ஞாயிறு, 24 மார்ச், 2019

ஆதார் அட்டை அரசியல்


கோடை வெயில் பல்லை இளித்துக் கொண்டு மண்டையைப் பிளந்தாலும் பரவாயில்லை என மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்கக் கிளம்பினோம். தோழி அகிலாவுடன் சென்னையில் நிறைய இடங்கள் சுற்றி இருக்கிறேன். சென்னை நகரத்தைத் தாண்டி அகிலாவுடன் முதல் பயணம். கூடவே அகிலாவின் சிங்கக்குட்டி சுபாங்கர் வருகிறான் என்றதும் மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து பாலுசாமி சார் எழுதிய #அர்ச்சுனன்_தபசு புத்தகத்தை ஒருமுறை வாசித்து மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டேன். அவனுக்குக் கதைகள் சொல்ல வேண்டுமல்லவா.

நானும் அகல்யாவும் புதுச்சேரியில் இருந்து கிளம்பினோம். சென்னையிலிருந்து அகிலாவும் சுபாங்கரும் வந்து சேர்ந்தார்கள். வெயிலின் வெம்மை தணிக்க லெமன் சோடா குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். ஒவ்வொரு சிற்பம் பற்றியும் அவனுக்கும் அகிலாவுக்கும் சொல்லிக் கொண்டு, அங்கங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியாக நகர்ந்தது அன்றைய நாள்.

மாலை 4 மணிக்குள் பஞ்சபாண்டவர் ரதம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும் எனும் திட்டமிடலுடன் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். அப்போதுதான் கடற்கரை கோயிலில் சூரியன் மறைவதைப் பார்க்க முடியும். கடந்த முறை அகல்யாவுடன் இந்தத் திட்டமிடல் இல்லாததால் கடற்கரை கோயிலுக்குச் செல்ல முடியாமல் போனது. நினைத்தபடி, நான்கு மணிக்கு முன்னதாக பஞ்சபாண்டவர் ரதம் செல்ல டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நுழைவாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி ஒரு ஹிந்திவாலா. டிக்கெட்டை வாங்கி பஞ்ச் பண்ணிவிட்டு ஐடி கார்டு கேட்டார். நான் எந்த அடையாள அட்டையும் கொண்டுசெல்லவில்லை. சாரி சார் ஐடி கார்டு எதுவும் கொண்டு வரவில்லை என்றேன். ஐடி கார்டு இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று இந்தியில் பதில் சொன்னார். சார், போன வாரம் தான் இங்கே வந்தோம். அப்போ  ஐடி கார்டெல்லாம் செக் பண்ணலையே என்றேன்.  ஐடி கார்டு அவசியம் என்று நுழைவுச்சீட்டில் அச்சிட்டு இருப்பதைக் காட்டி, ஐடி கார்டு இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று இந்தியில் சொன்னார். சார் இதுக்கு முன்பு ஐடி கார்டு கேட்டது இல்லையே என்பதை மீண்டும் சொன்னோம். வெளிநாட்டவர்களை ஐடி கார்டு செக் பண்ணாமல் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்காங்க என்றார் மீண்டும் இந்தியில். சார் நாங்க தமிழ்நாடு சார். இவங்க சென்னை, நான் பாண்டிச்சேரி, இந்தப் பொண்ணு மதுரை. எங்களைப் பார்த்தால் ஃபாரினர் மாதிரியா தெரியுது என்றோம் சிரித்துக் கொண்டே. அதெல்லாம் முடியாது. ஃபாரினரை ஐடி கார்டு இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். சார் முதலில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்க. பிறகு உங்க ரூல்ஸைப் பேசலாம் என்றேன். அவர் குரல் கொஞ்சம் கடுமையானது. அதே கடுமையான குரலில், ஐடி காட்டினால் தான் உள்ளே விடுவோம் என்பதை டிக்கெட் கொடுக்கற இடத்திலேயே சொல்லி இருக்கனும், டிக்கெட் எடுத்துட்டுமே இப்போ என்ன பண்றது என்றோம். இது செண்ட்ரல் கவர்மெண்ட் ரூல். ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுமதி இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லவும், அகிலாவும், அகல்யாவும் ஐடி கார்டைத் தேடி எடுத்துக் காட்டினார்கள். என்னிடம் இல்லை. என்கிட்ட ஐடி கார்டு இல்லை. அப்போ என்னை உள்ளே விட மாட்டிங்களா என்றேன் எரிச்சலோடு.
அங்கிருந்தவர்கள் எங்கள் உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு செக்யூரிட்டி வந்து, சரி பரவாயில்லை அனுப்புங்க என்றார். எங்களிடம் விவாதம் செய்த செக்யூரிட்டி மனசே இல்லாமல் உள்ளே அனுப்பினார்.



எங்க முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு வெளிநாட்டவர் மாதிரி தெரியுதா பேசுற மொழியை வச்சு கூட உங்களால் புரிஞ்சுக்க முடியாதா என்று தெள்ளத் தெளிவாகத் தமிழில் சொல்லிவிட்டு உள்ளே சென்றோம். அவரைப் பொறுத்தவரை இந்தி தவிர மற்ற எல்லாமும் ஃபாரின் மொழி தான் போல.
சித்தன்னவாசல் சென்றபோதும் நுழைவுச் சீட்டு சரிபார்க்கும் செக்யூரிட்டி பணியில் இந்திக்காரர் தான் இருந்தார். மாமல்லபுரத்திலும் இந்தி பேசும் செக்யூரிட்டி.

இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு எல்லா மொழி பேசும் மனிதர்களும் வருவார்கள். ஆங்கிலத்திலோ வட்டார மொழியிலோ பேசாத இந்திக்காரர்களைப் பணியமர்த்துவது என்ன நியாயம்? .
அத்தனை நேரம் மனதுக்குள் இருந்த கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் தளர்ந்திருந்தது.

தனிமனித கண்காணிப்பு அரசியலின் ஓர் அங்கமாக ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு உட்பட எல்லாவற்றோடும் இணைக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

எங்கு சென்றாலும் அடையாள அட்டையோடு செல்ல வேண்டும்தான். ஆனால் இன்றைய சூழலில் நான் என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமே மாறிப் போனது வருத்தமாக இருக்கிறது.

7 கருத்துகள்:

  1. சரியான பதிவு தோழி என்னையும் இதுபோல் அடையாள அட்டை இல்லாமல் செகுரிட்டி என்னை வாசலில் நிற்கவைத்து விட்டார்.. (என் கல்லூரி காலத்தில் ������)

    பதிலளிநீக்கு
  2. சரியான பதிவு தோழி என்னையும் இதுபோல் அடையாள அட்டை இல்லாமல் செகுரிட்டி என்னை வாசலில் நிற்கவைத்து விட்டார்.. (என் கல்லூரி காலத்தில் ������)

    பதிலளிநீக்கு
  3. சத்தமில்லாமல் இந்தி திணிக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு