வியாழன், 26 டிசம்பர், 2019

சூரிய கிரகணம் எனும் ஒளிவட்டம்

குடைக்காலம் நிகழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒரு மாத காலமும் தூக்கம் சரியாக இல்லை. நிகழ்வு நல்லபடியாக முடிந்த நிறைவில் இரண்டு நாட்களாக நல்ல உறக்கம்.  உறங்காமல் இருந்த இரவின் தூக்கத்தை எல்லாம் இப்படி உறங்கிச் சமன் செய்வது என்று முடிவு செய்து விட்டபடியால் அதிகாலை 9 மணிக்குத்தான் உறக்கம் கலைந்து எழுவது என்றாகிவிட்டது.

இன்றைக்கும் அப்படியே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன். 

96 படம் பார்த்த நாளில் இருந்து எனது மொபைல் ரிங்டோன்  'காதலே காதலே தனிப்பெருந்துணையே...' தான். காதலின் நினைவுகளில் மூழ்கி எழச் செய்யும் இப்பாடல் பெரும் போதையாகத்தான் இருக்கிறது. போதை தெளிந்தே ஆக வேண்டும் என நேற்றைக்குத்தான் ரிங் டோனை மாற்றினேன். 
கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே எனத் தேடித் தேடி ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடலை வைத்திருக்கிறேன். 

காலை 9 மணியளவில் கனவுக்குள் ஓயாமல் ஒளித்துக் கொண்டிருந்தது "உன் மேல ஆச தான், ஆனது ஆகட்டும் ச்சேஞ் யு பேபி, போனது போகட்டும் ஜூ ஜூ பேபி..." இரண்டு முறைக்கு மேலாக அந்தப் பாடல் ஒலிக்கவும் கண்களைத் திறக்காமலேயே மொபைலைக் கைகளால் துழாவி எடுத்து அட்டண்ட் செய்து பேசினேன். 
ஹெலோ.... இங்க சூரிய கிரகணம் பார்த்துக் கொண்டிருக்கோம். என்ன பண்றிங்க. கிளம்பி வாங்க... தோழியும் தோழியின் மகளும் கோரஸாகச் சொன்னார்கள். 
நான் தூங்கிட்டு இருக்கேன். நீங்களே பாருங்க என்று தூக்கம் கலையாத குரலோடு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன். 
இரண்டே நிமிடத்தில் மீண்டும் உன் மேல ஆச தான் என மொபைல் சிணுங்கியது. 
இந்த முறை அழைத்தது மாளவிகா. 
மிஸ் என்ன பண்றிங்க. சூரிய கிரகணம் பார்க்கலாம் வாங்க... 
இதோ ஐந்து நிமிஷத்துல வரேன் மிஸ் என்றபடி போர்வைக்குள்ளிருந்து வெளியே வந்தேன். 

மாளவிகாவின் அழைப்புக்கு ஏதோ ஒரு மந்திர சக்தி இருக்க வேண்டும். என்னைப் பெரும்பாலும் உறக்கத்திலிருந்து எழுப்பி அந்த நாளைக்குள் இழுத்துச் செல்லும் முதல் குரல் அவருடையது தான். 

அவசர அவசரமாகப் பல் துலக்கி, முகம் கழுவிக் கொண்டு மாளவிகா வீட்டிற்குச் சென்றேன். 

இரண்டு தெரு தள்ளி இருப்பதால் ஐந்து நிமிட அவகாசம் போதுமானதாக இருக்கிறது எப்போதும். 
வாசலருகே வண்டியை நிறுத்தினால் மிகுந்த உற்சாகத்தோடு என்னை வரவேற்க அங்கே பெரும் கூட்டமே இருந்தது. 

மாளவிகா, ருத்ரா, ருத்ராவின் மகள் மற்றும் மகள், புரூஸ்லி, புல்லட் எல்லோரும் கண்கள் விரியும் ஆச்சரியத்தோடு சூரிய கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தரையில். 

மாமரத்தின் இலைகளின் நிழல்களில் வட்ட வட்டமாக சூரிய ஒளி. தென்னங்கீற்று நிழலிலும் கூட அப்படியான வட்ட ஒளி. தரையை ஒட்டி அகல் விளக்கை ஏற்றி வைத்தது போல இருந்தது. 
சிறு வயதில் எங்கள் ஊரில் சூரிய கிரகணம் வருவதற்கு முன்பே ஒரு உலக்கையைத் தயாராக வைத்திருப்பார்கள். கிரகணம் வரும் நேரம் ஒரு தட்டில் தண்ணீர் வைத்து நேராக நிற்க வைப்பார்கள். அதுவும் அப்படியே அசையாமல் நிற்கும். 
தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை வீட்டுக்குள் விரட்டி விடுவார்கள். வெளியே வரக் கூடாது எனக் கண்டிப்போடு கட்டளையிடுவார்கள் பெரியவர்கள். 
கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் போய்க் குளித்து விட்டு வர வேண்டும். அப்போது தான் சாப்பாடு. குளிக்காமல் பசிக்கிறது சாப்பிட்டுப் போய் குளிக்கிறேன் என்று சொன்னாலும் சோறு கிடைக்காது. 

தரையில் இருந்த ஒளிவட்டங்களைப் பார்த்துக்.கொண்டேயிருந்தேன். கையில் ப்ளாக் காஃபி கொண்டு  வந்து கொடுத்தார் மாளவிகா. சியர்ஸ் சொல்லி காஃபி குடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். 

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த அகல் விளக்கு போன்ற ஒளிவட்டக் குவியல் செம்மண் தரையிலிருந்து அட்டைப்பூச்சி போல மெல்ல ஊர்ந்து கொஞ்சம் மேடிட்டு இருந்த சிமெண்ட் தரை மீது ஏறி வந்தது. சீரான ஒழுங்கில் மேலே நகர்ந்து வந்த கொண்டே இருந்தது. 
அது நகர்ந்து வர வர ஏனோ உடல் சிலிர்த்தது. 

அரை மணி நேரத்தில் எல்லாம் மாறி இயல்பாகி இருந்தது தரை. 

இயற்கையின் பேரதிசயங்கள் நினைவுகளில் வந்தமர்கையில் வாழ்க்கை பேரழகாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக