என் செல்லப் பறவைகளே!
கொஞ்சம் சப்தமிடுங்கள்
உங்களின் இந்த மௌனம்
அச்சுறுத்துகிறது
என்னை
உங்கள் மௌனம் களைத்து
சப்தமிடுங்கள்
சப்தம்
தேவையாய் இருக்கிறது
உங்கள் இருப்பை உணர்த்த
சப்தமிடுங்கள்
விடுதலையின் சாரத்தை
உரத்துக் கீச்சிடுங்கள்
அல்லது
அடிமையின் பாடலை,
துயரை
ஈனக்குரலிலாவது பாடுங்கள்
அது வெறும் குரலன்று
அது வெறும் சப்தம் மட்டுமன்று
அதில் ஒளிந்திருக்கும்
ஏராளமான கதைகளை
இரவின் நிசப்தத்தினூடே
கேட்கவேண்டும்
உங்கள் சப்தத்திலிருந்து
நீங்கள் முத்தமிட்டுக் கொள்வதைக் கண்ணுறுகிறேன்
உங்கள் சப்தத்திலிருந்து
நீங்கள் கனவு காணும்
ஒரு வனத்தைக்
கற்பனை செய்கிறேன்
உங்கள் சப்தத்திலிருந்து
நீண்ட தனிமையைக்
கடந்து செல்லக் கற்றுக் கொண்டேன்
உங்களின் சப்தத்திலிருந்தே
அதிகாலையில் வெளிச்சக் கீற்றுகள் தோன்றுவதாய்
நம்புகிறேன்
உங்கள் சப்தத்திலிருந்து
என் காலைப்பொழுது
சோம்பல் முறித்துத்
துயில் கலைவதை
நீங்கள் பார்த்திருப்பீர்கள்
அது
உண்மையும்கூட
கீச் கீச் குரலெழுப்பி
என்னை
அழைக்கலாம்
உங்கள் குரலை
அதிசிரத்தையுடன் செவிமடுக்கிறேன்
என் அருகாமையை
அச்சமின்றி ஏந்திக் கொள்ளுங்கள்
நான் மீட்பரல்ல
அவதாரமும் அல்ல
சாதாரணி
என்னிடம்
எல்லையற்ற அன்பும்
கொஞ்சம் வன்மமும் இருக்கிறது உங்கள் சப்தங்கள்
என்னை ஆசிர்வதிக்கட்டும் அன்பு பெருகவோ
வன்மம் வளரவோ
செய்யட்டும்
உலகத்தின் மீட்பராக
உங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ள
நீங்கள்
சப்தமிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக