திங்கள், 18 மார்ச், 2019

மாமல்லபுரம் டைரி


மாமல்லபுரத்தில் மகிசாசுரவர்த்தினி மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு அம்மா குரங்கும் இரண்டு குட்டிக் குரங்கும் பாறை மீது அமர்ந்திருந்தது. பையில் பிஸ்கட் இருக்கா என்று அகிலாவிடம் கேட்டதும், உள்ளே இருக்கு எடுத்துக் கொடு என்றார்.


ஸ்நாக்ஸ் பை அகல்யாவிடம் இருந்தது. பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுப்பதற்குள் அம்மா குரங்கு பாறையிலிருந்து இறங்கி அருகில் வந்தது. பையைப் பிடுங்கிவிடும் போல நெருங்கி வந்தது. இரு உனக்குக் கொடுக்கத்தான் எடுக்கிறேன். கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொல்லிக் கைக் காட்டியதும் அப்படியே அமர்ந்துவிட்டது. குட்டிகள் பாறை மேலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தன.

பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்துக் கொடுக்கக் கொடுக்க வாங்கி வாயில் அதக்கிக் கொண்டது. கொஞ்சம் சாப்பிட்டது. குட்டி குரங்கு பிஸ்கட் எடுக்கும் கையையே பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குக் கொடுக்கலாம் என்று நீட்டினால் முதலில் பயந்தது. பிறகு கை நீட்டி எட்டி வாங்கிக் கொண்டது. இப்படியாக, அம்மா, பிள்ளைகள் மூவரும் பிஸ்கட்டுகளைத் தின்று கொண்டிருந்தார்கள்.


அந்த வழியாகப் போகிற எல்லோருமே அம்மா குரங்கு மற்றும் குட்டிக் குரங்குகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஒரு வெளிநாட்டவர் தன் கேமராவில் படம் பிடித்துக் கொண்டார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிஸ்கட்டைக் கையில் வாங்கி வாயில் அதக்கிக் கொள்வதில் கவனமாக இருந்தன.

பிஸ்கட்டுகள் தீர்ந்தபின்னும் எங்கள் கையைப் பார்த்தன. இங்க பாரு பிஸ்கட் எல்லாம் தீர்ந்து போச்சு என்றதும் பையைப் பிடுங்கிக் கொண்டது அம்மா. பையைக் கொடு என்று அகல்யா இழுக்க, தர மாட்டேன் என அந்த அம்மா குரங்கு இழுக்க, அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். சரி அதுவே வச்சுக்கட்டும் விடு போகலாம் என்று கிளம்பும்போது பைக்குள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதுவே கொடுத்துவிட்டது.


பிறகு பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து கீழே சிந்திய பிஸ்கட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டனர் குரங்குக் குடும்பம். குழந்தைகள் தரையில் சிந்தியதை எடுத்துச் சாப்பிடுவதைப் போல இருந்தது அந்தக் காட்சி. குழந்தைகள் தானே அவர்களும். 


பிஸ்கட் தீர்ந்த பின் எஞ்சியிருந்த ஒரு துண்டு பிஸ்கட்டுக்கு மூன்று குட்டிக் குரங்குகள் தரையில் தாவி தாவி சண்டையிட்டுக் கொண்டன. பார்க்கத்தான் குட்டிக் குரங்குகளே தவிர அவர்களின் சத்தமும் தாவலும் பெரிதாக இருந்தன. சரி சரி அடிச்சுக்காதிங்க என்று சொல்லியபடி,  பை சொன்னோம். கவனிக்கவே இல்லை.

சுபாங்கர் மட்டும் கையெடுத்துக் கும்பிட்டான். என்னடா கும்பிடற என்றதும், அது அனுமன் என்றார். அவர்கள் கவனிக்கவில்லை என்றால் என்ன. சொல்வது நம் கடமை. அனுமனுக்கு பை பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக