ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்த இரவின் குறிப்புகள் - பெசண்ட் நகர் கடற்கரை


சென்னைக்கு வந்த வேலை முடிந்ததும் உடனே பாண்டிச்சேரி கிளம்பிவிடுவது வழக்கம். இப்போதெல்லாம் அப்படியல்ல. பெருநகரத்தின் தேவதைகளைச் சந்தித்து ஒரு தேநீராவது அருந்திவிட்டுக் கிளம்பினால் தான் அந்தப் பயணம் முழுமை பெறுகிறது. ஏனென்றால் தேநீர் என்பது தேநீர் மட்டுமல்ல.

இன்றைக்கும் அப்படியே வந்த வேலை முடிந்தவுடன் முதலில் அகிலாவைச் சந்தித்து விட்டுக் கிளம்புவதாகத் திட்டம். அகிலாவைச் சந்தித்தபிறகு,  சாரதாம்மாவைச் சந்திக்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

கூகுள் மச்சான் உதவியுடன் சாரதாம்மா சொன்ன இடத்தை அடைந்தோம். பிறகுதான் தெரிந்தது நான் சென்னையில் வேலை பார்த்த நாட்களில் நானும் கதிரும் பெசண்ட் நகர் கடற்கரையில் வாக்கிங் போய்விட்டு ஓய்வெடுக்கும் ஒட்டுச்சுவரின் எதிரில்தான் சாரதாம்மாவின் வீடு. அட இது தெரியாம போச்சே என்றபடி வீட்டுக்குச் சென்றோம்.

பெசண்ட் நகர் கடற்கரையையொட்டி அமைதியான குடியிருப்பு. இரவின் ஒளியில் மரங்களின் நிழலில் தெரு அவ்வளவு அழகாக இருந்தது. அங்கங்கே தெருவின் உரிமையாளர்கள்போல நாய்க்குட்டிகள் படுத்திருந்தார்கள். சாரதாம்மாவின் வளர்ப்புகள்.


வீட்டுக்குள் நுழைந்ததும் சாரதாம்மா சாக்கோவைக் (பூனைக்குட்டி) கொண்டு வந்து காட்டினார். சின்னூண்டு பஞ்சு பொம்மை போல அவ்வளவு அழகு சாக்கோ குட்டி. கண்கள் குட்டி  கோலி குண்டு போல இருந்தன. அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பிரௌனி (இன்னொரு பெரிய பூனை) உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார். சின்னக்குட்டி சாக்கோவைத் தூக்கிக் கையில் வைத்து முத்தம் வைத்தேன். முகத்துக்கு நேராக வைத்துக் கொஞ்சினேன். திராட்சைக் கண்களை உருட்டிப் பார்த்தது. அகிலா கையில் வாங்கிக் கொஞ்சியதும் கொஞ்ச நேரத்தில் உடலை வளைத்து நெளித்தபடி கையிலிருந்து நழுவி ஓடியது. பிஸ்கட் நிற மல்லிகைச் சரமொன்று தரையில் தவழ்ந்து செல்வது போல இருந்தது சாக்கோவின் நடை.

சாரதாம்மா மிதமான சூட்டுடன் ஒரு காஃபி கொடுத்தார். அகிலா காஃபி வேண்டாம் எனச் சொன்னதால் நான் மட்டும் குடித்தேன். என் ரூம் வந்து பாரேன் எனக் குழந்தை போல சாரதாம்மா  அழைத்ததும் உள்ளே போனோம். அவ்வளவு நேர்த்தியாக வைத்திருந்தார் அறையை. அவர் அறையைப் பேரழகாகக் காட்டுவதற்கென்றே ஜம்மென்று அமர்ந்திருந்தார் என் உயரத்திற்கு ஒரு ப்ளூ பாய் பொம்மை. என்னை மறந்து துள்ளிக் குதித்தேன். கட்டிப் பிடித்துக் கொண்டேன். வயதை மறக்கச் செய்யும் மந்திர வித்தைகள் பொம்மைகளுக்கு எப்போதும் உண்டு.

ப்ளூ பாய் பொம்மையுடன் கொஞ்சல்கள் முத்தங்கள், அவனோடு மாறி மாறிப் புகைப்படங்கள் என எல்லாம் முடிந்தபின் பீச் போகலாம் எனக் கிளம்பினோம். பீச் என்றால் எனக்கு கடற்கரை மணலில் நடப்பது, அலையில் கால்நனைப்பது இதோடு சேர்த்து நெருப்புப் பொறியில் சுட்டுத் தரும் பேபி கார்னும் தான்.

சுட்ட பேபி கார்ன், உருளைக்கிழங்கு ரோல் என எல்லாம் வாங்கிச் சாப்பிட்டப்பின் கடலலைகளை நோக்கிப் போனோம். கல்லூரி பயின்ற நாட்களில் எனக்கு வாய்க்காத, ஆனால் நான் ஆசைப்பட்ட சிலவற்றில் ஒன்று இரவுநேரத்தில் கடற்கரை மணலில் தோழிகளோடு காலாற நடப்பது. சாரதாம்மா மற்றும் அகிலாவுடன் கடற்கரை மணலில் நடந்தபோது கல்லூரித் தோழிகளோடு நடப்பதாகத்தான் உணர்ந்தேன் அந்தக் கணம்.

மெல்ல பொங்கி எழுந்த அலை கரையை வந்து தழுவிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றோம். மூவருமே கால் நனைக்கவில்லை. கால் நனைக்காமல் இரவின் கடலை ரசிப்பது அன்றைக்குப் போதுமானதாக இருந்தது. அதுவே இதமாகவும் இருந்தது.

கரையில் கடற்கரை மணலைச் சின்ன சின்ன மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அதன்மேல் ஏறியதும் வானம் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போல ஒரு பிரம்மை. மணல்குன்றின் மேல் அமர்ந்தபடி ஊர்ந்து போன அரை நிலாவையும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சதிரங்களையும் எண்ணிக் கைக்காட்டி கொண்டிருந்தோம். இரவில் அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தெரியும் நேர்க்கோட்டில் தெரியும் மூன்று நட்சத்திரம் அன்றைக்கும் பார்த்தோம். ஒன்று… இரண்டு… மூன்று.. அதற்குமேல் நட்சத்திரங்களை எண்ணவில்லை. போதும் என்றிருந்தது.

இரவு இதமான கடற்கரை குளிர் காற்றுடன் நகர்ந்து கொண்டிருக்க சாப்பிடக் கிளம்பினோம்.

நடைபாதையில்  உப்புக் காற்றுக் குளிரில் ஆயா ஒருவர், வளையல், மணி, கொலுசு, கம்மல் விற்பதைப் பார்த்ததும் மனம் நின்றதும் கால்களும் நின்றன. எனக்குப் பிடித்த கல் வளையல். சைஸ் சரியா இருந்தால் வாங்கிக்கலாம் என்று எடுத்துப் பார்த்தேன். மூன்று வளையல்கள் மட்டுமே எனக்குப் பொருத்தமாக இருந்தன. பக்கத்தில் கண்கள் போக, நான் விரும்பும் கல் மணி, ஜிமிக்கி, கல் கம்மல், க்ருஷ்டல் கொலுசுஇவை வாங்கச் சொல்லிச் சுண்டி இழுக்க, திடீர் பர்சேஸ் பெரிய அளவில் நடந்தேறியது.

பிடிச்சதை எடும்மா, அப்புறம் விலை பேசிக்கலாம் என்று சாரதாம்மா சொன்னதும் இரண்டு ஜிமிக்கி, இரண்டு கல் மணி, ஆறு தொங்கும் கல் கம்மல், மூன்று மணி, ஒரு கொலுசு, அகிலாவுக்கு ஒரு கொலுசு என அள்ளி எடுத்துக் கொண்டோம்.

அந்தக் கடையின் உரிமையாளர் பொன்னி ஆயா (பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்) மஞ்சள் பூசிய முகம், பெரிய கல் வைத்த மூக்குத்தி, முகமெங்கும் முதுமையின் கோடுகள், வாரி முடிந்த கொண்டை, வெற்றிலைப் போட்டுச் சிவந்த உதடு, ஒரு காட்டன் புடவை அவ்வளவுதான். ஆனால் கிராமத்து மனுசியின் கலையான முகம். முதுமையின் மெருகேறிய அழகு.  ரொம்ப இயல்பான பேச்சு.

எங்க இருக்காங்க, இந்த ஆபரணங்கள் எல்லாம் எங்கிருந்து வருது என்ன சாப்டாங்க என்பது முதற்கொண்டு எல்லாம் பேசியபடி, நாங்கள் எடுத்தவற்றுக்கும் விலை கேட்டு நாங்கள் ஒரு கணக்கு சொன்னோம். பொன்னி ஆயா ஒரு விலை சொன்னார். பிறகு கொஞ்சம் பேரம் பேசி 600 ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார். ஒரு கைப்பையில் போட்டுக் கொடுத்தார். ஆயா சந்தோஷம் தானே உங்களுக்கு என்றோம். சந்தோஷம் மா. அப்புறமாவும் வாங்க என்றார். நிச்சயம் வருவோம் என்றபடிக் கிளம்பினோம். ஒரே இடத்தில் எனக்குப் பிடித்த ஆபரணங்களை வாங்கியதில் அதுவரை இருந்த பசி காணமல் போயிருந்தது.

அங்கிருந்து ஆதாமிண்டே தட்டுக்கடை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார் சாரதாம்மா. மிதமான வெளிச்சம் அன்றைய இரவு உணவுக்கு நிறைவான சூழலை உண்டாக்கிக் கொடுத்தது. வெளியில் இரண்டு டேபிள், உள்ளே ஐந்து டேபிள் அவ்வளவு தான் கடை. ஆனால்,  மலையாள உணவு வகைகள் மெனு கார்டை அலங்கரித்தன. ஆதாமிண்டே கடையில் அதுதானே இருக்கும். சிறப்பாக என்ன சொல்ல. புட்டுக் கொண்டைக்கடலை, தோசை, பீஃப் மசாலா, அயிலா மீன் வறுவல் என ஆர்டர் செய்தோம். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் பதினைந்து நிமிடத்தில் எல்லாம் வந்தன. புட்டு கொண்டைக்கடலை பிரமாதம். பீஃப் மசாலா தனி சுவை. பீஃப் மசாலாவுக்காகவே கூடுதலாக ஒரு தோசை ஆர்டர் செய்யலாம் போல இருந்தது. ஆனால், முதலில் ஆர்டர் செய்த தோசையிலேயே வயிறு நிறைந்திருந்தது. அயிலை மீன் வறுவல் தான் அளவில் பெரிதாக இருந்ததால் முழுதாகச் சாப்பிட முடியவில்லை. மிச்சம் வைக்கும்படி ஆகிவிட்டது.

ஆர்டர் செய்த எல்லாமும் சாப்பிட்டு முடித்தபின், சுலைமானி டீ அங்கே ரொம்ப ஃபேமஸ் என்று சாரதாம்மா சொன்னார். ஃபேமஸான விஷயத்தை நிச்சயமாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என மூன்று சுலைமானி டீ ஆர்டர் சொன்னோம். லெமன் டீ கலரிலேயே வந்தது. லெமன் டீ போல நினைத்து சியர்ஸ் சொல்லி முதல் சிப் குடித்ததும் இதுவரை குடித்திருக்காத புதிய சுவை. இதுவல்லவா தேநீர் என்று நாக்கு துள்ளிக் குதித்தது. என்ன மசாலா தூள் கலந்தார்கள் எனத் தெரியவில்லை. சென்னை வாழ்க்கை தந்த கசப்புகளை எல்லாம் வெளியே தள்ளிவிட்ட இனிப்பை நினைவுகளுக்குள் கொண்டு போகும் அற்புதமான தேநீர் அது. இனிமேல் சென்னை வந்தால் அதாமிண்டே தட்டுக்கடைக்கு வந்து சுலைமானி டீ குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அன்றைய சந்திப்பும். இரவு உணவும் மறக்க முடியாத அனுபவத்தின் நினைவுக் குவியலாய் மனதுக்குள் ஒட்டிக் கொண்டுவிட்டது.

மீண்டும் ஒருமுறை இதேபோல இவர்களோடு கொஞ்சம் முன்கூட்டியே வந்து தாமதமாகத் திரும்புவேன் என பெசண்ட் நகர் கடலிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

2 கருத்துகள்:

  1. கடல், மணல் மற்றும் நட்சத்திரங்கள், மந்திர! ஒரு அழகான மாலை செலவழிக்க ஒரு வழி. நான் மூன்று பேருடன் என்னை நானே கற்பனை செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு