திங்கள், 18 மார்ச், 2019

யாயும்_யாயும்_யாராகியரோ


ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய் திரும்பத் திரும்பக் கேட்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.  சிலருக்குப் பாடல் வரிகள், சிலருக்கு இசை, சிலருக்கு நடிகர் / நடிகை… இப்படி ஏதோ ஒன்று. அப்படிச் சமீபத்தில் மனதுக்குள் ஒட்டிக் கொண்ட பாடல் சகா படத்தில் வரும் யாயும் யாயும் பாடல்.  

இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும். சரியாகச் சொல்வதென்றால் கல்லூரியில் சங்க இலக்கியம் நடத்திக் கொண்டிருந்தபோது குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை நடத்த வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள குறுந்தொகைப் பாடலைச் சொல்வதற்கு முன் வகுப்பில் குறுந்தொகையை அறிமுகம் செய்ய யாயும் யாயும் யாராகியரோ பாடலைச் சொல்லித் தொடங்கினேன். வகுப்பில் ஒரு மாணவி, மேம், இது சினிமா பாட்டு தானே என்றார். இல்ல இந்தப் பாடலில் வரும் சில வரிகள், சினிமாப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கு என்று, முன்பே வா அன்பே வா… பாடலை உதாரணத்திற்குச் சொன்னேன். இல்ல மேம், முழுப் பாட்டும் ட்யூன் போட்டு ஒரு பாட்டு யூடியுபில் வந்திருக்கு. என்ன படம் தெரியல. நீங்க கேளுங்க என்றார். அன்றைக்குக் கல்லூரியில் இருந்து வந்ததும், முதல் வேலையாக யூடியுபில் அந்தப் பாடலைக் கேட்டேன். இடையில் ’யானும் நீயும் எவ்வழி அறிதும் எனும் ஒரு வரி தவிர்த்து எல்லா வரிகளும் டியூனாகப் போட்டிருக்கிறார்கள். பாடலில் பெண் குரல் காந்தத்தைப் போல இழுத்தது. கூகுளில் தேடிப் பார்த்தேன். ரீட்டா தியாகராஜன். என்ன அழகான குரல். நரேஷின் குரலும் ரீட்டாவின் குரலும் காதலில் குழைந்து பாடலை இன்னுமொருமுறை கேளேன் என்று சொன்னது.

தினம் தினம் கேட்க ஆரம்பித்தேன்.

பிறகு, எஃப்.எம்.மில் ஒரு நாளை எட்டு முறையாவது இந்தப் பாடலை ஒலிபரப்பினார்கள். அடிக்கடி எஃப்.எம்.களில் ஒலிபரப்புவதால் கேட்டுக் கேட்டுப் பிடித்த பாடல் வரிசையில் இதுவும் வந்து சேர்ந்து கொண்டது. இதனுடைய வீடியோ வெர்ஷன் பார்க்க வேண்டும் என ஆவலும் தொற்றிக் கொண்டது.

இந்தப் பாட்டுக்காகவே படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். சகா, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை. குறைநதபட்சம் பிடித்த பாடலின் வீடியோ வெர்ஷனைப் பார்க்கலாம் என யூடியுபில் தேடினேன். கல்யாண ஆல்பத்தில் மணமக்களை வீடியோ ஷூட் பண்ணது போல ஓர் உணர்வு. ஏன் வீடியோ சாங் பார்த்தோம் என்றாகிவிட்டது. வீடியோவாக அந்தப் பாடலைப் பார்த்ததை மறக்கவே நினைக்கிறேன்.

இப்போதும் அந்தப் பாடல் கேட்கும் போது வசீகரிக்கும் குரலில் போதை இருக்கத்தான் செய்கிறது.

#யாயும்_யாயும்_யாராகியரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக