ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கடலென காட்சியளிக்கும் வீராணம் ஏரி - மனுஷி

 

கடலென காட்சியளிக்கும் வீராணம் ஏரி

ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எவ்வளவு அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்? மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று”.

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் கண்கள் வழியாகப் பார்த்த வீராணம் ஏரியைப் பார்க்க வேண்டுமென 3 வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான தருணம் கைகூடாமல் இருந்தது.

நாம் எதைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறோமோ அதை நோக்கிப் பிரபஞ்சம் நம்மை அழைத்துச் செல்லும். அப்படித்தான் கடம்பூர் மாளிகையிலிருந்து வீராணம் ஏரியை நோக்கி வண்டியைச் செலுத்தினேன். வந்தியத்தேவன் தன் குதிரையில் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை வழியாக வீராணம் ஏரியைக் கடந்து தஞ்சாவூர் சென்ற பொன்னியின் செல்வன் நினைவுகளை மனதில் சுமந்தபடி எனது ஸ்கூட்டியில் பயணித்தேன். உச்சி வெயில் தலையில் சுள்ளென்று இறங்க 10 கி.மீ கூகுள் உதவியுடன் பயணித்ததும் வீராணம் ஏரி என்கிற வீரநாராயணன் ஏரி எனது இடது புறம் பரந்து விரிந்து நீண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏரிதான். 



கிட்டத்தட்ட 11 கி.மீ தூரத்திற்கு ஏரி இருந்தது. ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து ஏரியின் அழகை ரசிக்க வேண்டுமென நினைத்தால் ஏரிக்கரையின் சிமெண்ட் தடுப்புகளில் வெயில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தது. ஓய்வெடுக்க இடமில்லை.  இன்னும் கொஞ்சம் தூரம், இன்னும் கொஞ்சம் தூரம் எனச் சென்றேன். ஒரு பெரிய புங்கை மரம் சாலைக்கும் ஏரிக்குமாக தனது கிளைகளைப் பரப்பி நிழலைக் கொடையளித்திருந்தது. அதனருகில் படிக்கட்டுகளும் சிறிய கோவிலும் இருந்தது. அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரிடம் ‘அய்யா, இங்க மதகு எங்க இருக்கு” என்றதும், “இதான் மதகு. 30 மதகு கிட்ட இருக்கு. உங்களுக்கு எங்க போகனும் என்றார். அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. நன்றி சொல்லிவிட்டு அந்த மர நிழலில் வண்டியை நிறுத்தினேன். வரும் வழியில் இடைவெளிவிட்டு அங்கங்கே இரும்புக் கூண்டு போல் இருந்தது. அதெல்லாம் பாசன மதகுகள்தான் என்பது அப்போதுதான் புரிந்தது. கோயிலைத் தாண்டி, இரும்புக் கூண்டின் அருகில் இருந்த சிமெண்ட் தரையில் (கரையில்) அமர்ந்து ஏரி நீருக்குள் கால் நீட்டினேன். நீரின் கருணை உடலுக்குள் பரவியது.


9ம் நூற்றாண்டில் ஒரு பெரும் போருக்காகக் காத்திருந்த சமயத்தில் இராஜாதித்திய சோழன் தனது வீரர்களைக் கொண்டு இந்த ஏரியை உருவாக்கினான் என்று வரலாறு சொல்கிறது. தனது தந்தையான முதலாம் பராந்தக சோழனின் பெயரான வீரநாராயணன் என்பதை இந்த ஏரிக்குப் பெயராக வைத்தார்கள் என்றும், அதுவே பின்னாளில் வீராணம் ஏரியாக நிலைபெற்றுவிட்டது என்றும் படித்ததும் ஏரி நீரில் கால்களை நனைத்து விளையாடிய சமயத்தில் நினைவுக்கு வந்து போனது. நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இடது புறமிருந்து வலது புறம் வரை சுற்றிலும் நீர். அந்த நீரில் சூரியன் வெள்ளித் தட்டென மின்னி மிதந்து கொண்டிருந்தது. அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹரில் நடைபெற்ற இந்திய அளவிலான கவிஞர்கள் சந்திப்பு மாநாட்டுக்கு, கௌஹாத்தியிலிருந்து காரில் பயணித்த போது பிரம்மபுத்திரா நதியைப் பார்த்தேன். அது நதியா கடலா எனப் பிரமித்துப் போனேன். அதே பிரம்மிப்பு வீராணம் ஏரியைப் பார்த்தபோதும் தோன்றியது.

சற்று நேரத்தில் இரண்டு இளைஞர்கள் அந்த மதகு அருகில் வந்தார்கள். ரொம்ப பக்கத்தில் போகாதிங்க ரொம்ப ஆழமா இருக்கும் என்று அவர்களை எச்சரிக்க நினைத்தேன். அவர்கள் அந்த ஊர்க்காரப் பிள்ளைகள் போலும். அணிந்திருந்த டீ சர்ட்டைக் கழற்றி மதகின் சிமெண்ட் தரையில் வைத்துவிட்டு அசால்ட்டாக ஏரிக்குள் குதித்து நீச்சலடித்துச் சாகசம் செய்து கொண்டிருந்தனர். நீருக்குள் தலைகீழாகக் குதித்தனர். உள்மூழ்கி மூச்சடக்கினர். மரத்திலிருந்து விழுந்த இலையைப் போல கை கால்களைப் பரப்பி மிதந்தனர். நீரில் நின்றனர். சர்க்கஸ் பார்க்கும் சிறுமி போல கண்கள் விரிய பார்த்து ரசித்தேன். சிறிது நேரத்தில் இருவரும் வந்த வேலை முடிந்தது என்பது கிளம்பிச் சென்றனர்.

சற்று தூரத்தில் ஒரு வயதான முதியவர், ஏரியின் படிக்கட்டில் தனது துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஏரி நீருக்குள் நின்றபடித் துவைத்துக் கொண்டிருந்தார். மீன் பிடிப்பதற்காகத் தூரத்தில் சில படகுகள் மிதந்து சென்றன. நீண்ண்ண்ண்ண்ட மரக் கோலின் உதவியுடன் படகு நகர்ந்து கொண்டிருந்தது. அவர் கையில் இருந்த கோல் முழுவதுமாக ஏரிக்குள் இறங்கி ஆழம் பார்த்து வெளியே வந்தது. அந்த இடத்தை விட்டு வெளியேறியதும், ஏரிக் கரையின் சிமெண்ட் கட்டையில் மதகு எண் 7 என்று எழுதி, அதன் நீள ஆழ அகலங்கள், நீர்க் கொள்ளளவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுமார் 48 அடி ஆழம். நிலத்தில் விளையாடுவது அந்த இளைஞர்கள் நீரில் விளையாடியதும், நீரில் நின்றபடி அந்த முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்ததும் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.

அங்கு இருந்த சிறிய கோவிலின் பக்கத்தில் வயது முதிர்ந்த சிறுமியைப் போல் ஒரு மரம் இருந்தது. சொல்லப் போனால் அது மரம் இல்லை. மரத்தின் உடல் மட்டுமே. சந்தனத்தால் முகம், கண், புருவம், மூக்கு, வாய், நெற்றியில் பொட்டு, தலையில் கனகாம்பரப் பூ நிறத்தில் பிளாஸ்டிக் மலர்ச்சரம், கழுத்தில் கண்ணாடி வளையல் மாலை, இடுப்பில் சரிகைத் துணி, வேப்பிலை இலை பாவாடை – அச்சு அசப்பில் வயதில் மூத்த சிறுமியின் சாயல் தான் அந்த மரத்திற்கு. சங்க இலக்கியத்தில் இயற்கையை வழிபடும் மரபு இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. நீரை வணங்குதல், மரங்களில் உள்ள தெய்வங்களை வணங்குதல், இயற்கையை வழிபடுதல் என்பதே பழந்தமிழர்களின் வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இதிலிருந்து தான் இன்றைய உருவ வழிபாடு தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த மரத் தெய்வத்தைப் பார்த்தபோது அந்த ஏரியைக் காவல் செய்யும் யட்சி இவளாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. அவளருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பழங்காலத்தின் அருகில் அமர்ந்திருப்பது போல் இருந்தது.



கிளம்பும்போது  ஒருமுறை ஏரியைச் சுற்றிக் கண்களால் ஒளிப்பதிவு செய்தேன். அங்கு நான் கண்டது வீராணம் ஏரி எனும் கடலைத்தான்.



ஞாயிறு, 25 மே, 2025

ஆதிக் கருவறையின் வாசம் : விருத்தாச்சலம் பழமலைநாதர் கோவில் - மனுஷி

விருத்தாச்சலத்தில் உள்ள எனது பள்ளித் தோழியின் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென நீண்டநாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். தோழியுடன் பேசும்போதெல்லாம் விருத்தகிரீஸ்வரர் கோவிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீப நாட்களாகப் பெய்த கோடை மழையில் அக்கினி வெயில் சற்றே தணிந்திருந்தது. காலைத் தேநீரை அருந்திவிட்டு விருத்தாச்சலம் கிளம்பினேன். இரண்டு மணி நேர பைக் பயணத்தில் தோழியின் வீட்டை அடைந்தேன். சுடச்சுட சுவையான தேநீருடன் வரவேற்றார். சிறு உரையாடலுக்குப் பின், மதிய உணவை முடித்துக் கொண்டு தோழியின் மகளுடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குக் கிளம்பினேன்.

தோழியின் வீட்டிலிருந்து 15 நிமிடத்தில் கோவிலுக்குச் சென்றோம். மணிமுத்தாறு பாலத்தைக் கடக்கும்போது இருபுறமும் அந்த ஆற்றைப் பார்த்தேன். பக்தி இலக்கியத்தில் சுந்தரர், சிவபெருமானிடம் பெற்ற 12000 பொற்காசுகளைச் சுமந்து செல்ல முடியாதென மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் அந்தப் பொற்காசுகளை எடுத்துக் கொண்டார் என்று படித்த ஞாபகம் மனதுக்குள் வந்து போனது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் மணிமுத்தாறின் எந்த இடத்தில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு திருவாரூர் நோக்கிய தனது பயணத்தைச் சுந்தரர் தொடர்ந்திருப்பார்?

ஆறு என்று சொல்வதற்குச் சற்றே யோசிக்க வைக்கும்படியான தோற்றத்தில் புதர் மண்டிப் போய், முள் செடிகளும் புற்களும் முளைத்து அங்கங்கே சாக்கடை போய் தேங்கிய நீருடன் பரிதாபமாய் இருந்தது மணிமுத்தாறு. பாலத்தைக் கடந்து வலது புறம் திரும்பியதும் கோவிலை வந்தடைந்துவிட்டோம் என்ற அடையாளங்களுடன் கடைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

வண்டியை நிறுத்திவிட்டு, கோபுரத்தின் முன்பு நின்று பெரிய வணக்கத்தைச் செலுத்தும்போது ‘பெரிய நாயகி உடனுறை பழமலைநாதர் கோவில்’ என்ற பெயர்  கோவிலின் நுழைவாயில் கோபுரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். இந்தப் பெயரையும் பக்தி இலக்கியத்தில் வாசித்த ஞாபகம் வந்தது.

உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சிறிய வன்னிமரம் பசிய இலைகளுடன் கிளைபரப்பி நின்றிருந்தது. சங்க இலக்கியத்தில் தெய்வம் உறைகின்ற மரமாகவும் சோழர்களின் குல மரமாகவும் இந்த வன்னிமரம் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கும். 

ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் உள்ள புலிகுண்டு மலைக்குச் சென்றபோது அந்த மலை உச்சியில் வன்னி மரத்தைப் பார்த்தேன். தண்ணீர் அரிதாய்க் கிடைக்கும் இடத்தில் கூட வன்னி தனது வேர்களை ஆழ ஊன்றி வளரும் என்பது உண்மைதானோ என்று அப்போது தோன்றியது. ஏனெனில் வெயில் ஏறி காய்ந்து போன மொட்டைப் பாறையில் கூட அத்தனை பசுமையோடு செம்மாந்து நின்றிருந்தது புலிகுண்டு மலை உச்சியில் அந்த வன்னிமரம்.

பழமலைநாதர் கோவிலில் இருந்த வன்னி மரத்திற்கு அடுத்து, முதுபெரும் கிழவி தனது கூந்தலை வெயிலில் உலர்த்திக் கொண்டு நிற்பது போல நின்றிருந்தது அரமரம் ஒன்று. அரசமரத்தின் அடியில் உடல் பின்னிக் கொண்டிருக்கும் நாகங்களின் சிலையும், அதன் பக்கத்தில் காளை மாட்டின் (பசுவாகக் கூட இருக்கலாம்) வயிற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தது அம்மன் சிலை. அவ்வளவு அழகு அந்த முகம். அரச மரத்தின் கிளைகளில் வேண்டுதலுக்காகக் கட்டப்பட்ட தொட்டில்கள் காற்றின் தாலாட்டில் ஆடிக் கொண்டிருந்தது. அரச மரத்தின் வேர்ப்பகுதி, அதன் உடல் பகுதியைத் தொட்டுப் பார்க்க உடல் சிலிர்த்தது. காலம் காலமாய் உழைத்து உழைத்து காப்புக் காய்த்த கிழவியின் கைகளை, கால்களைத் தொடுவது போல் இருந்தது. மரத்தை அண்ணாந்து பார்த்தால் நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன் என்பது போல் இலைகளில் அத்தனை மினுமினுப்பு.





அரச மரத்தை அடுத்து, ஆழத்துப் பிள்ளையாரைப் பார்க்கச் சென்றோம். ஆழத்துப் பிள்ளையார் கோவிலின் முன்பு கொடிமரம் இருந்தது. அதைத் தாண்டிச் செல்லும்போது கோவிலின் வாசலில் சுவரில் சாய்ந்தபடி வெறித்த பார்வையோடு எதிரில் உள்ள சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். கைகள் மட்டும் சில்லறைக்காகத் தவமிருந்தது. அந்தக் கைகளைப் பார்க்காதது போல் செல்வது அத்தனை எளிதாய் இல்லை. பதினெட்டுப் படிகள் இறங்கி உள்ளே சென்றதும், அகல் விளக்கின் வெளிச்சத்தில் ஆழத்துப் பிள்ளையார் அமைதியாக அமர்ந்திருந்தார். 


கோவில் மண்டபத்துத் தூண்களில் செதுக்கப்பட்ட அழகழகான சிற்பங்களைப் பார்த்த்துவிட்டு, ஆழத்துப் பிள்ளையாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு படியேறி வரும்போது, வாசலில் அமர்ந்திருந்த பாட்டியின் கண்களும் கைகளும் காசு கேட்டது. பையில் கைவிட்டு சிறு தொகையை அவரது கையில் வைத்துவிட்டு, பழமலைநாதராம் விருத்தகிரீஸ்வரரைப் பார்க்கச் சென்றேன்.

பழமலைநாதரைப் பார்க்கச் செல்லும் வாயிலில் கண்டராதித்தன் கோபுரம் அழகிய வண்ணங்களோடு வானைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பெயரைப் பார்த்ததும் இதுவும் சோழர் காலத்து வரலாற்றிற்குச் சாட்சியம் கூறும் கோயில் என்று புரிந்தது கோபுரத்தில் என்னென்ன புராணக் கதைகள் சிலைகளாகக் காட்சியளிக்கின்றன என்பதைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தோம். 

டியூப்லைட் வெளிச்சத்தை டம்மி செய்வது போல், கருவறைக்குச் செல்லும் வழியில் இடதுபுறம் ஏற்றி வைக்கப்பட்ட அகல்விளக்கு பிரகாசித்தது. பழமலைநாதரைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து 63 நாயன்மார்களின் சிலைகளையும் பார்த்துவிட்டு, கருவறையின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவிட்டுத் திரும்பினேன். 63 நாயன்மார்களின் சிலையில் திருஞானசம்மந்தருடைய சிலை மட்டும் உருவத்தில் பெரியதாய், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர் சிலைகளிலிருந்து கொஞ்சம் தள்ளியும் வைக்கப்பட்டிருந்தது ஏன் எனப் புரியவில்லை. இலக்கியத்தில் சிறுவயது பாலகனாய் படித்த சம்மந்தர் எப்படி இத்தனை பெரியவனாய் இந்தக் கோவில் சிலை வடிவம் கொண்டார் என்பது புரிபடவில்லை.

பழமலை நாதர் கோவிலுக்குப் பல சிறப்புகள் இருந்தாலும், கருவறை சிவனுக்குப் பக்கத்தில் அதாவது பழமலைநாதர் இருக்கின்ற மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள வன்னிமரம் இக்கோவிலின் பழம்பெரும் சிறப்பு. சுமார் 2500 ஆண்டு பழமையான வன்னி மரம். முதுமையின் சுருக்கங்கள் உடலெங்கும் கொண்ட வயதான பாட்டனைப் பார்ப்பது போல் இருந்தது.



முன்பொருகாலத்தில் விபசித்து முனிவர் இங்கே தங்கியிருந்து, இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் திருப்பணிகள் செய்த தொழிலாளிகளுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்துக் கொடுப்பாராம். வீட்டிற்குப் போய் பார்த்தால் அவரவர் செய்த வேலையைப் பொறுத்து வன்னி இலைகள் காசுகளாக மாறி இருக்குமாம். 2500 ஆண்டுகளை உண்டு செறித்துச் செம்மாந்து கிளைபரப்பி நிற்கும் வன்னி மரத்திற்கு இப்படியொரு கதையுண்டு. என்னளவில் இந்த வன்னிமரம் தான் சாமி. கடவுள். இறைவன் எல்லாம்.

நான் சென்ற நேரம், வன்னி மரத்தின் தொப்பையில் ஆழ்ந்த யோசனையுடன் குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. வன்னிமரத்தைச் சுற்றி வந்து கும்பிட்டுச் செல்லும் யாரையும் அது தொந்தரவு செய்யவில்லை. சொல்லப்போனால் யாரையும் அது கண்டுகொள்ளவும் இல்லை. சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு அடுத்து என்ன செய்வது எனத் திட்டமிடுவது போலொரு உடல்மொழி அதனிடம். முதிய வன்னிமரத்தின் வேர்ப்பகுதியில் சில சிலைகள். யார் என்ன என்ற தகவல் ஏதுமில்லை. ஆனால், சிலைகளுக்கு அருகில் இருந்த கல்தூண்களில் தாராசுரத்தில் இருப்பது போல் மினியேச்சர் சிற்பங்கள் அழகாய் நடனமாடிக் கொண்டிருந்தன.



அங்கிருந்து பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னிதியின் முன்புறம் உள்ள சுவரில் இருந்த சிற்பம் என் கவனத்தை ஈர்த்தது. ஆணும் பெண்ணும் இணைந்து நிற்பது போலொரு சிலை. பெண் சிலையின் கழுத்தின் தொங்கவிடப்பட்ட சரிகை ஆடை பெண்ணுடலை மறைத்திருந்தது. சிலையின் முழுமையைக் காண ஆவல் மேலிட, யாரும் பார்க்காத நேரத்தில் துணியை மெல்ல நகர்த்தினேன். உருண்டு திரண்டிருந்த பெண்ணின் வலது மார்பைத் த



னது கைகளால் தாங்கிப் பிடித்தபடி காதலில் லயித்திருக்கும் காட்சி.. அப்படியொரு அழகு அந்தச் சிலையில்! காதலின் அதி அற்புத உணர்வை வெளிப்படுத்தும் இந்தச் சிலையை, ஆண்பெண் உறவின் அழகை ஏன் ஆடையால் மூடி வைக்க வேண்டும் எனத் தோன்றியது. சிலையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதேபோல் ஆடையைப் பெண் சிலை மீது போர்த்திவிட்டு பிரகாரத்தினுள் நடந்தேன். ஆனால், சிலையின் காட்சி கண்கள் வழியாக மனதுக்குள் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது.

பழமலைநாதர் கோவிலுக்கு மொத்தம் 5 கோபுரங்கள். கண்டராதித்தன் கோபுரம் என்று பெயர் தாங்கியிருப்பதைப் போல மற்ற கோபுரங்கள் எந்தச் சோழனின் பெயரைத் தாங்கி நிற்கின்றன என்று பார்ப்பதற்காக கோவில் வளாகத்திற்குள் நடந்தேன். மற்ற கோபுரங்கள் பெயரற்றவையாய் இருந்தன. மாலைச் சூரியன் அந்தியின் மறைந்து கொண்டிருந்த நேரம், கோவிலின் பின்புறம் இருந்த கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கருங்கற் கோபுரத்தின் மேல் உள்ள சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோழியின் மகள் அங்கே இருந்த ஆந்தை ஒன்றைக் கண்டு என்னிடம் காட்டினாள். கருங்கற்கோபுரத்தின் மேல் ஒரு சிலையென எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆந்தையை முதன் முதலில் அப்போதுதான் நேரில் பார்த்தேன். அதனோடு பேசும்போது முட்டைக் கண்களால் எனக்குப் பதில் சொல்வது போல் இருந்தது. பிறகு ஆந்தையிடன் விடைபெற்றுக் கொண்டு, விருத்தாம்பிகை சன்னிதியில் அம்மனைத் தரிசித்துவிட்டு, பிரசாதம் சாப்பிடக் கிளம்பினோம்.

ஐந்தரை மணிக்கு மேல் ஆகி இருந்ததால் பிரசாதம் விற்கும் இடத்தில் எல்லாம் காலியாகியிருந்தது. அல்வா, முறுக்கு, சோமாஸ், தட்டை, எல்லடை போன்ற இத்தியாதி நொறுக்குத் தீனி பிரசாதங்களே இருந்தன. பிரசாதக் கவுண்ட்டரில் இருந்த பெரியவரிடம் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டோம்.

தண்ணீர் குடித்தபடி, கண்டராதித்தன் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கோபுரத்தின் மேல் உள்ள சிற்பம் ஒன்றைச் சுட்டிக் காட்டி அது என்ன தெரியுதா என்றார். கீழே கிடத்தப்பட்ட ஒரு உடல். அதனருகில் ஒரு ஆண். பெண் தனது முந்தானையால் விசிறிவிடும் காட்சி சிலையாக இருந்தது கோபுரத்தில். அந்தப் பெரியவர் சொன்னார். காசியை விட வீசம் அதிகம் இந்தக் கோவிலுக்கு. மற்ற ஊரில் இறந்தால் எமன் வந்து நம்மைக் கூட்டிட்டுப் போவார். ஆனா இந்த ஊரில் இறந்தால் சிவன் நம்மைக் கூட்டிட்டுப் போவார். பார்வதி தேவி தனது முந்தானையால் விசிறி விட்டு, நமது பாவங்களையெல்லம போக்கி, நேராகச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அதைச் சொல்வதுதான் அந்தச் சிற்பம் என்று சிற்பத்தின் காட்சியைக் கதையாக விளக்கினார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கோயிலிருந்து கிளம்பினோம். வெளியில் முகப்பு கோபுரத்தின் முன்பு இருந்த பிள்ளையாரை மக்கள் வணங்கிவிட்டு கோவிலின் உள்ளே சென்று கொண்டிருக்க, மக்களுக்கு இடையில் ஒரு கொம்பு முளைக்காத பசு ஒன்று நீண்டநேரமாக வரிசையில் நின்று பிள்ளையாரைத் தரிசிப்பது போல கற்பூர தீபத்தின் முன்பு நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது.

பசுவின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்ற  யோசனையுடன் வண்டியில் கிளம்பினேன்.

அரசமரத்தின் கிளையில் ஆடிக் கொண்டிருந்த தொட்டிலும், 2500 ஆண்டு பழமையான வன்னிமரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கின் சிந்தனையும், ஆந்தையின் முட்டைக் கண்களும், சிவனது கருவறையின் வெளியில் ஒலித்த கோவில் மணியோசையும், சக்கரத் தீர்த்தத்தில் சென்று மறைந்த ஆரஞ்சு நிறச் சூரியனின் கதகதப்பும் வழித்துணையாய் கதைபேசிக் கொண்டே வந்தனர் பாண்டிச்சேரி வரை. ஆதிக் கருவறையின் வாசம் நினைவுக்குள் வந்தமர்ந்து கொண்டது. 



புதன், 7 ஜூன், 2023

பேருந்து பயணத்தின் ஜென் கவிதை - மனுஷி

காலையில் பேருந்தில் கல்லூரிக்குப் போகும்போது வெகு அரிதாகவே உட்கார இடம் கிடைக்கும். அதுவும் சன்னலோர இருக்கை என்பதெல்லாம் அரிதினும் அரிது. 

