திங்கள், 11 மே, 2015

இரண்டு கவிதைகள்

காதலின் வழித்தடத்தில்….

காதலைப் பயிரிடவென
பண்படுத்தப்பட்ட நிலத்தில்
வெறுப்பின் விதைகளைத் தூவிச் செல்கிறது
உன் மௌனம்.

என் கோபத்தின் நியாயம்
உனக்குப் புரியாதபோது
என் அழுகையின் நியாயம்
உனக்குப் புரியாதபோது
என்னைச் சமாதானப்படுத்த
உனக்குப் பொறுமையில்லாதபோது
ஒரு பாலைநிலமென
மாறிப் போகிறேன்.

நீ

ஒரு போதும்
அணைத்துக் கொள்ளப் போவதில்லை
என்னை.

ஒருபோதும் முத்தமிடப் போவதில்லை
என்னை.

காலத்தின் கையில் ஒப்படைக்கிறேன்
என் காதலை.
இனி,
வெற்றுக் கூடாய்
உன் வழித்தடத்தில் எங்கேனும்
எனைப் பார்க்க நேர்ந்தால்
பேசிவிடாதே.

000

அதிகாலையின் மரணம்….

என் காலைப்பொழுது விடியவேயில்லை
இன்று.
அழுது வீங்கிய கண்களுடன்
படுக்கையில் சுருண்டு கிடக்கிறது.
என் காலைப் பொழுது
விடியாமல் இருப்பதன் காரணம்
உனக்குத் தெரியும்.
அதைப் பற்றி
ஒரு சிறிதும் கவலையின்றி
நீ எழுந்தாய்.
வழக்கம் போலவே குளித்துக்
கிளம்பி
சாப்பிட்டு
உன் பகலுக்குள் நுழைந்தாய்.
என் அதிகாலை இன்னமும் விடியவேயில்லை.
உன் குரலோ
உன் சொல்லோ
உன் கொஞ்சலோ
குறைந்தபட்சம்
நேற்றைய இரவின் மிச்சக் கோபமோ
எதுவுமே இன்றி
எப்படி விடிவதென புலம்பியபடி
உணர்வற்றுக் கிடக்கிறது
ஓர் பிணத்தைப் போல.
இன்றைய இரவு வருவதற்குள்
அது இறந்துபோகும்
ஓர் மலரைப் போல.
உனக்குக் கவலையில்லை
அதைப் பற்றி.
ஓர் அதிகாலை விடியாமல்
இறந்துபோவதைப் பற்றி
யாருக்கும் கவலையில்லை.
எல்லோருக்குமே நிறைய வேலை இருக்கிறது
உன்னைப் போல.

நன்றி : எனில்.காம்

1 கருத்து: