காலத்தின் கரங்களில் உறங்கும் தேவமைந்தன்
-- மனுஷி
தண்டவாளம் அருகில் சிதைந்து கிடந்தது
வெறும் உடலல்ல
சாதியம் தின்று துப்பிய
உன் காதல்
உன் குருதி சுவைக்கவென
வெறிகொண்டு அலைந்த வீச்சரிவாள்கள்
மெல்ல ஆசுவாசம் கொண்டுவிட்டன
உன் வேரறுத்த களைப்பில்
உன் மரணத்தால்
சில முகமூடிகளைக் கிழித்தாய்.
முகமற்று அலைகிறது
வரட்டு கௌரவத்தால்
உடல்களைப் பிரித்த
ஒரு கூட்டம்.
உடல்தான்
இங்கே தீட்டு
உடல்தான்
இங்கே பகை
உடல்தான்
இங்கே வீழ்த்தப்படும் ஆயுதம்
உடல்தான்
இங்கே பலி பொருள்
உடலை வீழ்த்திய பின்
களியாட்டம் கொள்ளும் குள்ளநரிகள்
காதலில் கறைந்து போன மனதை
என்ன செய்யும்?
மனதுக்குள் ஒளித்துவைத்த
காதலை என்ன செய்யும்?
கௌரவத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
எப்போதும்
அறுக்கப்படுவது
திவ்யாக்களின் தாலிக்கள்தான்.
சிதைக்கப்படுவது
இளவரசன்களின் உயிர்கள் தான்.
எரிக்கப்பட்ட குடிசைகளிலிருந்து
பற்றிப் பரவிய தீ
இன்னும் அணையவேயில்லை
அது காதலின் பாடலை
உரக்கப் பாடி ஆடுகிறது
கௌரவக் கொலைகாரர்களின்
குறிகளை ஓங்கி மிதித்தபடி
நடுகல் வீரனே!
நீ சுமந்து திரிந்தது
ஆதிக் காதலின் எச்சம் என
காலம் சொல்லும்
ஏனெனில்,
நீ காலத்தின் கரங்களில் உறங்கும்
தேவமைந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக