செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சபிக்கப்பட்ட தேவதையின் நாட்குறிப்பிலிருந்து - மனுஷி


சபிக்கப்பட்ட தேவதையின் நாட்குறிப்பில்

சிறகு முளைத்த வார்த்தைகள் இருந்தன.

உறைந்து போன கண்ணீர்த் துளிகள்

வெம்மை மாறாமல் தளும்பிக் கொண்டிருந்தன.

 

அதீதக் காதலைச் சுமந்தலையும்

அவளது பயணக் குறிப்புகள்

பௌர்ணமி வெளிச்சத்தில் மின்னின.

அவளது நாட்குறிப்பில் இருந்து

பிடுங்கப்பட்ட சொற்கள்

அடர்வனத்தில் வாசம் வீசிக் கொண்டிருந்தன.

 

குழந்தையின் முத்தத்தையும்

கோபத்தையும் கூட

அற்புதப் புதையலைப் போல

சுமக்கும் நாட்குறிப்பின் தாள்கள்

காலக் கரையான்களால் அழிக்கப்படாதவாறு

நினைவுகளால் எழுதப்பட்டிருந்தன.

 

உங்கள் கைகளில் அந்த நாட்குறிப்பு

கிடைக்கும் நாளில்

மனக்கிளர்ச்சியோடு நீங்கள் வாசிக்கத் தொடங்கலாம்.

வாசித்து முடிக்கையில்

நீங்கள் புத்தனாகக் கூடும்.

நன்றி : அருவி கவிதை இலக்கியக் காலாண்டிதழ், ஏப்ரல் - செப்டம்பர் 2015.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக