ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டுக்கான காத்திருப்பு

வருடத்தின் கடைசி நாள் என்பது இன்னொரு வருடத்திற்கான காத்திருப்பாக மாறிப் போகிறது.

பை பை சொல்லிவிட்டுச் செல்வதற்குத் தயாராக இருக்கிற ஆண்டில், செய்ய நினைத்துச் செய்ய முடியாமல் போனதைச் சரி செய்ய புத்தாண்டை வரவேற்கிறேன். புதிதாக புத்தாண்டில் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பனிபொழியும் இக்கடைசி இரவினை புத்தாண்டின் தொடக்கத்திற்கு இப்படித்தான் அழைத்துச் செல்கிறேன்.

நாட்கள் ஒவ்வொன்றும் கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடுகின்றன. இப்போ தானே புத்தாண்டு கொண்டாடினோம் அதுக்குள்ள அடுத்த புத்தாண்டா என நினைக்கும்படி நாட்கள் ஓட்டம் பிடித்து ஓடி விட்டன.

2017 ஆம் ஆண்டிற்குள் நினைத்துப் பார்க்க சுவாரஸ்யமான நிகழ்வுகள், வாழ்க்கைக்கான படிப்பினைகள், பெருமை கொள்ளும் தருணங்கள் என ஏராளம் இருக்கின்றன. மகிழ்ச்சியாக சிரித்து குதூகலித்த தருணங்களை மட்டும் விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறேன். மனம் கசந்து அழுத நாட்கள் ஏராளம். அதைப் பற்றி இப்பொழுது புகார்கள் ஏதுமில்லை.

பெருவனத்தில் நிலைத்திருக்கும் மரங்களைப் போல சில நண்பர்கள் எப்போதும் நம் வாழ்க்கையில் இருப்பார்கள். மரத்தில் வந்தமரும் பறவைகள் போலவும், முதிர்ந்து விழும் சருகுகள் போலவும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புகாரின்றி கடக்கக் கற்றுக் கொண்டால் அதுவே ஜென் நிலை.

நண்பர்களோடு அதிக நாட்களை, அதிக நேரங்களைச் செலவிட்டது இந்த வருடத்தில்தான். இலக்கியக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உரையாடல், குழந்தைகளுக்கான கதை சொல்லல் என உருப்படியான விடயங்களை இந்த ஆண்டில் செய்திருப்பது நிறைவாக இருக்கிறது. விருதுகள் மூலம் எனக்கிருக்கும் சமூகக் கடமை மற்றும் பொறுப்புணர்வை எனக்குணர்த்திய காலத்திற்கு நன்றிகள்.

அன்பின் கரம் பற்றிக் கொண்டு வாழ்க்கையை நேர்மறையாகச் சிந்திக்கக் கற்றுக் கொண்டதும் இந்த வருடத்தில். அதற்காகவே இந்த வருடத்தின் கடைசி இரவில் அழுகையும் மகிழ்ச்சியும் கலந்து விடை தருகிறேன்.

போய் வா எனது 2017 ஆம் ஆண்டே. எனது வாழ்நாளில் விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்  கொண்டது உன்னிடமிருந்துதான். வலித்தாலும் கூட அந்தப் படிப்பினைக்குப் பரிசாக எனது மகிழ்ச்சியைப் பரிசளிப்பேன்.

எது நிகழ்ந்த போதும் வாழ்க்கை அழகானது.

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக