வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

துயரத்தின் பாடல்

பறவைகள்
ஓயாமல் பாடிக் கொண்டிருக்கின்றன
அவளது தனிமையை,
அவளது காதலை,
அவளது பிரிவின் வலியை,
அவளது கண்ணீரை,
அவளது பெருங்கனவை.

துயரத்தின் சாயல் அப்பியிருக்கும் அந்தப் பாடல்
அவளது பௌர்ணமியை
இருளச் செய்கின்றன.
நட்சத்திரங்களை
ஒளிமங்கச் செய்கின்றன.
மேகங்களும்
கண்ணீராகி
வழிந்தொழுகுகின்றன.

இரவு பகலாக
ஓயாமல் ஒலிக்கும் அந்தப் பாடல்
மனதைப் பிசைய
கூண்டின் கதவைத் திறந்து வைத்தாள்
துயரத்தின் பாடல்
பரந்த வெளியில்
விடுதலையின் பாடலாகுமென.
-- மனுஷி

3 கருத்துகள்: