வெள்ளி, 15 மே, 2015

முத்தங்களின் கடவுள்

புற்கள் எப்பொழுதும் பச்சையாக இருப்பதில்லை

மனுஷியின் முத்தங்களின் கடவுள் கவிதை நூலை முன்வைத்து

- பால்ராஜ்

மனுஷியின் முத்தங்களின் கடவுள் வாசிப்பில் முளைத்த சொற்களின் நிறங்கள் கண்கள் கூசாதவை. யாரும் கடந்தே ஆகவேண்டிய அனுபவங்களேயானாலும் ஒரு கலைடாஸ்கொப்பில் கிடைக்கும் ஒளிச் சிதறலை அனுபவமாக்கத் துடிக்கும் இளமையின் பரபரப்பும் பரவசமும் தொடரும் துயரமுமேயான மனப்பதிவுகள் கவிதைகளாகின்றன.  எந்த அனுபவத்தின் அவமானத்தையும் துடைப்பதற்கு எழுத்தைத் தனதாக்கி அதையே தனது கடந்து செல்வதற்கான பாதையாய் சமைக்கும் விந்தைத் துணிச்சல் மனுஷிக்கு கவிஞர் என்பதால் இருக்கிறது.  கவிதை என்பதால் வாசகனுக்குக் கடந்து வருகிறது.  

யாருக்காகவும் எழுத முடியாது.  பட்டாம்பூச்சிபோல் வண்ணம்காட்டி திடீரென வந்துபோன சாரலாய் உதிர்ந்த கணங்கள் மனதில் அப்படியே உறைந்து உள் உறங்கிக் கிடக்கிறது.  அபூர்வமாய் கிடைத்த நாளொன்றில் நினைவுகளின் மணம் தடவிச் சென்று பின்பும் சில்லென்று பூத்துக் கிடக்கிறது.  சந்திக்கவே முடியாத தூரங்களுக்கு அப்பால் இருந்துகொண்டு காலம் தாண்டி கவிஞர்களுக்குத் தன் அனுபவத்தால் கடத்திவிட முடிகிறது.  காயங்களுக்கு மருந்திட அமானுஷ்யமாய் நட்பின் விரல்கள் நீள்கின்றன கவிதைகளின் திசை நோக்கி.  அவளுக்கான ஒரு கவிதையென அவளே விட்டுச்சென்ற நாட்கள் அப்படியே உயிர்த்திருக்கிறது சொற்களில். தொடர்ந்து அகதியாக்கப்பட்டு தனிமையின் நட்போடு தன் வாழ்க்கையைப் புதுப்பிக்க சொற்களின் போதையில் நிரம்பி கிடக்கிறாள்.  ஆணின் தீராத பகைப் புலத்தில் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பலியாகாமல் கவிதைகள் மூலம் குட்டி தேவதையாகிறாள்.  யசோதையின் தனிமையை... கண்ணகியின் தனிமையை... சீதையின் தனிமையை எனப் புராண காலத்திலிருந்து ஆண்களின் அறஉலகில் தண்டிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றுவரை பரிசளிக்கப்படுகிறது தனிமை.  பெண்களைச் சித்திரவதை செய்வதன்மூலமே அவன் சுயசித்திரவதை செய்து கொள்கிறான்.

நிலவொளியால் அறைகள் புனிதமாகின்றன.  தினமும் நிலா பார்ப்பவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.  நிலாவின் பாடம் கேட்கும் குழந்தைகள் கவிஞர்களாவது நிச்சயம்.  காணமல்போன கவிதையை அவள் தேடுகிறாளா?. அவளைப்பற்றி இல்லாத கவிதை தொலைந்து போகட்டும் என்கிறாள்.  அவளிடம்தான் அக்கவிதை முதலில் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் குழந்தையின் பொசசிவ்னஸ் கவிஞருக்கே உரித்தானது.  

ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் அவளோடு விபச்சாரம் செய்தவன் ஆகிறான்.  யாரொருவர் பாவம் செய்யாதிருக்கிறார்களோ அவர்கள் இப்பெண்ணின்மீது முதல்கல்லை எறியக்கடவன்.  பிதாவே இவர்களை மன்னித்தருளும்.  இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் என்ற வார்த்தைகள் இயேசுவால் இன்னும் கவிஞர்களுக்கு ஆசீர்வதிக்கப் பட்டுள்ளது.  பலிபீடத்திற்கு தானே செல்லும் ஆட்டின் அன்பு... கவிதையில் எப்பொழுதும் பலியாவது கவிஞர்களின் பண்பு... காரியவாதிகள் பிவீர்த்துக்கொள்ளட்டும்... ஆதியிலே வார்த்தைதான் இருந்தது.

தன்னோடு பகிர மறுக்கும் யாரையும் தீட்டாக்கும் ஆணின் வக்கிர உளவியலை ஒப்புக்கொள்கிறான் வாசகன்.  சொந்த ஆண் சாதிக்குத் துரோகம் செய்து வாசகன் என்ற அடையாளத்தையாவது தக்க வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான ஆசையே அது.  தனக்குள்ளது தன்னுடையது புனிதம்.  மற்றதெல்லாம் தீட்டு.  காலம் தன் கோபத்தை பெண்களின் சாபத்தில் சேமித்து வைத்திருக்கிறது போலும்.  இயல் பூக்கங்களை பேண வாய்ப்பற்ற ஓர் உயிரிக்கு வழங்க முடியாத வறண்ட நிலத்தில் கவிதைகள் வழியாகவேனும் வெறுமையைக் கடந்து செல்லமுடியுமாகிறது.

காலையில் கரையும் காகங்கள்... கரைய எழுந்தால் அவன் கடவுளாகிறான்.  சிற்றுயிர்களிடம் இரவில் பேசும் ஒருத்தி தேவதையாகத்தான் இருக்கவேண்டும்.

ஆணின் அக்கறை... அன்பு... பரிவு... பகிர்தல் எல்லாம் ஒப்பனையாகிறது.  தின்று செரிக்கமுடியாத போலி ரப்பர் வார்த்தைகள்.  அவளுக்குத் தெரியும் எது வாழ்வு... எப்படி வாழ்வு என்பது.  அதேபோல் உன் வாழ்வும் மரணமும்.

விலக்கப்பட்ட கனி தரும் மரத்தைக் கடவுளே ஏன் படைத்தார்.

சாத்தானை அவரால் கொல்ல முடியாதா?. அல்லது இரட்டைப் பிறவியா.  புலனடக்கி வாழும் புண்ணியவான்கள் கருணையற்று சொத்து சேர்ப்பதும்... இரகசியமாய் பாவங்கள் செய்வதும்... கோயில்களுக்கு அலைவதும்... அறம்பாடுவோர் செய்யும் சீலங்கள்.  இலட்சுமணக் கோடுகளைச் சீதைகள் தாண்டுவார்கள்?. இன்பத்துப்பால் பாடிய வள்ளுவப்பெருந்தகை சொல்கிறான் மிகினும் குறையினும் நோய் செய்யுமென்று.

ஏலே பேரா சீனிக்கிழங்கு... மொச்சையும் உங்க ஆத்தாளுக்குத் தெரியாம வாங்கிட்டு வாவேன் என்ற அப்பத்தாளும்

ஏலே தாத்தாவுக்கு டவுனுல அலுவா வாங்கிட்டு வாவென்று சொன்ன தாத்தனுக்கும் உணவின் கதையை வாசித்துக் காட்டினேன்.

அன்பின் வாதையால் பேயாடும் மனம் கொண்ட பெண்கள்தான் துருப்பிடித்த ஆணிகளால் அறையப்பட்டுச் சிலுவையில் தொங்கும் சாத்தான்களை விடுவிக்கமுடியும்.  கவிதைகள் படிக்க மாயாஜாலமாய் ஆணிகள் கழன்றுகொள்ள வாய்ப்புள்ளது.

ஆங்கிலத்தில் வெள்ளிக்கிழமையை 
Unlucky day  என்று வைத்தது பெண்களின் தற்கொலை நாளாவது தற்செயலானது.

மனுஷியின் கவிதைகளில் மனிதர்களின் நேர்மறையான எதிர்மறையான உணர்ச்சியின் கொந்தளிப்பில் வார்த்தைகள் ரசவாதமாகின்றன.  சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களின் வேலிகளால் நெய்யப்பட்ட ஒழுக்க அற மதிப்பீடுகளைத் தன் அறியாமையின் மூலம் மதிக்காத குழந்தைகள் போல அசாதாரணமாய் தாண்டிச் செல்கிறார்.  இன்னும் தாண்டுவதற்கு அவருக்கு வலு உண்டு... தாண்டுவார் என்பது வாசகனின் ஆசை. 

வெளியீடு : உயிர்மை பதிப்பகம், 

11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&600 016.

தொலைபேசி :  +91 44 & 24993448.  மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

பக்கங்கள் : 96  & விலை ரூ 80/-
(நன்றி : தளம் காலாண்டிதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக