ஞாயிறு, 1 டிசம்பர், 2019

பெருமழைக் கதைகள்

#மழைக்கதைகள் 🌧
நண்பர் ஹர்ஷத் கான் இயக்கத்தில் உருவான #நீலமகள் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுக்குக் காலையில் கிளம்பிக் கொண்டிருந்தேன். மழை அதன் போக்கில் விடாமல் பெய்து கொண்டிருந்தது. வெளியில் செல்லக் கிளம்பிபிறகு காத்திருப்பது கொஞ்சம் கடினமான விடயம் எனக்கு. ஆனாலும் ட்ரெஸ் நனையாமல் இருக்க,  மழை விடட்டும் எனக் காத்திருந்தேன். இன்னும் இன்னும் வலுத்துக் கொண்டிருந்தது பிடிவாதம் பிடித்த மழை.

10 மணி நிகழ்வு மழை காரணமாக ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. என்ன ஆச்சரியம். மழை 11 மணியளவில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெல்லிய தூறலாக மாறியிருந்தது. ரெயின் கோட் மாட்டிக் கொண்டு கிளம்பினேன். ஈசிஆர் ரவுண்டானாவைச் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது. முழங்கால் அளவு தண்ணீரில் போகும்போது வண்டி நின்று விட்டது. 
மழை நீர் முட்டிவரை நனைக்க, சிறு அலையினூடே  வண்டியை ஓரமாகத் தள்ளிக் கொண்டு சென்றேன். பின்னால் வந்த கார்கள் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் நீரை வாரி இரைத்தபடிச் சென்றன. மழைக்காலம் ஒன்றும் சொல்வதற்கில்லை என நினைத்துக் கொண்டே வண்டியைத் தள்ளினேன். காலையில் குடித்த ஒரு டீ வண்டி தள்ள போதுமானதாக இல்லை. மூச்சு வாங்கியது. 

என்னைக் கடந்து சென்ற ஒரு பைக் மேன் மட்டும் நின்று என்ன பெட்ரோல் இல்லையா என்றார். தெரியல தண்ணி உள்ள போய்டுச்சுனு நினைக்கறேன் என்றேன். வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியவர் என் வண்டியைச் சாய்த்து, உள்ளிருந்து ஒயரைப் பிடுங்கி ஊதி.... என்னவோ செய்தார். வண்டி நகர மறுத்தது. பெட்ரால் ரொம்ப குறைவா இருக்கு. அதனால கூட கிளம்பாமல் இருக்கும். இருங்க வாங்கி வரேன். நீங்க பெட்ரோல் பங்க் போறதுக்குள்ள வண்டி நின்னுடும் என்று சொன்னவர், அவரது பைக்கைக் கிளப்பிக் கொண்டு கிளம்பிவிட்டார். வீட்டிலிருந்து பெட்ரோல் பங்க் வரை செல்லும் அளவுக்கு பெட்ரோல் இருக்கும் என நம்பினேன். நம்பிக்கை பொய்த்துப் போனது. 

ஏற்கனவே நிகழ்வுக்கு அவர்கள் கொடுத்திருந்த எக்ஸ்ட்ரா டைம் நெருங்கிக் கொண்டிருந்தது. பெட்ரோல் வாங்கி வரச் சென்றவர் வருவாரா மாட்டாரா? இருக்கிற பெட்ரோலை வைத்துப் போய்விடலாமா எனப் பல யோசனைகள் வந்து மோதிக் கொண்டிருந்தது. நேர நெருக்கடி அப்படி யோசிக்க வைத்தது. கிளம்பலாம் என முடிவு செய்த அந்தக் கணத்தில் பெட்ரோலுடன் வந்து சேர்ந்தார். 

நன்றி சொல்லி பாட்டிலில் இருந்த பெட்ரோலை டேங்க்கில் ஊற்றி விட்டு பிறகு ஸ்டார்ட் செய்தேன். நான்காவது செல்ஃப் ஸ்டார்ட்டுக்கு உறுமிக் கொண்டு கிளம்பியது.

அவருக்கு நன்றி சொல்லி பெட்ரோலுக்கான பணத்தைக் கொடுத்தேன். 

உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஒருமுறை நான் எங்க பாப்பா கூட வண்டியில் போகும்போது அவ கையில் இருந்த பலூன் கீழ விழுந்துடுச்சு. நீங்க தான் எடுத்து வந்து கொடுத்திங்க. பாப்பா கிட்ட கூட பேர் கேட்டுட்டுப் போனிங்க. அதுக்குப் பிறகு உங்களை டீவியில் ரெண்டு முறை பார்த்திருக்கேன் என்றார்.

எட்டு அல்லது ஒன்பது மாதம் முன்பு நடந்த சம்பவம் அது.

அந்த இருட்டில் முகத்தைக் கூட சரியாகக் கவனிக்காமல் குழந்தையைக் கொஞ்சிவிட்டு, பலூனைக் கொடுத்துவிட்டு வேகமாகக் கடந்து சென்றேன். எனக்கு மறந்தே போயிருந்தது. 

இன்றைக்கு அதை நினைவுபடுத்தி பெட்ரோல் காசை வாங்க மறுத்தார். பரவாயில்லை சார் என்று கொடுத்ததும் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார். 

வாழ்க்கை சுவாரஸ்மானது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக