திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நிகரன் இதழில் எனது கவிதைகள்

1. மரண வாடை

எறும்பைப் போல் உள்நுழைகிறது மரணம்
அறை முழுக்க பரவுகிறது 
அதன் வாசனை
இரவைக் கிழித்து கலவரப்படுத்தும் அதன் குரல்
சாவு வீட்டிலிருந்து
சுமந்து வரப்பட்டது
நிச்சயிக்கப்பட்ட வாழ்வை
அதன் கடைசி துளி வரை
வாழ்ந்து பார்த்துவிடும்
பேராசை 
ஒரு தெருநாயைப் போல துரத்த
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களால் வாழ்தலின் கணங்களை தீட்டிக் கொண்டிருந்தாள்
காலத்தின் கரங்களில் வாழும்
சபிக்கப்பட்ட தேவதை
அறைக்கதவைத் தட்டியபடி
காத்திருக்கும் மரணத்திற்கு 
தேவதையின் வாழ்வைச் சுவைக்கும்
கனா.
*****
2. இறுதியாக

உன் கடைசிச் சொல்லை
நீ உச்சரித்தாய்

உன் கடைசி முத்தத்தை
நீ கொடுத்தாய்

கடைசியிலும் கடைசியாய்
இறுகத் தழுவினாய்

கடைசிகளுக்கான அத்தனை சமிக்ஞைகளும்
நடந்தேறிவிட்டன சில கணங்களுக்குள்

திரும்ப வருவாய் என்பது
ஒரு கனவைப் போல
கலைந்து போன தருணத்தில்
உனக்கான
கடைசிக் கவிதையை எழுதினேன்
மௌனமாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக