ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்த இரவின் குறிப்புகள் - பெசண்ட் நகர் கடற்கரை


சென்னைக்கு வந்த வேலை முடிந்ததும் உடனே பாண்டிச்சேரி கிளம்பிவிடுவது வழக்கம். இப்போதெல்லாம் அப்படியல்ல. பெருநகரத்தின் தேவதைகளைச் சந்தித்து ஒரு தேநீராவது அருந்திவிட்டுக் கிளம்பினால் தான் அந்தப் பயணம் முழுமை பெறுகிறது. ஏனென்றால் தேநீர் என்பது தேநீர் மட்டுமல்ல.

இன்றைக்கும் அப்படியே வந்த வேலை முடிந்தவுடன் முதலில் அகிலாவைச் சந்தித்து விட்டுக் கிளம்புவதாகத் திட்டம். அகிலாவைச் சந்தித்தபிறகு,  சாரதாம்மாவைச் சந்திக்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

கூகுள் மச்சான் உதவியுடன் சாரதாம்மா சொன்ன இடத்தை அடைந்தோம். பிறகுதான் தெரிந்தது நான் சென்னையில் வேலை பார்த்த நாட்களில் நானும் கதிரும் பெசண்ட் நகர் கடற்கரையில் வாக்கிங் போய்விட்டு ஓய்வெடுக்கும் ஒட்டுச்சுவரின் எதிரில்தான் சாரதாம்மாவின் வீடு. அட இது தெரியாம போச்சே என்றபடி வீட்டுக்குச் சென்றோம்.

பெசண்ட் நகர் கடற்கரையையொட்டி அமைதியான குடியிருப்பு. இரவின் ஒளியில் மரங்களின் நிழலில் தெரு அவ்வளவு அழகாக இருந்தது. அங்கங்கே தெருவின் உரிமையாளர்கள்போல நாய்க்குட்டிகள் படுத்திருந்தார்கள். சாரதாம்மாவின் வளர்ப்புகள்.


வீட்டுக்குள் நுழைந்ததும் சாரதாம்மா சாக்கோவைக் (பூனைக்குட்டி) கொண்டு வந்து காட்டினார். சின்னூண்டு பஞ்சு பொம்மை போல அவ்வளவு அழகு சாக்கோ குட்டி. கண்கள் குட்டி  கோலி குண்டு போல இருந்தன. அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பிரௌனி (இன்னொரு பெரிய பூனை) உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார். சின்னக்குட்டி சாக்கோவைத் தூக்கிக் கையில் வைத்து முத்தம் வைத்தேன். முகத்துக்கு நேராக வைத்துக் கொஞ்சினேன். திராட்சைக் கண்களை உருட்டிப் பார்த்தது. அகிலா கையில் வாங்கிக் கொஞ்சியதும் கொஞ்ச நேரத்தில் உடலை வளைத்து நெளித்தபடி கையிலிருந்து நழுவி ஓடியது. பிஸ்கட் நிற மல்லிகைச் சரமொன்று தரையில் தவழ்ந்து செல்வது போல இருந்தது சாக்கோவின் நடை.

சாரதாம்மா மிதமான சூட்டுடன் ஒரு காஃபி கொடுத்தார். அகிலா காஃபி வேண்டாம் எனச் சொன்னதால் நான் மட்டும் குடித்தேன். என் ரூம் வந்து பாரேன் எனக் குழந்தை போல சாரதாம்மா  அழைத்ததும் உள்ளே போனோம். அவ்வளவு நேர்த்தியாக வைத்திருந்தார் அறையை. அவர் அறையைப் பேரழகாகக் காட்டுவதற்கென்றே ஜம்மென்று அமர்ந்திருந்தார் என் உயரத்திற்கு ஒரு ப்ளூ பாய் பொம்மை. என்னை மறந்து துள்ளிக் குதித்தேன். கட்டிப் பிடித்துக் கொண்டேன். வயதை மறக்கச் செய்யும் மந்திர வித்தைகள் பொம்மைகளுக்கு எப்போதும் உண்டு.

ப்ளூ பாய் பொம்மையுடன் கொஞ்சல்கள் முத்தங்கள், அவனோடு மாறி மாறிப் புகைப்படங்கள் என எல்லாம் முடிந்தபின் பீச் போகலாம் எனக் கிளம்பினோம். பீச் என்றால் எனக்கு கடற்கரை மணலில் நடப்பது, அலையில் கால்நனைப்பது இதோடு சேர்த்து நெருப்புப் பொறியில் சுட்டுத் தரும் பேபி கார்னும் தான்.

சுட்ட பேபி கார்ன், உருளைக்கிழங்கு ரோல் என எல்லாம் வாங்கிச் சாப்பிட்டப்பின் கடலலைகளை நோக்கிப் போனோம். கல்லூரி பயின்ற நாட்களில் எனக்கு வாய்க்காத, ஆனால் நான் ஆசைப்பட்ட சிலவற்றில் ஒன்று இரவுநேரத்தில் கடற்கரை மணலில் தோழிகளோடு காலாற நடப்பது. சாரதாம்மா மற்றும் அகிலாவுடன் கடற்கரை மணலில் நடந்தபோது கல்லூரித் தோழிகளோடு நடப்பதாகத்தான் உணர்ந்தேன் அந்தக் கணம்.

மெல்ல பொங்கி எழுந்த அலை கரையை வந்து தழுவிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றோம். மூவருமே கால் நனைக்கவில்லை. கால் நனைக்காமல் இரவின் கடலை ரசிப்பது அன்றைக்குப் போதுமானதாக இருந்தது. அதுவே இதமாகவும் இருந்தது.

கரையில் கடற்கரை மணலைச் சின்ன சின்ன மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அதன்மேல் ஏறியதும் வானம் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போல ஒரு பிரம்மை. மணல்குன்றின் மேல் அமர்ந்தபடி ஊர்ந்து போன அரை நிலாவையும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சதிரங்களையும் எண்ணிக் கைக்காட்டி கொண்டிருந்தோம். இரவில் அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தெரியும் நேர்க்கோட்டில் தெரியும் மூன்று நட்சத்திரம் அன்றைக்கும் பார்த்தோம். ஒன்று… இரண்டு… மூன்று.. அதற்குமேல் நட்சத்திரங்களை எண்ணவில்லை. போதும் என்றிருந்தது.

இரவு இதமான கடற்கரை குளிர் காற்றுடன் நகர்ந்து கொண்டிருக்க சாப்பிடக் கிளம்பினோம்.

நடைபாதையில்  உப்புக் காற்றுக் குளிரில் ஆயா ஒருவர், வளையல், மணி, கொலுசு, கம்மல் விற்பதைப் பார்த்ததும் மனம் நின்றதும் கால்களும் நின்றன. எனக்குப் பிடித்த கல் வளையல். சைஸ் சரியா இருந்தால் வாங்கிக்கலாம் என்று எடுத்துப் பார்த்தேன். மூன்று வளையல்கள் மட்டுமே எனக்குப் பொருத்தமாக இருந்தன. பக்கத்தில் கண்கள் போக, நான் விரும்பும் கல் மணி, ஜிமிக்கி, கல் கம்மல், க்ருஷ்டல் கொலுசுஇவை வாங்கச் சொல்லிச் சுண்டி இழுக்க, திடீர் பர்சேஸ் பெரிய அளவில் நடந்தேறியது.

பிடிச்சதை எடும்மா, அப்புறம் விலை பேசிக்கலாம் என்று சாரதாம்மா சொன்னதும் இரண்டு ஜிமிக்கி, இரண்டு கல் மணி, ஆறு தொங்கும் கல் கம்மல், மூன்று மணி, ஒரு கொலுசு, அகிலாவுக்கு ஒரு கொலுசு என அள்ளி எடுத்துக் கொண்டோம்.

அந்தக் கடையின் உரிமையாளர் பொன்னி ஆயா (பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்) மஞ்சள் பூசிய முகம், பெரிய கல் வைத்த மூக்குத்தி, முகமெங்கும் முதுமையின் கோடுகள், வாரி முடிந்த கொண்டை, வெற்றிலைப் போட்டுச் சிவந்த உதடு, ஒரு காட்டன் புடவை அவ்வளவுதான். ஆனால் கிராமத்து மனுசியின் கலையான முகம். முதுமையின் மெருகேறிய அழகு.  ரொம்ப இயல்பான பேச்சு.

எங்க இருக்காங்க, இந்த ஆபரணங்கள் எல்லாம் எங்கிருந்து வருது என்ன சாப்டாங்க என்பது முதற்கொண்டு எல்லாம் பேசியபடி, நாங்கள் எடுத்தவற்றுக்கும் விலை கேட்டு நாங்கள் ஒரு கணக்கு சொன்னோம். பொன்னி ஆயா ஒரு விலை சொன்னார். பிறகு கொஞ்சம் பேரம் பேசி 600 ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார். ஒரு கைப்பையில் போட்டுக் கொடுத்தார். ஆயா சந்தோஷம் தானே உங்களுக்கு என்றோம். சந்தோஷம் மா. அப்புறமாவும் வாங்க என்றார். நிச்சயம் வருவோம் என்றபடிக் கிளம்பினோம். ஒரே இடத்தில் எனக்குப் பிடித்த ஆபரணங்களை வாங்கியதில் அதுவரை இருந்த பசி காணமல் போயிருந்தது.

அங்கிருந்து ஆதாமிண்டே தட்டுக்கடை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார் சாரதாம்மா. மிதமான வெளிச்சம் அன்றைய இரவு உணவுக்கு நிறைவான சூழலை உண்டாக்கிக் கொடுத்தது. வெளியில் இரண்டு டேபிள், உள்ளே ஐந்து டேபிள் அவ்வளவு தான் கடை. ஆனால்,  மலையாள உணவு வகைகள் மெனு கார்டை அலங்கரித்தன. ஆதாமிண்டே கடையில் அதுதானே இருக்கும். சிறப்பாக என்ன சொல்ல. புட்டுக் கொண்டைக்கடலை, தோசை, பீஃப் மசாலா, அயிலா மீன் வறுவல் என ஆர்டர் செய்தோம். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் பதினைந்து நிமிடத்தில் எல்லாம் வந்தன. புட்டு கொண்டைக்கடலை பிரமாதம். பீஃப் மசாலா தனி சுவை. பீஃப் மசாலாவுக்காகவே கூடுதலாக ஒரு தோசை ஆர்டர் செய்யலாம் போல இருந்தது. ஆனால், முதலில் ஆர்டர் செய்த தோசையிலேயே வயிறு நிறைந்திருந்தது. அயிலை மீன் வறுவல் தான் அளவில் பெரிதாக இருந்ததால் முழுதாகச் சாப்பிட முடியவில்லை. மிச்சம் வைக்கும்படி ஆகிவிட்டது.

ஆர்டர் செய்த எல்லாமும் சாப்பிட்டு முடித்தபின், சுலைமானி டீ அங்கே ரொம்ப ஃபேமஸ் என்று சாரதாம்மா சொன்னார். ஃபேமஸான விஷயத்தை நிச்சயமாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என மூன்று சுலைமானி டீ ஆர்டர் சொன்னோம். லெமன் டீ கலரிலேயே வந்தது. லெமன் டீ போல நினைத்து சியர்ஸ் சொல்லி முதல் சிப் குடித்ததும் இதுவரை குடித்திருக்காத புதிய சுவை. இதுவல்லவா தேநீர் என்று நாக்கு துள்ளிக் குதித்தது. என்ன மசாலா தூள் கலந்தார்கள் எனத் தெரியவில்லை. சென்னை வாழ்க்கை தந்த கசப்புகளை எல்லாம் வெளியே தள்ளிவிட்ட இனிப்பை நினைவுகளுக்குள் கொண்டு போகும் அற்புதமான தேநீர் அது. இனிமேல் சென்னை வந்தால் அதாமிண்டே தட்டுக்கடைக்கு வந்து சுலைமானி டீ குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அன்றைய சந்திப்பும். இரவு உணவும் மறக்க முடியாத அனுபவத்தின் நினைவுக் குவியலாய் மனதுக்குள் ஒட்டிக் கொண்டுவிட்டது.

மீண்டும் ஒருமுறை இதேபோல இவர்களோடு கொஞ்சம் முன்கூட்டியே வந்து தாமதமாகத் திரும்புவேன் என பெசண்ட் நகர் கடலிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

பேங்க் பரிதாபங்கள்



அவசரமாக எஸ்பிஐ அக்கவுண்ட் ஒன்றுக்குப் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. காலை நேரத் தேநீருக்குப் பிறகு வீட்டைக் கொஞ்சமாகச் சுத்தம் செய்துவிட்டு பேங்க் போனேன். இந்தியன் வங்கியில் நான் கணக்கு வைத்திருப்பதால் கோட்டக்குப்பம் பேங்க் சென்றேன். பணம் டெபாசிட் செய்வதற்கான ஸ்லிப் அங்கே இல்லை. யாரிடமும் கேட்கலாம் என்றால் பதில் சொல்லும் நிலையில் யாருமில்லை. எல்லோரும் பிஸியாக இருந்தார்கள். பதினைந்து நிமிடத்திற்கு மேல் காத்திருந்தபின் கவுண்ட்டரில் இருக்கும் பெண்மணியிடம் ஸ்லிப் கேட்கலாம் என்றால் வரிசையில் வாங்க என்றார். ஸ்லிப் எங்க இருக்குனு சொல்லுங்க மேடம் ஃபில் பண்ணிட்டு வருகிறேன் என்றேன். ஸ்லிப்பெல்லாம் இல்லை ஏடிஎம் கார்டுல ஸ்வைப் செய்து டெபாசிட் பண்ணச் சொன்னார். பொதுவாக அக்கவுண்ட்டில் மெயிண்ட்டனன்ஸ் பேலன்ஸ் தவிர இருப்பு வைப்பதில்லை. இருப்பில் உள்ள தொகை அடிக்கடி காணாமல் போவதால் அதிகமான தொகையோ கம்மியான தொகையில் கையில் வைத்துக் கொள்வதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன். வங்கிக் கணக்கில் பணம் அடிக்கடி மிஸ் ஆகிறது என்று புகார் செய்தும் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஏடிஎம்மில் பணம் இல்லை மேடம் கையில் தான் வைத்திருக்கிறேன் என்றேன். இல்லம்மா இப்பல்லாம் கார்டுல ஸ்வைப் பண்ணி தான் பண்றோம். இல்லனா நேரடியா மெஷின்ல போட்டு விடுங்க என்றார் முகம் பார்க்காமலேயே.
எஸ்பிஐ டெபாசிட் மெஷின் எங்கே இருக்கும் எனக் கேட்டேன். காதில் வாங்காதது போல இருந்தார். நண்பருக்கு போன் செய்து கேட்டேன். அவர் முத்தியால்பேட்டை மார்கெட் அருகில் பேங்க் இருக்கு அங்க போய் பார்க்கச் சொன்னார். அங்கே போனால் அப்படி எந்த மெஷினும் இல்லை. சரி பேங்கில் ஸ்லிப் ஃபில் பண்ணி போடலாம் என்றால் அங்கும் ஸ்லிப் இல்லை. அங்கிருந்தவரிடம் கேட்டால் அவரும் இந்தியன் வங்கியில் சொன்ன அதே வார்த்தையைச் சொன்னார். ஆனால் அவர் எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருக்கா என்ற கேள்வியைக் கூடுதலாகக் கேட்டார். அக்கவுண்ட் இல்லை என்றேன். அப்படியென்றால் மெயின் பிராஞ்ச் போங்க அங்க மெஷின் இருக்கு என்றார். மெயின் பிராஞ்ச் எங்கிருக்கிறது எனக் கேட்டேன். பக்கத்து கவுண்ட்டரில் இருந்த பெண்மணியிடம் மெயின் பிராஞ்ச் பாண்டிச்சேரியில் எங்க இருக்கு என்று கேட்டார். எனக்குத்ட் தெரியலையே என்றார் போனைப் பார்த்தபடியே.
மீண்டும் நண்பருக்குக் கால் செய்து மெயின் பிராஞ்ச் எங்க இருக்கு என்றதும் பீச் கிட்ட இருக்கு என்றார். எழுந்ததில் இருந்து இரண்டு டீ மட்டுமே குடித்திருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. பேங்க் வேலையை முடித்துவிட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம் என வண்டியில் கிளம்பினேன். கூகுள் மேப் உதவியுடன் கொஞ்சமே சுற்றியலைந்து மெயின் பிராஞ்சைக் கண்டுபிடித்தேன்.
உள்ளே நுழைந்ததும் செக்யூரிட்டியிடம் விவரத்தைச் சொல்லி ஸ்லிப் ஃபில் பண்ணனும் என்றதும் ஸ்லிப் ஃபில் பண்ணி அனுப்பினால் அறுபது ரூபாய் கமிஷன், மெஷின்ல போட்டால் இருபத்தி ஐந்து ரூபாய் கமிஷன். நீங்க மெஷின்ல போட்ருங்க. எல்லாரும் இப்போ அதைத்தான் யூஸ் பண்றாங்க என்றார். என்னிடம் ஒரேயொரு பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் தான் இருந்தது. ஏனோ அந்த பிங்க் தாளைப் பார்த்தாலே தூக்கம் இல்லாமல் ஏடிஎம் ஏடிஎம்மாக இரவும் பகலுமாக அலைந்த நாட்கள் நினைவுக்கு வந்து போகும். வேண்டா வெறுப்பாக அதைக் கையில் வைத்திருந்தேன். இப்போ நான் அனுப்ப வேண்டிய தொகையுடன் இருபத்தி ஐந்து ரூபாய் சில்லறை வேறு வேண்டுமே. என்னடா எனக்கு வந்த சோதனை நினைத்துக் கொண்டேன். கேஷ் கவுண்ட்டரில் போய் பிங்க் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என வரிசையில் போய் நின்றேன். நான் பதின்மூன்றாவது நபராக நின்றிருந்தேன். என்முறை வரும்வரை காத்திருந்தேன். என் காத்திருப்பு வீண் எனப் பிறகு தான் புரிந்தது. கேஷியர் சொன்னார், இது என்ஆர்ஐ பணம் கொடுக்கிற இடம். நீங்க ஐந்து அல்லது ஆறாவது கவுண்ட்டர் போங்க. பசி மயக்கம் கொஞ்சம் கோவமாக மாறியது. ஆனால், கோபப்பட இது நேரமல்ல. இன்னும் இரண்டு வேலைகளை முடிக்க வேண்டியிருக்கிறது என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ஆனாலும் முதல் வேலையான பணம் அனுப்பும் வேலையை முடிப்பதற்குள்ளாகவே மணி இரண்டரை ஆகியிருந்தது.

ஐந்தாவது கவுண்ட்டரில் அழகான கருநீலச் சுடிதார் அணிந்த பெண். அமைதியாக சிஸ்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். மேடம் மெஷின்ல அமைண்ட் டெபாசிட் பண்ணனும் இந்த இரண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் தருவிங்களா என்றேன். பதினைந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க என்றார். பதினைந்து நிமிடம் என்னை வெயிட் பண்ண சொன்னவர் அப்படி எதுவும் முக்கியமான வேலை செய்யவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார். நானும் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு மேடம்  சேஞ்ச் என்றேன். வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன்ல. குரலில் அப்படியொரு கடுமை. முகத்தில் அவ்வளவு ஒரு எரிச்சல். நான் என்ன அவங்க பர்சில் இருந்து பணம் கேட்டது போல நடந்து கொண்டார். பணம் வைத்திருக்கும் டிராவுக்கும் அவருக்கும் இரண்டு விரல் அளவு கூட இடைவெளி இல்லை. கையை நீட்டி ட்ராவை இழுக்க வேண்டும். அதற்கு இருபது நிமிடம் காத்திருக்கச் சொல்வது ஏன் எனப் புரியாமல் இருந்தது.

ஏற்கனவே பதினைந்து நிமிடம் சொன்னிங்க. இன்னும் வெயிட் பண்ண சொன்னால் என்ன அர்த்தம் மேடம். கொஞ்சம் அவசரம் என்று தான் கேட்கிறேன். நீங்க கொடுத்துவிட்டால் உங்களை ஏன் கேட்கப் போகிறேன் என்றேன். எவ்ளோ போடனும். எவ்வளவு என்று சொன்னேன்.

அந்த மாதிரி  போடமுடியாது. ரவுண்டா ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு, இரண்டாயிரம் இப்படித்தான் போடமுடியும் என்றார். அதெப்படி மேடம், எனக்கு அனுப்ப வேண்டிய அமவுண்ட் தானே அனுப்ப முடியும், வெறும் ஐந்நூறு ஆயிரம் மட்டும் தான் அக்சப்ட் பண்ணும் என்றால் அது என்ன மெஷின் என்றேன் கோபத்தை அடக்கிக் கொண்டு. என் வார்த்தைகளைக் காதில் வாங்காதது போல அலட்சியமாக அமர்ந்திருந்தார். சரி நான் பார்த்துக்கறேன் சேஞ்ச் மட்டும் கொடுங்க மேடம் என்றேன். ஆறாவது கவுண்ட்டரில் ஃபார்ம் ஃபில் பண்ணிக் கட்டுங்க. பேலன்ஸ் தருவார் என்றார். ஃபார்ம் ஃபில் பண்ணால் அறுபது ரூபாய் கமிஷன்னு சொன்னாங்க என்று சொல்லி முடிப்பதற்குள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஸ்லிப் ஃபில் பண்ணிக் கொண்டு ஆறாவது கவுண்ட்டர் போனால் ஒரு தாத்தா கியூவில் வாங்க என்றார் அடித்தொண்டையில். அவரும் ஏதோ கடுப்பில் இருந்திருப்பார் போல. பத்தாவது நபராக மீண்டும் வரிசையில் நின்றேன். எனது வரிசையில் நான் நான்காவது நபராக நான் நின்று கொண்டிருந்தபோது ஒரு போலிஸ்காரர் வந்தார். ஃபில் பண்ண ஸ்லிப்பையும் பணத்தையும் கொடுத்தார். இரண்டு நிமிடத்தில் ரசீதைப் பெற்றுக் கொண்டு புன்னகையோடு போய்விட்டார். அந்தத் தாத்தா அவரை கியூவில் வாங்க என்று சொல்லவில்லை. அவர் பாட்டுக்கு நின்று கொண்டிருந்தார். நான் அவர் பின்னால் நின்றிருந்தேன்.

என்முறை வந்ததும் ஃபில் பண்ண ஸ்லிப்பையும் பிங்க் நோட்டையும் கொடுத்தேன்.  இரண்டு நிமிடத்தில் வேலை முடிந்தது. நன்றி சார் என்று சொல்லிவிட்டு பணம் அனுப்பியதற்கான ரசீதை வாங்கிக் கொண்டு திரும்பினேன். இன்னமும் அந்த உம்மனாமூஞ்சி அக்கா எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தார்.

மேடம், ஒன்னும் சொல்லட்டுமா, நீங்க அழகா இருக்கிங்க. ஆனால் சிடுசிடுனு இருக்காங்க. கொஞ்சம் சிரிங்க. இன்னும் அழகா இருக்கும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

ஏசியால் குளிர்ந்திருந்த அந்த இடம் எனக்கு அவ்வளவு வெப்பமாக இருந்தது.