இன்று சீட் கிடைத்தது. அமர்ந்து கொண்டேன். நடத்துனர் வந்து டிக்கெட் கொடுக்கும்வரை காத்திருந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு இயர்போனைக் கழுத்தில் மாட்டிக் கொண்டேன்.

பொதுவாக, செல்போனில் பேசிக் கொண்டே டிக்கெட் வாங்கினாலோ, காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டிருந்தாலோ நடத்துநர்கள் காரணமில்லாமல் டென்ஷன் ஆவார்கள். அவர்களின் டென்ஷன் காலைச் சுற்றிக் கொண்ட பாம்பு போல அந்த நாள் முழுக்க என் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடு தான் டிக்கெட் வாங்கும்வரை செல்போனை எடுப்பதில்லை எனும் முடிவு.

ஏதாவது இலக்கிய உரைகளைக் கேட்டுக் கொண்டே செல்லும்போது பாண்டிச்சேரி - விழுப்புரம் இரண்டு மணி நேரப் பயணம் உண்டாக்கும் அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை. இன்று ஜென் கவிதைகள் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் பேசிய காணொளியைக் கேட்டுக் கொண்டே வந்தேன். ஏற்கனவே #ஜென்_கவிதைகள் அறிமுகம் என்னும் புத்தகத்தில் வாசித்தவை தான் என்றாலும் இந்த நாளில் இந்தப் பயணத்திற்கு அதை ஆடியோ வடிவில் கேட்டுக் கொண்டே செல்லலாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

திருபுவனை நிறுத்தத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் இறங்கிக் கொள்ள, ஒரு வயதான தாத்தா அந்த இடத்தில் அமர்ந்தார். நேராக பஸ் போகும் பக்கம் இருந்த அவர் தலை  கொஞ்ச நேரத்தில் மெல்ல மெல்லச் சரிந்து என் பக்கமாகத் திரும்பி, செல்போன் திரையை உற்றுப் பார்த்தார். 

பேருந்து பயணத்தில் இது அடிக்கடி நடக்கும்.  நாம் மெசேஜ் அனுப்புவதை ஆர்வத்தோடு பக்கத்தில் இருப்பவர் பார்ப்பார். அடுத்தவர் மொபைலின் உரையாடல். அதைப் பார்க்கிறோமே என்கிற சிறு உறுத்தல் கூட இருக்காது. சொல்லப்போனால் அடுத்து என்ன மெசேஜ் வரும். என்ன பதில் அனுப்பப் போகிறோம் எனத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் இருக்கும். 

இந்தத் தாத்தா இவ்வளவு சாய்ந்து கொண்டு பார்க்கிறாரே என்று மொபைலைக் கொஞ்சம் வலப்புறமாகத் திருப்பி வைத்தேன். அப்போதும் அவர் சாய்ந்து மொபைலைப் பார்க்கத் தொடங்கினார். 

தாத்தா, கொஞ்சம் தள்ளி உட்காருங்க. சாய்ஞ்சுகிட்டே வர்றிங்க என்றேன் கடுப்பாகி. 

அவர் என்னமோ பேசுறார்.. என்ன பேசுறார்னு தெரியல. அதான் கிட்ட வந்து பார்க்கிறேன். அப்பவும் கேட்கல என்றார். 

கழுத்தில் மாட்டியிருந்த ஹெட்போனைக் காட்டி, இதன் வழியாகக் கேட்டுட்டு இருக்கேன் என்றேன். 

என்ன பேசுறார் அந்த அய்யா என்றார்.

கவிதை பற்றிப் பேசுறாங்க. கேட்கறிங்களா என்று அவர் கழுத்தில் ஹெட்போனை மாட்டி, இரண்டுபக்கமும் ஹெட்போனின் கேட்கும் பகுதியைப் பொறுத்தினேன்.

அவரைப் பார்த்தேன். மொபைல் திரையில் இருந்து கண்கள் அகலவேயில்லை. கூர்ந்து கேட்டார். அந்த உரையின் கருத்துகளை ஆமோதிப்பது போல மேலும் கீழும் தலையை அசைத்து அசைத்துக் கேட்டார். ஓரிரு இடங்களில் மெல்லச் சிரித்தார். புருவங்கள் சுருக்கி ஆழ்ந்து பார்த்தார். வெவ்வேறு முக பாவனைகள், உடலசைவுகள்,  தலையசைவுகள் அவர் உணர்ந்து,  ரசித்துக் கேட்கிறார் என்பதைக் காட்டியது. 

அரைமணி நேரம் கேட்டிருப்பார். அதற்குள் நான் இறங்கவேண்டிய சிக்னல் வந்துவிட்டது. 
தாத்தா நான் இறங்கனும் என்றேன். கழுத்தில் இருந்த ஹெட்போனைக் கழற்றி என்னிடம் தந்தார். அந்த அய்யா நல்லா கருத்தா பேசுறார். வாக்குமூலம்லாம் நல்லா இருக்கு என்றார். 

நீ என்ன பண்ற என்று என்னைக் கேட்டார். காலேஜ்ல பாடம் சொல்லித் தர்றேன் என்றேன். 

பசங்களுக்கு இந்த மாதிரி கதைலாம் கூட சொல்லிக் கொடு. வாழ்க்கையைக் கத்துக்கட்டும் என்று சொல்லிவிட்டு அவரும் இறங்கிக் கொண்டார். 

அவரது  குழி விழுந்த  கன்னம்,  முகத்தில்  கைகளில் இருந்த சுருக்கங்கள் லேசாக கூன் விழுந்த முதுகு - வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவத்தின் சாட்சியாய் இருந்தது அவர் உருவத்தில்

கல்வி என்பது மதிப்பெண் அல்ல. வாழ்க்கைக்கான அனுபவம் தான்.

திங்கள், 22 மே, 2023

மியாஸ் - மனுஷி

#மியாஸ் 
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பேருந்தில் பயணித்தேன். பாண்டிச்சேரியில் இருந்து வேலூருக்கு பேருந்து இல்லை என்பதால் திருவண்ணாமலை போய் அங்கிருந்து போகலாம் என நண்பர் சொன்னார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியதால் இருக்கை கிடைத்தது. ஜன்னலோரத்தில் ஒரு சிறுமியும் அவர் பக்கத்தில் அவளின் அம்மாவும் அமர்ந்திருந்தனர். நான் அவர்களிடம் கேட்டு மூன்றாவதாக அமர்ந்து கொண்டேன். 

ஜிப்மர் தாண்டியதும் பேருந்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. என் சீட் அருகே ஒரு முஸ்லீம் குடும்பம் நின்று கொண்டு பயணித்தனர். என் கால் முட்டியை உரசிக் கொண்டு தலையில் முக்காடிட்ட சிறுமி நின்றிருந்தாள். உட்கார்ந்துக்கிறியா என்று கேட்டு கொஞ்சம் நகர்ந்தேன்.  இடம் போதுமானதாகத்தான் இருந்தது. என் பக்கத்தில் இருந்த அம்மாவும் கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுத்ததில் நான்கு பேரும் வசதியாகவே அந்த சீட்டில் அமர்ந்து கொண்டோம். 

டிக்கெட் எடுத்து முடித்ததும் ஜன்னல் சீட் இல்லை என்பதால் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டே வந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியின் அம்மா  பூனைக்குட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார். வீட்டில் பூனைக்குட்டி வளர்ப்பதாகவும் அந்தப் பூனைக்குட்டியை எங்கு சென்றாலும் அழைத்துச் சென்று விடுவோம் என்றும் சொன்னார். நாங்க கூட பரவால்ல. இவ ஒரு நிமிடம் கூட பூனைக்குட்டியை விட்டுட்டு இருக்க மாட்டா. சில சமயம் பூனைக்குட்டிக்கு டிக்கெட் போட்டு ஊருக்குக் கூட்டிட்டு போவோம் எனப் பெருமையாகச் சொன்னார். 

காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலைத் தாண்டியும் அந்த உரையாடல் என் காதில் விழுந்தது. ஹெட்போனைக் கழற்றிவிட்டு இப்போ எங்க போறிங்க? பூனைக்குட்டியை யார் பார்த்துப்பாங்க என்று கேட்டேன். அதுவும் பஸ்ல தா வருது என்றார். பஸ்லயா என்றதும் என் அருகில் உட்கார்ந்திருந்த சிறுமி அவளது மடியில் போய்த்தியிருந்த சிறு துண்டை விலக்கி இங்க தான் தூங்கிட்டு இருக்கா என்றதும் அழகான குட்டிப்.பூனை ஒரு சிறு பையினுள் தூங்கிக் கொண்டிருந்தது. பூனைக்குட்டியின் பெயர் மியாஸ் என்று அறிமுகப்படுத்தினாள். நான் தலையைத் தொட்டுத் தடவினேன். வெள்ளையும் கொஞ்சம் சாம்பல் நிறமும் கொண்ட வெல்வெட் மேனி  மியாஸுக்கு. மூன்றுமாத பிஞ்சு. அழகு குட்டி. 
கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள் மியாஸ். நான் பார்க்கட்டுமா என்றதும் என்னிடம் கொடுத்தாள்.  மியாஸ் என் நெஞ்சின் மீது தலை சாய்த்து நிம்மதியாகத் தூங்கியது. 

விடுமுறைக்காக உறவுக்காரர் வீட்டுக்குச் செல்வதாகவும், அதனால் மியாஸைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாது என்பதால் செஞ்சியில் உள்ள தங்கை வீட்டில் மியாஸைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுவிட்டுச் செல்லவிருப்பதாகவும் திரும்ப வரும்போது அழைத்துச் சென்றுவிடுவோம் என்று சொன்னார் அந்த அம்மா..

மியாஸ் எவ்வளவு சமத்தான, பாசமான பூனைக்குட்டி, வீட்டில் எப்படியெல்லாம் விளையாடும், என்னவெல்லாம் சாப்பிடும், எங்கே தூங்கும் என கண்கள் முழுக்க பெருமை மின்ன சொல்லிக் கொண்டே வந்தார்கள் சிறுமியும் அவளது அம்மாவும். 

செஞ்சிக்கு முன்பு ஓரிடத்தில் டீ குடிக்க நிறுத்தியதும் மியாஸ் கண் விழித்தது. டீ குடிக்கக் கூட இறங்காமல் மியாஸுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். விளையாட்டு சுவாரஸ்யத்தில் மியாஸின் கண்கள் குட்டி திராட்சைகள் போல் ஆகிவிட்டன. அதுவரை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பூனைக்குட்டியா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு என் மடியில் படுத்துக் கொண்டு விளையாடியது. அந்த அம்மா, சிறுமி, இன்னும் இரண்டு பெண்கள் எல்லாருமே என்ன நம்ம மியாஸ் இவங்க கூட இப்படி ஜாலியா விளையாடுது என்று ஆச்சரியப்பட்டார்கள். 

பேருந்து கிளம்பியதும் மீண்டும் சுவிட் போட்டது போல மியாஸ்  தலைசாய்த்துத் தூங்கத் தொடங்கிவிட்டது. 
செஞ்சியில் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மியாஸின் குடும்பம் என்னிடம் பை சொல்லிவிட்டு மியாஸை வாங்கிக் கொண்டார்கள். 

நெற்றியில் முத்தமிட்டு மியாஸை அனுப்பி வைத்தேன். 

என் வாழ்க்கையில் பூனைக்குட்டியோடு சிறிது தூரம் பயணித்தது இதுவே முதல் முறை. அவ்வளவு அழகாய் இருந்தது அந்தப் பயணம்.

சனி, 29 ஏப்ரல், 2023

குயிலாப்பாளையம் தாமரைக் குளத்து நண்பர்கள் - மனுஷி

#குயிலாப்பாளையம்_தாமரைக்குளம் 

வீட்டில் ஒரு தாமரைக் குளம் உருவாக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். 
ஏற்கனவே தாமரை விதைகளைத் தண்ணீரில் போட்டு முளைக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் வீட்டில் உருவாக்கிய குளத்திற்கு குளத்து மண் எடுக்க குயிலாப்பாளையம் சென்றிருந்தேன். 

வண்டியைக் குளத்தருகில் நிறுத்திவிட்டுக் குளத்துக்குள் இறங்கினேன். கூடவே இரண்டு குட்டி பசங்க என்னோடு குளத்துக்குள் இறங்கினார்கள். 
அக்கா, உங்களுக்குத் தாமரைப் பூ பறித்துத் தரட்டுமா? எத்தனை பூ வேண்டும் என்று கேட்டபடியே சரசரவென குளத்துச் சேற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். 

தம்பி எனக்கு குளத்து மண்ணும் கொஞ்சம் தாமரை விதைகளும் தான் வேணும் என்றதும் காய்ந்த தாமரை விதைகளையும் சில தாமரை மொட்டுகளையும் பறித்து வந்து தந்தார்கள்.

அக்கா பூ பறிச்சு தர்றோமே காசு தருவிங்களா? 

எவ்ளோ டா தரணும்? 

முப்பது ரூபா.

என்ன டா முப்பது ரூபா? 

சரி அம்பது ரூபா தாங்க. 

முப்பது ரூபாயே அதிகம்னு சொல்றேன். அம்பது ரூபா கேக்கிற? 

சரி முப்பது ரூபாயே தாங்க. 

தர்றேன் டா... ஆனா எனக்குக் கொஞ்சம் தாமரைக் கொடியும் நோண்டி தர்றிங்களா.. அந்தக் கிழங்கோட... 

அவ்ளோ தான.. இதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸி... 

சொல்லிக் கொண்டே மண்ணைத் தோண்டினார்கள். 

நான் ரொம்ப கஷ்டப்பட்டு வேர் அருந்திடாமல் ஆழமாக மண்ணை நோண்டிக் கிழங்கோடு எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த இரண்டு குட்டிப் பசங்களும் ரொம்ப அசால்ட்டா குட்டி குட்டி தாமரைக் கொடிகளை கிழங்குடனும் மண்ணுடனும் நோண்டி என் கையில் கொடுத்தனர். .ஆச்சரியமா இருந்தது. 

டேய் எப்புட்றா என்றதும்.. எங்களுக்கு இதெல்லாம் ஈஸிதான்க்கா என்றார்கள். 

குளத்து மண்ணும் தாமரை விதைகளும் கொஞ்சம் கொடிகளும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு வந்ததும் குளத்து அருகில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த  அவன் அம்மாவிடமிருந்து கை கழுவத்  தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து கொடுத்தான். 

பெரியவன் பெயர் ரஞ்சன். சின்னவன் பெயர் தமிழரசன். இருவருக்கும் நன்றியைச் சொல்லிவிட்டு, சொன்னபடியே காசையும் கொடுத்துவிட்டு பை சொன்னேன்.. 

அக்கா, நம்ம குளம் தான். இன்னும் பூ வேணும்னா வாங்க பறிச்சுத் தர்றேன் என்றபடிக் குதித்துக் கொண்டே சென்றார்கள். 

அவர்களைப் போலவே துள்ளிக் குதித்தது மனம்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

பிரபஞ்சன் சாருடன் முதல் சந்திப்பும் பிறந்தநாள் பரிசும் - மனுஷி

#பிரபஞ்சன் 
பிரபஞ்சன் சாருடன் எனது நட்பு உண்டாகியபின்  வந்த அவரது முதல் பிறந்தநாள் அது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லவென கிளம்பினேன். 

ஒரு புத்தகம், அழகிய பூங்கொத்து ஆகியவற்றோடு லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பு மாடியில் போய் காலிங் பெல்லை அழுத்திய பிறகு தான் கவனித்தேன். வீடு பூட்டியிருந்தது. மிகுந்த ஏமாற்றத்தோடு அவருக்கு போன் செய்தேன்.. நான் வருவதற்குச் சற்று முன்பு தான் அவர் வெளியில் கிளம்பியிருந்தார். உள்ளார்ந்த வருத்தத்தோடு அதை அவர் தெரிவித்ததும் என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பரவாயில்லை சார் நாளை பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டேன். அவருக்காக கொண்டு வந்த பூங்கொத்தையும் புத்தகத்தையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டுமென எதிர்வீட்டுக் கதவைத் தட்டி, அவர்களிடமே ஒரு பேனாவும் பேப்பரும் வாங்கி, மாடிப்படியில் அமர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான்காக மடித்து புத்தகத்தினுள் வைத்துவிட்டு, எதிர்வீட்டுக்காரரிடம் சார் வந்தால் மனுஷி கொடுத்தாங்க என்று சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். சரிம்மா என்றபடி வாங்கிக் கொண்டார். 

வழக்கமாக, நானும் சாரும்  காப்பி குடிக்கிற உழவர்கரை சந்திப்பில் உள்ள தேநீர்க் கடையில் சுடச்சுட ஒரு தேநீர் அருந்திவிட்டு கிளம்பினேன்... 

ஏழு மணி அளவில் பிரபஞ்சன் சாரிடமிருந்து ஒரு மெசேஜ்... மனுஷி, பேசலாமா... ஓய்வா இருக்கிங்களா என்று... 

எப்போது என்னிடம் பேச வேண்டும் என்றாலும் ஒரு மெசேஜ் செய்து நான் பதில் அனுப்பும் வரை காத்திருந்து மீண்டும் அழைப்பார் அல்லது நானே அழைப்பேன். சார் நீங்க எப்போ வேண்டுமானாலும் கால் பண்ணலாம். ஒவ்வொரு முறையும் ஏன் அனுமதி கேட்கறிங்க என்றால், நீங்க என்னோட சினேகிதி என்பதால் நான் அதை அட்வாண்டேஜா எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பார். நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையின் நியாயத்தை என் நிலையிலிருந்து புரிந்து கொண்டு என்னோடு பழகிய ஓர் உன்னத ஆன்மா அவர். 

மனுஷி, நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீங்கள் கொடுத்த பிறந்தநாள் பரிசை வாங்கிக் கொண்டேன். பூங்கொத்தைவிடவும் அந்தக் கடிதம் அவ்வளவு அழகாக, உணர்வுப்பூர்வமா இருந்தது. சிறந்த பிறந்தநாள் பரிசா நான் நினைக்கிறேன். இதை உங்க கையால் வாங்காமல் போய்ட்டேன்னு வருத்தமா இருக்கு. உங்களுக்குத் தொந்தரவு இல்லனா வாங்களேன் ஒரு காப்பி குடிக்கலாம் என்றார். 

தொந்தரவு என்றால் கூட நான் வருவேன் சார் என்று சொல்லிவிட்டு என் ஸ்கூட்டியில் பறந்து போய் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு நான் தனியாக காப்பி குடித்த அதே கடையில் இருவரும் காப்பி குடித்தோம். பேசினோம். அவருக்கு இட்லி பார்சல் வாங்கிக் கொண்டார். எனக்கு நிறைய சாக்லேட்டுகளும் பிஸ்கட் பாக்கெட்டும் நிறைய சினேகத்தையும் கொடுத்தார். 

பிறகு விடைபெறும் முகமாக அவரோடு கைகுலுக்கி பிறந்த நாள் வாழ்த்துகள் சார் என்றேன். இரண்டு கைகளாலும் அழுந்தப் பற்றி புன்னகையால் வழியனுப்பினார். 

அந்த உள்ளங்கையின் ஸ்பரிசத்தை, கதகதப்பைத்தான் தேடிக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் இல்லாமல் வந்து போகும் உங்கள் பிறந்தநாளில்.
 
காஃபி சாப்பிடலாமா மனுஷி என்னும் குரலைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். காப்பி சாப்பிட்டேன் சார் உங்கள் நினைவாக. 

வெள்ளி, 29 மே, 2020

ஆசானின் அனுபவ மொழி - தேவதேவன் கவிதைகள் - மனுஷி

திருவண்ணாமலையில் #தளம்_சமூக_உரையாடல்_மையம் & #வெற்றி_டிஜிட்டல் ஒருங்கிணைப்பில் #கவிஞர்_தேவதேவன்_கவிதைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மனதுக்குள் மெல்லிய இசையைப் போல ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தேவதேவன் கவிதைகள் குறித்துப் பேச வேண்டும் என்று #தோழர்_ஷபி கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். ஆனால், தேவதேவன் கவிதைத் தொகுப்பு அப்போது கைவசம் இல்லை. நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் இல்லை என்றே சொல்லிவிட்டார்கள். நம்முடைய புத்தகச் சேகரிப்பில் ஒரு தொகுப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா புத்தகங்களையும் கலைத்துப் போட்டுத் தேடியதில் #விண்_வரையும்_தூரிகை நூல் மட்டுமே கண்டெடுத்தேன். அது மட்டுமில்லாமல் தேவதேவன் வலைப்பூவில் (poetdevadevan.blogspot.com) சில கவிதைகள் இருந்தன. அவற்றை வாசிக்கத் தொடங்கியபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது. 

பொதுவாக, நவீன கவிதைகளை வாசிப்பது போல ஒரே வாசிப்பில் அல்லது இரண்டாவது வாசிப்பில் தேவதேவன் கவிதைக்குள் நுழைந்து பயணித்துவிட முடியும் என்று தோன்றவில்லை. அவரது கவிதைகள், நண்பர்களோடு உரையாடுவது போன்ற உணர்வினைத் தரவில்லை. மாறாக, அனுபவம் முதிர்ந்த ஓர் ஆசானுடன் அமர்ந்து மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் ஒருநிலைப்பட்ட மனதுடன் உரையாடுவது போல இருந்தன. 

எந்தெந்த கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும் என்கிற திட்டம் இருந்தாலும், தேவதேவன் கவிதை குறித்துப் பேசப்போவதில் ஒருவிதத் தயக்கம் இருக்கவே செய்தது. அந்தக் கவிதை அனுபவத்தைப் பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது மனம். எல்லாமும் நிகழ்வு நடக்கும் இடத்தை அடையும் வரைதான்.

சிலுசிலு காற்று இதமாகத் தழுவிச் செல்லும் மரத்தடி. கருங்கல் பெஞ்சுகள். இரவின் ரம்மியத்தை உணரச் செய்யும் ஒளியமைப்பு. பிரம்மாண்டமான தேவதேவன் பேனர். அதன் முன்னால் சிறு புள்ளியென நான்கைந்து நாற்காலிகள். அந்தத் திறந்தவெளி, தேவதேவன் கவிதைகளைப் போலவே பெரும் அனுபவத்தைக் கொடுத்தது. 

இருளில் அமர்ந்து கொண்டு / எதையும் வாசிக்க முடியாது / ஒளி? / கண்முன் உள்ள / இருளைக் / கண்டு கொள்வதிலன்றோ / தொடங்குகிறது அது? (தேவதேவன்) 

பழுத்து விழாது / ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள் / தான் தொட்டதனால்தான் உதிர்ந்தது என்றிருக்கக் கூடாது என்ற / எச்சரிக்கை நேர்ந்து / அப்படி ஒரு மென்மையை / அடைந்திருந்தது காற்று (தேவதேசன்)

இந்தக் கவிதைகளை, அந்தக் குறைந்த ஒளியில், மெல்லிய மரங்களின் அசைவில்  வாசித்தபோது மனதுக்குள் எழுந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விடமுடியாது. அது பேரனுபவம். 

பறத்தலின் ரகசியத்தைச் சிற்றுயிர்களுக்கும் கற்பித்துவிடும் தேவதேவனின் கொக்கு போல, அவரது கவிதைகள் இப்பிரபஞ்சத்தின் இரகசியத்தை யாவருக்கும் சொல்லித் தருகிறது அனுபவ மொழியுடன். 

நிகழ்வில் கலந்து கொண்டு தேவதேவன் கவிதைகள் குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் பச்சோந்தி, கவிஞர் ஃபீனிக்ஸ், கவிஞர் ஜெகதீசன், கவிதைகள் வாசித்த மொழிபெயர்ப்பாளர்கள் கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, அமரபாரதி, நா.கோகிலன் என அனைவருமே தேவதேவன் கவிதைகள் தரும் மௌனத்தை, அனுபவத்தை அந்த இரவின் மீது படரச் செய்தனர். 

இறுதியாக, தேவதேவனின் ஏற்புரை புது அனுபவத்தைக் கொடுத்தது. 
நிகழ்வு முடிந்து திரும்புகையில் நேர்மறை எண்ணங்கள் மனதை இலகுவாக்கின. திறந்தவெளி இலக்கிய அரங்குகள் இப்படித்தான் மனதின் சுவர்களை உடைத்து, காற்றில் மிதந்துவரும் இறகென இலகுவாக்கிவிடும்போல. 
நிகழ்வினை ஒருங்கமைத்த தோழமைகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து சொல்லவேண்டும் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை.