விருத்தாச்சலத்தில் உள்ள எனது பள்ளித் தோழியின் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென நீண்டநாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். தோழியுடன் பேசும்போதெல்லாம் விருத்தகிரீஸ்வரர் கோவிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீப நாட்களாகப் பெய்த கோடை மழையில் அக்கினி வெயில் சற்றே தணிந்திருந்தது. காலைத் தேநீரை அருந்திவிட்டு விருத்தாச்சலம் கிளம்பினேன். இரண்டு மணி நேர பைக் பயணத்தில் தோழியின் வீட்டை அடைந்தேன். சுடச்சுட சுவையான தேநீருடன் வரவேற்றார். சிறு உரையாடலுக்குப் பின், மதிய உணவை முடித்துக் கொண்டு தோழியின் மகளுடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குக் கிளம்பினேன்.
தோழியின் வீட்டிலிருந்து 15 நிமிடத்தில் கோவிலுக்குச் சென்றோம். மணிமுத்தாறு பாலத்தைக் கடக்கும்போது இருபுறமும் அந்த ஆற்றைப் பார்த்தேன். பக்தி இலக்கியத்தில் சுந்தரர், சிவபெருமானிடம் பெற்ற 12000 பொற்காசுகளைச் சுமந்து செல்ல முடியாதென மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் அந்தப் பொற்காசுகளை எடுத்துக் கொண்டார் என்று படித்த ஞாபகம் மனதுக்குள் வந்து போனது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் மணிமுத்தாறின் எந்த இடத்தில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு திருவாரூர் நோக்கிய தனது பயணத்தைச் சுந்தரர் தொடர்ந்திருப்பார்?ஆறு என்று சொல்வதற்குச் சற்றே யோசிக்க
வைக்கும்படியான தோற்றத்தில் புதர் மண்டிப் போய், முள் செடிகளும் புற்களும் முளைத்து
அங்கங்கே சாக்கடை போய் தேங்கிய நீருடன் பரிதாபமாய் இருந்தது மணிமுத்தாறு. பாலத்தைக்
கடந்து வலது புறம் திரும்பியதும் கோவிலை வந்தடைந்துவிட்டோம் என்ற அடையாளங்களுடன் கடைகள்
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
வண்டியை நிறுத்திவிட்டு, கோபுரத்தின் முன்பு நின்று பெரிய
வணக்கத்தைச் செலுத்தும்போது ‘பெரிய நாயகி உடனுறை பழமலைநாதர் கோவில்’ என்ற பெயர் கோவிலின்
நுழைவாயில் கோபுரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். இந்தப் பெயரையும் பக்தி
இலக்கியத்தில் வாசித்த ஞாபகம் வந்தது.
அரச மரத்தை அடுத்து, ஆழத்துப் பிள்ளையாரைப் பார்க்கச் சென்றோம். ஆழத்துப் பிள்ளையார் கோவிலின் முன்பு கொடிமரம் இருந்தது. அதைத் தாண்டிச் செல்லும்போது கோவிலின் வாசலில் சுவரில் சாய்ந்தபடி வெறித்த பார்வையோடு எதிரில் உள்ள சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். கைகள் மட்டும் சில்லறைக்காகத் தவமிருந்தது. அந்தக் கைகளைப் பார்க்காதது போல் செல்வது அத்தனை எளிதாய் இல்லை. பதினெட்டுப் படிகள் இறங்கி உள்ளே சென்றதும், அகல் விளக்கின் வெளிச்சத்தில் ஆழத்துப் பிள்ளையார் அமைதியாக அமர்ந்திருந்தார்.
கோவில் மண்டபத்துத் தூண்களில் செதுக்கப்பட்ட அழகழகான சிற்பங்களைப் பார்த்த்துவிட்டு, ஆழத்துப் பிள்ளையாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு படியேறி வரும்போது, வாசலில் அமர்ந்திருந்த பாட்டியின் கண்களும் கைகளும் காசு கேட்டது. பையில் கைவிட்டு சிறு தொகையை அவரது கையில் வைத்துவிட்டு, பழமலைநாதராம் விருத்தகிரீஸ்வரரைப் பார்க்கச் சென்றேன்.
பழமலைநாதரைப் பார்க்கச் செல்லும் வாயிலில் கண்டராதித்தன் கோபுரம் அழகிய வண்ணங்களோடு வானைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பெயரைப் பார்த்ததும் இதுவும் சோழர் காலத்து வரலாற்றிற்குச் சாட்சியம் கூறும் கோயில் என்று புரிந்தது கோபுரத்தில் என்னென்ன புராணக் கதைகள் சிலைகளாகக் காட்சியளிக்கின்றன என்பதைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.
டியூப்லைட் வெளிச்சத்தை டம்மி செய்வது போல், கருவறைக்குச் செல்லும் வழியில் இடதுபுறம் ஏற்றி வைக்கப்பட்ட அகல்விளக்கு பிரகாசித்தது. பழமலைநாதரைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து 63 நாயன்மார்களின் சிலைகளையும் பார்த்துவிட்டு, கருவறையின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவிட்டுத் திரும்பினேன். 63 நாயன்மார்களின் சிலையில் திருஞானசம்மந்தருடைய சிலை மட்டும் உருவத்தில் பெரியதாய், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர் சிலைகளிலிருந்து கொஞ்சம் தள்ளியும் வைக்கப்பட்டிருந்தது ஏன் எனப் புரியவில்லை. இலக்கியத்தில் சிறுவயது பாலகனாய் படித்த சம்மந்தர் எப்படி இத்தனை பெரியவனாய் இந்தக் கோவில் சிலை வடிவம் கொண்டார் என்பது புரிபடவில்லை.பழமலை நாதர் கோவிலுக்குப் பல சிறப்புகள் இருந்தாலும், கருவறை
சிவனுக்குப் பக்கத்தில் அதாவது பழமலைநாதர் இருக்கின்ற மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில்
உள்ள வன்னிமரம் இக்கோவிலின் பழம்பெரும் சிறப்பு. சுமார் 2500 ஆண்டு பழமையான வன்னி மரம்.
முதுமையின் சுருக்கங்கள் உடலெங்கும் கொண்ட வயதான பாட்டனைப் பார்ப்பது போல் இருந்தது.
முன்பொருகாலத்தில் விபசித்து முனிவர் இங்கே தங்கியிருந்து,
இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் திருப்பணிகள்
செய்த தொழிலாளிகளுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்துக் கொடுப்பாராம். வீட்டிற்குப்
போய் பார்த்தால் அவரவர் செய்த வேலையைப் பொறுத்து வன்னி இலைகள் காசுகளாக மாறி இருக்குமாம்.
2500 ஆண்டுகளை உண்டு செறித்துச் செம்மாந்து கிளைபரப்பி நிற்கும் வன்னி மரத்திற்கு இப்படியொரு
கதையுண்டு. என்னளவில் இந்த வன்னிமரம் தான் சாமி. கடவுள். இறைவன் எல்லாம்.
அங்கிருந்து பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னிதியின் முன்புறம் உள்ள சுவரில் இருந்த சிற்பம் என் கவனத்தை ஈர்த்தது. ஆணும் பெண்ணும் இணைந்து நிற்பது போலொரு சிலை. பெண் சிலையின் கழுத்தின் தொங்கவிடப்பட்ட சரிகை ஆடை பெண்ணுடலை மறைத்திருந்தது. சிலையின் முழுமையைக் காண ஆவல் மேலிட, யாரும் பார்க்காத நேரத்தில் துணியை மெல்ல நகர்த்தினேன். உருண்டு திரண்டிருந்த பெண்ணின் வலது மார்பைத் த
னது கைகளால் தாங்கிப் பிடித்தபடி காதலில் லயித்திருக்கும் காட்சி.. அப்படியொரு அழகு அந்தச் சிலையில்! காதலின் அதி அற்புத உணர்வை வெளிப்படுத்தும் இந்தச் சிலையை, ஆண்பெண் உறவின் அழகை ஏன் ஆடையால் மூடி வைக்க வேண்டும் எனத் தோன்றியது. சிலையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதேபோல் ஆடையைப் பெண் சிலை மீது போர்த்திவிட்டு பிரகாரத்தினுள் நடந்தேன். ஆனால், சிலையின் காட்சி கண்கள் வழியாக மனதுக்குள் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது.
பசுவின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் வண்டியில் கிளம்பினேன்.
அரசமரத்தின் கிளையில் ஆடிக் கொண்டிருந்த தொட்டிலும், 2500 ஆண்டு பழமையான வன்னிமரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கின் சிந்தனையும், ஆந்தையின் முட்டைக் கண்களும், சிவனது கருவறையின் வெளியில் ஒலித்த கோவில் மணியோசையும், சக்கரத் தீர்த்தத்தில் சென்று மறைந்த ஆரஞ்சு நிறச் சூரியனின் கதகதப்பும் வழித்துணையாய் கதைபேசிக் கொண்டே வந்தனர் பாண்டிச்சேரி வரை. ஆதிக் கருவறையின் வாசம் நினைவுக்குள் வந்தமர்ந்து கொண்டது.