வெள்ளி, 27 மார்ச், 2015

பெண்ணுடல்மீது கல்லெறியும் யோக்கியவான்கள்
ஒரு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஓர் அறைக்குள் தனியாக இருக்க பயந்து நடுங்கி இருக்கிறீர்களா? தூங்க முடியாமல் தவித்திருக்கிறீர்களா?
நான் பயந்து கொண்டிருக்கிறேன். தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவுதான் அந்தப் புகைப்படத்திலிருந்து நினைவைத் திசை திருப்பிக் கொண்டு போனாலும் பூமராங் போல மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு நினைவை விட்டும், கண்களை விட்டும் அகல மறுக்கிறது அந்தப் புகைப்படம்.
ஒரு புகைப்படம் இரண்டு நாளாகத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்; பயமுறுத்தும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நினைக்க நினைக்க மனநடுக்கம் அதிகமாகிறது. எவ்வளவு முயன்றும் மனக்கண்ணில் இருந்து இந்தப் புகைப்படத்தை அகற்றவே முடியவில்லை. கண்களை மூடவே அச்சம். அச்சம். அச்சம். வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத அளவுக்கு அச்சம்.
சில நண்பர்கள், போட்டோஷாப் செய்த பேய் வீடியோ அல்லது போட்டோக்களை அல்லது நிஜ பேய் (?) வீடியோக்களை நள்ளிரவில் வாட்ஸ் அப்பில் அனுப்பி திகிலடையச் செய்வார்கள். அது அந்த நேரத்தில் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யுமே தவிர அதன்பின்னர் மனதை விட்டு அகன்றுவிடும். எப்போதாவது நண்பர்களோடு பேய் படம் பார்த்துவிட்டு வரும் நாளில் கூட பயம் உள்ளுக்குள் பயம் இருக்கும். ஆனால், இந்த அளவிற்குப் பயந்ததில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு தோழி ஒருத்தி இந்தப் புகைப்படத்தை அனுப்பி, இதைப் பாருங்க, இந்தப் புகைப்படத்தை எடுத்தப் பின்னர், இந்தப் பெண்ணின் கணவன் இவளைக் கொன்று விட்டான் ஏன் என்று கண்டுபிடிங்க என்றாள். மீண்டும் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறேன். மிக சாதுவாக, சாந்தமாக புன்னகைத்தபடி அமர்ந்திருக்கும் அவள் முகம். அவள் கொல்லப்படப் போகிறோம் என்பதற்கான எந்த முகாந்திரமும் அவள் முகத்தில் தென்படவில்லை. பின்னர், அந்த அறையை ஒரு முறையை உற்றுப் பார்த்தேன். அப்போதும் எதுவும் தென்படவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபடி ‘அவள் அழகா இருக்கா அதனால் கொன்றிருப்பானோ?’ என்றேன் கிண்டலாக. இல்லை. நல்லா பாருங்க என்றாள். எனக்குத் தெரியலப்பா என்றேன்.
அவளுடைய கணவன் அலுவலக விஷயமாக இரண்டு நாள் வெளியூர் கிளம்பிச் செல்கிறான். கிளம்பிச் சென்றவன், கொஞ்சம் நேரத்தில் திரும்பி வந்து அவளை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, ‘இந்த இரண்டு நாளும் உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போகிறான். போனவன் திரும்பி வந்து அவளைக் கொன்றுவிட்டான். கொன்றதற்குக் காரணம் இந்தப் புகைப்படம்தான் என்றாள். எனக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. அவ்வளவு அன்பாகவும், நெருக்கமான தம்பதிகளாகவும் இருப்பவர்கள் ஏன் கொலை வரை செல்ல வேண்டும்? நீயே சொல்லிடு என்றேன் குழப்பமும் திகிலுமாக. நல்லா அந்தப் புகைப்படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்க என்றாள். பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது. அந்த டேபிள் ஃபேனுக்குக் கீழே கட்டிலுக்குள் ஒரு கண் மட்டும் தெரிந்தது. பயத்தில் இதயம் அதிவேகமாகத் துடித்தது. உடல் சட்டென்று வேர்த்துவிட்டது.
கட்டிலுக்கு அடியில் ஒருவன் மறைந்திருக்கிறான். அவளுடைய காதலன். அதைப் பார்த்த அவள் கணவன் அவளைக் கொன்றுவிட்டான் என்றாள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை செய்த கணவன் மீது தவறில்லை என்று தீர்ப்பு சொல்லிவிட்டாராம்.
என் தோழியும் சொன்னாள் “அவ பண்ணதும் தப்புதானே… அவ்வளவு அன்பான கணவனுக்குத் துரோகம் பண்ணலாமா? அதனால் தண்டிக்கப்பட வேண்டியவள் தான்”
அந்தப் பெண் அப்படிச் செய்தது சரியா தவறா என்ற கேள்விக்குள், வாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. ஏனெனில், யார் ஒருவரின் செயலையும் சரி என்றும் தவறு என்றும் மதிப்பிடுவதற்கு நமக்கு அதிகாரமோ உரிமையோ இல்லை. எல்லா சரிகளுக்குப் பின்னால் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தவறு இருக்கும். எல்லா தவறுக்குப் பின்னாலும் அதை நியாயப்படுத்தக்கூடிய ஒரு சரி இருக்கும். சரி தவறு என்பதெல்லாம் அவரவரைப் பொறுத்ததே. சந்தர்ப்ப சூழலைப் பொறுத்ததே. நாம் நீதிமான்களாக இருந்து நீதி சொல்லிவிட முடியாது.
இந்தச் சம்பவத்தையொட்டி என்னிடம் சில கேள்விகளே எஞ்சி நிற்கின்றன.
 மனைவி இன்னொருவனோடு இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவளைக் கொலை செய்தவன், அவள் காதலனை என்ன செய்தான் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லையே ஏன்? அவ்வளவு அன்பும் காதலும் கொண்ட மனைவி, ஏன் இன்னொருவனை உடலுறவுக்காக அழைக்க வேண்டும்? அந்த இடைவெளி எப்படி, ஏன் உருவானது இருவருக்குள்? அப்படியே இருந்தாலும் விவாகரத்து வாங்கிப் பிரிந்து சென்றிருக்கலாமே.. ஏன் அவளைக் கொலை செய்ய வேண்டும்? அவளைக் கொலை செய்வதற்கு அவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கணவன் என்னும் அதிகாரம் போதுமானதா பெண்ணைக் கொலை செய்ய? இல்லை ஆண் என்னும் அதிகாரம் போதுமானதா?
எப்போதுமே பெண்ணுடைய உடல், ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்ட உடைமைப் பொருளாகத்தான் இருந்து வருகிறது.
ஒரு பெரிய அரசியல் கட்சியின் வாரிசுக்கு தேர்தல் பிரச்சார சமயத்தில் முத்தம் கொடுத்தாள் என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் நம் நினைவுகளை விட்டு ஒரு புள்ளியைப் போல மறைந்து விட்டது. வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களோடு பேசுகிறாள் என்பதற்காக காதலியைக் கொன்ற சம்பவம் காற்றோடு கரைந்துவிட்டது. தனியார் வங்கியில் பணிபுரியும் இளைஞன், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஏதோ ஒரு முரண்பாட்டினால் பக்கத்தில் இருந்த ஜாடியால் தன் காதலியை அடித்துக் கொன்று, பிரேதத்தை மறைக்க முயன்று, தப்பிச் சென்ற சம்பவம் கூட நீர்க்குமிழி போலத்தான் ஆகிவிட்டது. இன்னும் இன்னும் எத்தனையோ கொலைகள். காதலின் பெயரால், குடும்பத்தின் பெயரால், உறவின் பெயரால். எல்லாமும் ஒரு கனவைப் போல கலைந்து போகின்றன. மீண்டும் மீண்டும் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். ஒருதலைபட்சமான விசாரணைகளும் நீதிகளும் தண்டனைகளும் அறங்களுமே வரலாறு முழுக்கவும் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும் பெண்ணே தண்டனைக்குரியவள். குறிப்பாக, பாலியல் உறவுகளில் பெண்ணுடலே தண்டனைக்குரியது. கொல்லப்படவேண்டியது. உடைமைச் சமூகத்தில் பெண்ணின் பாலியல் தேவை வரைமுறைக்கு உட்பட்டதாக, புனித பிம்பம் போர்த்தப்பட்டதாகவே இருக்கிறது. இப்படியான கொலைகளுக்குப் பின்னால் ஆணாதிக்கச் சமூகத்தின் (உடைமை மனோபாவத்தின்) கோரமுகம் குருதி சொட்டச் சொட்ட இன்னும் வெறிபிடித்து வீதிகளில் அலைவதைப் பார்த்தபடி நாம் கடந்து போகிறோம். நம்மிடம் எவ்வித எதிர்வினைகளும் இல்லை.

பைபிள் காலத்தில் பாலியல் தொழிலாளிமீது கல்லெறிய துணிந்த சமூகம் தானே இது. அவள் பாலியல் தொழிலாளியாக ஆனதற்கு அவள் மட்டும்தான் காரணமா என்கிற கேள்வியை யார் முன்னெடுப்பது? 

4 கருத்துகள்:

  1. படத்துக்கு கதையா அல்லது கதைக்கு படமா அல்லது உண்மையான செய்தியா? என்னால் முடிவுக்கு வர முடியவில்லை கண்ணை கண்டுபிடிக்கவே இரண்டு நிமிடமானது சுடான கேள்வி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரபு நாட்டில் நடந்த உண்மை சம்பவம் இது. கதையல்ல.

      நீக்கு
  2. Hi manushi bharathi - unnudaiya photo release patri sollura nu ninachitten sorry.... next dhan lasta therinjathu vera oru kathai nu. 1st un photo kathaike unnala thoonga mudiyamal thavithu kondu erunthu eruka.azhuthu erupa.. sorry dear... un kathaiye oru soga kathai athai vittuvittu veru oru kathaiku vimarsanam kodukuriya ?... very bad.. dear.... sorry for all....... konjam pasanga feelingaiyum yosithu eni yezhuthunga. pasanga mattum thappu pannala. ponnungalum dhan thappu pannuranga.... ex.. mela ulla photo paarthale puriyum. oruthan erukum pothu aduthavan kooda ponathu thappu. avala kola pannathu thappu nu pesurathu correcta? sollunga manushi.... yellam soozhnilaiku yetraar pola dhan nadanthuttu varuthu... manushan putthi yeppo yenna seiyum nu theriyathu .. yellam avaravar nadanthu kolvathil dhan eruku... pls understand... ஒரு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஓர் அறைக்குள் தனியாக இருக்க பயந்து நடுங்கி இருக்கிறீர்களா? தூங்க முடியாமல் தவித்திருக்கிறீர்களா?
    நான் பயந்து கொண்டிருக்கிறேன். தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவுதான் அந்தப் புகைப்படத்திலிருந்து நினைவைத் திசை திருப்பிக் கொண்டு போனாலும் பூமராங் போல மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு நினைவை விட்டும், கண்களை விட்டும் அகல மறுக்கிறது அந்தப் புகைப்படம்.
    ஒரு புகைப்படம் இரண்டு நாளாகத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்; பயமுறுத்தும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நினைக்க நினைக்க மனநடுக்கம் அதிகமாகிறது. எவ்வளவு முயன்றும் மனக்கண்ணில் இருந்து இந்தப் புகைப்படத்தை அகற்றவே முடியவில்லை. கண்களை மூடவே அச்சம். அச்சம். அச்சம். வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத அளவுக்கு அச்சம்.

    பதிலளிநீக்கு