூரிய கிரகணம் எனும் ஒளிவட்டம்

குடைக்காலம் நிகழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒரு மாத காலமும் தூக்கம் சரியாக இல்லை. நிகழ்வு நல்லபடியாக முடிந்த நிறைவில் இரண்டு நாட்களாக நல்ல உறக்கம்.  உறங்காமல் இருந்த இரவின் தூக்கத்தை எல்லாம் இப்படி உறங்கிச் சமன் செய்வது என்று முடிவு செய்து விட்டபடியால் அதிகாலை 9 மணிக்குத்தான் உறக்கம் கலைந்து எழுவது என்றாகிவிட்டது.

இன்றைக்கும் அப்படியே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன். 

96 படம் பார்த்த நாளில் இருந்து எனது மொபைல் ரிங்டோன்  'காதலே காதலே தனிப்பெருந்துணையே...' தான். காதலின் நினைவுகளில் மூழ்கி எழச் செய்யும் இப்பாடல் பெரும் போதையாகத்தான் இருக்கிறது. போதை தெளிந்தே ஆக வேண்டும் என நேற்றைக்குத்தான் ரிங் டோனை மாற்றினேன். 
கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே எனத் தேடித் தேடி ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடலை வைத்திருக்கிறேன். 

காலை 9 மணியளவில் கனவுக்குள் ஓயாமல் ஒளித்துக் கொண்டிருந்தது "உன் மேல ஆச தான், ஆனது ஆகட்டும் ச்சேஞ் யு பேபி, போனது போகட்டும் ஜூ ஜூ பேபி..." இரண்டு முறைக்கு மேலாக அந்தப் பாடல் ஒலிக்கவும் கண்களைத் திறக்காமலேயே மொபைலைக் கைகளால் துழாவி எடுத்து அட்டண்ட் செய்து பேசினேன். 
ஹெலோ.... இங்க சூரிய கிரகணம் பார்த்துக் கொண்டிருக்கோம். என்ன பண்றிங்க. கிளம்பி வாங்க... தோழியும் தோழியின் மகளும் கோரஸாகச் சொன்னார்கள். 
நான் தூங்கிட்டு இருக்கேன். நீங்களே பாருங்க என்று தூக்கம் கலையாத குரலோடு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன். 
இரண்டே நிமிடத்தில் மீண்டும் உன் மேல ஆச தான் என மொபைல் சிணுங்கியது. 
இந்த முறை அழைத்தது மாளவிகா. 
மிஸ் என்ன பண்றிங்க. சூரிய கிரகணம் பார்க்கலாம் வாங்க... 
இதோ ஐந்து நிமிஷத்துல வரேன் மிஸ் என்றபடி போர்வைக்குள்ளிருந்து வெளியே வந்தேன். 

மாளவிகாவின் அழைப்புக்கு ஏதோ ஒரு மந்திர சக்தி இருக்க வேண்டும். என்னைப் பெரும்பாலும் உறக்கத்திலிருந்து எழுப்பி அந்த நாளைக்குள் இழுத்துச் செல்லும் முதல் குரல் அவருடையது தான். 

அவசர அவசரமாகப் பல் துலக்கி, முகம் கழுவிக் கொண்டு மாளவிகா வீட்டிற்குச் சென்றேன். 

இரண்டு தெரு தள்ளி இருப்பதால் ஐந்து நிமிட அவகாசம் போதுமானதாக இருக்கிறது எப்போதும். 
வாசலருகே வண்டியை நிறுத்தினால் மிகுந்த உற்சாகத்தோடு என்னை வரவேற்க அங்கே பெரும் கூட்டமே இருந்தது. 

மாளவிகா, ருத்ரா, ருத்ராவின் மகள் மற்றும் மகள், புரூஸ்லி, புல்லட் எல்லோரும் கண்கள் விரியும் ஆச்சரியத்தோடு சூரிய கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தரையில். 

மாமரத்தின் இலைகளின் நிழல்களில் வட்ட வட்டமாக சூரிய ஒளி. தென்னங்கீற்று நிழலிலும் கூட அப்படியான வட்ட ஒளி. தரையை ஒட்டி அகல் விளக்கை ஏற்றி வைத்தது போல இருந்தது. 
சிறு வயதில் எங்கள் ஊரில் சூரிய கிரகணம் வருவதற்கு முன்பே ஒரு உலக்கையைத் தயாராக வைத்திருப்பார்கள். கிரகணம் வரும் நேரம் ஒரு தட்டில் தண்ணீர் வைத்து நேராக நிற்க வைப்பார்கள். அதுவும் அப்படியே அசையாமல் நிற்கும். 
தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை வீட்டுக்குள் விரட்டி விடுவார்கள். வெளியே வரக் கூடாது எனக் கண்டிப்போடு கட்டளையிடுவார்கள் பெரியவர்கள். 
கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் போய்க் குளித்து விட்டு வர வேண்டும். அப்போது தான் சாப்பாடு. குளிக்காமல் பசிக்கிறது சாப்பிட்டுப் போய் குளிக்கிறேன் என்று சொன்னாலும் சோறு கிடைக்காது. 

தரையில் இருந்த ஒளிவட்டங்களைப் பார்த்துக்.கொண்டேயிருந்தேன். கையில் ப்ளாக் காஃபி கொண்டு  வந்து கொடுத்தார் மாளவிகா. சியர்ஸ் சொல்லி காஃபி குடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். 

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த அகல் விளக்கு போன்ற ஒளிவட்டக் குவியல் செம்மண் தரையிலிருந்து அட்டைப்பூச்சி போல மெல்ல ஊர்ந்து கொஞ்சம் மேடிட்டு இருந்த சிமெண்ட் தரை மீது ஏறி வந்தது. சீரான ஒழுங்கில் மேலே நகர்ந்து வந்த கொண்டே இருந்தது. 
அது நகர்ந்து வர வர ஏனோ உடல் சிலிர்த்தது. 

அரை மணி நேரத்தில் எல்லாம் மாறி இயல்பாகி இருந்தது தரை. 

இயற்கையின் பேரதிசயங்கள் நினைவுகளில் வந்தமர்கையில் வாழ்க்கை பேரழகாகிறது.

திங்கள், 9 டிசம்பர், 2019

ஊர் திரும்பிய பறவை - மனுஷி



நம் வாழ்க்கையில் காலம் ஆடும் ஆட்டத்தில் சீட்டுக் கட்டுகளைப் போல நாம் களைத்துப் போட்டுத் திரும்ப அடுக்கி வைக்கப்படுகிறோம். எப்போது எங்கே காணாமல் போகிறோம், எப்போது மீட்டெடுக்கப்படுகிறோம், எங்கே யாரைத் தொலைக்கிறோம் என்பதெல்லாம் புரியாத புதிர். இந்த விசித்திர விளையாட்டில் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தைத் தொடர்வது கொஞ்சம் அரிதுதான்.

பத்தொன்பது ஆண்டுகள் காணாமல் போய் மீண்டும் திரும்பி வரும்போதுதான் எவ்வளவு மாற்றங்கள்.

என் சொந்த ஊருக்குப் போகாமல் இருந்த பத்தொன்பது ஆண்டுகளில் நான் படித்த பள்ளிக் கூடத்தைப் போலவே என் கனவில் வரும் இன்னொரு இடம் திருநாவலூர் சிவன் கோவில்.

என் சிறு வயது ஞாபகங்களில் எப்போதும் மறக்க முடியாத இடங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

திருநாவலூர் அரசுப் பள்ளியில் சந்திக்கத் திட்டமிட்டபடி தோழி ஜீவா மற்றும் பார்வதியைச் சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக அமர்ந்து படித்த மரத்தடி, விளையாடிய மைதானம், வகுப்பறை என எல்லாவற்றையும் பார்த்து, அந்தப் பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கித் திளைத்துப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம். பார்வதி விருதாச்சலத்திற்கும், ஜீவா கடலூருக்கும் நான் பாண்டிச்சேரிக்கும் செல்ல வேண்டும். பார்வதியைப் பஸ் ஏற்றிவிட்டு, ஜீவாவுடன் வண்டியில் புறப்பட்டேன். கடலூரில் அவளை இறக்கிவிட்டு, பிறகு பாண்டிச்சேரி செல்ல வேண்டும் நான்.

அங்கிருந்து கிளம்பும்போதே திருநாவலூர் சிவன் கோவிலுக்குப் போய்ப் பார்க்கலாம் என முடிவு செய்தோம்.

மெயின் ரோட்டிலிருந்து கோயிலுக்குச் செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பும்போதே எனக்குள்ளிருந்த பள்ளிச் சிறுமி துள்ளிக் குதித்தபடி கோயிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.

கோயிலுக்கு முன்னாள் எப்போதும் செம்மாந்து நிற்கும் தேரை அங்கே காணவில்லை. வண்டியை நிறுத்திவிட்டுச் செறுப்பைக் கழட்டி வண்டியின் அருகில் வைத்துவிட்டுக் கோயில் கோபுரத்தைப் பார்த்தேன். சிறு வயதில் பார்த்தபோது மிக உயரமாகக் காட்சியளித்த அந்த முகப்புக் கோபுரம் கொஞ்சம் குள்ளமாகத் தெரிந்தது. நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேனா எனத் தெரியவில்லை.

கோபுரத்தின் முன்னால் நின்று வணங்கிவிட்டுச் சென்று விடலாம் என நினைத்தோம். இவ்வளவு தூரம் வந்தாச்சு. நாம விளையாடிய இடம். உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் எனச் சென்றோம்.

அப்போதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடம் முடிந்ததும் முகம் கைகால் கழுவி, பள்ளிச் சீருடையை மாற்றிக் கொண்டு பயபக்தியோடு கோவிலுக்குக் கிளம்பிவிடுவோம். வீட்டிலிருந்து பதினைந்து அல்லது இருபது நிமிடம் நடந்தால் சிவன் கோயில். அப்போதெல்லாம் இடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டு நடந்ததில்லை. இப்போதுதான் கடிகார முட்கள் நம்மை நூல் பொம்மைகளைப் போல ஆட்டுவிக்கிறது.

கோவிலுக்குள் நுழையும்போதே வெண்கலத் தகடு பொறிக்கப்பட்ட அகண்ட படியைத் தொட்டு வணங்கியபடி உள்ளே தாண்டிச் செல்வோம். அந்தப் படியை மிதிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.

உள்ளே சென்றதும் முதலில் பிள்ளையார் சன்னதிக்கு முதல் தரிசனம். பிறகு உள்ளே இருக்கும் சிவலிங்க தரிசனம். கருவறையிலிருந்து வரும் வாசம் அது அலாதியானது. இப்போதும் கூட சாமி கும்பிடும் பழக்கம் இல்லை என்றாலும் முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்குச் செல்லும்போது கருவறை வாசனைக்காகவே அங்கே சென்று கைகூப்பி நின்று கொள்வதுண்டு. மேலும் கோயிலின் உள்ளிருக்கும் குளுமையும் அமைதியும் எப்போதாவது கேட்கும் டிங் எனும் மணியோசையும் – அதுதான் நாம் உணர வேண்டிய தெய்வீகம் எனத் தோன்றுகிறது இப்போது.

கருவறை சிவனைத் தரிசித்த பிறகு, பிரகாரத்தைச் சுற்றிவர வேண்டும். இடது புறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகள் இருக்கும். ஒவ்வொரு சிலையையும் பயபக்தியோடு தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே செல்வோம். அந்த வயதில் நாயன்மார்களின் வரலாறு எதுவும் தெரியாது. பி.ஏ. மூன்றாம் ஆண்டு பக்தி இலக்கியம் படிக்கும்போது தான் எங்கள் ஊரின் வரலாற்றுச் சிறப்பு எனக்குத் தெரிய வந்தது. நாயன்மார்களின் வரலாறும் அவர்களின் இலக்கியப் புலமையும் கூட. இப்போதெல்லாம் என்னுடைய ஊரைப் பற்றிக் கேட்கும்போது பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பிறந்த ஊர் எங்கள் ஊர் என.

இந்தக் கோயின் வரலாறு எதுவும் தெரியாமல் இருந்த பால்யகாலமும் கூட பேரழகுதான்.

நாயன்மார்களுக்கு அடுத்து தட்சணாமூர்த்தியை வணங்கிவிட்டு அடுத்துச் சென்றால் சண்டிகேசுவரர் சன்னிதி. அவருக்குக் காது கேட்காது என்பதால் விரல் சொடுக்கி அல்லது இரு கைகளைத் தட்டிச் சத்தமெழுப்பிய பிறகுதான் வணங்க வேண்டும். யார் எப்போது உருவாக்கிய கதை எனத் தெரியவில்லை. அது உண்மையா இல்லையா என்று கேட்கத் தோன்றியதில்லை. இப்போது என்றாலும் கதையின் உண்மைத்தன்மை என்ன ஏது என ஆராய்ந்திருக்கலாம். கேள்வி கேட்பதற்குப் பழக்கப்படுத்தப்படாத காலம் ஒன்று எல்லோருக்கும் இருந்திருக்கும். இன்னமும் கூட சிலருக்கு அது தொடரும். அதைத் தாண்டி வரும்போது புதிய தரிசனங்களைப் பெற முடியும்.

அதற்கடுத்து துர்கையம்மன். துர்கையம்மன் சன்னதி முன்பு ஒரு வட்டல்க்கல் இருக்கும். அதன்மேல் சிறிய கல் ஒன்று இருக்கும். நாம் பக்தோடு மனதில் ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கல்லின்மீது கையை அழுத்தி வைத்தால் அந்தக் கல் தானாகச் சுற்றும் என்று சொல்வார்கள். நெற்றி நிறைய திருநீறு குங்குமத்துடன் மனதில் வேண்டுதலை எண்ணிக் கொண்டு கல்லின் மீது கை வைத்து முயற்சித்திருக்கிறோம். ஒருமுறைகூட கல் சுற்றியதாக நினைவில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறை நாங்கள் விடுவதாக இல்லை. கல் என்றாவது ஒருநாள் சுற்றும். வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடுதான் வீடு திரும்பியிருக்கிறோம். பெரியவர்களின் வேண்டுதல் எப்படியோ அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

பிரகாரத்தைச் சுற்றி முடித்தபின், மனோன்மனியம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலுக்கு உள்பக்கம் உள்ள கோயில் அது. அம்மன் எப்போதும் சிவப்புப் பட்டாடையில் கருத்த சிலையழகுடன் சாந்தமாகக் இருக்கும். அம்மன் கோயிலுக்கு அடுத்து, பெருமாள் கோயில். எனக்குத் தெரிந்து சிவன் கோயிலுக்குள் ஒரு பெருமாள் கோயில் என்பதை வேறேங்கும் பார்த்ததில்லை. பெருமாள் எப்போதும் முழு அலங்காரத்துடன் அழகாக இருப்பார். அலங்காரத்தை விடவும், பெருமாளை விடவும் அய்யர் தருகிற அந்தத் தீர்த்த தண்ணீர்மீது தான் அலாதியான பக்தி. உள்ளங்கையில் பித்தளை ஸ்பூன் பட்டுவிடாமல் தருகிற தீர்த்தத் தண்ணீரை வாயில் ஊற்றிக் கொண்டு, மிச்ச ஈரத்தை உச்சந்தலையில் தடவிக் கொண்டபின், அவர் தரும் துளசியில் சிலதையும் வாயிலும் மிச்சமிருக்கும் இலையுடன் கூடிய காம்பைத் தலையிலும் செருகிக் கொண்டபின், பெருமாளில் கிரீடத்தைத் தலையில் வைத்துவிடும் அந்த நொடிக் கணம் மட்டும் பெருமாளைப் போல நினைத்துக் கொள்வேன்.

சிவன் கோயிலில் இதெல்லாம் விட சிறப்பான சம்பவம் சிவலிங்கத்தைப் பார்த்தபடி இருக்கும் நந்தி சிலை தான்.

நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதலைச் சொன்னால் இரவில் உலக உயிர்களுக்குப் படியளந்து விட்டு வரும் சிவன் பார்வதியிடம் நந்தி போய் சொல்லிவிடுவார் என்று எப்போதோ ஒருமுறை சொல்லியிருந்தார்கள். கூடவே, நமது வேண்டுதலைச் சொல்லும்போது நந்தியின் காது மடலில் கை படாமல் சொல்ல வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். அப்போது நான் கொஞ்சம் குட்டியாக இருந்ததால் நந்தியின் காது எட்டாது. எனது மடித்து அமர்ந்திருக்கும் நந்தியின் முன்னங்கால் மீதேறி நந்தியின் காதில் என்னுடைய பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டு, ஈஸ்வரனிடம் சொல்லிடு என்று சொல்வேன். அந்த வயதில் என்னுடைய பிரார்த்தனைகள் மிக மிகச் சிறியவை. என்ன பிரார்த்தனைகள் என்பது நானும் நந்தியும் மட்டுமே அறிந்த ரகசியம். சிவனுக்கும் பார்வதிக்கும் கூட தெரியுமா எனத் தெரியவில்லை. என்றாவது ஒருநாள் அவர்களும் நீங்களும் அறிந்து கொள்ளக் கூடும்.

இப்படியாக எங்களின் வெள்ளிக்கிழமை மாலைப்பொழுது சிவாலயத்தில் சென்று நீளும். கோயிலில் இருந்து வெளியே வந்ததும் அவசர அவசரமாக சித்தி சீரியல் பார்க்கக் கிளம்புவோம் என்பது தனிக்கதை.

வெள்ளிக்கிழமை மட்டும் தான் வழிபாடு, பக்தி, பிரார்த்தனை எல்லாம். விடுமுறை நாட்களில் நாங்கள் விளையாடும் இடமும் அந்தக் கோயில் தான்.

அதிலும் சிவனுடைய பிரகாரத்திலிருந்து மனோன்மணி அம்மன் சன்னதி செல்லும் வழியில் ஒரு பெரிய நாவல்மரம் இருக்கும். அந்த நாவல் மரத்தில் பழம் உலுக்கிப் பொறுக்கித் தின்பது பேரனுபவம். பகல் நேரங்களில் கோயிலின் பெரிய முன்கதவைப் பூட்டிவிடுவார்கள். பெரிய கதவுக்குள் இருக்கும் சதுர வடிவிலான குட்டிக் கதவின் வழியே அய்யருக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்து மரத்தில் பழம் உலுக்கிக் கொண்டு வருவோம்.

ஒருமுறை நாங்கள் அப்படி பழம் உலுக்கிக் கொண்டிருந்தபோது அய்யர் வந்துவிட்டார். பசங்களா இந்த நாவல் மரத்தடியில் ஐந்து தலை நாகம் ஒன்னு இருக்கு. அது கடிச்சிட்டா நான் பொறுப்பில்ல என்று சொன்னபடி எங்களை விரட்டிவிட்டார். உண்மையாகவே அங்கே ஒரு ஐந்து தலை நாகம் மரத்தைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருந்தேன்.
ஞாபகங்களை நாவல் பழமென நினைவுக் கிடங்கிலிருந்து ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே இருந்தது.

சிறு வயதில் பார்த்த பரந்து விரிந்த அந்த நாவல் மரம் இப்போது இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் இடிவிழுந்து மரம் இரண்டாகப் பிளந்து கொண்டது என ஜீவா சொன்னாள். அதே இடத்தில் சதுரமான சிமெண்ட் திண்ணையின் நடுவில் சிறுவனைப் போல ஒரு நாவல் மரம் செழித்து நின்றிருந்தது. அதன் நிழலில் ஒரு சிவலிங்கம். மரத்தில் கோயிலின் தலவிருட்சம் என எழுதி வைத்திருந்தார்கள்.

அந்த மரத்தை மட்டும் ஒரேயொரு புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

சிறு வயதில் பழம் உலுக்கிப் பாவடையில் பொறுக்கி எடுத்துக் கொண்டோடும் சிறுமி ஒருத்தி எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

**மனுஷி**

வியாழன், 5 டிசம்பர், 2019

குட்டிக் கதையின் கதை

குட்டிக்கதையின் கதை 

பள்ளித் தோழிகள் மட்டும் உரையாடிக் கொள்வதற்கென ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி இருந்தோம். தினம் இரவுகளில் கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் பேச்சு எனப் பால்யகால நினைவலைகளில் சென்று மீண்டு வருவோம். 

மூன்று நாட்களுக்கு முன்பு தோழிகளோடு பேசிக் கொண்டிருந்தபோது, தோழிகளோடு எவ்வளவு பேசுவது, அவர்களுடைய குழந்தைகளுக்குத் தினம் ஒரு கதை சொல்லலாம் என யோசித்தேன். தோழிகளிடம் சொன்னபோது கதைதானே சொல்லு என அனுமதி கொடுத்தார்கள். 

அன்றைய எங்களின் உரையாடலுக்குப் பிறகு, குழந்தைகளுக்கென ஒரு கதையைக் குரல் பதிவு செய்தேன். முதல் நாள் கதை. கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கட்டுமே என எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 'கால் முளைத்த கதைகள்' குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பில் எனக்குப் பிடித்த 'கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?' எனும் கதையைச் சொல்லத் தொடங்கினேன். 

உங்க எல்லாருக்கும் நான் இப்போ ஒரு குட்டிக் கதை சொல்லப் போறேன்... முன்ன ஒரு காலத்துல, கடல் தண்ணி உப்புக் கரிக்காதாம். குடிக்கிற தண்ணி போலவே இருக்குமாம்....... என்று தொடங்கி, அன்னைல இருந்து கடல் தண்ணி உப்புக் கரிக்குதாம்... என்று கதையைச் சொல்லி முடித்தேன். (முழுக் கதையைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் கால் முளைத்த கதைகள் தொகுப்பை வாசிக்கலாம்) 

அடுத்த நாள் என் தோழிகளிடமிருந்து ஏய் ரொம்ப நல்லா கதை சொல்ற டி என்று பதில் வந்தது. அவர்களின் பிள்ளைகளும் கதையை ரசித்துக் கேட்டார்கள் என அவர்கள் சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் என் தோழி பார்வதியின் இரண்டு வயது மகன் மித்ரன் குரூப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான். அத்தை, கதை நல்லா இருந்த்து. இப்போ குட்டிக்கதை சொல்லுங்க என்று. 

கதையை ஆறு நிமிடம் சொல்லி இருக்கிறேன் என அப்போது தான் கவனித்தேன். சரி அவனுக்கு ஒரு குட்டிக் கதையைச் சொல்வோம் என அப்போதைக்கு யோசித்து இரண்டு மியாவ் குட்டிகள் ஊர் சுற்றிப் பார்க்கப் போன கதையைச் சொன்னேன். அதையும் கேட்டுவிட்டு மியாவ் கதை நல்லா இருக்கு. குட்டிக் கதை சொல்லுங்க என வாய்ஸ் மெசேஜ் செய்தான். 

இவனைக் கதை சொல்லித் திருப்தி படுத்தினால்தான் அன்றைய எனது நாள் முழுமையாகும் என்ற அளவுக்கு வந்துவிட்டேன். யோசித்து யோசித்துப் பார்த்துக் குட்டியா ஒரு கதை சொல்வோம் என முடிவு செய்தேன். 

எறும்பு ஒன்று ஆற்றில் தவறி விழுந்துவிட ஒரு பறவை இலையைப் பறித்து ஆற்றில் போட்டு எறும்பைக் காப்பாற்றிய கதையை ஒரு நிமிடத்தில் சொன்னேன். அதையும் கேட்டுவிட்டு எறும்பு கதை சூப்பரா இருக்கு. குட்டிக் கதை சொல்லுங்க அத்தை என்று ரிப்ளை செய்தான். 

டேய் இதற்கு மேல குட்டிக் கதையை என்னால சொல்ல முடியாது டா என்று சொல்லிவிட்டேன். குழந்தைகளிடம் கதை சொல்லிக் கவரும் எனக்கு மித்துக் குட்டி கேட்கும் குட்டிக் கதையைச் சொல்ல முடியவில்லையே என வருத்தமாக இருந்தது. 

அடுத்தநாள் தோழியிடம் பேசும்போது என் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன். அப்போது அவள் அழகான உண்மை ஒன்றை எனக்குச் சொன்னாள். 
பாரதி, நீ அன்னைக்குக் கதை சொல்லத் தொடங்கும்போது நான் ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா என்று சொன்னியா.. 
கடல் கதை சொன்ன. மியாவ் கதை சொன்ன. எறும்பு கதை சொன்ன. ஆனால் நீ சொன்ன குட்டிக் கதையைச் சொல்லவே இல்லையாம். அதைத்தான் மித்ரன் சொல்லிட்டு இருந்தான். நீ அதைப் புரிஞ்சுக்கல என்றாள் சிரித்துக் கொண்டே. 

பஞ்சு பொம்மையால் தலையில் கொட்டியது போல இருந்தது அந்தக் கணம். குழந்தைகளிடம் பேசும் இன்னும் கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும் என அப்போது உணர்ந்தேன். நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். 

குழந்தைகள் நாம் சொல்லும் வார்த்தைகளுக்குள் வாழக் கற்றுக்கொள்கிறார்கள். நம்மிடமிருந்தே உலகத்தைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். 

அவர்களின் உலகத்தைக் கதைகளால் திறந்து விட வேண்டியது நமது கடமை. 

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

பயணக்குறிப்புகள் - நாகர்கோவில்

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை சென்று வந்தபிறகு சூடான தேநீர் அருந்திவிட்டு மீண்டும் 

நாகர்கோவிலுக்குப் பயணமானேன். 
நாகர்கோவில் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்குப் பேருந்து முன்பதிவு செய்திருந்தேன். பத்து மணிக்குப் பேருந்து. பேருந்து அல்லது ரயில் வண்டி முன்பதிவு செய்தால் கடைசி நிமிடத்திற்கும் கடைசி நொடியில் மூச்சிறைக்க ஓடி வந்து ஏறுவது தான் வழக்கம். 

இந்தமுறை வழக்கத்திற்கு மாறாக 8.30க்கு ட்ராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். கார்காலத்தின் பெருமழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தபோதும் கூட நனைந்தபடி வந்து சேர்ந்தேன். ஒன்றரை மணி நேரம் முன்பாக வந்து காத்திருந்தது எனக்கே ஆச்சரியம். ஒருமுறைக்கு இரண்டு முறை இந்த இடத்திற்குத்தானே பேருந்து வரும் எனக் கேட்டுக் கொண்டேன். கொஞ்சம் புத்தகமும் கொஞ்சம் துணிகளும் இருந்த பையை சற்றே இறக்கி வைத்தேன். கொஞ்சம் பாரம்தான் எனினும் மதியத்திலிருந்து தூக்கிக் கொண்டே அலைந்ததில் முதுகு வலித்தது. 

பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் கூட இவ்வளவு சுமையைச் சுமந்ததில்லை. அரசு பள்ளிக்கூடம் என்பதால் அவ்வளவு புத்தகச் சுமை இருக்கவில்லை. ஒரு கணக்கு நோட்டு, ஆங்கிலக் கையெழுத்துக்கென நான்கு வரி நோட்டு, ஒரு கோடு போட்ட நோட்டு, ஒரு ரஃப் நோட்டு, தமிழ்ப் புத்தகம் முதல் சமூக அறிவியல் புத்தகம் என ஐந்து புத்தகங்கள், ஒரு பென்சில் பாக்ஸ்… - இது என்ன பெரிய சுமையாக இருக்கப் போகிறது?

ஒன்றரை மணி நேரம் முன்னதாகப் பேருந்துக்கு வந்து காத்திருக்கிறேன் எனும் அரிய வரலாற்று நிகழ்வை உடனடியாக அகிலாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என மனம் உந்தித் தள்ளியது. 
அந்தப் பேருந்து அலுவலகத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பக்கத்தில் சுவரில் இருந்த சுவிட் போர்டில் மொபைலைச் சார்ஜ் செய்து கொண்டே தோழிக்கு மெசேஜ் செய்தேன். அடடே, என்னவொரு ஆச்சரியம் மழை வரப் போகுது என்று பதில் அனுப்பினாள். ஏற்கனவே மழையில் தொப்பலாக நனைந்திருக்கிறேன் என்றதும், மழைக்கே ஆச்சரியம் தாங்கவில்லை அதனால் தான் முன்னாடியே வந்து உன்னை நனைத்திருக்கிறது என்றாள். 

யூடியூபில் மழைப் பாடல்கள் கேட்கலாம் என ப்ளே லிஸ்டை எடுத்தேன். ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடல். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மழை இன்னும் கொஞ்சமே ஈரமானது. 
அடுத்து, விண்ணோடு மேளச் சத்தம் என்ன… மழை வரும் அறிகுறி,… அடடா மழை டா அடை மழை டா… சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு… தூவானம் தூவத் தூவ…. என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. 

வெளியில் இரவின் மழை. காதுகளில் இசை மழை. ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது. பஸ் வரவில்லை. இசையில் லயித்துப் பஸ் விட்டுட்டேனா எனக் கொஞ்சம் பதற்றத்துடன் சார் பஸ் எப்ப வரும் என்றேன். வந்துட்டு இருக்கும்மா… பதினைந்து நிமிடத்தில் வந்துடும். வந்ததும் நானே சொல்றேன். மலையாள வாடை வீசும் தமிழில் பதற்றமே இல்லாமல் சொன்னார். ட்ராவல்ஸ் புக் பண்ணா இதெல்லாம் சகஜமப்பா என்பது போல இருந்தது. 
மீண்டும் பாடலுக்குள் மூழ்கிப் போனேன். 

10.30க்கு அவரே அழைத்துப் பஸ் வந்துவிட்டதைச் சொன்னார். எப்போதும் நான் தான் பஸ் பிடிக்க லேட்டா வருவேன். இன்னைக்குப் பஸ் லேட்டா வருது என்று நினைத்தபடியே டிக்கெட்டைக் காட்டி என்னுடைய சீட் நம்பரைச் செக் செய்தபின் பேருந்துக்குள் ஏறினேன். படுக்கை வசதி கொண்ட பேருந்து. அப்பர் பர்த் என்பதால் என்னுடைய பையை மேலே வைத்தபின், ஏறிப் படுத்துக் கொண்டேன். 

என்னைப் போலவே பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஏறிக் கொண்டிருந்தார்கள். பத்துநிமிடத்தில் பேருந்து கிளம்பியது. ஹெட்போனில் பாடல் கேட்டபடி பெட்ஷீட் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன். வெளியில் இரவின் அடைமழை தூரலாக மாறியிருந்தது. 

பாடலுக்குள் மூழ்கி இருந்ததால் கவனம் வேடிக்கை பார்ப்பதில் இல்லை. இரயில் என்றால் ஜன்னல் வழியாக இரவை வேடிக்கை பார்த்தபடி அல்லது எதிரில் இருப்பவர்களிடம் உரையாடியபடிப் பயணிக்கலாம். ட்ராவல்ஸில் அப்படி வாய்க்காது. 

பேருந்து கிளம்பி ஆம்னி பஸ் ஸ்டாண்டைத் தாண்டவில்லை. நின்றுவிட்டது. ஏதோ டயர் பஞ்சர் போல. தூரலில் நனைந்தபடி டயரை மாற்றிக் கொண்டிருந்தார்கள். காலையில் இத்தனை மணிக்குள் போய்ச் சேர வேண்டும் என்கிற அவசரம், நெருக்கடி எதுவும் இல்லாததால் பேருந்து இன்னமும் கிளம்பாமல் இருந்தது எனக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால், மற்ற பயணிகள் ஒருவர் பின் ஒருவராகப் போய் அவரவர் அவசரத்தைச் சொல்லிச் சத்தம் போட்டார்கள். சிலர், டிக்கெட் காசைக் கொடுங்க நாங்க வேற பஸ்ல போறோம். பஸ் வந்ததே லேட், இதுல 11 மணிக்கு மேல ஆகியும் பஸ் எடுக்கல. நாங்க எப்போ போய்ச் சேருவது எனக் கோபப்பட்டார்கள். அது ஞாயிற்றுக் கிழமையின் இரவு என்பதால் எல்லோருக்குமே மறுநாள் காலை அலுவலகம் செல்ல வேண்டிய அவசரம். குடும்பத்துடன் வந்தவர்களுக்குக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய அவசரம். ஒவ்வொருவரும் சொன்ன காரணம் அதுதான்.

நான் அமைதியாகப் படுத்திருந்தேன். அந்த ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருந்த கடைகள் பெரும்பாலும் மூடியிருந்தன. ஒரேயொரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. சொல்லப்போனால் மூடுவதற்கான நேரம் தான். பஸ்ஸிலிருந்து இறங்கிப் போய் லெமன் டீ சொல்லிக் குடித்தேன். மழையிரவின் குளிருக்கு இதமாக இருந்தது. தேநீருக்கான காசைக் கொடுத்துவிட்டு நிதானமாக நடந்து வந்தேன். இன்னமும் டயர் மாற்றிக் கொண்டிருந்தார்கள். 
11.50 ஆனபோது ஒருவழியாகப் பேருந்து கிளம்பியது. பேருந்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, நீல நிற விளக்கொளியில் குறைந்த வெளிச்சம் பேருந்துக்குள் நிறைந்திருந்தது. எனது சீட்டின் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு என்னை மறைத்துக் கொண்டேன். பேருந்து கிளம்பியதும் எல்லோரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். எனக்கு உறக்கம் வரவில்லை. யூடியூபில் அடுத்தப் பாடல் அடுத்தப் பாடல் எனப் போய்க் கொண்டிருந்தது. 

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பேருந்து நகரவில்லை. டீ குடிக்க நிறுத்தியிருப்பார்கள் என நினைத்தேன். நான் படுத்திருந்த சீட்டின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தால் அங்கே ஹோட்டல் இருப்பதற்கான தடயமே இல்லை. கடைகள் / கடை இருப்பதற்கான தடயமும் இல்லை. கும்மிருட்டு. பேருந்தின் படிக்கட்டுக்குச் சென்றேன். பஸ் ப்ரேக் டவுன் ஆகியிருந்தது. 
கொஞ்ச நேரத்தில் மீண்டும் பேருந்துக்குள் சலசலப்பு. என்ன ட்ராவல்ஸ் நடத்தறாங்க. நாங்க நாளைக்கு வேலைக்குப் போறதா வேண்டாமா, பஸ்ல பிரச்சினைனா வேற பஸ்ல ஏத்தி விடனும் இல்ல டிக்கெட் காசைத் திருப்பித் தரனும். நாங்கல்லாம் மனுசங்களா என்ன நினைச்சுட்டு இருக்காங்க… 
பேருந்தில் இருந்தவர்களின் எந்தச் சத்தமும் பேருந்து பழுது பார்ப்பவர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவர்கள் வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
பேருந்து நகரத் தொடங்கியதும் சத்தமிட்டவர்கள் சீட்டில் அமைதியாக உறங்கினார்கள். இரவின் குறைந்த ஒளியில் நகரும் சாலையோர மரங்களையும் கருத்த வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மணி சரியாக மூன்று மணியைத் தொடும் நேரம். என்னையும் மீறிக் கண்களை மூடி உறங்க முயற்சித்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அதே சலசலப்பு. மீண்டும் பேருந்து பிரேக் டவுன் ஆகி நின்று விட்டிருந்தது. பேருந்தில் இருந்தவர்கள் பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தார்கள். கிளம்பும்போது கிளம்பட்டும் என நான் உறக்கத்திற்குள் சென்று விட்டேன். ஆழ்ந்த உறக்கம்.

விடியலின் வெளிச்சம் பேருந்து  ஜன்னல் வழியாக முகத்தில் பட்டுத் தெறிக்க உறக்கம் கலைந்து எழுந்தேன். ஏதோ ஒரு பேருந்து நிலையம். அதிலும் ஆம்னி பஸ் நிற்கும் பேருந்து நிலையம். நேரம் 6.30 ஆகி இருந்தது. தேநீருக்காக நிறுத்தியிருப்பார்கள் என நினைத்தேன். ஏனெனில் பேருந்தில் யாரையும் காணவில்லை. நான் மட்டுமே இருந்தேன். எழுந்து கொள்ள மனமில்லாமல் கண்களை மூடிப் படுத்திருந்தேன். பஸ் அங்கேயே இருந்தது. 

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சரியாக 7.30 மணிக்கு டிரைவர் உள்ளே வந்தார். பஸ் இனிமேல் போகாது வேற பஸ் அரேஞ்ச் பண்றோம் அந்த பஸ்ல போகலாம் என்றார். கடைசி சீட்டில் இருந்த ஒருவர் வேகவேகமாக பையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றார். நானும் என்னுடைய ஷூவைத் தேடி எடுத்து மாட்டிக் கொண்டு, பையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றேன்.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டு. இரண்டு போலிஸ்காரர்களைச் சுற்றி என்னோடு பஸ்ஸில் வந்தவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். பஸ் டிரைவர் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு ஆம்னி பஸ் டிரைவர் சார் எங்க முதலாளி கிட்ட பேசிட்டேன் பஸ் ரெடி அமவுண்ட் கையில் கொடுக்கச் சொல்லுங்க நான் பஸ் எடுக்கிறேன். வார்த்தை மாறாமல் போலிஸிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த டிரைவர் இன்னமும் போனில் யாரிடமோ சூழலை எடுத்துச் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தார். பேருந்தில் வந்தவர்கள் சார் குழந்தைகளை எல்லாம் வச்சுக்கிட்டு இன்னும் எவ்ளோ நேரம் சார் நிக்கறது காலையில் நாங்க ரெஸ்ட் ரூம் போகக் கூட வழியில்லாமல் இருக்கோம் பேசி இதை முடிச்சு உடுங்க சார். போலிஸிடம் சொன்னார்கள். போலிஸ்காரர் புதிய ஆம்னி பஸ் டிரைவரிடம், போனில் பேசிக் கொண்டிருந்த டிரைவரிடம் பத்து நிமிடம் பேசினார். பிறகு என்ன முடிவு செய்தார்களோ தெரியாது. எல்லோரும் இந்த பஸ்ல ஏறிக்கலாம் என்று சொன்னார். 

அவரவருக்கான சீட்டை ஒதுக்கிக் கொடுத்தார்கள். எனக்குப் பேருந்து பின்புறமிருந்த சீட் கிடைத்தது. 
பேருந்து கிளம்பியது. இவனாவது ஒழுங்கா கொண்டு போய்ச் சேர்ப்பானா தெரியலியே என்று புலம்பிக் கொண்டிருந்தார் முன்சீட்டுக்காரர். 
ஒன்றரை மணி நேர நிற்காத நெடும்பயணத்திற்குப் பிறகு ஒரு ஹோட்டலில் நிறுத்தினார்கள். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு முகம் கழுவி ஃப்ரஷ்ஷாகி, அந்த ஹோட்டலிலேயே எல்லோரும் காலை உணவு சாப்பிட்டார்கள். எனக்கு ப்ளாக் டீ போதுமானதாக இருந்தது. 

பேருந்து உளுந்தூர்ப்பேட்டை தாண்டிப் போய்க் கொண்டிருந்தபோது பேருந்தின் செக்கர் வந்து கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் வந்துடும். விழுப்புரம் ஹைவேஸ்ல இறங்கி பாண்டிச்சேரி பஸ் பிடிச்சு போய்டுங்க இந்தப் பஸ் சென்னை போகுது என்றார் என்னிடம். அப்போது மாலை 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

மொபைலில் என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா…… இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.

பெருமழைக் கதைகள்

#மழைக்கதைகள் 🌧
நண்பர் ஹர்ஷத் கான் இயக்கத்தில் உருவான #நீலமகள் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுக்குக் காலையில் கிளம்பிக் கொண்டிருந்தேன். மழை அதன் போக்கில் விடாமல் பெய்து கொண்டிருந்தது. வெளியில் செல்லக் கிளம்பிபிறகு காத்திருப்பது கொஞ்சம் கடினமான விடயம் எனக்கு. ஆனாலும் ட்ரெஸ் நனையாமல் இருக்க,  மழை விடட்டும் எனக் காத்திருந்தேன். இன்னும் இன்னும் வலுத்துக் கொண்டிருந்தது பிடிவாதம் பிடித்த மழை.

10 மணி நிகழ்வு மழை காரணமாக ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. என்ன ஆச்சரியம். மழை 11 மணியளவில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெல்லிய தூறலாக மாறியிருந்தது. ரெயின் கோட் மாட்டிக் கொண்டு கிளம்பினேன். ஈசிஆர் ரவுண்டானாவைச் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது. முழங்கால் அளவு தண்ணீரில் போகும்போது வண்டி நின்று விட்டது. 
மழை நீர் முட்டிவரை நனைக்க, சிறு அலையினூடே  வண்டியை ஓரமாகத் தள்ளிக் கொண்டு சென்றேன். பின்னால் வந்த கார்கள் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் நீரை வாரி இரைத்தபடிச் சென்றன. மழைக்காலம் ஒன்றும் சொல்வதற்கில்லை என நினைத்துக் கொண்டே வண்டியைத் தள்ளினேன். காலையில் குடித்த ஒரு டீ வண்டி தள்ள போதுமானதாக இல்லை. மூச்சு வாங்கியது. 

என்னைக் கடந்து சென்ற ஒரு பைக் மேன் மட்டும் நின்று என்ன பெட்ரோல் இல்லையா என்றார். தெரியல தண்ணி உள்ள போய்டுச்சுனு நினைக்கறேன் என்றேன். வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியவர் என் வண்டியைச் சாய்த்து, உள்ளிருந்து ஒயரைப் பிடுங்கி ஊதி.... என்னவோ செய்தார். வண்டி நகர மறுத்தது. பெட்ரால் ரொம்ப குறைவா இருக்கு. அதனால கூட கிளம்பாமல் இருக்கும். இருங்க வாங்கி வரேன். நீங்க பெட்ரோல் பங்க் போறதுக்குள்ள வண்டி நின்னுடும் என்று சொன்னவர், அவரது பைக்கைக் கிளப்பிக் கொண்டு கிளம்பிவிட்டார். வீட்டிலிருந்து பெட்ரோல் பங்க் வரை செல்லும் அளவுக்கு பெட்ரோல் இருக்கும் என நம்பினேன். நம்பிக்கை பொய்த்துப் போனது. 

ஏற்கனவே நிகழ்வுக்கு அவர்கள் கொடுத்திருந்த எக்ஸ்ட்ரா டைம் நெருங்கிக் கொண்டிருந்தது. பெட்ரோல் வாங்கி வரச் சென்றவர் வருவாரா மாட்டாரா? இருக்கிற பெட்ரோலை வைத்துப் போய்விடலாமா எனப் பல யோசனைகள் வந்து மோதிக் கொண்டிருந்தது. நேர நெருக்கடி அப்படி யோசிக்க வைத்தது. கிளம்பலாம் என முடிவு செய்த அந்தக் கணத்தில் பெட்ரோலுடன் வந்து சேர்ந்தார். 

நன்றி சொல்லி பாட்டிலில் இருந்த பெட்ரோலை டேங்க்கில் ஊற்றி விட்டு பிறகு ஸ்டார்ட் செய்தேன். நான்காவது செல்ஃப் ஸ்டார்ட்டுக்கு உறுமிக் கொண்டு கிளம்பியது.

அவருக்கு நன்றி சொல்லி பெட்ரோலுக்கான பணத்தைக் கொடுத்தேன். 

உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஒருமுறை நான் எங்க பாப்பா கூட வண்டியில் போகும்போது அவ கையில் இருந்த பலூன் கீழ விழுந்துடுச்சு. நீங்க தான் எடுத்து வந்து கொடுத்திங்க. பாப்பா கிட்ட கூட பேர் கேட்டுட்டுப் போனிங்க. அதுக்குப் பிறகு உங்களை டீவியில் ரெண்டு முறை பார்த்திருக்கேன் என்றார்.

எட்டு அல்லது ஒன்பது மாதம் முன்பு நடந்த சம்பவம் அது.

அந்த இருட்டில் முகத்தைக் கூட சரியாகக் கவனிக்காமல் குழந்தையைக் கொஞ்சிவிட்டு, பலூனைக் கொடுத்துவிட்டு வேகமாகக் கடந்து சென்றேன். எனக்கு மறந்தே போயிருந்தது. 

இன்றைக்கு அதை நினைவுபடுத்தி பெட்ரோல் காசை வாங்க மறுத்தார். பரவாயில்லை சார் என்று கொடுத்ததும் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார். 

வாழ்க்கை சுவாரஸ்மானது தான்.

ஞாயிறு, 24 மார்ச், 2019

ஆதார் அட்டை அரசியல்


கோடை வெயில் பல்லை இளித்துக் கொண்டு மண்டையைப் பிளந்தாலும் பரவாயில்லை என மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்கக் கிளம்பினோம். தோழி அகிலாவுடன் சென்னையில் நிறைய இடங்கள் சுற்றி இருக்கிறேன். சென்னை நகரத்தைத் தாண்டி அகிலாவுடன் முதல் பயணம். கூடவே அகிலாவின் சிங்கக்குட்டி சுபாங்கர் வருகிறான் என்றதும் மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து பாலுசாமி சார் எழுதிய #அர்ச்சுனன்_தபசு புத்தகத்தை ஒருமுறை வாசித்து மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டேன். அவனுக்குக் கதைகள் சொல்ல வேண்டுமல்லவா.

நானும் அகல்யாவும் புதுச்சேரியில் இருந்து கிளம்பினோம். சென்னையிலிருந்து அகிலாவும் சுபாங்கரும் வந்து சேர்ந்தார்கள். வெயிலின் வெம்மை தணிக்க லெமன் சோடா குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். ஒவ்வொரு சிற்பம் பற்றியும் அவனுக்கும் அகிலாவுக்கும் சொல்லிக் கொண்டு, அங்கங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியாக நகர்ந்தது அன்றைய நாள்.

மாலை 4 மணிக்குள் பஞ்சபாண்டவர் ரதம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும் எனும் திட்டமிடலுடன் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். அப்போதுதான் கடற்கரை கோயிலில் சூரியன் மறைவதைப் பார்க்க முடியும். கடந்த முறை அகல்யாவுடன் இந்தத் திட்டமிடல் இல்லாததால் கடற்கரை கோயிலுக்குச் செல்ல முடியாமல் போனது. நினைத்தபடி, நான்கு மணிக்கு முன்னதாக பஞ்சபாண்டவர் ரதம் செல்ல டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நுழைவாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி ஒரு ஹிந்திவாலா. டிக்கெட்டை வாங்கி பஞ்ச் பண்ணிவிட்டு ஐடி கார்டு கேட்டார். நான் எந்த அடையாள அட்டையும் கொண்டுசெல்லவில்லை. சாரி சார் ஐடி கார்டு எதுவும் கொண்டு வரவில்லை என்றேன். ஐடி கார்டு இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று இந்தியில் பதில் சொன்னார். சார், போன வாரம் தான் இங்கே வந்தோம். அப்போ  ஐடி கார்டெல்லாம் செக் பண்ணலையே என்றேன்.  ஐடி கார்டு அவசியம் என்று நுழைவுச்சீட்டில் அச்சிட்டு இருப்பதைக் காட்டி, ஐடி கார்டு இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று இந்தியில் சொன்னார். சார் இதுக்கு முன்பு ஐடி கார்டு கேட்டது இல்லையே என்பதை மீண்டும் சொன்னோம். வெளிநாட்டவர்களை ஐடி கார்டு செக் பண்ணாமல் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்காங்க என்றார் மீண்டும் இந்தியில். சார் நாங்க தமிழ்நாடு சார். இவங்க சென்னை, நான் பாண்டிச்சேரி, இந்தப் பொண்ணு மதுரை. எங்களைப் பார்த்தால் ஃபாரினர் மாதிரியா தெரியுது என்றோம் சிரித்துக் கொண்டே. அதெல்லாம் முடியாது. ஃபாரினரை ஐடி கார்டு இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். சார் முதலில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்க. பிறகு உங்க ரூல்ஸைப் பேசலாம் என்றேன். அவர் குரல் கொஞ்சம் கடுமையானது. அதே கடுமையான குரலில், ஐடி காட்டினால் தான் உள்ளே விடுவோம் என்பதை டிக்கெட் கொடுக்கற இடத்திலேயே சொல்லி இருக்கனும், டிக்கெட் எடுத்துட்டுமே இப்போ என்ன பண்றது என்றோம். இது செண்ட்ரல் கவர்மெண்ட் ரூல். ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுமதி இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லவும், அகிலாவும், அகல்யாவும் ஐடி கார்டைத் தேடி எடுத்துக் காட்டினார்கள். என்னிடம் இல்லை. என்கிட்ட ஐடி கார்டு இல்லை. அப்போ என்னை உள்ளே விட மாட்டிங்களா என்றேன் எரிச்சலோடு.
அங்கிருந்தவர்கள் எங்கள் உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு செக்யூரிட்டி வந்து, சரி பரவாயில்லை அனுப்புங்க என்றார். எங்களிடம் விவாதம் செய்த செக்யூரிட்டி மனசே இல்லாமல் உள்ளே அனுப்பினார்.



எங்க முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு வெளிநாட்டவர் மாதிரி தெரியுதா பேசுற மொழியை வச்சு கூட உங்களால் புரிஞ்சுக்க முடியாதா என்று தெள்ளத் தெளிவாகத் தமிழில் சொல்லிவிட்டு உள்ளே சென்றோம். அவரைப் பொறுத்தவரை இந்தி தவிர மற்ற எல்லாமும் ஃபாரின் மொழி தான் போல.
சித்தன்னவாசல் சென்றபோதும் நுழைவுச் சீட்டு சரிபார்க்கும் செக்யூரிட்டி பணியில் இந்திக்காரர் தான் இருந்தார். மாமல்லபுரத்திலும் இந்தி பேசும் செக்யூரிட்டி.

இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு எல்லா மொழி பேசும் மனிதர்களும் வருவார்கள். ஆங்கிலத்திலோ வட்டார மொழியிலோ பேசாத இந்திக்காரர்களைப் பணியமர்த்துவது என்ன நியாயம்? .
அத்தனை நேரம் மனதுக்குள் இருந்த கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் தளர்ந்திருந்தது.

தனிமனித கண்காணிப்பு அரசியலின் ஓர் அங்கமாக ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு உட்பட எல்லாவற்றோடும் இணைக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

எங்கு சென்றாலும் அடையாள அட்டையோடு செல்ல வேண்டும்தான். ஆனால் இன்றைய சூழலில் நான் என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமே மாறிப் போனது வருத்தமாக இருக்கிறது.

செவ்வாய், 19 மார்ச், 2019

சித்தன்னவாசலில் நானொரு குகைவாசி - 1



வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் நாம் பயணங்களின் மூலம் பார்த்த காட்சிகளும், பெற்ற அனுபவங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். இந்தப் புரிதல் வந்தபிறகு, நான் வாசித்த நிலப்பரப்புகளைப் போய் பார்க்கத் தொடங்கினேன். அப்படித்தான்  இளங்கலை தமிழ் வகுப்பில் ஐந்து மதிப்பெண் வினாவுக்காக மட்டுமே தெரிந்து வைத்திருந்த சித்தன்னவாசல் பயணத்தையும் திட்டமிட்டேன்.

தஞ்சாவூருக்கு இதற்கு முன்பும் நான்கைந்து முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலக்கிய நிகழ்வுகளுக்காகச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நிகழ்வு முடிந்தபிறகு சொல்லி வைத்தாற்போல தஞ்சைப் பெரிய கோவில் சென்று பார்த்துவிட்டு, பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்து விடுவேன்.

இந்த முறை, தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் மகளிர்தினச் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேச வேண்டுமென அழைப்பு வந்ததும், சித்தன்னவாசல் செல்வது என முடிவு செய்து கொண்டேன். சொல்லப்போனால் இந்தமுறை சித்தன்னவாசல் மண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கூகுளில் போய் சித்தன்னவாசல் பற்றித் தேடினேன். இரண்டுநாள் முழுக்க, கூகுளில் சித்தன்னவாசல் குறித்த எல்லா கட்டுரைகளையும் வாசித்து முடித்தேன். சில காணொளிகளையும் பார்த்தேன். ஆவல் இன்னும் அதிகமானது.

மார்ச் 5 நிகழ்வு முடிந்தபிறகு, தஞ்சையில் நண்பன் தினேஷ் பழனிராஜ் அவர்களிடம் சித்தன்ன வாசல் செல்வது பற்றிச் சொல்லி, உடன் வர இயலுமா என்று கேட்டதும், மறுப்பேதும் சொல்லாமல் போலாமே என்று சொல்லிவிட்டார். பயணத்தை நேசிக்கும் நண்பர்கள் வாய்ப்பது வரம் தான்.

அடுத்தநாள் திட்டமிட்டபடி, நானும் தினேஷும் பைக்கில் கிளம்பினோம். கிளம்பும்போது சரியாக காலை ஒன்பது மணி. வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு பத்து நிமிடத்தில் ஒரு கடையில் நிறுத்தி சூடான ஒரு காஃபி அருந்தியபின் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.  தேநீரை விடவும் இப்போதெல்லாம் காஃபி அருந்துவது வழக்கமாகியிருக்கிறது.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வெயில் என்றால் அப்படியொரு வெயில். மருந்துக்குக்கூட இருபுறமும் மரங்கள் இல்லை. ஓரமாக நின்று தண்ணீர் குடித்து ஆசுவாசம் கொள்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. எங்கும் பைக்கை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்தோம். வெயில் மண்டையைப் பிளந்தது. ஆனாலும், பேசிக்கொண்டே சென்றதால் ஒரு கட்டத்திற்குமேல் வெயில் பெரிதாகத் தெரியவில்லை.

புதுக்கோட்டையைச் சென்றடைந்தபிறகு கூகுள் நண்பனின் துணையுடன் சித்தன்னவாசலை நோக்கிச் சென்றோம். புதுக்கோட்டையில் இருந்து 16 கி.மீ பயணத்தபின், வால் இல்லாத பெரிய பல்லி ஒன்று கவிழ்ந்து படுத்திருப்பதுபோல சித்தன்னவாசல் மலையைப் பார்த்ததும் மனசு பறபறவென்று உற்சாகமானது. இன்னும் கொஞ்சநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் மலைமீது ஏறப்போகிறேன் என்பதை நினைக்கையில் மனசு பறவையானது. ஆனால் பைக்கில்தான் போய்க் கொண்டிருந்தேன்.

சித்தன்னவாசல் நுழைவாயிலின் உள்ளே போய், நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் போனோம். குடைவரை கோயிலின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன்பு தொல்லியல் துறையின் நுழைவுச் சீட்டையும் வாங்கிக் கொண்டு மலைமேல் ஏறினோம். இரண்டு நுழைவுச் சீட்டுகள் வாங்க வேண்டும் என்பது விதி. 

கூகுளில் பார்த்த குடைவரைக் கோயில் என்னை நெருங்கி வர, கோயிலை நோக்கி வேகமாக மூச்சு வாங்கப் போய்ச் சேர்ந்தோம்.  குடைவரைக் கோயிலில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தார்கள். கோயிலின் மேற்கூரையில் இருந்த ஓவியங்களை ஒரு பள்ளி ஆசிரியர்போல குச்சியை வைத்துக் கொண்டு ஓவியங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் அங்கே பணிபுரியும் பணியாளர்.

கோயிலுக்குள் செல்வதற்கு முன் இடதுபுறம் காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தோம். குச்சி வைத்துக் கொண்டிருந்த பணியாளர், மேல்சுவரில் இருந்த தாமரைக் குளத்தில் என்னென்ன உருவங்கள் தெரிகின்றன்ன என்பதைக் குச்சியால் சுட்டிக் காட்டிச் சொன்னார். அந்த இருவரும் மாணவர்கள் பாடம் கேட்பதைப் போல பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், வரலாற்றுப் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வற்று, டேப் டெக்கார்டர் குரல்போல பேசிக் கொண்டிருந்தார் அவர். அங்கே வருகின்ற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு, மனுஷிகளுக்கு அவர் சொல்லி இருப்பார். சொல்லிச் சொல்லிக் களைத்துச் சலித்துப் போயிருந்தது அவர் குரல். ஆனால், தனக்களிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேல்தளத்தில் உள்ள ஓவியத் தாமரைக் குளத்தில் ரோஸ்நிற தாமரைகள் புத்துணர்ச்சியோடு மலர்ந்திருந்தன. சில மொட்டவிழாமல் இருந்தன. பச்சை இலைகள் குளம் முழுக்க படர்ந்திருந்தன. இலைகளும் மலர்களும் தாமரைத் தண்டுகளும் நிஜமாகவே தாமரைக் குளத்தின் தோற்றமாயையை உருவாக்கின.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க, அதில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. கூடவே, அன்னப்பறவைகளும் நீந்திக் கொண்டிருந்தன. அன்னப்பறவைகள் தாமரை மலர் போலவும் பறவையும் உடல் போலவும் மாறி மாறிக் காட்சி அளித்தன. அவற்றின் அருகில் இரண்டு கொம்புகள் கொண்ட எருமை ஒன்று நின்றிருந்தது. மேலும் இரண்டு யானைகளும் அங்கே இருந்தன. குளத்தில் தாமரை மலரைக் கொய்து கொண்டிருந்த ஆண்கள் இருந்தார்கள். அதில் தாமரை மலரைக் கொய்து தோளில் போட்டிருந்த ஓவியத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியில் வரைந்த ஆயில் பெயிண்ட் ஓவியம்போல இருந்தது அந்த மேற்கூரை ஓவியம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வயது அந்த ஓவியத்திற்கு என்பது பெருவியப்பாக இருந்தது. மேலும், அவை, மூலிகைச் சாறு கொண்டு வண்ணங்களை உருவாக்கி வரையப்பட்டவை என்பது ஆச்சரியத்தை விரிவாக்கின.

அந்தத் தாமரைக் குளத்திற்கு முன்னதாக உள்ள மேற்கூரையில் தாமரைக் குளத்தில் தாமரை, மொட்டு விட்டு படிப்படியாக மொட்டவிழ்ந்து மலரும் மலர்ச்சியின் பரிணாமம் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தாமரைக் குளத்தில் அமர்ந்து அதன் ஒவ்வொரு அசைவையும், மலர்தலையும் உண்ணிப்பாகக் கவனித்து வரைந்திருப்பார்கள் போல. ஓவியத்தில் உள்ள தாமரைக் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தோழி மாளவிகாவின் ஓவிய ஆராய்ச்சிக்காக ஆரோவில்லில் உள்ள தாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து குளத்தையும், பூக்களின் அசைவையும், பூச்சிகளும் மீன்களும் குளத்திற்குள் நீந்திச் செல்வதையும், பறவைகள் வந்தமர்ந்து மீன் பிடித்துக் கொண்டு பறந்து செல்வதையும் மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்த மாலைப் பொழுதுகள் நினைவுக்குள் வந்து போயின. அதேபோல ஊசுட்டேரியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்க் கூட்டங்களும் வந்து போயின.

கோயிலின் உள்ளே சுவரில் மூன்று புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. மூன்று தீர்த்தங்கரர்கள் கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர். ஓவியங்களை விளக்கிக் கொண்டிருந்த பணியாளர், கருவறையில் தலையை நீட்டிச் சப்தம் எழுப்பினார். அந்தச் சத்தம் உள்ளுக்குள்ளே சுற்றிச் சுழன்றது. பிறகு உள்ளே போய் நின்று ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று சத்தம் எழுப்பினார். அவர் செய்ததுபோல அங்கிருந்த இருவரும் உள்ளே போய் நின்று ஓம்ம்ம்ம்ம்ம் என்றுச் சொல்லிப் பார்த்தனர்.

எனக்கு அங்கே அமைதியாக நின்று கொண்டிருப்பதே போதும் எனத் தோன்றியது. உள்ளே போய் கால்களை மடக்கிக் கொண்டு கைகளைத் தொடைகளின் மேல் வைத்தபடி கண்மூடி அமர்ந்திருந்த முதல் தீர்த்தங்கரரின் வலது கைமீது கை வைத்துச் சற்று நேரம் நின்றிருந்தேன். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் மூடி மௌனித்திருந்தனர். கைவிரல்களைப் பார்த்தேன். தொடையின்மீது குறுக்காகக் கையை மடக்கி, கட்டைவிரலைச் சுண்டுவிரல் ரேகையின் அருகில் மடக்கி இருந்தனர். அவர்களைப் போலவே கைவிரலை மடக்கி நின்று பார்த்தேன்.

இரண்டாவது தீர்த்தங்கரரும் அதேபோல தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரது வலது கைக்குள் கையை வைத்துப் பற்றிக் கொண்டு அமைதியாக நின்றபடி அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தீர்த்தங்கரரின் வயிற்றில் மூச்சுக்காற்று லேசாக மேலேறி இறங்குவதைப் போலொரு பிரம்மை வந்து போனது. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். சலனமற்று அமர்ந்திருந்தார் தீர்த்தங்கரர்.

மூன்றாவது தீர்த்தங்கரர் அருகில் நின்று அவர் கையைப் பற்றிக் கொண்டு நின்றேன். வெளியில் இருக்கின்ற வெக்கை தணிந்து சில்லிட்டு இருந்தது. அவர்கள் மூவரையும் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தேன். என்னைத் தவிர அப்போது கருவறைக்குள் யாருமில்லை. அந்த அமைதி ஆசுவாசமாக இருந்தது.

மூவரிடமும் விடைபெறுவதாக அனுமதி பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். வாசலில் நின்றபடி அந்த இருவரிடமும் இன்னமும் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் பணியாளர். அவர் பேச்சில் கவனம் செலுத்தி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார் தினேஷ். குடைவரை கோயிலின் இடதுபுறம் உள்ள குகை என்னை வா என்றழைத்தது.





பாறையின் மீது நடந்து பழகிய கால்களைப் போல பாறையின் மீது நடந்து வேக வேகமாகப் போனேன். குகையின் அடியில் போய்  கை கால்களை நீட்டிப்படுத்துக் கொண்டேன். பாறையின் குளிர்ச்சி இதமாக இருந்தது. குகைவாசியாகியானது போலிருந்தது. இந்தக் குகையிலேயே இருந்து விடலாம் எனத் தோன்றியது. 

அந்தக் குகையின் அடியில் ஆசை தீர அமர்ந்து, நடந்து, பாறையைத் தொட்டுத் தடவி அதன் குளுமையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

2010இல் சதுரகிரி மலைக்குப் போனபோதுகூட இப்படித்தான் உணர்ந்தேன். மலைக்குகைகளில்தான் எனது ஆன்மா உயிர்ப்போடு இருக்கிறது போல.


திங்கள், 18 மார்ச், 2019

மாமல்லபுரம் டைரி


மாமல்லபுரத்தில் மகிசாசுரவர்த்தினி மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு அம்மா குரங்கும் இரண்டு குட்டிக் குரங்கும் பாறை மீது அமர்ந்திருந்தது. பையில் பிஸ்கட் இருக்கா என்று அகிலாவிடம் கேட்டதும், உள்ளே இருக்கு எடுத்துக் கொடு என்றார்.


ஸ்நாக்ஸ் பை அகல்யாவிடம் இருந்தது. பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுப்பதற்குள் அம்மா குரங்கு பாறையிலிருந்து இறங்கி அருகில் வந்தது. பையைப் பிடுங்கிவிடும் போல நெருங்கி வந்தது. இரு உனக்குக் கொடுக்கத்தான் எடுக்கிறேன். கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொல்லிக் கைக் காட்டியதும் அப்படியே அமர்ந்துவிட்டது. குட்டிகள் பாறை மேலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தன.

பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்துக் கொடுக்கக் கொடுக்க வாங்கி வாயில் அதக்கிக் கொண்டது. கொஞ்சம் சாப்பிட்டது. குட்டி குரங்கு பிஸ்கட் எடுக்கும் கையையே பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குக் கொடுக்கலாம் என்று நீட்டினால் முதலில் பயந்தது. பிறகு கை நீட்டி எட்டி வாங்கிக் கொண்டது. இப்படியாக, அம்மா, பிள்ளைகள் மூவரும் பிஸ்கட்டுகளைத் தின்று கொண்டிருந்தார்கள்.


அந்த வழியாகப் போகிற எல்லோருமே அம்மா குரங்கு மற்றும் குட்டிக் குரங்குகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஒரு வெளிநாட்டவர் தன் கேமராவில் படம் பிடித்துக் கொண்டார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிஸ்கட்டைக் கையில் வாங்கி வாயில் அதக்கிக் கொள்வதில் கவனமாக இருந்தன.

பிஸ்கட்டுகள் தீர்ந்தபின்னும் எங்கள் கையைப் பார்த்தன. இங்க பாரு பிஸ்கட் எல்லாம் தீர்ந்து போச்சு என்றதும் பையைப் பிடுங்கிக் கொண்டது அம்மா. பையைக் கொடு என்று அகல்யா இழுக்க, தர மாட்டேன் என அந்த அம்மா குரங்கு இழுக்க, அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். சரி அதுவே வச்சுக்கட்டும் விடு போகலாம் என்று கிளம்பும்போது பைக்குள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதுவே கொடுத்துவிட்டது.


பிறகு பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து கீழே சிந்திய பிஸ்கட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டனர் குரங்குக் குடும்பம். குழந்தைகள் தரையில் சிந்தியதை எடுத்துச் சாப்பிடுவதைப் போல இருந்தது அந்தக் காட்சி. குழந்தைகள் தானே அவர்களும். 


பிஸ்கட் தீர்ந்த பின் எஞ்சியிருந்த ஒரு துண்டு பிஸ்கட்டுக்கு மூன்று குட்டிக் குரங்குகள் தரையில் தாவி தாவி சண்டையிட்டுக் கொண்டன. பார்க்கத்தான் குட்டிக் குரங்குகளே தவிர அவர்களின் சத்தமும் தாவலும் பெரிதாக இருந்தன. சரி சரி அடிச்சுக்காதிங்க என்று சொல்லியபடி,  பை சொன்னோம். கவனிக்கவே இல்லை.

சுபாங்கர் மட்டும் கையெடுத்துக் கும்பிட்டான். என்னடா கும்பிடற என்றதும், அது அனுமன் என்றார். அவர்கள் கவனிக்கவில்லை என்றால் என்ன. சொல்வது நம் கடமை. அனுமனுக்கு பை பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.


யாயும்_யாயும்_யாராகியரோ


ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய் திரும்பத் திரும்பக் கேட்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.  சிலருக்குப் பாடல் வரிகள், சிலருக்கு இசை, சிலருக்கு நடிகர் / நடிகை… இப்படி ஏதோ ஒன்று. அப்படிச் சமீபத்தில் மனதுக்குள் ஒட்டிக் கொண்ட பாடல் சகா படத்தில் வரும் யாயும் யாயும் பாடல்.  

இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும். சரியாகச் சொல்வதென்றால் கல்லூரியில் சங்க இலக்கியம் நடத்திக் கொண்டிருந்தபோது குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை நடத்த வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள குறுந்தொகைப் பாடலைச் சொல்வதற்கு முன் வகுப்பில் குறுந்தொகையை அறிமுகம் செய்ய யாயும் யாயும் யாராகியரோ பாடலைச் சொல்லித் தொடங்கினேன். வகுப்பில் ஒரு மாணவி, மேம், இது சினிமா பாட்டு தானே என்றார். இல்ல இந்தப் பாடலில் வரும் சில வரிகள், சினிமாப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கு என்று, முன்பே வா அன்பே வா… பாடலை உதாரணத்திற்குச் சொன்னேன். இல்ல மேம், முழுப் பாட்டும் ட்யூன் போட்டு ஒரு பாட்டு யூடியுபில் வந்திருக்கு. என்ன படம் தெரியல. நீங்க கேளுங்க என்றார். அன்றைக்குக் கல்லூரியில் இருந்து வந்ததும், முதல் வேலையாக யூடியுபில் அந்தப் பாடலைக் கேட்டேன். இடையில் ’யானும் நீயும் எவ்வழி அறிதும் எனும் ஒரு வரி தவிர்த்து எல்லா வரிகளும் டியூனாகப் போட்டிருக்கிறார்கள். பாடலில் பெண் குரல் காந்தத்தைப் போல இழுத்தது. கூகுளில் தேடிப் பார்த்தேன். ரீட்டா தியாகராஜன். என்ன அழகான குரல். நரேஷின் குரலும் ரீட்டாவின் குரலும் காதலில் குழைந்து பாடலை இன்னுமொருமுறை கேளேன் என்று சொன்னது.

தினம் தினம் கேட்க ஆரம்பித்தேன்.

பிறகு, எஃப்.எம்.மில் ஒரு நாளை எட்டு முறையாவது இந்தப் பாடலை ஒலிபரப்பினார்கள். அடிக்கடி எஃப்.எம்.களில் ஒலிபரப்புவதால் கேட்டுக் கேட்டுப் பிடித்த பாடல் வரிசையில் இதுவும் வந்து சேர்ந்து கொண்டது. இதனுடைய வீடியோ வெர்ஷன் பார்க்க வேண்டும் என ஆவலும் தொற்றிக் கொண்டது.

இந்தப் பாட்டுக்காகவே படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். சகா, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை. குறைநதபட்சம் பிடித்த பாடலின் வீடியோ வெர்ஷனைப் பார்க்கலாம் என யூடியுபில் தேடினேன். கல்யாண ஆல்பத்தில் மணமக்களை வீடியோ ஷூட் பண்ணது போல ஓர் உணர்வு. ஏன் வீடியோ சாங் பார்த்தோம் என்றாகிவிட்டது. வீடியோவாக அந்தப் பாடலைப் பார்த்ததை மறக்கவே நினைக்கிறேன்.

இப்போதும் அந்தப் பாடல் கேட்கும் போது வசீகரிக்கும் குரலில் போதை இருக்கத்தான் செய்கிறது.

#யாயும்_யாயும்_யாராகியரோ

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்த இரவின் குறிப்புகள் - பெசண்ட் நகர் கடற்கரை


சென்னைக்கு வந்த வேலை முடிந்ததும் உடனே பாண்டிச்சேரி கிளம்பிவிடுவது வழக்கம். இப்போதெல்லாம் அப்படியல்ல. பெருநகரத்தின் தேவதைகளைச் சந்தித்து ஒரு தேநீராவது அருந்திவிட்டுக் கிளம்பினால் தான் அந்தப் பயணம் முழுமை பெறுகிறது. ஏனென்றால் தேநீர் என்பது தேநீர் மட்டுமல்ல.

இன்றைக்கும் அப்படியே வந்த வேலை முடிந்தவுடன் முதலில் அகிலாவைச் சந்தித்து விட்டுக் கிளம்புவதாகத் திட்டம். அகிலாவைச் சந்தித்தபிறகு,  சாரதாம்மாவைச் சந்திக்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

கூகுள் மச்சான் உதவியுடன் சாரதாம்மா சொன்ன இடத்தை அடைந்தோம். பிறகுதான் தெரிந்தது நான் சென்னையில் வேலை பார்த்த நாட்களில் நானும் கதிரும் பெசண்ட் நகர் கடற்கரையில் வாக்கிங் போய்விட்டு ஓய்வெடுக்கும் ஒட்டுச்சுவரின் எதிரில்தான் சாரதாம்மாவின் வீடு. அட இது தெரியாம போச்சே என்றபடி வீட்டுக்குச் சென்றோம்.

பெசண்ட் நகர் கடற்கரையையொட்டி அமைதியான குடியிருப்பு. இரவின் ஒளியில் மரங்களின் நிழலில் தெரு அவ்வளவு அழகாக இருந்தது. அங்கங்கே தெருவின் உரிமையாளர்கள்போல நாய்க்குட்டிகள் படுத்திருந்தார்கள். சாரதாம்மாவின் வளர்ப்புகள்.


வீட்டுக்குள் நுழைந்ததும் சாரதாம்மா சாக்கோவைக் (பூனைக்குட்டி) கொண்டு வந்து காட்டினார். சின்னூண்டு பஞ்சு பொம்மை போல அவ்வளவு அழகு சாக்கோ குட்டி. கண்கள் குட்டி  கோலி குண்டு போல இருந்தன. அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பிரௌனி (இன்னொரு பெரிய பூனை) உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார். சின்னக்குட்டி சாக்கோவைத் தூக்கிக் கையில் வைத்து முத்தம் வைத்தேன். முகத்துக்கு நேராக வைத்துக் கொஞ்சினேன். திராட்சைக் கண்களை உருட்டிப் பார்த்தது. அகிலா கையில் வாங்கிக் கொஞ்சியதும் கொஞ்ச நேரத்தில் உடலை வளைத்து நெளித்தபடி கையிலிருந்து நழுவி ஓடியது. பிஸ்கட் நிற மல்லிகைச் சரமொன்று தரையில் தவழ்ந்து செல்வது போல இருந்தது சாக்கோவின் நடை.

சாரதாம்மா மிதமான சூட்டுடன் ஒரு காஃபி கொடுத்தார். அகிலா காஃபி வேண்டாம் எனச் சொன்னதால் நான் மட்டும் குடித்தேன். என் ரூம் வந்து பாரேன் எனக் குழந்தை போல சாரதாம்மா  அழைத்ததும் உள்ளே போனோம். அவ்வளவு நேர்த்தியாக வைத்திருந்தார் அறையை. அவர் அறையைப் பேரழகாகக் காட்டுவதற்கென்றே ஜம்மென்று அமர்ந்திருந்தார் என் உயரத்திற்கு ஒரு ப்ளூ பாய் பொம்மை. என்னை மறந்து துள்ளிக் குதித்தேன். கட்டிப் பிடித்துக் கொண்டேன். வயதை மறக்கச் செய்யும் மந்திர வித்தைகள் பொம்மைகளுக்கு எப்போதும் உண்டு.

ப்ளூ பாய் பொம்மையுடன் கொஞ்சல்கள் முத்தங்கள், அவனோடு மாறி மாறிப் புகைப்படங்கள் என எல்லாம் முடிந்தபின் பீச் போகலாம் எனக் கிளம்பினோம். பீச் என்றால் எனக்கு கடற்கரை மணலில் நடப்பது, அலையில் கால்நனைப்பது இதோடு சேர்த்து நெருப்புப் பொறியில் சுட்டுத் தரும் பேபி கார்னும் தான்.

சுட்ட பேபி கார்ன், உருளைக்கிழங்கு ரோல் என எல்லாம் வாங்கிச் சாப்பிட்டப்பின் கடலலைகளை நோக்கிப் போனோம். கல்லூரி பயின்ற நாட்களில் எனக்கு வாய்க்காத, ஆனால் நான் ஆசைப்பட்ட சிலவற்றில் ஒன்று இரவுநேரத்தில் கடற்கரை மணலில் தோழிகளோடு காலாற நடப்பது. சாரதாம்மா மற்றும் அகிலாவுடன் கடற்கரை மணலில் நடந்தபோது கல்லூரித் தோழிகளோடு நடப்பதாகத்தான் உணர்ந்தேன் அந்தக் கணம்.

மெல்ல பொங்கி எழுந்த அலை கரையை வந்து தழுவிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றோம். மூவருமே கால் நனைக்கவில்லை. கால் நனைக்காமல் இரவின் கடலை ரசிப்பது அன்றைக்குப் போதுமானதாக இருந்தது. அதுவே இதமாகவும் இருந்தது.

கரையில் கடற்கரை மணலைச் சின்ன சின்ன மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அதன்மேல் ஏறியதும் வானம் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போல ஒரு பிரம்மை. மணல்குன்றின் மேல் அமர்ந்தபடி ஊர்ந்து போன அரை நிலாவையும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சதிரங்களையும் எண்ணிக் கைக்காட்டி கொண்டிருந்தோம். இரவில் அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தெரியும் நேர்க்கோட்டில் தெரியும் மூன்று நட்சத்திரம் அன்றைக்கும் பார்த்தோம். ஒன்று… இரண்டு… மூன்று.. அதற்குமேல் நட்சத்திரங்களை எண்ணவில்லை. போதும் என்றிருந்தது.

இரவு இதமான கடற்கரை குளிர் காற்றுடன் நகர்ந்து கொண்டிருக்க சாப்பிடக் கிளம்பினோம்.

நடைபாதையில்  உப்புக் காற்றுக் குளிரில் ஆயா ஒருவர், வளையல், மணி, கொலுசு, கம்மல் விற்பதைப் பார்த்ததும் மனம் நின்றதும் கால்களும் நின்றன. எனக்குப் பிடித்த கல் வளையல். சைஸ் சரியா இருந்தால் வாங்கிக்கலாம் என்று எடுத்துப் பார்த்தேன். மூன்று வளையல்கள் மட்டுமே எனக்குப் பொருத்தமாக இருந்தன. பக்கத்தில் கண்கள் போக, நான் விரும்பும் கல் மணி, ஜிமிக்கி, கல் கம்மல், க்ருஷ்டல் கொலுசுஇவை வாங்கச் சொல்லிச் சுண்டி இழுக்க, திடீர் பர்சேஸ் பெரிய அளவில் நடந்தேறியது.

பிடிச்சதை எடும்மா, அப்புறம் விலை பேசிக்கலாம் என்று சாரதாம்மா சொன்னதும் இரண்டு ஜிமிக்கி, இரண்டு கல் மணி, ஆறு தொங்கும் கல் கம்மல், மூன்று மணி, ஒரு கொலுசு, அகிலாவுக்கு ஒரு கொலுசு என அள்ளி எடுத்துக் கொண்டோம்.

அந்தக் கடையின் உரிமையாளர் பொன்னி ஆயா (பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்) மஞ்சள் பூசிய முகம், பெரிய கல் வைத்த மூக்குத்தி, முகமெங்கும் முதுமையின் கோடுகள், வாரி முடிந்த கொண்டை, வெற்றிலைப் போட்டுச் சிவந்த உதடு, ஒரு காட்டன் புடவை அவ்வளவுதான். ஆனால் கிராமத்து மனுசியின் கலையான முகம். முதுமையின் மெருகேறிய அழகு.  ரொம்ப இயல்பான பேச்சு.

எங்க இருக்காங்க, இந்த ஆபரணங்கள் எல்லாம் எங்கிருந்து வருது என்ன சாப்டாங்க என்பது முதற்கொண்டு எல்லாம் பேசியபடி, நாங்கள் எடுத்தவற்றுக்கும் விலை கேட்டு நாங்கள் ஒரு கணக்கு சொன்னோம். பொன்னி ஆயா ஒரு விலை சொன்னார். பிறகு கொஞ்சம் பேரம் பேசி 600 ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார். ஒரு கைப்பையில் போட்டுக் கொடுத்தார். ஆயா சந்தோஷம் தானே உங்களுக்கு என்றோம். சந்தோஷம் மா. அப்புறமாவும் வாங்க என்றார். நிச்சயம் வருவோம் என்றபடிக் கிளம்பினோம். ஒரே இடத்தில் எனக்குப் பிடித்த ஆபரணங்களை வாங்கியதில் அதுவரை இருந்த பசி காணமல் போயிருந்தது.

அங்கிருந்து ஆதாமிண்டே தட்டுக்கடை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார் சாரதாம்மா. மிதமான வெளிச்சம் அன்றைய இரவு உணவுக்கு நிறைவான சூழலை உண்டாக்கிக் கொடுத்தது. வெளியில் இரண்டு டேபிள், உள்ளே ஐந்து டேபிள் அவ்வளவு தான் கடை. ஆனால்,  மலையாள உணவு வகைகள் மெனு கார்டை அலங்கரித்தன. ஆதாமிண்டே கடையில் அதுதானே இருக்கும். சிறப்பாக என்ன சொல்ல. புட்டுக் கொண்டைக்கடலை, தோசை, பீஃப் மசாலா, அயிலா மீன் வறுவல் என ஆர்டர் செய்தோம். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் பதினைந்து நிமிடத்தில் எல்லாம் வந்தன. புட்டு கொண்டைக்கடலை பிரமாதம். பீஃப் மசாலா தனி சுவை. பீஃப் மசாலாவுக்காகவே கூடுதலாக ஒரு தோசை ஆர்டர் செய்யலாம் போல இருந்தது. ஆனால், முதலில் ஆர்டர் செய்த தோசையிலேயே வயிறு நிறைந்திருந்தது. அயிலை மீன் வறுவல் தான் அளவில் பெரிதாக இருந்ததால் முழுதாகச் சாப்பிட முடியவில்லை. மிச்சம் வைக்கும்படி ஆகிவிட்டது.

ஆர்டர் செய்த எல்லாமும் சாப்பிட்டு முடித்தபின், சுலைமானி டீ அங்கே ரொம்ப ஃபேமஸ் என்று சாரதாம்மா சொன்னார். ஃபேமஸான விஷயத்தை நிச்சயமாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என மூன்று சுலைமானி டீ ஆர்டர் சொன்னோம். லெமன் டீ கலரிலேயே வந்தது. லெமன் டீ போல நினைத்து சியர்ஸ் சொல்லி முதல் சிப் குடித்ததும் இதுவரை குடித்திருக்காத புதிய சுவை. இதுவல்லவா தேநீர் என்று நாக்கு துள்ளிக் குதித்தது. என்ன மசாலா தூள் கலந்தார்கள் எனத் தெரியவில்லை. சென்னை வாழ்க்கை தந்த கசப்புகளை எல்லாம் வெளியே தள்ளிவிட்ட இனிப்பை நினைவுகளுக்குள் கொண்டு போகும் அற்புதமான தேநீர் அது. இனிமேல் சென்னை வந்தால் அதாமிண்டே தட்டுக்கடைக்கு வந்து சுலைமானி டீ குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அன்றைய சந்திப்பும். இரவு உணவும் மறக்க முடியாத அனுபவத்தின் நினைவுக் குவியலாய் மனதுக்குள் ஒட்டிக் கொண்டுவிட்டது.

மீண்டும் ஒருமுறை இதேபோல இவர்களோடு கொஞ்சம் முன்கூட்டியே வந்து தாமதமாகத் திரும்புவேன் என பெசண்ட் நகர் கடலிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.