கீச் கீச்சென குரலெழுப்பும்
செல்லப் பறவைகளுக்கு
என் மீது
எந்தக் கோபமும் இல்லை.
யாதொரு முரண்பாடுகளும் இல்லை.
இருந்தும்
சமீபகாலமாக
நாங்கள் பேச்சுவார்த்தைகள் அற்று இருந்தோம்.
எப்போதாவது சோம்பல் முறித்து
அவை பேசத் துவங்குகையில்
நான் மொழியற்று நின்றேன்.
நான் அருகமர்ந்து பேசுகையில்
வார்த்தைகளைச் சுவைத்தபடி
அதீதக் காதலுடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
புதுவருடத்தின் இரண்டாம் மாதத்தில்
அவை கூண்டுக்குள்
சிறகு விரிப்பதையும்
வேனிற்காலத்தின் வெப்பத்தை
சுவைக்கும் பேராவலுடன்
பெருவெளிக்குள் பயணிக்கும்
எத்தனிப்புடன் தானியங்களைக்
கொத்தித் தின்றதையும்
நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
நாங்கள் பேசிக் கொள்ள
மௌனம் கூட மிச்சமில்லாது போன
ஒரு காலைப் பொழுதில்
நான் வைத்த பெயரைச் சுமந்தபடி
என்னிலிருந்து வெளியேறி
பறந்து சென்றன
என் பறவைகள்.
வாழ்வென்பது
விட்டு விடுதலையாகி
பறத்தல்தானே மாயா.
-- மனுஷி
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
வாழ்தலின் விதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Viduthalai viduthalai viduthalai unagum yenagum viduthalai...
பதிலளிநீக்கு