வெள்ளி, 29 ஜனவரி, 2016

வருத்தம் கொள்ளும் அளவிற்கு - மனுஷி

நீ வருத்தம் கொள்ளும் அளவிற்கு
இங்கு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.
நான் மனம் நொறுங்கும்படியும்
இங்கு எதுவும்
நிகழ்ந்துவிடவில்லை.
இயல்பாக
வெகு இயல்பாகக் கடந்து போகிறாய்
என் காதலை.
வெகு இயல்பாகக் கடந்து போக
முயற்சிக்கிறேன்
உன் துரோகத்தை.

உன்னை அவமதிக்கும் பொருட்டு - மனுஷி

படுக்கையறை சுவரில்
கீறி வைத்துவிட்டுப் போன
நிர்வாணப் பெண்ணுக்கு
ஆடை வரைந்து விட்டேன்

நீ அருந்திவிட்டுப் போன
மதுபாட்டில்களையும்
புகைத்து மிச்சம் விட்டுப் போன
சிகரெட் துண்டுகளையும்
சுடுகாட்டின் அருகில் போய்
புதைத்து விட்டேன்.

படுக்கையறையின் நினைவுகளையெல்லாம்
அழித்துத் துடைத்துச்
சுத்தம் செய்து விட்டேன்.

இன்னும் சில நாட்கள்
சில மாதங்கள்
சில வருடங்கள் கூட
அழுது அழுது
மனதிலிருந்தும் உன்னை வெளியேற்றி விடுவேன்.

இன்னமும் மௌனமாய்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய்.
என் காதலை வேண்டி வரும் நாளில்
என் அறையில்
உன் நினைவுகள் இருக்கப் போவதில்லை.
முகம் செத்துத் திரும்பிப் போவாய்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

ஆறு என்றே சொன்னார்கள்

ஆறு என்றே சொன்னார்கள்
-- மனுஷி
முன்பொரு மழை நாளில்
பேருந்து பயணத்தின்போது
அம்மா சொன்னாள்
‘இதான் ஆறு’.
அங்கே
சடசடத்து ஓடிக் கொண்டிருந்தது
அழுக்குநிற தண்ணீர்
பேய் வேகத்துடன்
சில குடிசைகளை இழுத்துக் கொண்டு.

வளைகாப்பு முடிந்து
புகுந்தவீடு செல்கையில்
‘நிறைமாத கர்ப்பிணி ஆத்தைத் தாண்டக் கூடாது’
எனச் சொல்லி
இரண்டு ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றார்கள்.
அப்போது
வெண்மணலும் நாணல் புதருமாக
புதுப்பொலிவுடன் இருந்தது
வெயிலையும்
அங்கங்கே தெளிந்த நீரையும் சுமந்தபடி.

பள்ளி உணவு இடைவேளையில்
ஆற்று மணலில் ஊற்று தோண்டி
நீர் எடுக்கையில்
நண்பன் சொன்னான்
‘24 ஹவர்ஸ் வாட்டர் சர்வீஸ்.
இல்லப்பா?’.

இப்போது
அட்டைப்பூச்சியைப்போல
நதியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கின்றன
ஆற்றுப் பாலத்திற்குக் கீழே
ஊர்ந்து போகும் லாரிகள்.

நோய்மை கொண்ட ஆற்றில்
நாணல் புதர்களுக்குப் பதிலாய்
கருவேல மரங்களும்
வறண்ட புற்களும் மண்டிப்போய்
சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாகவும் ஆகிவிட்டன.

எலும்புத் துருத்திக் கொண்டிருக்கும்
வறட்சி தேசத்தின் குழந்தை போல
பரிதாபமாக படுத்திருக்கிறது
ஆறு.

குழந்தை பெய்த சிறு மூத்திரக் குளமென
தேங்கி நிற்கிறது
நதியின் கடைசி மூச்சு
அங்கங்கே.

பின்னாளில்
ஆற்றைக் கடக்கையில்
என் மகளுக்குச் சொல்வேன்
இதை ஆறு என்றே சொன்னார்கள் என.
என் மகளும்
அவள் மகளுக்குச் சொல்ல
மிச்சமிருக்கும் நதியின் சிதைந்த கூடு.

யசோதையின் பாடல்

நுரைத்துப் பொங்கும் கோப்பையிலிருந்து
வழிகிறது என் கண்ணீர்.
புத்தனின் கண்களால்
சலனமற்றுப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
உன் மௌனம்
போதையைக் கிளர்த்த
மிதமிஞ்சிய சோகத்தோடு
புல்லாங்குழல் இசைத்தபடி
நடந்து போகிறாள் யசோதை
யாருமற்ற வீதி வழியாக.
அவள் பாடுவது என் பாடலை.
அவள் இசைப்பது எனது அழுகையை.
அவள் இறுதியாக இளைப்பாறுவது
எனது கல்லறையில்.
-- மனுஷி

உயிர்த்திருக்கும் கண்கள்

இந்தக் கடற்கரையில் தான்
வெகுகாலமாகக் காத்திருக்கிறேன்.
கடல் வழியாகப் பறந்து செல்லும் பறவையிடம்
சொல்லியனுப்பி விட்டேன்.
கால்களைத் தழுவிச் செல்லும் அலைகளிடமும்
சொல்லியனுப்பிவிட்டேன்.
நீ வரவேயில்லை.
அலைகளின் மேலெழும்பி
உள் நீந்தும் மீன்களும்
எனது காத்திருப்பை
உன்னிடம் சொல்லவே
நெடுதூரம் பயணிக்கின்றன.
அவை சோர்ந்து விடப் போவதில்லை
என
சத்தியம் செய்திருக்கின்றன.
பருவங்கள் மாறி மாறி வருகின்றன.
வசந்தகாலமும் கடந்துவிட்டது.
மாரிக்காலமும் கடந்துவிட்டது.
இளவேனில் கடந்து
கோடைக்காலம் துளிர்க்கத் தொடங்கிவிட்டது.
உன் அரவம் கேட்கவேயில்லை
உன் வாசனை பரவவில்லை.
உன் உருவம் கரைந்து கொண்டிருக்கிறது
கண்களிலிருந்து.

வெகுதூரத்தில்
நீ மொழியற்று இருக்கிறாயா?
அலைகளின் குரலை
பறவைகளின் மொழியை
மீன்களின் புலம்பலை
பருவங்களின் கூவலை
அறியும் திராணியற்று மரத்துப் போய்விட்டாயா?

ஊழிக்காலத்தின் கடைசி நாளில்
ஒருவேளை
நீ வரக்கூடும்.
கடற்கரை பனைமரத்தின் அருகில்
ஒரு சிலையாய் சமைந்திருப்பேன்.
என் கண்கள் உயிர்த்திருக்கும்
அப்போதும் கூட.
-- மனுஷி

திங்கள், 25 ஜனவரி, 2016

ஒடிஸி கவிதை வாசிப்பு

ஞாயிற்றுக் கிழமையின் மாலைப்பொழுதைக் கவிதைகளோடு செலவிடுவதில் வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அடையாறு ஒடிஸி புக் ஸ்டாலில் நடந்த கவிதை வாசிப்பு நிகழ்வு குதூகலமான மகிழ்ச்சியைப் பூங்கொத்துகளாக ஆக்கி என் கையில் தந்தது.
நான் வியந்து பார்த்த பெண் ஆளுமைகள்  குட்டி ரேவதியும் சுகிர்தராணி அக்காவும். 2008இல் அவர்களை ஒரு நேர்காணலின் பொருட்டு நான் சந்தித்த போது என் கால்கள் தரையில் இல்லை. அவ்வளவு பிரமிப்போடு சந்தித்து மீண்டிருக்கிறேன். இப்போது அவர்களோடு நானும். இல்லை இல்லை அவர்கள் அடிச்சுவட்டில் நானும் என்பதில் பெருமை எனக்கு.
நேரக்கட்டுப்பாடுகள் இன்றி கவிதைகளை வாசிக்க முடிந்த நிகழ்வு இது. பெண் சுதந்திர வெளியின் குரலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளாகக் கேட்க முடிந்தது. கவிதையைச் சுவைக்க மொழி ஒரு தடையில்லை என்பதையும் உணர்ந்தேன். இந்த நிகழ்வுக்கு என் பெயரைப் பரிந்துரைத்த கவிதை தேவதை குட்டி ரேவதிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராகமாலிகாவுக்கும் என் முத்தங்கள்.
இந்த வருடத்தில் அன்பானவர்களின் அரவணைப்பில் திளைத்துப் போயிருக்கிறேன். எனக்காக வந்திருந்த அன்பு நண்பர் வெளி ரங்கராஜன். அவருக்கு எப்படி என் அன்பைச் சொல்ல. ஆசிர்வதிக்கப்பட்ட இளவரசியாய் உணரச் செய்யும் அவரது அன்பின் நிழல்.
அதேபோல என்மீது பாசாங்கற்ற அன்பைக்.கொண்டிருக்கும் தோழி நந்தினி, நண்பர்கள் தர்மா, ராஜகோபால், பிரசாந்த் இவர்களுக்கு நன்றி சொல்லிப் பிரிக்க மாட்டேன். இவர்கள் என் உறவுகள்.
கவிதையால் ஆனது என் உலகு.
அன்பால் ஆனது என் உறவு.
Kutti Revathi Sukirtha Rani Sharanya Manivannan Srilata Krishnan Ragamalika Karthikeyan Swarna Rajagopalan Veli Rangarajan Nandineeshree Sha Payani Raja Gopal Rainbow Raji

நுரைத்துப் பொங்கும் கோப்பையிலிருந்து
வழிகிறது என் கண்ணீர்.
புத்தனின் கண்களால்
சலனமற்றுப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
உன் மௌனம் 
போதையைக் கிளர்த்த 
மிதமிஞ்சிய சோகத்தோடு
புல்லாங்குழல் இசைத்தபடி
நடந்து போகிறாள் யசோதை
யாருமற்ற வீதி வழியாக.
அவள் பாடுவது என் பாடலை.
அவள் இசைப்பது எனது அழுகையை.
அவள் இறுதியாக இளைப்பாறுவது
எனது கல்லறையில்.
-- மனுஷி

சனி, 16 ஜனவரி, 2016

எங்க ஊரு மாட்டுப் பொங்கல் -- மனுஷி

எங்க ஊரு மாட்டுப் பொங்கல்
--மனுஷி
மார்கழி மாதம் வந்துவிட்டாலே குளிரெல்லாம் கடந்து ஒருவிதக் கொண்டாட்டம் வந்து தொற்றிக் கொள்ளும் மனதுக்குள். அதிகாலையில் அம்மா எழுப்பிவிட, தூக்கக் கலக்கத்தோடு வாசலில் வந்தமர்ந்தால் சாணி தெளித்து, கோலம் போட்டு வைத்திருப்பார். நானும் பக்கத்து வீட்டுத் தோழிகளும் கோலத்துக்கு அழகாகக் கலர் கொடுத்து, அம்மா ஏற்கனவே பறித்து வைத்திருக்கும் பூசணிப் பூவைச் சாணியில் குழி செய்து அதன் மீது வைத்து, கோலத்தின் நடுவில் வைத்து விடுவோம். என் வீட்டு வாசலில் முடிந்து அடுத்தடுத்துத் தோழிகளின் வீட்டு வாசலில் இந்த வேலைகள் நடக்கும்.
இதற்குள் ஒவ்வொரு வீட்டு வாசலின் முன்பும் வைக்கோல் மற்றும் குப்பைகளைக் கூட்டி, கொளுத்திக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார்கள் ஆண் பிள்ளைகள். கோலம் போட்டு முடித்த பிறகு நாங்களும் சேர்ந்து கொள்வோம். இப்படித்தான் மார்கழி மாதம் எங்களைக் கடந்து போகும்.
அதன்பிறகு, போகிக் கொண்டாட்டத்தில் தொடங்கும் எங்கள் பொங்கல். போகி அன்று அதிகாலையில் எரிப்பதற்கென முந்தின நாளே கிழிந்த பாய், பயன்படுத்தாத துணி, படித்து முடித்த வாரமலர், சிறுவர் மலர் போன்ற இதழ்கள், நோட்டுப் புத்தகங்கள், கிழிந்த சாக்குப் பைகள் – இவைகளையெல்லாம் சேகரித்து வைத்திருப்போம். டயர்களைக் கொளுத்துவதைத் தவிர்த்திருக்கிறோம். அதன் புகை வாசனை வயிற்றைக் குமட்டி வாந்தி வரச் செய்யும் அந்த அதிகாலையில். அதனால் டயர்களைக் கொளுத்த விரும்புபவர்கள் தெரு முடிவில், சாலை அருகில் போய் கொளுத்திவிட்டு வருவார்கள். போகி அன்று பழைய பொருட்களை எரித்து முடித்து புகை அடங்கும் நேரத்தில் வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடிக்கும் படலம் தொடங்கும். வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் தோட்டத்து வாசலில் கொண்டு போய் வைத்துவிட்டு, வீட்டை ஒட்டடை அடித்து, வெள்ளையடித்து முடிக்க, போகி நாள் முழுக்க ஆகும். அதன்பிறகு பெரும்பொங்கல் அன்றும் வெள்ளையடித்தல் முடிந்து, பொருட்களையெல்லாம் கழுவி, துடைத்துச் சுத்தம் செய்து, வாசற்படி, கதவு இவற்றுக்கெல்லாம் பூசை போட்டு பொட்டு வைத்து,,, அப்பாடி என்றாகிவிடும். இதற்குள் மாவிலைத் தோரணங்கள் தயார் செய்து வைக்க வேண்டும்.
மாட்டுப் பொங்கல்தான் எங்கள் வீடுகளில் விசேஷம். அதனால் பெரும் பொங்கல் என்பது பெரிதாக இருக்காது. பெரண்டைச் செடி, மாவிலை, வேப்பிலை எல்லாம் எடுத்து வந்து வீடுகளில் தோரணம் கட்டுவோம். அப்பா, பெரியப்பா, அண்ணன் எல்லோரும் ஏரிக்கு அல்லது ஏரி வாய்க்காலுக்கு மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு போய் மாட்டையும், வண்டியையும் கழுவிக் கொண்டு வருவார்கள். மாட்டு வண்டிக்கும் மாட்டுக்கும் பட்டை போட்டு, பொட்டு வைத்து மாவிலைத் தோரணங்களால் வண்டியை அலங்காரம் செய்து, மாட்டுக் கொம்பில் கலர் கலரா பலூனை ஊதிக் கட்டி, கழுத்தில் சலங்கைக் கட்டி, கலக்கலா ரெடி பண்ணுவோம். நாங்களும் குளித்து முடித்து, பொங்கல் பண்டிகைக்கென எடுத்த பட்டுப் பாவாடைச் சட்டையை அணிந்து கொண்டு தலை பின்னி, டிசம்பர் பூவை வைத்துக் கொண்டு பொங்கலைக் கொண்டாட ஆயத்தமாக இருப்போம். பொங்கல்  பண்டிகை, பங்குனி உத்திரத் திருவிழா – இந்த இரண்டு தருணங்களில் மட்டும் தான் புதுத்துணி எடுக்கும் வழக்கம் எங்கள் வீடுகளில். இப்போது போல நினைக்கும் போதெல்லாம் துணி எடுக்கும் வழக்கம் அப்போது இருக்கவில்லை.
அலங்காரங்கள் எல்லாம் முடியும் தருணம் சூரியன் மேற்கில் இறங்கத் தொடங்கியிருக்கும். எல்லோர் வீட்டு வாசலிலும் அடுப்பு தோண்டி, பானையில் பொங்கல் பொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பானையில் பொங்கும் நேரம், சுற்றி இருக்கும் என்னைப் போன்ற வாண்டுகள் பொங்கலோ பொங்கலோ எனக் கூக்குரலிட உற்சாகமும் குதூகலமும் சொல்லி முடியாது. பொங்கல் ரெடி ஆனதும், படைத்து  முடித்து பதமான சூட்டில் பொங்கலை இலையில் வைத்து, சங்கு ஊதிக் கொண்டு, தட்டில் ஒரு குச்சியால் அடித்து ஓசை எழுப்பிக் கொண்டு மாடுகளுக்குக் கற்பூரம் காட்டி, அந்தப் பொங்கலைத் தின்ன வைத்து, பிறகு சுற்றி இருக்கும் பிள்ளைகளுக்கு  பூவரச இலை அல்லது உள்ளங்கை அளவேயான வாழை இலையில் பொங்கலும் ஒரு துண்டு கரும்பும் கொடுப்பார்கள். நெற்றியில் பூசிவிடும் விபூதி மணக்க, பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு, பெரும்பாலும் சட்டையிலேயே துடைத்துக் கொள்வோம். 
எங்கள் அனைவரது கவனமும் பொங்கலின் சுவையை விடவும், அடுத்து ஊர்வலத்துக்குத் தயாராக நின்று கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளில் எதில் ஏறுவது என்பதில் தான் இருக்கும். நானும் என் தோழிகளும் ஒரே மாட்டு வண்டியில் ஏறி, ஏதாவது ஒரு பக்கத்தில் சேர்ந்தாற்போல் நிற்க வேண்டும். இதுதான் அப்போதைக்கு எங்கள் குறிக்கோள். ஏனென்றால் தயாராக நிற்கும் மாட்டு வண்டிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்றி விட்டு விடுவார்கள். மாட்டு வண்டியில் கத்திக் கொண்டு போவது மகிழ்ச்சி என்றாலும் கூட, தோழிகளின் தோள்களில் கை போட்டபடி, பட்டுப் பாவடைகள் உரச உரச, பொங்கலோ பொங்கல் என்று கத்திக் கொண்டு போவதில்தான் இரட்டிப்பு, மும்மடங்கு மகிழ்ச்சி. வண்டி கிளம்பியதும் எங்கள் கூச்சலைக் கண்டு மாடு மிரண்டு ஓடுமா என்று தெரியாது. ஆனால், வாலை முறுக்கி விட்டதும் பாய்ச்சல் எடுத்து ஊரெல்லாம் சுற்றி வரும். கரும்பைக் கடித்தபடி, பொங்கலோ பொங்கல் என்று கத்திக் கொண்டு செல்வோம். வயது வந்த பெண்களும் திருமணமான பெண்களும் புடவையும் தாவணியுமாக வீட்டு வாசலில் நிற்பார்கள் அழகுப் பதுமைகளாக. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அகல் விளக்கு வீட்டை இன்னும் அழகாக்கும்.
மாட்டு வண்டி ஊரைச் சுற்றி முடித்து வந்ததும், அடுத்துத் தயாராக ஏதும் வண்டி இருந்தால் அதில் ஏறிக் கொண்டு மீண்டும் ஒரு ரவுண்டு. இப்படியே எட்டு மணி வரையிலும் மாட்டு வண்டியில் ஊர்வலம் நடக்கும்.
மறுநாள் காணும் பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்ததும் பொங்கல் பொங்கிய தண்ணீரை ஒரு சொம்பில் பிடித்து வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு போய் வயலில் தெளித்துவிட்டு வர வேண்டும். அங்கிருந்து வந்து குளித்து ரெடியானதும், ஹார்லிக்ஸ் எல்லாம் குடித்து முடித்த பின், அம்மா பொங்கல் காசு தருவார். ஏற்கனவே வைத்திருக்கும் உண்டியலில் காசு நிறையும் நாள் அது. அப்போதெல்லாம் ஐம்பது ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை எனக்கு. அம்மா கொடுக்கும் ஐம்பது ரூபாயில் தொடங்கும் பொங்கல் காசு கலக்ஷன், அன்று நாள் முடிவதற்குள் ஐநூறைத் தொடும். என் தோழிகள் சிலருக்கு இருநூறு. சிலருக்கு முந்நூறு என்று உண்டியல் நிறையும். அம்மா, அப்பா, அண்ணன், சித்தப்பா, பெரியப்பா, அண்ணி, மாமா, அத்தை, தாத்தா, ஆயா, பக்கத்து வீட்டு அக்காக்கள் – என பொங்கல் காசு தந்து வாழ்த்துவதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கும்.
அன்றைக்கு மாலை நிச்சயமாக தெருவில் உள்ள எல்லார் வீட்டில் இருப்பவர்களும் சினிமாவுக்குப் போவார்கள். பண்ரூட்டி அல்லது வீரப்பார் – இந்த இரண்டு ஊர்களில் தான் தியேட்டர். அப்போதைக்கு ரிலீஸ் ஆன படம், அல்லது தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பார்த்து தான் பொங்கல் சிறப்பாக முடியும். பெரும்பாலும் எல்லோரது சாய்ஸும் வீரப்பார் தியேட்டர்தான். மாட்டு வண்டியில் தான் பயணம். வெயில் இறங்கும் நேரம் கிளம்பினால், படம் தொடங்குவதற்குள் வீரப்பார் தியேட்டருக்குப் போய்விடலாம். பெரும்பாலும் பொங்கல் காசுதான் தியேட்டர் டிக்கெட் மற்றும் இடைவேளை நேர முறுக்கு, சுண்டல், பஜ்ஜி போன்ற தின்பண்டங்களுக்குக் காலியாகும்.
நினைத்துப் பார்க்கையில் சொர்க்கமாக இருக்கிறது எங்க ஊரு மாட்டுப் பொங்கல். தொலைக்காட்சி இல்லை. அதில் வருகிற பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை. முகநூல், வாட்ஸ் அப் போன்ற அழகிய அவஸ்தைகள் இல்லை. பொங்கல், பொங்கலாக இருந்தது. கொண்டாட்டமாக இருந்தது. நமக்கான அடையாளமாக இருந்தது.
அவ்வளவு கொண்டாட்டமாக இனியொரு பொங்கல் சாத்தியமா தெரியவில்லை.

திங்கள், 11 ஜனவரி, 2016

தாத்தனுடன் ஒரு மாலைப்பொழுது - மனுஷி

தாத்தனுடன் ஒரு மாலைப்பொழுது

தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களை இன்று அவரது வீட்டில் சந்திக்கச் சென்றேன். அவர் சொன்னது போலவே மிகச் சரியாக மாலை 4 மணிக்கு வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தினேன். கையில் ஏதோவொரு நூலை வைத்து வாசித்துக் கொண்டிருந்தவர் புன்னகையுடன் வரவேற்றார். அந்தப் புன்னகையே பெரும் ஆறுதலையும் தெம்பையும் தந்தது. அதற்குக் காரணம் உண்டு.
அவரை முதன்முதலாகச் சந்தித்த அனுபவம் மிகவும் கசப்பானது. அவரது கதைகளை வாசித்திருக்கிறேன். (அவர் தொகுத்த பாலியல் கதைகள் உட்பட). அவரைப் பற்றிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். ’தளம்’ மொழி சிறப்பிதழுக்காக அவரோடு ஒரு கலந்துரையாடலுக்காக  அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். பெரிதாக ஒரு வரவேற்பும் இல்லை. கடுகளவும் அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏன் வந்தீர்கள் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்பதை மிக வெளிப்படையாகச் சொன்னார். என்னைக் கவிஞர் என்று அறிமுகப் படுத்தி இருந்தது அதற்குக் காரணம். கவிதையை ஒரு இராட்சசன் என்று திட்டினார் கலந்துரையாடலின் போது. கவிஞர்களை வெறுத்தார். பாரதியார் உட்பட. மொழி குறித்த அந்தக் கலந்துரையாடல் முடிந்து வெளியேறுகையில் மனம் முழுக்க வருத்தமே மிஞ்சி இருந்தது.

இந்த முறை சந்திக்கச் சென்றபோது நல்லவேளையாக என்னை முன்பே சந்தித்தது ஞாபகம் இல்லை அவருக்கு. அந்த மறதிக்கு ஒரு நன்றி. நானும் கவிஞர் என இந்த முறை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அவரைச் சந்திக்கச் சென்றவள் என்ற முறையில் பெயரை மட்டும் சொன்னேன். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சார்வாகன் குறித்த நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார். காலம் சென்ற மனிதரை நாம் எவ்விதம் நினைவு கொள்கிறோம் என்பதை நமது முகக் குறிப்புகளே காட்டிவிடும். இன்று கி.ரா.விடம் அதைப் பார்த்தேன். ஒரு பேத்தியிடம் தனது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தாத்தாவைப் போல பேசினார். தளம் இதழுக்காக சார்வாகன் குறித்த அவரது நினைவுகளைப் பதிவு செய்தேன். தான் பேசுவது பதிவு செய்யப்படுகிறது என்கிற உணர்வு தொடக்கத்தில் அவரிடம் இருந்தது. பிறகு மிக மிக இயல்பாகப் பேசித் தொடங்கினார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின், இந்தளவுக்குப் போதும். நீ எழுதி முடிச்சுட்டு கொண்டு வா என்றார்.

பிறகு, இப்படி பதிவு பண்ணி வைத்து எழுதலாம் என்றால் இனிமேல் நான் எழுத நினைப்பதை இப்படியே பதிவு பண்ணி வைத்து யாராவது எழுதித் தரச் சொல்லலாம் என்றார். நான் வேண்டுமானால் எழுதித் தரட்டுமா என்றேன். பார்க்கலாம் என்று மட்டும் சொன்னார்.

மரணத்தைப் பற்றிப் பேச்சு வந்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஆச்சரியமாக இருந்தது. நேற்று தோழி ஜீவலட்சுமியுடன் பேசிக் கொண்டிருக்கையில் நகரத்துச் சூழலில் மரணம், அதன் மதிப்பை இழந்து சாதாரணமாக ஆகிவிட்டதைச் சொல்லி வருத்தப்பட்டோம்.

கி.ரா. இறந்தவர்களைச் சென்று பார்த்து அழுது ஒப்பாரியெல்லாம் வைக்கத் தேவையில்லை. சத்தமில்லாமல் எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். நான் இறந்தால் கூட யாரும் பார்க்க வராதிங்க. மேளம் அடிப்பது, வெடி வெடிப்பது ஒப்பாரி வைப்பது, அப்புறம் பால் ஊத்துற சடங்கு, 16ஆம் நாள் சடங்கு, எதுவும் வேணாம். எரிச்ச சாம்பலைக் கூட அங்கேயே விட்டுடுங்க. அத எதுக்குக் கொண்டு போய் கடலில் எல்லாம் கரைச்சுக்கிட்டு. அதேபோல அஞ்சலிக் கூட்டம் வைக்கறது, போட்டோ வைக்கறது, சிலை வைக்கறது எதுவும் வேண்டாம் என்றார் ரொம்ப இயல்பாக. செத்ததுக்குப் பின் சிலை வைக்காதீர்கள் என்று சொன்ன புதுமைப்பித்தனின் குரல் காதில் கேட்டது.
முதல் முதலில் குறுநாவல் எழுதிய சூழலையெல்லாம் பகிர்ந்து கொண்டார். தமிழ் இந்து நாளிதழில் அவர் எழுதும் மனுசங்க தொடர் குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார்.
நான் என் தாத்தாவைப் பார்த்ததில்லை. இன்று கி.ரா.வைச் சந்தித்து விட்டு வெளியேறுகையில் என் தாத்தனுடன் பேசிக் கொண்டிருந்த உணர்வைப் பெற்றேன். ஆசிர்வதிக்கப்பட்ட மாலைப்பொழுது.

புதன், 6 ஜனவரி, 2016

பெருமழைக் காலத்தின் நாப்கின்கள்

பெருமழைக்காலத்தின் நாப்கின்கள்
-- மனுஷி
பள்ளிக்கூட வயதில் மழைக்காலம் வந்துவிட்டாலே புது உற்சாகம் தொற்றிக் கொள்ளும். கெடில நதிக் கரையோரத்தில் எங்கள் பள்ளிக்கூடம் இருப்பதால் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடும். வெள்ளம் கொஞ்சம் மட்டுப்படும் மட்டும் பள்ளிக்கூடம் விடுமுறை விடுவார்கள். மழை கொஞ்சம் விட்டதும் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று வேடிக்கைப் பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது எப்போதாவது ஒன்றிரண்டு குடிசையின் மேல்கூரை மிதந்து வரும். அதன்மீது கல்விட்டு எறிந்து விளையாடுவோம். அழுக்கு நிறத்தில் பேரிரைச்சலுடன் தன் போக்கில் செல்லும் ஆற்றை அவ்வளவு அச்சத்தோடு பார்த்திருக்கிறேன்.
புதுவையின் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று ஊசுட்டேரி. படகுப் போக்குவரத்து, ரெஸ்டாரண்ட் வசதிகள் என ஊசுட்டேரி இப்போது சுற்றுலாத்தளமாக மாறிக் கொண்டிருக்கிறது. என் மனதுக்கு மிக நெருக்கமான இடம் அதுதான். (சுற்றுலாத்தளம் என்பதால் அல்ல). அந்த ஏரிக்கரையில் அமர்ந்துவிட்டு வந்தால் மனதுக்குப் பிடித்த தோழியுடன் மனம் விட்டுப் பேசியது போல அவ்வளவு நிறைவாக இருக்கும். சென்ற மாதம் (மழைக்கு முன்பு) அந்த ஏரிக்குச் சென்று பார்த்தபோது, தண்ணீர் இல்லாமல், அங்கங்கே நாணல் புதர்கள் மண்டிப்போய் கட்டாந்தரையாக இருந்தது. சிதைந்துபோன ஒரு எலும்புக்கூட்டைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு வந்தேன். அங்கே வசித்த மீன்கள் என்னவாயின? அங்கே வந்து செல்லும் பறவைகள் வற்றிப்போன ஏரியை வந்து பார்த்துவிட்டு ஏமாந்து திரும்பியிருக்குமே? இந்த ஏரி மீண்டும் எப்போது நிரம்பி வழியும்? சிறு கடலின் சாயலில் இதன் உடல் எப்போது பொலிவு பெறும்? வழக்கம்போலவே அதன் கரையில் அமர்ந்து சின்னஞ்சிறு அலைகளுடன் எப்போது உரையாடுவேன்? கேள்விகளுடன் திரும்பினேன்.
ஜன்னலோரம் இருந்தபடி மழையை வேடிக்கைப் பார்ப்பது, தொட்டிச் செடிகளை மழைநீரில் படும்படி நகர்த்தி வைப்பது, மழையில் நனைந்தபடி ஸ்கூட்டியில் போய் தேநீர் அருந்துவது, முகநூலில் மழை குறித்துப் பதிவிடுவது, முகநூலில் பதிவிடப்பட்ட மழைப்பதிவுக்களுக்கு லைக் இடுவது, மழை மீம்ஸ்களைப் படித்து இரசிப்பது - இப்படித்தான் இந்த வருடத்தின் மழைக்காலம் எனக்குத் தொடங்கியது. அவ்வப்போது பக்கத்து வீட்டில் மழை குறித்த செய்திகளைப் பார்ப்பேன். சென்னையில் விடாமல் பெய்து கொண்டிருந்த மழை கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவிதப் பதற்றத்தைத் தொற்றச் செய்தது. பள்ளி கல்லூரி விடுமுறை என்னும் செய்தியைத் தாண்டி ஏதோவொரு விபரீதம் கண்முன்னால் நடக்கவிருப்பதைச் சொன்னது.
முதல்முறையாக தனியாக ஒரு வீட்டில் இருந்து இந்தப் பேய்மழையை எதிர்கொள்ள பயந்தேன். கனவிலும்கூட ஒரு நகரம் முழுக்க தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் கப்பல்களில் பயணம் செய்கிறார்கள். கனவில், காப்பாற்றச் சொல்லும் அவலக்குரல்கள் தூக்கத்தைச் சிதைத்தன. இனிமேலும் அறைக்குள் இருந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொட்டும் மழையில் ஊசுட்டேரிக்குச் செல்ல முடிவெடுத்தேன். புதுவையில் இந்திராகாந்தி சிக்னல் வரை மழையில் நனைந்தபடி போனது கொஞ்சம் ரொமாண்டிக்காகத்தான் இருந்தது. ஆனால், இந்திராகாந்தி சிக்னல் ஒரு சிறு குளம் போல இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்தச் சிறு குளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது கிழக்கு நோக்கி. அந்தச் சிறு வெள்ளத்தில் பச்சை நிற பாட்டிலின் அடிப்பாகம் மிதந்து போய்க் கொண்டிருந்தது. நடந்து வருபவர்களின் கால்களில் அது கிழித்து விடாமல் இருக்க வேண்டுமே என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சிறு படகைப் போல மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தது. பின்னாலேயே இன்னொரு பாட்டில் ஓடும்.
அந்தக் கொட்டும் மழையில் டிராபிக் போலீஸ் தன் பணியை வெகு சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார். எப்போதுமே கடுகடுவென பேசி, விரட்டிக் கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ்காரர்களை பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு, இவரது செய்கை வித்தியாசமாகத் தெரிந்தது. அவ்வளவு கருணையுடன் வாகங்களையும், பைக்கையும் நிறுத்தி வழி மாற்றி விட்டார். சாலையைக் கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்த இரண்டு வயதான பெண்களைக் கைப்பிடித்து அழைத்து வந்து டெம்ப்போவை நிறுத்தி ஏற்றி விட்டார். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய வயதான பெரியவரையும் அவரது மகனையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பினார். அந்தப் பக்கம் இன்னும் தண்ணி அதிகமா இருக்கு. ஆக்சிலேட்டரை விட்ராதிங்க. அப்புறம் வண்டி நின்னுடும் என்றார். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் புன்னகையுடனேயே இதைச் செய்தார்.
சிக்னல் கடந்ததும் அவர் சொன்னது புரிந்தது. முட்டிக்கால் தாண்டி தண்ணீர். அவர் சொன்னது போலவே என் பக்கத்தில் இருந்தவரின் டிவிஎஸ் நின்று விட்டது. என்னுடைய ஸ்கூட்டியும். இன்னொருவரின் ஸ்கூட்டியும். கிக் ஸ்டார்ட் செய்வதற்கான அவகாசம் இல்லை. பேருந்து கடக்கும்போதெல்லாம் தண்ணீர் இடுப்பைத்தாண்டி அலையாக இழுத்தது. பத்திரமாக தள்ளிக் கொண்டு போய் கொஞ்ச தூரத்தில் சாலையில் நிறுத்தி கிக் ஸ்டார்ட் செய்தால் கிளம்புவேனா என அடம்பிடித்தது. அப்போதுதான் நான் நின்றிருந்த இடத்தைச் சுற்றி அத்தனை பைக்குகள். ஸ்டார்ட் ஆகாமல். எல்லாமே சைலன்சரில் தண்ணீர் புகுந்து கொண்டு கிளம்ப மறுத்தன. ஸ்கூட்டியில் வந்த ஒரு இளைஞன் அவனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அங்கு ஸ்டார்ட்டிங் ட்ரபில் செய்த ஒவ்வொரு வண்டியாக முடிந்தவரை முயற்சி செய்து ஸ்டார்ட் செய்து கொடுத்தான். மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் ஒரு மெக்கானிக்காக இருக்க வேண்டும். ஆனால், ஒருவரிடம் கூட பைசா வாங்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. இது பெருங்கருணையின் காலமா?
நிறைமாத கர்ப்பினியின் பொலிவான முகத்தைப் போல ஊசுட்டேரி மழையினால் பொலிவு பெற்றிருந்தது. உயிர் பெற்று எழுந்து வந்த ஏதொவொரு புராணக் கதாப்பத்திரம் போல கண்முன்னால் நின்று கொண்டிருந்தது ஊசுட்டேரி. மழை விடாமல் பெய்து கொண்டேதான் இருந்தது.
பயணி நண்பர்கள் இசைப்ரகாஷ், தர்மராஜ், ராஜகோபால், ரத்னவேல் ஆகியோர் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெண்புள்ளி எனும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு முழுக்க சைக்கிள் பயணம் கிளம்பினார்கள். எல்லா ஊர்களையும் சைக்கிளில் சுற்றிவிட்டு, அந்தந்த ஊரில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டு, அதன் தொடர்ச்சியாக புதுவையை வந்தடைந்தனர். சென்னையில் இருந்து கிளம்பிய அவர்கள் நால்வரும் எல்லா ஊர்களையும் சுற்றி முடித்தபின், புதுவையிலிருந்து சென்னையை அடைவது தான் அவர்களின் பயணத் திட்டம். அதன்படி நாகப்பட்டினத்தில் புதுவை வந்தடைந்தனர். சென்னையில் மழையினால் உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் செய்தியை முகநூல் வழியாகக் கேள்விப்படுகிறேன். சென்னைக்குப் போய் ஏதாவது இதுக்குச் செய்யனும் என்று நண்பர்கள் பேசி கொண்டிருக்கையில் உள்ளுக்குள் தோன்றியது ‘சுனாமியின்போதும், தானே புயலின் போது கடலூர் மாவட்ட கிராமங்கள் பெரிதாகப் பாதிப்புக்கு உள்ளானது. இந்தப் பெருமழையில் அந்தக் கிராமங்கள் என்னவாயின. ஏன் மீடியாக்கள் எதுவும் கடலூரைப் பற்றிப் பேசவேயில்லை’ என்று. இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் திண்டுக்கல்லில் இருக்கும் என் தோழி சாரா சித்தாரா போன் செய்து, இந்த மழையினால் சென்னையில் மட்டுமல்ல, கடலூரிலும் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள். நிறைய களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நீங்கள் செய்ய முடியுமா? உங்கள் தொடர்பு எண்ணை முகநூலில் ஷேர் செய்யட்டுமா என்று. ஏற்கனவே தோழி ஜீவலட்சுமி போன்ற பலர் சென்னையில் என்னுடைய அறையில் இவ்வளவு பேர் தங்கிக் கொள்ளலாம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் என்று அலைபேசி எண்ணை முகநூலில் பதிவிட்டிருந்ததைப் பார்த்தேன். சமூக வலைதளங்களில் செல்பேசி எண்ணைப் பகிர்வதனால் வரும் பின்விளைவுகள் பற்றியெல்லாம் அவர்கள் யோசித்தார்களா தெரியாது. யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே அப்போது தோன்றியது. அவ்வளவு பெரிதாய் ஒன்றும் ஆகிவிடாது என்ற எண்ணத்தில் சாராவிடம் ஓக்கே சொன்னேன்.
ஒருபக்கம், உதவி செய்வதற்காக முன்வரும் நல்ல உள்ளங்களின் போன் கால்கள். இன்னொரு பக்கம் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள். உணவு வரவேயில்லை, வேறெந்த பொருட்களும் வரவேயில்லை. கொஞ்சம் அனுப்பி உதவி செய்யுங்க என்று கேட்கும் முகம் தெரியாத அவலக்குரல்கள். கொட்டித்தீர்த்த மழையில் பன்னிரெண்டு நாட்கள் இப்படித்தான் ஓடிப் போயின. இந்த நேரத்தில் தான் போன் வரும் என்று சொல்ல முடியாது. கடலூர் மக்களுக்கு இவ்வளவு உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள் அனுப்பத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி வரும் போன் கால்களைக் கடவுளின் குரல்களாக மட்டுமே பார்த்தேன். உணவுப் பொட்டலங்களையும் பிரெட் பாக்கெட்டுகளையும் பிஸ்கட் பாக்ஸ்களையும் எடுத்துச் செல்லும்போது கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வண்டி வரும் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்து ஏக்கத்துடன் நிற்கும்போது ‘என்னடா இது வாழ்க்கை’ என்று ஒரு கணம் தோன்றும். கை நீட்டி ஒருவரிடம் உதவி கேட்பதற்கு அவ்வளவு எளிதாகத் தன்மானம் இடம் கொடுத்துவிடாது. ஆனால், ஒரு வேளை உணவை யார் நமக்குக் கொண்டு வந்து தருவார்கள் என்று காத்திருப்பது எவ்வளவு கொடுமை. அந்தக் கொடுமையை இந்த மழை என் மக்களுக்குச் செய்தது.
மாதவிடாய்க் காலத்தில் காட்டன் துணி பயன்படுத்துவதை நிறுத்தி, சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தத் தொடங்கிய தருணம் அது. எப்போதும் அக்காவே வாங்கி வந்து விடுவார். ஒருமுறை கடைக்குப் போய் வாங்கும்போது கடையில் இருந்தவர் ஆண். அவரிடம் எப்படிக் கேட்பது என அவ்வளவு தயக்கம். கூச்சம். கொஞ்சம் நேரத்தில் புரிந்து கொண்ட அவர், அவரது மனைவியைக் கூப்பிட்டு, இந்தப் பொண்ணுக்கு என்ன வேணும் கேளு என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். நாப்கின் வேண்டும் என்றதும் ஒரு நியூஸ்பேப்பரில் சுற்றி, கறுப்பு நிற ப்ளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தார். அதை வாங்கிய உடனேயே காலேஜ் பேக்கிற்குள் திணித்துக் கொண்டு சென்ற நாட்கள் உண்டு. ஒருமுறை சீனியர் அக்கா ஒருவர், நாப்கின் வாங்கும்போது ’ப்ரட் வாங்கிட்டுப் போறாங்கடா’ என்று பையன்கள் கிண்டல் பண்ணதாகச் சொல்லி அழுதார். சானிட்டரி நாப்கின்கள் அவ்வளவு கேலிக்குறிய, மறைத்து வாங்க வேண்டிய ஒரு பொருளாக இருந்தது. இந்த மழைக்காலத்துக்கு முன்பு வரை.
இந்தப் பெருமழைக் காலம் இதை உடைத்தது. உணவுப் பொருள்களைத் தாண்டி, நிவாரணப் பொருட்களில் நாப்கின்களும் உள்ளாடைகளும் வந்து சேர்ந்தன. வாங்கி அனுப்பிய பலரும் ஆண்கள். அதைச் சுமந்து சென்ற பலரும் ஆண்கள். ஆனால், களப்பணியின்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். எல்லாப்  பொருட்களையும் கடகடவென்று பிரித்துக் கொடுக்கும் நண்பர்கள், சானிட்டரி நாப்கின்கள்  கொடுக்கும்போது மட்டும் யாராவத் பெண் ஒருவர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன மனநிலை இன்னமும் நெருடலாகவே இருக்கிறது. நாப்கின்களைப் பெற்றுக் கொள்ளும் பெண்களும் கூட, அவ்வளவு கூச்சத்துடன், அவ்வளவு வெட்கத்துடன், அவ்வளவு தயக்கத்துடன் வாங்கி உடைக்குள் அல்லது முதுகுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டதைப் பார்த்ததும் மனம் என்னவோ செய்தது. ஆனால் இதையெல்லாம் மீறி, கூனிமேடு பகுதியில் நாப்கின்களைக் கொடுத்தபோது சில பெண்கள் கைகளைப் பற்றிக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டேன்க்கா இது இல்லாமல். தேங்க்ஸ்க்கா என்று ஒரேயொரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அந்த வார்த்தையை விட கை அழுத்தத்தில் உணர்ந்தேன் அந்த வலியை.
இந்தப் பணிகளுக்கு இடையிலும் சில தொந்தரவுகள் மனதை நெருடச் செய்தன. ஹாய், ஹவ் ஆர் யூ, யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ் என்றெல்லாம் வரும் மெசேஜ்கள் வரும். அதைப்பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படி வரும் மெசேஜ்களுக்கு ’வணக்கம் சார். மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மட்டும் பேசுங்க. பர்சனல் சாட் வேண்டாம்’ என்று சொன்னால் ‘மெசேஜ் அனுப்பக் கூடாதுனு சொல்ற நீ எதுக்குடி ஃபேஸ்புக்ல நம்பர் ஷேர் பண்ற’, ‘மெசேஜ் அனுப்பக் கூடாதுனு சொல்லிட்டு ஒரு மணி வரைக்கும் ஆன்லைன்ல இருக்க’ என்றெல்லாம் ரிப்ளை வரும். உடனடியாக ப்ளாக் செய்துவிட்டு அடுத்த வேலை என்ன, எங்கிருந்து பொருட்கள் வருகின்றன, எந்தப் பகுதி மக்களுக்குத் தேவை இருக்கிறது, யார் மூலமாக, அல்லது எப்படி அதைக் கொண்டு போய் அவர்களிடம் சேர்ப்பது இப்படித்தான் யோசித்தோம். என் போன்ற பெண் தோழிகள் பலரும் சந்தித்த பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஆனால், இதற்கெல்லாம் கோபப்பட நேரமில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் அப்படித்தான்.
இன்னொரு மனதுக்குச் சங்கடமான இரண்டு நிகழ்ச்சி.
கடலூர் மக்களுக்கென வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து இரண்டு டிரக்கில் நண்பர் ஒருவர் ஏற்றி வைத்தார். நிவாரணப் பொருட்களை அடித்துப் பிடிங்குவது நடந்து கொண்டிருந்ததால் நேரடியாகக் கடலூருக்கு அனுப்பி வைக்காமல் புதுவைக்கு வரவழைத்து இங்கிருந்து களப்பணியாளர்கள் மூலம் கொண்டு சேர்க்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால், டிரக் கிளம்பும்போது பெங்களூர் நண்பர், டிரக் நேரடியாகக் கடலூருக்குக் கிளம்பிடுச்சு, ஒரு பெயரைக் குறிப்பிட்டு அவர் தான் கடலூருக்கு அனுப்பச் சொன்னார் என்றார். அந்த நபர் யாரென்று எங்கள் நண்பர்கள் யாருக்கும் தெரியவில்லை. இடையில் எப்படியோ புகுந்து விட்டார். அந்த நபரின் எண் வாங்கி, அவரிடம் விசாரித்தோம். இல்ல மேடம் நாங்களே டைவர்ட் பண்ணிட்டோம். இங்க போலீஸ் பாதுகாப்பெல்லாம் ரெடி பண்ணிட்டோம். கடலூருக்குத்தான் ட்ரக் வருது. நீங்க பயப்பட வேண்டாம் என்றார். உங்களுக்கு இந்தத் தகவலை யார் சொன்னது என்றால் அவரிடம் தெளிவான பதில் இல்லை. பிறகு உடனடியாக அந்த டிரக் டிரைவர் நம்பரை வாங்கி, கடலூருக்குச் செல்ல வேண்டாம். திருவள்ளூர் மாவட்டத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று வழிமாற்றி விட்டு, ஒருவழியாக அந்தப் பொருட்கள் எல்லாம் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேருவதற்குள் ஒருவழியாகிவிட்டது.
இன்னொரு டீம், நிவாரணப் பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு, கடலூருக்குச் செல்லும் வழியில் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு போன் செய்தார். பாண்டிச்சேரிக்கு வாங்க. இங்கிருந்து களப்பணியாளர்கள் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கலாம் என்று சொல்லி பாண்டிச்சேரிக்கு வரச் செய்தோம். பொருட்களை வீட்டின் முன் இறக்கி வைக்க அவ்வளவு யோசித்தார்கள். உண்மையிலேயே நாங்கள் களப்பணியாளர்கள் தானா? அடையாள அட்டையைக் காட்டுங்கள்? ஏன் வீட்டில் இறக்கச் சொல்றிங்க? கரக்டா கொண்டு போய் கொடுத்துடுவிங்களா? என்றெல்லாம் ஏகத்துக்கும் கேள்வி கேட்டுவிட்டு, பிறகு ஒரு நோக் பேட்டில் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை எழுதி, அதில் எங்கள் நண்பர்களைக் கையெழுத்திடச் சொல்லி, நம்பர் வாங்கிக் கொண்டு, எந்தப் பகுதியில் கொடுக்கிறிங்களோ கொடுக்கும் போது போட்டோ எடுத்து அனுப்புங்க என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ப்ரபா ஒயின்ஷாப் ஓனருங்களா கடை எப்ப சார் தெறப்பிங்க என்ற ரேஞ்சில் கொடுத்திட்டிங்களா, போட்டோ எப்ப சார் அனுப்புவிங்க என்று கேட்டு நச்சரித்துவிட்டார். எந்தவிதமான லேபிளும் இல்லாமல், பேனரும் இல்லாமல், பின்புலமும் இல்லாமல் நண்பர்கள் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகள் செய்யும்போது இப்படி நாங்கள் சந்தேகிக்கப்படுவோம் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் பகுதிகளில் எந்தவிதமான புகைப்படங்களையும் எடுக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால், உதவி செய்வதைப் புகைப்படம் மூலமாக ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைப்பது என்ன மாதிரியான மனநிலை? இப்படி எல்லாவற்றையும் இழந்து யாராவது நமக்கு உதவ மாட்டார்களா என்று காத்திருக்கும் அவலச் சூழலில் நாம் இருந்தால் புகைப்படம் எடுத்துக் கொள்வதை அனுமதிப்போமா? நம் தன்மானம் அதற்கு இடம் கொடுக்குமா? பிறருக்கு உதவி செய்வது நமக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், வாங்குபவர்களுக்கு?
நான்கைந்து நாட்களாகச் சென்னையில் இருக்கும் பல நண்பர்களையும் தோழிகளையும் தொடர்பில் பிடிக்க முடிக்காமல் தவித்தவர்களும் நானும் ஒருத்தி. நான்கு நாட்களுக்குப் பிறகு மடிப்பாக்கத்தில் இருந்து பேசிய தோழி, பாரதி, இங்க சாப்பாடே வரல. சொல்லும்போது  கிட்டத்தட்ட அழுதேவிட்டாள். சென்னையில் களப்பணியாளர்கள் மூலம் உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. மறுநாள் போன் பண்ணி, பாரதி எனக்குக் காரக்குழம்பும் உருளைக்கிழங்கும் வேண்டும் என்றாள். அடியேய் காமெடி பண்ணாத. எவ்வளவு பேருக்குச் சாப்பாடு வேண்டு அதை மட்டும் சொல் என்றேன். இல்லை நிஜமாவே காரக்குழம்பு சாப்பிடனும் என்றாள். இரண்டு நாள் சாப்பிடாமல் கிடந்துட்டு இப்போ சாப்பாடு கிடைக்குது என்றதும், வாய்க்கு ருசியா கேக்குதா என்று கோபப்பட்டேன். அவள் அழுது கொண்டே சொன்னாள். இல்ல இப்படியே மழை பெய்து சென்னை மூழ்கிடுமாம். எப்படியும் சாகத்தானே போறோம். பிடிச்ச காரக்குழம்பு சாப்ட்டு சாகலாமே. உங்களையெல்லாம் திரும்பப் பார்ப்பேனா தெரியல என்றாள். அவளை அணைத்து ஆறுதல் சொல்லும் அளவுக்கு அவள் அருகில் இல்லை. ஆனால், இந்த மழையைச் சபித்தேன். மழைநாளில் இப்படியெல்லாம் வதந்திகளைப் பரப்பிவிடும் மனிதர்களை அதிக அதிகமாய்ச் சபித்தேன்.
மழைவெள்ளம் வடிந்த பிறகும் போர்வை, பாய் போன்ற பொருட்களைக் கொடுப்பதற்காகச் சென்றோம். அப்போது ரங்கநாதபுரம் பகுதியில் மழையினால் சேதமடைந்த வீடுகளாகப் பார்த்துப் பார்த்துப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்புகையில் ஒரு அம்மா கேட்டார். ‘ஏம்மா நீங்கள்லாம் அரசியல்ல எதுவும் நிக்கப் போறிங்களா?’ அந்த மனநிலை எனக்குப் புரியாமல் இல்லை. எலக்‌ஷன் டைம்ல ஓட்டு கேட்டு வருவாங்கல்ல. அப்ப ஞாபகம் வச்சுக்கோங்க இதையெல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தோம்.
இந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான காலம். வெள்ளத்தில் நீந்தியபடி உணவுப் பொட்டலங்களையும், பிற அத்தியாவசியப் பொருட்களையும் சுமந்தபடி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்துக் கொடுத்து அவர்கள் மனம் நிறையச் செய்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஏராளமானோரை இந்தப் பெருமழை அடையாளம் காட்டியது. அட்சயப்பாத்திரங்களைச் சுமந்து சென்ற மணிமேகலைகளை அடையாளம் காட்டியது இந்த மழை.
எல்லாவற்றிற்கும் மேலாக, எழுதுவதைத் தாண்டி நான் செய்ய வேண்டியது என்ன என்பதையும் எனக்கு உபதேசித்தது இந்தப் பெருமழை.
(நன்றி : உயிர்மை ஜனவரி 2016)