செவ்வாய், 19 மார்ச், 2019

சித்தன்னவாசலில் நானொரு குகைவாசி - 1



வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் நாம் பயணங்களின் மூலம் பார்த்த காட்சிகளும், பெற்ற அனுபவங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். இந்தப் புரிதல் வந்தபிறகு, நான் வாசித்த நிலப்பரப்புகளைப் போய் பார்க்கத் தொடங்கினேன். அப்படித்தான்  இளங்கலை தமிழ் வகுப்பில் ஐந்து மதிப்பெண் வினாவுக்காக மட்டுமே தெரிந்து வைத்திருந்த சித்தன்னவாசல் பயணத்தையும் திட்டமிட்டேன்.

தஞ்சாவூருக்கு இதற்கு முன்பும் நான்கைந்து முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலக்கிய நிகழ்வுகளுக்காகச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நிகழ்வு முடிந்தபிறகு சொல்லி வைத்தாற்போல தஞ்சைப் பெரிய கோவில் சென்று பார்த்துவிட்டு, பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்து விடுவேன்.

இந்த முறை, தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் மகளிர்தினச் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேச வேண்டுமென அழைப்பு வந்ததும், சித்தன்னவாசல் செல்வது என முடிவு செய்து கொண்டேன். சொல்லப்போனால் இந்தமுறை சித்தன்னவாசல் மண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கூகுளில் போய் சித்தன்னவாசல் பற்றித் தேடினேன். இரண்டுநாள் முழுக்க, கூகுளில் சித்தன்னவாசல் குறித்த எல்லா கட்டுரைகளையும் வாசித்து முடித்தேன். சில காணொளிகளையும் பார்த்தேன். ஆவல் இன்னும் அதிகமானது.

மார்ச் 5 நிகழ்வு முடிந்தபிறகு, தஞ்சையில் நண்பன் தினேஷ் பழனிராஜ் அவர்களிடம் சித்தன்ன வாசல் செல்வது பற்றிச் சொல்லி, உடன் வர இயலுமா என்று கேட்டதும், மறுப்பேதும் சொல்லாமல் போலாமே என்று சொல்லிவிட்டார். பயணத்தை நேசிக்கும் நண்பர்கள் வாய்ப்பது வரம் தான்.

அடுத்தநாள் திட்டமிட்டபடி, நானும் தினேஷும் பைக்கில் கிளம்பினோம். கிளம்பும்போது சரியாக காலை ஒன்பது மணி. வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு பத்து நிமிடத்தில் ஒரு கடையில் நிறுத்தி சூடான ஒரு காஃபி அருந்தியபின் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.  தேநீரை விடவும் இப்போதெல்லாம் காஃபி அருந்துவது வழக்கமாகியிருக்கிறது.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வெயில் என்றால் அப்படியொரு வெயில். மருந்துக்குக்கூட இருபுறமும் மரங்கள் இல்லை. ஓரமாக நின்று தண்ணீர் குடித்து ஆசுவாசம் கொள்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. எங்கும் பைக்கை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்தோம். வெயில் மண்டையைப் பிளந்தது. ஆனாலும், பேசிக்கொண்டே சென்றதால் ஒரு கட்டத்திற்குமேல் வெயில் பெரிதாகத் தெரியவில்லை.

புதுக்கோட்டையைச் சென்றடைந்தபிறகு கூகுள் நண்பனின் துணையுடன் சித்தன்னவாசலை நோக்கிச் சென்றோம். புதுக்கோட்டையில் இருந்து 16 கி.மீ பயணத்தபின், வால் இல்லாத பெரிய பல்லி ஒன்று கவிழ்ந்து படுத்திருப்பதுபோல சித்தன்னவாசல் மலையைப் பார்த்ததும் மனசு பறபறவென்று உற்சாகமானது. இன்னும் கொஞ்சநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் மலைமீது ஏறப்போகிறேன் என்பதை நினைக்கையில் மனசு பறவையானது. ஆனால் பைக்கில்தான் போய்க் கொண்டிருந்தேன்.

சித்தன்னவாசல் நுழைவாயிலின் உள்ளே போய், நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் போனோம். குடைவரை கோயிலின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன்பு தொல்லியல் துறையின் நுழைவுச் சீட்டையும் வாங்கிக் கொண்டு மலைமேல் ஏறினோம். இரண்டு நுழைவுச் சீட்டுகள் வாங்க வேண்டும் என்பது விதி. 

கூகுளில் பார்த்த குடைவரைக் கோயில் என்னை நெருங்கி வர, கோயிலை நோக்கி வேகமாக மூச்சு வாங்கப் போய்ச் சேர்ந்தோம்.  குடைவரைக் கோயிலில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தார்கள். கோயிலின் மேற்கூரையில் இருந்த ஓவியங்களை ஒரு பள்ளி ஆசிரியர்போல குச்சியை வைத்துக் கொண்டு ஓவியங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் அங்கே பணிபுரியும் பணியாளர்.

கோயிலுக்குள் செல்வதற்கு முன் இடதுபுறம் காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தோம். குச்சி வைத்துக் கொண்டிருந்த பணியாளர், மேல்சுவரில் இருந்த தாமரைக் குளத்தில் என்னென்ன உருவங்கள் தெரிகின்றன்ன என்பதைக் குச்சியால் சுட்டிக் காட்டிச் சொன்னார். அந்த இருவரும் மாணவர்கள் பாடம் கேட்பதைப் போல பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், வரலாற்றுப் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வற்று, டேப் டெக்கார்டர் குரல்போல பேசிக் கொண்டிருந்தார் அவர். அங்கே வருகின்ற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு, மனுஷிகளுக்கு அவர் சொல்லி இருப்பார். சொல்லிச் சொல்லிக் களைத்துச் சலித்துப் போயிருந்தது அவர் குரல். ஆனால், தனக்களிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேல்தளத்தில் உள்ள ஓவியத் தாமரைக் குளத்தில் ரோஸ்நிற தாமரைகள் புத்துணர்ச்சியோடு மலர்ந்திருந்தன. சில மொட்டவிழாமல் இருந்தன. பச்சை இலைகள் குளம் முழுக்க படர்ந்திருந்தன. இலைகளும் மலர்களும் தாமரைத் தண்டுகளும் நிஜமாகவே தாமரைக் குளத்தின் தோற்றமாயையை உருவாக்கின.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க, அதில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. கூடவே, அன்னப்பறவைகளும் நீந்திக் கொண்டிருந்தன. அன்னப்பறவைகள் தாமரை மலர் போலவும் பறவையும் உடல் போலவும் மாறி மாறிக் காட்சி அளித்தன. அவற்றின் அருகில் இரண்டு கொம்புகள் கொண்ட எருமை ஒன்று நின்றிருந்தது. மேலும் இரண்டு யானைகளும் அங்கே இருந்தன. குளத்தில் தாமரை மலரைக் கொய்து கொண்டிருந்த ஆண்கள் இருந்தார்கள். அதில் தாமரை மலரைக் கொய்து தோளில் போட்டிருந்த ஓவியத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியில் வரைந்த ஆயில் பெயிண்ட் ஓவியம்போல இருந்தது அந்த மேற்கூரை ஓவியம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வயது அந்த ஓவியத்திற்கு என்பது பெருவியப்பாக இருந்தது. மேலும், அவை, மூலிகைச் சாறு கொண்டு வண்ணங்களை உருவாக்கி வரையப்பட்டவை என்பது ஆச்சரியத்தை விரிவாக்கின.

அந்தத் தாமரைக் குளத்திற்கு முன்னதாக உள்ள மேற்கூரையில் தாமரைக் குளத்தில் தாமரை, மொட்டு விட்டு படிப்படியாக மொட்டவிழ்ந்து மலரும் மலர்ச்சியின் பரிணாமம் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தாமரைக் குளத்தில் அமர்ந்து அதன் ஒவ்வொரு அசைவையும், மலர்தலையும் உண்ணிப்பாகக் கவனித்து வரைந்திருப்பார்கள் போல. ஓவியத்தில் உள்ள தாமரைக் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தோழி மாளவிகாவின் ஓவிய ஆராய்ச்சிக்காக ஆரோவில்லில் உள்ள தாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து குளத்தையும், பூக்களின் அசைவையும், பூச்சிகளும் மீன்களும் குளத்திற்குள் நீந்திச் செல்வதையும், பறவைகள் வந்தமர்ந்து மீன் பிடித்துக் கொண்டு பறந்து செல்வதையும் மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்த மாலைப் பொழுதுகள் நினைவுக்குள் வந்து போயின. அதேபோல ஊசுட்டேரியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்க் கூட்டங்களும் வந்து போயின.

கோயிலின் உள்ளே சுவரில் மூன்று புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. மூன்று தீர்த்தங்கரர்கள் கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர். ஓவியங்களை விளக்கிக் கொண்டிருந்த பணியாளர், கருவறையில் தலையை நீட்டிச் சப்தம் எழுப்பினார். அந்தச் சத்தம் உள்ளுக்குள்ளே சுற்றிச் சுழன்றது. பிறகு உள்ளே போய் நின்று ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று சத்தம் எழுப்பினார். அவர் செய்ததுபோல அங்கிருந்த இருவரும் உள்ளே போய் நின்று ஓம்ம்ம்ம்ம்ம் என்றுச் சொல்லிப் பார்த்தனர்.

எனக்கு அங்கே அமைதியாக நின்று கொண்டிருப்பதே போதும் எனத் தோன்றியது. உள்ளே போய் கால்களை மடக்கிக் கொண்டு கைகளைத் தொடைகளின் மேல் வைத்தபடி கண்மூடி அமர்ந்திருந்த முதல் தீர்த்தங்கரரின் வலது கைமீது கை வைத்துச் சற்று நேரம் நின்றிருந்தேன். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் மூடி மௌனித்திருந்தனர். கைவிரல்களைப் பார்த்தேன். தொடையின்மீது குறுக்காகக் கையை மடக்கி, கட்டைவிரலைச் சுண்டுவிரல் ரேகையின் அருகில் மடக்கி இருந்தனர். அவர்களைப் போலவே கைவிரலை மடக்கி நின்று பார்த்தேன்.

இரண்டாவது தீர்த்தங்கரரும் அதேபோல தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரது வலது கைக்குள் கையை வைத்துப் பற்றிக் கொண்டு அமைதியாக நின்றபடி அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தீர்த்தங்கரரின் வயிற்றில் மூச்சுக்காற்று லேசாக மேலேறி இறங்குவதைப் போலொரு பிரம்மை வந்து போனது. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். சலனமற்று அமர்ந்திருந்தார் தீர்த்தங்கரர்.

மூன்றாவது தீர்த்தங்கரர் அருகில் நின்று அவர் கையைப் பற்றிக் கொண்டு நின்றேன். வெளியில் இருக்கின்ற வெக்கை தணிந்து சில்லிட்டு இருந்தது. அவர்கள் மூவரையும் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தேன். என்னைத் தவிர அப்போது கருவறைக்குள் யாருமில்லை. அந்த அமைதி ஆசுவாசமாக இருந்தது.

மூவரிடமும் விடைபெறுவதாக அனுமதி பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். வாசலில் நின்றபடி அந்த இருவரிடமும் இன்னமும் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் பணியாளர். அவர் பேச்சில் கவனம் செலுத்தி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார் தினேஷ். குடைவரை கோயிலின் இடதுபுறம் உள்ள குகை என்னை வா என்றழைத்தது.





பாறையின் மீது நடந்து பழகிய கால்களைப் போல பாறையின் மீது நடந்து வேக வேகமாகப் போனேன். குகையின் அடியில் போய்  கை கால்களை நீட்டிப்படுத்துக் கொண்டேன். பாறையின் குளிர்ச்சி இதமாக இருந்தது. குகைவாசியாகியானது போலிருந்தது. இந்தக் குகையிலேயே இருந்து விடலாம் எனத் தோன்றியது. 

அந்தக் குகையின் அடியில் ஆசை தீர அமர்ந்து, நடந்து, பாறையைத் தொட்டுத் தடவி அதன் குளுமையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

2010இல் சதுரகிரி மலைக்குப் போனபோதுகூட இப்படித்தான் உணர்ந்தேன். மலைக்குகைகளில்தான் எனது ஆன்மா உயிர்ப்போடு இருக்கிறது போல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக